Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நம் வரலாற்றுச் சுவடுகள்

“ஒரு பொன்னான காலம்”

“ஒரு பொன்னான காலம்”

1870-ல், அமெரிக்காவில் (பென்ஸில்வேனியாவில் இருக்கிற பிட்ஸ்பர்க்கில்) சார்ல்ஸ் டேஸ் ரஸலும் இன்னும் கொஞ்சம் பேரும் பைபிளை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள். இயேசுவின் மீட்பு பலியைப் பற்றி ஆராய்ச்சி செய்தபோது யெகோவாவின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் அந்த பலி எவ்வளவு முக்கியமாக இருந்தது என்று புரிந்துகொண்டார்கள். இந்த மீட்பு பலி எல்லா மக்களையும், அதுவும் இயேசுவைப் பற்றி தெரியாதவர்களையும், மீட்புக்கு வழிநடத்துகிறது என்று தெரிந்துகொண்டபோது ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்! அதனால், இயேசுவின் இறந்த நாளை ஒவ்வொரு வருடமும் நினைத்துப் பார்க்க வேண்டுமென்று முடிவு செய்தார்கள்.—1 கொ. 11:23-26.

சகோதரர் ரஸல், சீயோனின் காவற்கோபுரம் என்ற பத்திரிகையை வெளியிட ஆரம்பித்தார். மீட்பு பலி, யெகோவா நம்மீது வைத்திருக்கிற அளவில்லாத அன்பிற்கு அத்தாட்சி என்று அந்த பத்திரிகை தொடர்ந்து அறிவித்தது. இயேசுவின் நினைவு நாள் சமயத்தை, “ஒரு பொன்னான காலம்” என்று அது சொன்னது. நினைவு நாள் நிகழ்ச்சியை, பிட்ஸ்பர்கில் அல்லது அவர்கள் இருந்த இடத்திலேயே நடத்திக்கொள்ளலாம் என்று அந்த பத்திரிகையில் சொல்லியிருந்தது. ‘ஒரே நம்பிக்கை இருக்கிற இரண்டு, மூன்று பேர் இருந்தால்கூட, ஏன் ஒருவர் இருந்தால்கூட இயேசு அவர்களோடு இருக்கிறார்’ என்று அந்த பத்திரிகையில் சொல்லப்பட்டிருந்தது.

பிட்ஸ்பர்க்கில் நடந்த இயேசுவின் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு வருடமும் நிறையப் பேர் வர ஆரம்பித்தார்கள். அப்போது கொடுத்த அழைப்பிதழ்களில், “அன்பு உள்ளங்கள் உங்களை அன்போடு வரவேற்கிறது” என்று எழுதியிருந்தார்கள். நினைவு நாள் நிகழ்ச்சிக்காக பிட்ஸ்பர்க்கிற்கு வந்தவர்களை அங்கிருந்த சகோதர சகோதரிகள் அவர்கள் வீட்டிலேயே தங்க வைத்து, நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள். 1886-ல், நினைவு நாள் சமயத்தில் “பொதுக் கூட்டம்” (மாநாடு) பல நாட்களுக்கு நடந்தது. ‘இயேசுமீதும் அவருடைய சகோதரர்கள்மீதும் சத்தியத்தின்மீதும் அன்பு இருக்கிற உள்ளங்களே, இந்த கூட்டத்திற்கு வாருங்கள்’ என்று காவற்கோபுர பத்திரிகை அழைத்தது.

