Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா வழிநடத்தும் உலகளாவிய கற்பிக்கும் வேலை

யெகோவா வழிநடத்தும் உலகளாவிய கற்பிக்கும் வேலை

“பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.”—ஏசா. 48:17.

1. யெகோவாவின் சாட்சிகள் பிரசங்க வேலையை ஆரம்பித்தபோது அவர்களுக்கு என்ன பிரச்சினைகள் வந்தது?

கிட்டத்தட்ட 130 வருடங்களுக்கு முன்பு யெகோவாவின் சாட்சிகள் பிரசங்க வேலையை ஆரம்பித்தபோது, அவர்களுக்கு நிறையப் பிரச்சனைகள் வந்தது. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்களைப் போலவே இவர்களும் கொஞ்ச பேர்தான் இருந்தார்கள். பைபிளில் இருந்து இவர்கள் சொன்ன விஷயங்கள் நிறையப் பேருக்கு பிடிக்கவில்லை. இவர்கள் அதிகம் படிக்காதவர்கள் என்று சிலர் நினைத்தார்கள். அதுமட்டும் இல்லை, சாத்தான் பரலோகத்தில் இருந்து பூமிக்கு தள்ளப்பட்டபோது யெகோவாவின் மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். (வெளி. 12:12) அந்த சமயத்தில் இருந்தே, அவர்கள் ‘சமாளிப்பதற்குக் கடினமான இந்தக் கடைசி நாட்களில் நற்செய்தியை எல்லா மக்களுக்கும் தொடர்ந்து பிரசங்கித்துக்கொண்டு வருகிறார்கள்.—2 தீ. 3:1.

2. நற்செய்தியை பிரசங்கிக்க யெகோவா நமக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறார்?

2 இந்தப் பூமியில் இருக்கிற எல்லா மக்களுக்கும் நற்செய்தியை சொல்ல வேண்டுமென்று இன்றும் யெகோவா விரும்புகிறார். இதற்காக அவருடைய மக்களுக்கு உதவி செய்கிறார். இந்த பிரசங்க வேலையை தடுத்து நிறுத்துவதற்கு அவர் யாரையும் எதையும் அனுமதிக்க மாட்டார். பாபிலோனில் இருந்து இஸ்ரவேலர்களை விடுதலை செய்தது போலவே இன்றும் அவருடைய மக்களை பொய் மதத்திலி ருந்து விடுதலை செய்திருக்கிறார். தமக்கு பிடித்த விதத்தில் அவர்கள் தம்மை வணங்க வேண்டுமென்று அவர் விரும்புவதால் அப்படி செய்திருக்கிறார். (வெளி. 18:1-4) நம்முடைய நன்மைக்காகத்தான் யெகோவா நமக்கு நிறைய விஷயங்களை சொல்லித் தருகிறார். அதாவது, நாம் ஒருவரோடு ஒருவர் சமாதானமாக இருக்க... மற்றவர்களுக்கு யெகோவாவைப் பற்றி சொல்லிக் கொடுக்க... நமக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுக்கிறார். (ஏசாயா 48:16-18-ஐ வாசியுங்கள்.) நற்செய்தியை மற்றவர்களுக்கு சொல்வதற்காக யெகோவா நமக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். நற்செய்தியை பிரசங்கிக்க, சில நேரங்களில் உலக சூழ்நிலைகளும் நமக்கு சாதகமாக இருந்திருக்கிறது உண்மைதான். அதற்காக, உலக சூழ்நிலைமையை யெகோவா எப்போதுமே நமக்கு சாதகமாக மாற்றி அமைப்பார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், இந்த சாத்தானுடைய உலகத்தில் நமக்கு இன்னமும் நிறையப் பிரச்சினைகள் வருகின்றன, யெகோவாவின் சாட்சிகளில் நிறையப் பேர் இன்னமும் துன்புறுத்தப்படுகிறார்கள். சூழ்நிலைமை எப்படி இருந்தாலும், நாம் தொடர்ந்து நற்செய்தியை மற்றவர்களுக்கு பிரசங்கிக்க யெகோவாதான் உதவி செய்கிறார்.—ஏசா. 41:13; 1 யோ. 5:19.

3. தானியேல் சொன்ன தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறி வருகிறது?

