Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒற்றுமையாக இருக்க நீங்கள் என்ன செய்யலாம்?

ஒற்றுமையாக இருக்க நீங்கள் என்ன செய்யலாம்?

“அவரால்தான் உடலுறுப்புகள் அனைத்தும் . . . ஒன்றோடொன்று இசைவாக இணைக்கப்பட்டு ஒற்றுமையாய் இயங்குகின்றன.”—எபே. 4:16.

பாடல்கள்: 53,  107

1. கடவுளுடைய வேலையில் எப்போதுமே என்ன குணத்தைப் பார்க்க முடிகிறது?

யெகோவாவும் இயேசுவும் எப்போதுமே ஒற்றுமையாக இருந்திருக்கிறார்கள். யெகோவா முதல் முதலில் இயேசுவை படைத்தார். பிறகு, இயேசு ஒரு ‘கைதேர்ந்த கலைஞனாக’ யெகோவாவோடு சேர்ந்து நிறைய வேலைகளை செய்தார். (நீதி. 8:30, NW) அன்று வாழ்ந்த யெகோவாவுடைய மக்களும் ஒற்றுமையாக வேலை செய்தார்கள். உதாரணத்துக்கு, நோவாவும் அவருடைய குடும்பமும் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய பேழையைக் கட்டினார்கள். பிறகு, இஸ்ரவேலர்கள் எல்லாரும் சேர்ந்து ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டினார்கள். அவர்கள் ஒவ்வொரு இடமாக போனபோது கூடாரத்தை தனித்தனியாக பிரித்தார்கள், திரும்பவும் இணைத்தார்கள். அதையும் அவர்கள் சேர்ந்தே செய்தார்கள். ஆலயத்தில் யெகோவாவை புகழ்வதற்காக ஒன்று சேர்ந்து இனிமையான பாடல்களை பாடினார்கள், இசை கருவிகளை வாசித்தார்கள். யெகோவாவுடைய மக்கள் ஒன்று சேர்ந்து வேலை செய்ததால்தான் இதையெல்லாம் அவர்களால் செய்ய முடிந்தது.—ஆதி. 6:14-16, 22; எண். 4:4-32; 1 நா. 25:1-8.

2. (அ) முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்கள் எப்படி வேலை செய்தார்கள்? (ஆ) என்ன கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ளப் போகிறோம்?

2 முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்களும் ஒன்று சேர்ந்து வேலை செய்தார்கள். அவர்களுக்கு வித்தியாசமான திறமைகள், நியமிப்புகள் இருந்தாலும் ஒற்றுமையாக இருந்தார்கள் என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். சபையின் தலைவரான இயேசு கிறிஸ்துவை அவர்கள் பின்பற்றினார்கள். பவுல் அவர்களை உடலில் இருக்கும் உறுப்புகளுக்கு ஒப்பிட்டு பேசினார். அந்த உறுப்புகள் வித்தியாசமாக இருந்தாலும் அவை ஒன்று சேர்ந்து வேலை செய்வதுபோல் அவர்களும் சேர்ந்தே வேலை செய்கிறார்கள் என்று சொன்னார். (1 கொரிந்தியர் 12:4-6, 12-ஐ வாசியுங்கள்.) நம்மைப் பற்றி என்ன? பிரசங்க வேலையில்... சபையில்... குடும்பத்தில்... நாம் எப்படி ஒற்றுமையாக இருக்கலாம்?

பிரசங்க வேலையில் ஒற்றுமை

3. அப்போஸ்தலன் யோவான் என்ன தரிசனத்தைப் பார்த்தார்?