லண்டன் டேபர்னக்கல் மன்றத்தில், நினைவு நாள் சின்னங்களை எப்படி அனுப்ப வேண்டுமென்ற படம்

இயேசுவின் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்காக பிட்ஸ்பர்க்கில் இருந்த பைபிள் மாணாக்கர்கள் மாநாடுகள் நடத்தினார்கள். இதை பல வருங்களாக செய்தார்கள். பைபிள் மாணாக்கர்களுடைய எண்ணிக்கை அதிகமாக அதிகமாக நினைவு நாள் நிகழ்ச்சிக்கு வந்தவர்களுடைய எண்ணிக்கையும் உலகம் முழுவதும் அதிகமாகிக்கொண்டே போனது. சிகாகோ எக்லீசியாவை (எக்லீசியா என்றால் சபை என்று அர்த்தம்) சேர்ந்த ரே பாப் சொல்கிறார்: ‘1910-கள்ல, நினைவு நாள் சின்னங்களை ஒவ்வொருத்தருக்கும் அனுப்பி முடிக்குறதுக்கே பல மணிநேரம் ஆயிடுச்சு. ஏன்னா, கிட்டத்தட்ட எல்லாருமே ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிட்டாங்க.’

எஜமானருடைய இரவு விருந்தின்போது, அவர் திராட்சமதுவைத்தான் பயன்படுத்தினார். இருந்தாலும், “குடிக்கிறவர்களுடைய ஆசையை” தூண்டிவிடாமல் இருப்பதற்காக திராட்சை ஜூஸ் அல்லது உலர்ந்த திராட்சையின் ஜூஸை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று காவற்கோபுரத்தில் ரொம்ப வருடமாக சொல்லியிருந்தார்கள். “திராட்சமதுவைத்தான் பயன்படுத்த வேண்டும்” என்று நினைத்தவர்களுக்கு திராட்சமதுவை கொடுத்தார்கள். ஆனால், கலப்படம் இல்லாத சிவப்பு திராட்சமதுவைத்தான் பயன்படுத்த வேண்டுமென்று பைபிள் மாணாக்கர்கள் அதற்குப் பிறகுதான் புரிந்துகொண்டார்கள். ஏனென்றால், அதுதான் இயேசுவின் ரத்தத்தை குறிக்கிறது.

நிகாராகுவா சிறையில் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுடைய எண்ணிக்கையை பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட பென்சிலும் பேப்பரும்

நினைவு நாள் நிகழ்ச்சி, இயேசுவின் மரணத்தைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்ப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. ஆனால் சில சபைகளில், நினைவு நாள் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஏதோ துக்கத்திற்கு வந்தவர்களை போல் ரொம்ப சோகமாக இருந்தார்கள். கூட்டம் முடிந்து போகும்போது, யாரும் ஒரு வார்த்தைக்கூட பேசிக்கொள்ளவில்லை. 1934-ல் வெளிவந்த யெகோவா என்ற புத்தகத்தில், ‘இயேசுவின் இறந்த நாளை “துக்கமாக” நினைத்துப் பார்க்காமல் “சந்தோஷமாக” நினைத்துப் பார்க்க வேண்டும்; ஏனென்றால், 1914-ல் இருந்து அவர் ராஜாவாக ஆட்சி செய்துகொண்டு இருக்கிறார்’ என்று சொல்லப்பட்டது.

ரஷ்யா, மார்டிவினியாவில் இருக்கிற கட்டாய உழைப்பு முகாமில் 1957-ல் நினைவு நாள் நிகழ்ச்சிக்காக கூடியிருந்த சகோதரர்கள்

1935-ல் ஒரு பெரிய மாற்றம் நடந்தது. பக்திவைராக்கியம் குறைவாக இருக்கிற கிறிஸ்தவர்கள்தான் வெளிப்படுத்துதல் 7:9-ல் சொல்லியிருக்கிற ‘திரள் கூட்டம்’ என்று யெகோவாவின் மக்கள் ஆரம்பத்தில் நினைத்தார்கள். ஆனால் 1935-ல் தான், அந்த ‘திரள் கூட்டம்’ யார் என்று யெகோவாவின் சாட்சிகள் சரியாக புரிந்துகொண்டார்கள். அதாவது, பூமியிலேயே என்றென்றும் வாழப் போகிற ஒரு மக்கள் கூட்டம்தான் அவர்கள் என்று புரிந்துகொண்டார்கள். இந்த விஷயத்தைப் பற்றி நன்றாக யோசித்துப் பார்த்ததற்குப் பிறகு, ரஸல் போகன்ஸீ என்ற சகோதரர் இப்படி சொன்னார்: “நான் பரலோகத்துக்கு போவேனு யெகோவா அவரோட சக்தி மூலமா எனக்கு உணர்த்தல.” அதனால் போகன்ஸீயைப் போல் நிறைய பேர், இயேசுவின் இறந்த நாள் சமயத்தில் ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார்கள்.