3 முடிவு காலத்தில், நிறையப் பேர் பைபிளில் இருக்கிற விஷயங்களை தெரிந்துகொள்வார்கள் என்று தானியேல் தீர்க்கதரிசி பல வருடங்களுக்கு முன்பே சொன்னார். (தானியேல் 12:4-ஐ வாசியுங்கள்.) ‘முடிவுகாலம்’ ஆரம்பிப்பதற்கு கொஞ்சம் முன்பு, பைபிளில் இருக்கிற முக்கியமான விஷயங்களை புரிந்துகொள்வதற்கும்... பொய் மதத்தின் போதனைகளை ஒதுக்கித் தள்ளுவதற்கும்... யெகோவா அவருடைய மக்களுக்கு உதவி செய்தார். இன்று, கிட்டத்தட்ட 80 லட்சம் பேர் பைபிளில் இருக்கிற உண்மைகளை தெரிந்துகொள்கிறார்கள், அதை உலகம் முழுவதும் இருக்கிற மக்களுக்கு சொல்கிறார்கள். தானியேல் சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறி வருவதை இப்போது நம்மால் பார்க்க முடிகிறது! நற்செய்தியை உலகம் முழுவதும் பிரசங்கிக்க யெகோவாவின் மக்களுக்கு என்னவெல்லாம் உதவி கிடைத்திருக்கிறது என்று இப்போது பார்க்கலாம்.

பைபிள் மொழிபெயர்ப்பு

4. 19-வது நூற்றாண்டின் முடிவில், பைபிள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருந்தது?

4 இன்று, நிறையப் பேரிடம் பைபிள் இருப்பதால் அவர்களுக்கு நம்மால் நற்செய்தியை சொல்ல முடிகிறது. ஆனால், இதற்கு முன்பு இருந்த நிலைமையே வேறு! மக்கள் பைபிளைப் படிப்பது அன்று இருந்த சர்ச் குருமார்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. பைபிளை வாசித்தவர்களை கொடுமைப்படுத்தினார்கள், அதை மொழிபெயர்த்த சிலரை கொலையும் செய்தார்கள். பல நூற்றாண்டுகளாக நிலைமை இப்படித்தான் இருந்தது. ஆனால் 19-வது நூற்றாண்டில் சில அமைப்புகள், பைபிளை முழுமையாகவோ பகுதியாகவோ கிட்டதட்ட 400 மொழிகளில் மொழிபெயர்த்து இருந்தார்கள். அதனால் அந்த நூற்றாண்டின் முடிவில், நிறையப் பேரிடம் பைபிள் இருந்தது. இருந்தாலும், அவர்களால் பைபிளில் இருக்கிற விஷயங்களை புரிந்துகொள்ள முடியவில்லை.

5. பைபிள் மொழிபெயர்ப்பு சம்பந்தமாக யெகோவாவின் சாட்சிகள் என்ன செய்தார்கள்?

5 பைபிளில் இருக்கிற விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டிய கடமை தங்களுக்கு இருக்கிறது என்று யெகோவாவின் சாட்சிகளுக்கு தெரிந்திருந்தது. அதனால் நற்செய்தியை மும்முரமாக பிரசங்கித்தார்கள். ஆரம்பத்தில், அன்றிருந்த பைபிள் மொழிபெயர்ப்புகளைத்தான் பயன்படுத்தினார்கள், அதை மக்களுக்கும் கொடுத்தார்கள். 1950-களில் இருந்து ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை முழுமையாகவோ பகுதியாகவோ 120-க்கும் அதிகமான மொழிகளில் தயாரித்து வெளியிட்டார்கள். 2013-ல், ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை எளிய நடையில் தயாரித்து வெளியிட்டார்கள். இந்த பைபிளை எல்லாராலும் எளிமையாக படித்து, புரிந்துகொள்ள முடியும். இதை சுலபமாக மொழிபெயர்க்கவும் முடியும். இப்படி ஒரு எளிமையான பைபிள் இருப்பதால், பைபிள் விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பது ரொம்ப சுலபமாக இருக்கிறது.

சமாதானமான காலம்

6, 7. (அ) கடந்த 100 வருடங்களில் என்னென்ன போர்கள் நடந்திருக்கின்றன? (ஆ) சில நாடுகளில் இருந்த சமாதானமான சூழ்நிலைமை பிரசங்க வேலைக்கு எப்படி உதவியாக இருந்தது?

6 கடந்த 100 வருடங்களில், இரண்டு பெரிய உலகப் போர்கள் உட்பட நிறையப் போர்கள் நடந்திருக்கின்றன. அதில், லட்சக்கணக்கான மக்கள் இறந்து போயிருக்கிறார்கள். இருந்தாலும், சமாதானமான காலம் இருந்தது என்று எப்படி சொல்லலாம்? நற்செய்தியைப் பிரசங்கிக்க யெகோவாவின் சாட்சிகளுக்கு அந்த காலம் எப்படி உதவியாக இருந்தது? இதைப் பற்றி இப்போது பார்க்கலாம். இரண்டாவது உலகப் போர் சமயத்தில், சகோதரர் நேதன் நார் யெகோவாவின் சாட்சிகளை வழிநடத்திகொண்டு வந்தார். 1942-ல் நடந்த ஒரு மாநாட்டில், “சமாதானம்—அது நிலைத்திருக்குமா?” என்ற தலைப்பில் அவர் ஒரு பேச்சு கொடுத்தார். அதில் வெளிப்படுத்துதல் 17-வது அதிகாரத்தில் இருக்கிற தீர்க்கதரிசனத்தை விளக்கி சொன்னார். அப்போது நடந்துகொண்டிருந்த இரண்டாவது உலகப் போர் அர்மகெதோனில் முடிவடையாது; அந்தப் போருக்குப் பிறகு சமாதானமான காலம் வரும் என்று அந்த வசனங்களில் இருந்து நிரூபித்துக் காட்டினார்.—வெளி. 17:3, 11.

7 அதற்காக, போர் முடிந்த பிறகு உலகம் முழுவதும் சமாதானம் இருந்தது என்று அர்த்தமில்லை. ஏனென்றால், இரண்டாவது உலகப் போருக்கு பிறகும் ஆங்கங்கே போர்கள் நடந்தன. அதில் லட்சக்கணக்கான மக்கள் இறந்து போனார்கள். ஆனால், நிறைய நாடுகளில் சமாதானமான சூழ்நிலை இருந்தது. யெகோவாவின் மக்கள் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு அது ரொம்ப உதவியாக இருந்தது. அதை எப்படி சொல்லலாம்? இரண்டாவது உலகப் போரின்போது 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் குறைவான யெகோவாவின் சாட்சிகளே இருந்தார்கள். ஆனால் இன்று, கிட்டத்தட்ட 80 லட்சம் யெகோவாவின் சாட்சிகள் இருக்கிறார்கள். (ஏசாயா 60:22-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் சாட்சிகள் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு அந்த சமாதானமான காலம் ரொம்ப உதவியாக இருந்தது என்று இதிலிருந்து தெரிகிறது.

போக்குவரத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள்

8, 9. பயணம் செய்வது இப்போது எப்படி சுலபமாக இருக்கிறது, இது நாம் செய்யும் பிரசங்க வேலைக்கு எப்படி உதவியாக இருக்கிறது?

8 அமெரிக்காவில் யெகோவாவின் சாட்சிகள் நற்செய்தியைப் பிரசங்கிக்க ஆரம்பித்தபோது, ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு போய் வருவது கஷ்டமாக இருந்தது. காவற்கோபுர பத்திரிகையை அச்சடிக்க ஆரம்பித்து 21 வருடங்களுக்குப் பிறகு, அதாவது 1900-ல், வெறும் 8,000 கார்களும் ஒருசில நல்ல ரோடுகளும்தான் அங்கு இருந்தன. ஆனால் இன்று, உலகம் முழுவதும் 150 கோடி கார்களும், பல இடங்களில் நல்ல ரோடுகளும் இருக்கின்றன. அதனால் ரொம்ப தூரத்தில் இருக்கிற இடங்களுக்கும், சுலபமாக போக முடியாத இடங்களுக்கும் இப்போது போக முடிகிறது. அங்கிருக்கிற மக்களுக்கும் நற்செய்தியை பிரசங்கிக்க முடிகிறது. ஆனால் யெகோவாவின் சாட்சிகளில் சிலர், போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத இடங்களில் வாழ்கிறார்கள். நற்செய்தியைப் பிரசங்கிக்க சிலர் ரொம்ப தூரம் நடந்தே போகிறார்கள். மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் போய் அவர்களை சந்தித்து, நற்செய்தியை சொல்கிறார்கள்.—மத். 28:19, 20.