இந்த ‘பொன்னான காலத்தில்,’ விசேஷ ஊழிய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மீட்பு பலிக்கு நன்றி காட்ட எல்லாருக்கும் அது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. சில கிறிஸ்தவர்கள் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு வந்து ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிட்டுவிட்டு மட்டும் போனார்கள். ஆனால் அதுமட்டும் போதாது, பிரசங்க வேலையிலும் ஈடுபட வேண்டுமென்று அவர்கள் எல்லாரையும் புலட்டின் (Bulletin) (1932) ஊக்கப்படுத்தியது. 1934-ல் வந்த புலட்டின், எல்லாரையும் “துணை பயனியர் ஊழியம்” செய்ய உற்சாகப்படுத்தியது. “நினைவு நாள் சமயத்தில் 1,000 பேராவது துணை பயனியர் ஊழியம் செய்வீர்களா” என்று கேட்டது. ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கித்தால்தான் அவர்களுடைய சந்தோஷம் முழுமையடையும்’ என்று பரலோக நம்பிக்கை உள்ளவர்களைப் பற்றி இன்ஃபார்மென்ட் (Informant) சொன்னது. பூமியில் வாழ்கிற நம்பிக்கை இருப்பவர்களும் பிரசங்க வேலையில் ஈடுபட்டால்தான் அவர்களுக்கு முழுமையான சந்தோஷம் கிடைக்கும். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

ஹெரால்டு கிங், தனிச்சிறையில் இருந்தபோது நினைவு நாளைப் பற்றி கவிதைகளும் பாடல்களும் எழுதினார்

யெகோவாவின் சாட்சியாக இருக்கிற ஒவ்வொருவருக்கும் இயேசுவின் நினைவு நாள் ரொம்ப, ரொம்ப முக்கியமான ஒரு நாளாக இருக்கிறது. என்ன கஷ்டமான சூழ்நிலை வந்தாலும், நினைவு நாள் நிகழ்ச்சியை தவறவிடவே மாட்டார்கள். 1930-ல், பர்ல் இங்கிலிஷ் என்ற சகோதரியும் அவருடைய அக்கா ஓராவும் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்காக சுமார் 80 கிலோமீட்டர் தூரம் நடந்தே போனார்கள். சீனாவில், ஹெரால்டு கிங் என்ற மிஷனரி சகோதரர் ஒரு தனிச்சிறையில் இருந்தபோது நினைவு நாளைப் பற்றி கவிதைகளும் பாடல்களும் எழுதினார். கருங்கொடிமுந்திரி பழத்தையும் (black currant), அரிசியையும் வைத்தும் நினைவு நாள் சின்னங்களை தயார் செய்தார். கிழக்கு ஐரோப்பா, மத்திய அமெரிக்கா, ஆப்பிரிக்கா என்று எல்லா இடத்திலும் இருக்கிற நம் சகோதர சகோதரிகள் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார்கள். போர், தடை உத்தரவு என்று எந்த சூழ்நிலையிலும் தைரியமாக செயல்பட்டிருக்கிறார்கள். எங்கிருந்தாலும் சரி எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சரி, இயேசுவின் நினைவு நாள் நிகழ்ச்சியை நாம் தவறவிடவே மாட்டோம். அப்படி செய்யும்போது, யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் புகழ் சேர்ப்போம்!

^ பாரா. 10 இன்ஃபார்மென்ட் ஆரம்பத்தில் புலட்டின் என்று அழைக்கப்பட்டது. இப்போது நம் ராஜ்ய ஊழியம் என்று அழைக்கப்படுகிறது.