9 இன்னும் பல போக்குவரத்து வசதிகளையும் நாம் பயன்படுத்துகிறோம். பைபிளையும் மற்ற பிரசுரங்களையும் கப்பலில், டிரக்கில் (truck), ட்ரெயினில் (train) அனுப்புகிறோம். அதனால், ரொம்ப தூரத்தில் இருக்கிற சகோதர சகோதரிகளுக்குக்கூட சில வாரங்களிலேயே பிரசுரங்கள் போய் சேர்ந்துவிடுகின்றன. மாநாடுகளில் பேச்சு கொடுக்க... சபையில் இருக்கிறவர்களை சந்திக்க... வட்டாரக் கண்காணிகளும், கிளை அலுவலக அங்கத்தினர்களும், மிஷனரிகளும், மற்றவர்களும் விமானத்தில் பயணம் செய்கிறார்கள். சகோதர சகோதரிகளை ஊக்கப்படுத்துவதற்காக, ஆளும் குழு அங்கத்தினர்களும் தலைமை அலுவலகத்தில் இருக்கிற சகோதரர்களும் மற்ற நாடுகளுக்கு விமானத்தில் போகிறார்கள். யெகோவாவின் மக்கள் ஒற்றுமையாக இருப்பதற்கு இந்த போக்குவரத்து வசதிகள் எல்லாமே ரொம்ப உதவியாக இருக்கிறது.—சங். 133:1-3.

மொழியும் மொழிபெயர்ப்பும்

10. உலகம் முழுவதும் ஆங்கில மொழியை மக்கள் எந்தளவு பேசுகிறார்கள்?

10 முதல் நூற்றாண்டில், ரோம சாம்ராஜ்யத்தில் இருந்த நிறையப் பேர் கிரேக்க மொழி பேசினார்கள். அதுபோல் இன்று, உலகத்தில் இருக்கிற நிறையப் பேர் ஆங்கிலம் பேசுகிறார்கள். இங்கிலீஷ் ஏஸ் அ குளோபல் லாங்குவெஜ் (English as a Global Language) என்ற ஆங்கில புத்தகம் இப்படி சொல்கிறது: ‘உலகத்துல இருக்கிற மக்கள்தொகையில நாலுல ஒரு பங்கு மக்கள் ஆங்கிலம் பேசுறாங்க, இல்லன்னா புரிஞ்சுக்குறாங்க.’ உலகம் முழுவதும் வியாபாரம், அரசியல், அறிவியல், தொழில்நுட்பம் என்று எல்லாவற்றிலும் ஆங்கில மொழியை பயன்படுத்துவதால் நிறையப் பேர் ஆங்கிலம் கற்றுக்கொள்கிறார்கள்.

11. யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்கு ஆங்கிலம் எப்படி உதவியாக இருந்திருக்கிறது?

11 உலகத்தில் நிறையப் பேர் ஆங்கிலம் பேசுவதால், பைபிள் விஷயங்களை மற்றவர்களுக்கு சுலபமாக சொல்ல முடிந்திருக்கிறது. ஆரம்பத்தில், நம் பிரசுரங்கள் ஆங்கிலத்தில் மட்டும்தான் இருந்தது. உலகம் முழுவதும் இருக்கிற மக்கள் பொதுவாக ஆங்கிலம் பேசுவதால், நிறையப் பேர் நம் பிரசுரங்களை படித்தார்கள். நம் தலைமை அலுவலகத்திலும் எல்லாரும் ஆங்கிலம் பேசுகிறார்கள். நியு யார்க்கில் இருக்கிற பேட்டர்ஸனில் உவாட்ச்டவர் கல்வி மையத்தில் நடக்கிற பயிற்சி பள்ளிகளும் ஆங்கிலத்தில்தான் நடத்தப்படுகிறது.

12. பைபிள் பிரசுரங்களை நாம் எத்தனை மொழிகளில் மொழிபெயர்த்து இருக்கிறோம், இதற்கு எது உதவியாக இருந்திருக்கிறது?

12 உலகம் முழுவதும் இருக்கிற மக்களுக்கு நற்செய்தியை சொல்வது நம் கடமை. அதனால்தான், பைபிள் பிரசுரங்களை 700-க்கும் அதிகமான மொழிகளில் நாம் மொழிபெயர்க்கிறோம். இதை செய்வதற்கு எது உதவியாக இருந்திருக்கிறது? கம்ப்யூட்டரும் மெப்ஸ் (MEPS) போன்ற மற்ற கம்ப்யூட்டர் புரோகிராமும் பைபிள் பிரசுரங்களை மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்க்க நமக்கு உதவியாக இருந்திருக்கிறது. அதனால், உலகம் முழுதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகள் பைபிள் சத்தியம் என்ற ‘சுத்தமான பாஷையை’ புரிந்துகொள்ள முடிகிறது, எல்லாராலும் ஒற்றுமையாகவும் இருக்க முடிகிறது.செப்பனியா 3:9-ஐ வாசியுங்கள்.

சட்டங்களும் நீதிமன்ற தீர்ப்புகளும்

13, 14. சட்டங்களும் நீதிமன்ற தீர்ப்புகளும் நமக்கு எப்படி உதவி செய்திருக்கின்றன?

13 முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்கள் நற்செய்தியைப் பிரசங்கிக்க ரோம சட்டங்கள் உதவியாக இருந்தன. அதேபோல், நிறைய நாடுகளில் இருக்கிற சட்டங்கள் நற்செய்தியைப் பிரசங்கிக்க நமக்கு இன்றும் உதவியாக இருக்கின்றன. உதாரணத்திற்கு, தங்களுக்கு பிடித்த மதத்தைப் பின்பற்ற... மத நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் பேச... வணக்கத்திற்காக கூடி வர... அமெரிக்காவில் இருக்கிற சட்டங்கள் யெகோவாவின் சாட்சிகளுக்கு உதவியாக இருக்கிறது. அதனால் அமெரிக்காவில் இருக்கிற யெகோவாவின் சாட்சிகள், கூட்டங்களுக்கும் ஊழியத்திற்கும் சுதந்திரமாகப் போக முடிகிறது. உலகம் முழுவதும் நடக்கிற பிரசங்க வேலையை அமெரிக்காவில் இருக்கிற நம் தலைமை அலுவலகத்தில் இருந்து ஒழுங்கமைப்பதற்கும் சுதந்திரம் இருக்கிறது. சில சமயங்களில், பிரசங்கிப்பதற்கு நமக்கு இருக்கிற உரிமையை நிலைநாட்ட நீதிமன்றத்திற்கு போக வேண்டிய சூழ்நிலை வந்திருக்கிறது. (பிலி. 1:7) சில நீதிமன்றங்களில் நமக்கு விரோதமாக தீர்ப்பு வந்தபோது, நாம் உயர்நீதி மன்றங்களுக்கு போயிருக்கிறோம், நிறைய வழக்குகளில் ஜெயித்திருக்கிறோம்.

14 மற்ற நாடுகளிலும், யெகோவாவை வணங்குவதற்கும் ஊழியம் செய்வதற்கும் நமக்கு இருக்கிற உரிமையை நிலைநாட்ட நீதிமன்றங்களுக்கு போயிருக்கிறோம். நம் வழக்குகளுக்கு அங்கு வெற்றி கிடைக்காதபோது, சர்வதேச நீதிமன்றங்களுக்கு போயிருக்கிறோம். உதாரணத்திற்கு, மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் (European Court of Human Rights) மேல் முறையீடு செய்திருக்கிறோம். ஜூன் 2014 வரை, மொத்தம் 57 வழக்குகளில் நமக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஐரோப்பாவில் இருக்கிற நிறைய நாடுகள் கட்டுப்பட்டே ஆக வேண்டும்! “எல்லாத் தேசத்தாருடைய வெறுப்புக்கு” ஆளானாலும், எந்தத் தடையும் இல்லாமல் யெகோவாவை வணங்குவதற்கு நிறைய நாடுகளில் இருக்கிற சட்டங்கள் நமக்கு உதவி செய்திருக்கின்றன.—மத். 24:9.

நமக்கு உதவிய புதிய கண்டுபிடிப்புகள்

15 புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அச்சடிப்பு முறைகள் நிறையப் பேருக்கு நற்செய்தியை பிரசங்கிக்க உதவியாக இருந்திருக்கின்றன. சுமார் 1450-ல் யோஹனஸ் கூட்டன்பர்க் (Johannes Gutenberg) என்பவர் கண்டுபிடித்த அச்சடிப்பு முறையைத்தான் பல 100 வருடங்களாக மக்கள் பயன்படுத்திகொண்டு இருந்தார்கள். ஆனால் கடந்த 200 வருடங்களில், அச்சடிப்பு முறைகளில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கின்றன. ஆஃப்செட் ப்ரின்ட்டிங்கை (Offset printing) கண்டுபிடித்த பின், அச்சடிக்கிற வேகமும் தரமும் முன்னேறி இருக்கிறது. பேப்பர் தயாரிப்பதற்கும், புத்தகங்களை பைண்ட் (bind) செய்வதற்கும் ஆகும் செலவு ரொம்ப குறைந்துவிட்டது. நற்செய்தியைப் பிரசங்கிக்க, இதெல்லாம் நமக்கு எப்படி பிரயோஜனமாக இருந்திருக்கிறது? 1879-ல், நம்முடைய முதல் காவற்கோபுர பத்திரிகையை ஆங்கிலத்தில் மட்டும் 6,000 பிரதிகள் அச்சடித்தோம். அதில் படங்கள் எதுவும் இல்லை. ஆனால் இன்று, காவற்கோபுர பத்திரிகை 200-க்கும் அதிகமான மொழிகளில் அச்சடிக்கப்படுகின்றன. அதில் அழகான, வண்ண வண்ணப் படங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு காவற்கோபுர இதழும் 5 கோடிக்கும் அதிகமான பிரதிகள் அச்சடிக்கப்படுகின்றன.

16. உலகம் முழுவதும் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேறு என்னவெல்லாம் நமக்கு உதவியாக இருந்திருக்கிறது? (ஆரம்பப் படம்)

16 கடந்த 200 வருடங்களில் வந்த பல புதிய கண்டுபிடிப்புகள், நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு நமக்கு உதவியாக இருந்திருக்கின்றன. ட்ரெயின், கார், விமானம் மட்டுமல்ல சைக்கிள், டைப்ரைட்டர் (typewriter), பிரெய்ல் (Braille) கருவிகள், டெலிகிராஃப் (telegraph), டெலிஃபோன் (telephone), கேமரா, ஆடியோ ரெக்காடர், வீடியோ ரெக்காடர், ரேடியோ, டிவி, திரைப்படம், கம்ப்யூட்டர், இன்டர்நெட் எல்லாம் நமக்கு ரொம்பவே உதவியாக இருந்திருக்கின்றன. யெகோவாவின் சாட்சிகள் இதை எல்லாம் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் நிறைய மொழிகளில் தயாரிக்க... நற்செய்தியை பிரசங்கிக்க... இதெல்லாம் நமக்கு உதவியாக இருந்திருக்கின்றன. ‘ஜாதிகளின் பாலைக் குடிப்பார்கள்’ என்று நம்மைப் பற்றி சொல்லி இருக்கிற தீர்க்கதரிசனம் நிறைவேறி வருவது எவ்வளவு தெளிவாகத் தெரிகிறது!ஏசாயா 60:16-ஐ வாசியுங்கள்.

17. (அ) எதை நம்மால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது? (ஆ) பிரசங்க வேலையை யெகோவா ஏன் நம்மிடம் கொடுத்து இருக்கிறார்?

17 பிரசங்க வேலையை யெகோவாதான் வழிநடத்திகொண்டு வருகிறார் என்று நம்மால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. நம்முடைய உதவி இருந்தால் மட்டும்தான் இந்த வேலையை யெகோவா தேவனால் செய்து முடிக்க முடியும் என்று நாம் நினைக்கக் கூடாது. நம்முடைய உதவி இல்லாமலேயே அவரால் செய்து முடிக்க முடியும். இருந்தாலும், நம்மீது இருக்கும் அன்பினாலும் அவரோடு சேர்ந்து இந்த வேலையை நாம் செய்ய வேண்டுமென்று அவர் விரும்புவதாலும்தான் இந்த முக்கியமான வேலையை நம்மிடம் கொடுத்திருக்கிறார். பைபிளில் இருக்கிற நற்செய்தியை சொல்வதன் மூலமாக, நாம் யெகோவாவையும் மக்களையும் நேசிக்கிறோம் என்று காட்டுகிறோம். (மாற். 12:28-31; 1 கொ. 3:9) நற்செய்தியைப் பிரசங்கிக்க, யெகோவா நமக்கு உதவி செய்வதற்காக அவருக்கு நன்றியோடு இருக்கிறோம். அதனால், யெகோவாவைப் பற்றியும் அவருடைய அரசாங்கத்தைப் பற்றியும் மற்றவர்களிடம் சொல்வதற்கு கிடைக்கிற எந்த வாய்ப்பையும் நாம் தவறவிடக் கூடாது!

^ பாரா. 1 சுமார் 1870-ல் இருந்து யெகோவாவின் சாட்சிகள் பைபிள் மாணாக்கர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஆனால், 1931-ல் தான் இவர்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் வந்தது.—ஏசா. 43:10.