3 முதல் நூற்றாண்டில் அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தை பார்த்தார். அதில் ஏழு தேவதூதர்கள் எக்காளம் ஊதினார்கள். ஐந்தாம் தேவதூதன் எக்காளத்தை ஊதியபோது ஒரு நட்சத்திரம், ‘பரலோகத்திலிருந்து பூமியின் மீது விழுந்திருந்ததை’ யோவான் பார்த்தார். அந்த “நட்சத்திரம்” ஒரு சாவியைப் பயன்படுத்தி “அதலபாதாளத்தை” திறந்தது. முதலில், அதிலிருந்து பயங்கரமாக புகை வந்தது. பிறகு அந்தப் புகையிலிருந்து கூட்டம் கூட்டமாக வெட்டுக்கிளிகள் வந்தன. அவை மரங்களையும் இலைகளையும் நாசப்படுத்துவதற்குப் பதிலாக, ‘நெற்றிகளில் கடவுளுடைய முத்திரையைப் பெற்றிருக்காத ஆட்களை’ தாக்கின. (வெளி. 9:1-4) வெட்டுக்கிளி கூட்டத்தால் எல்லாவற்றையும் நாசப்படுத்த முடியும் என்று யோவானுக்கு தெரியும். ஏனென்றால் மோசேயின் காலத்தில் எகிப்தில் அப்படி நடந்திருந்தது. (யாத். 10:12-15) யோவான் அந்த காட்சியில் பார்த்த வெட்டுக்கிளிகள், பொய்மதத்துக்கு எதிராக பிரசங்கிக்கும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை குறிக்கின்றன. பூமியில் வாழும் நம்பிக்கையுள்ள லட்சக்கணக்கான மக்கள் அவர்களோடு சேர்ந்து இந்த வேலையை செய்கிறார்கள். ஜனங்கள் பொய்மதத்தை விட்டு வெளியே வரவும், சாத்தானின் பிடியிலிருந்து விடுதலையாகவும் இந்த வேலை உதவியாக இருந்திருக்கிறது.

4. கடவுளுடைய மக்கள் என்ன வேலையை செய்ய வேண்டியிருக்கிறது? அந்த வேலையை செய்து முடிக்க அவர்கள் எப்படி இருக்க வேண்டும்?

4 முடிவு வருவதற்கு முன்பு உலகத்தில் இருக்கும் எல்லா மக்களுக்கும் ‘நற்செய்தியை’ சொல்ல வேண்டிய முக்கியமான வேலை நமக்கு இருக்கிறது. இந்த வேலையை மிகப்பெரிய அளவில் செய்ய வேண்டியிருக்கிறது! (மத். 24:14; 28:19, 20) “வாழ்வளிக்கும் தண்ணீரை” குடிக்க “தாகமாயிருக்கிற” எல்லாரையும் நாம் வரவேற்க வேண்டும். அதாவது, பைபிளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுகிற எல்லாருக்கும் நாம் அதை சொல்லித்தர வேண்டும். (வெளி. 22:17) ஆனால், சபையில் இருக்கிறவர்கள் “ஒற்றுமையாய்” இருந்து ஒருவரோடு ஒருவர் சேர்ந்து உழைத்தால்தான் இதை செய்ய முடியும்.—எபே. 4:16.

5, 6. பிரசங்க வேலையை செய்வதன் மூலமாக நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை எப்படி காட்டலாம்?

5 நம்மால் முடிந்தவரை நிறைய மக்களிடம் நற்செய்தியை சொல்ல ஒழுங்கான முறையில் ஊழியம் செய்ய வேண்டும். சபையில் நமக்கு கிடைக்கும் ஆலோசனைகள் இதற்கு உதவியாக இருக்கும். வெளி ஊழியக் கூட்டம் முடிந்ததும் மக்களுக்கு நற்செய்தியை சொல்ல நாம் ஊழியத்துக்கு போகிறோம். மக்கள் படிப்பதற்கு பத்திரிகைகளையும் கொடுக்கிறோம். சொல்லப்போனால், லட்சக்கணக்கான பத்திரிகைகளையும் புத்தகங்களையும் நாம் ஊழியத்தில் கொடுத்திருக்கிறோம். விசேஷ விநியோகிப்புகள் இருக்கும்போது சபையில் கொடுக்கப்படும் ஆலோசனைகளின்படி அதை செய்கிறீர்களா? நீங்களும் அதில் கலந்துகொள்ளும்போது உலகம் முழுவதும் இருக்கும் லட்சக்கணக்கான சகோதர சகோதரிகளோடு சேர்ந்து நற்செய்தியைச் சொல்கிறீர்கள். அதோடு, தேவதூதர்களோடு சேர்ந்தும் உழைக்கிறீர்கள். ஏனென்றால், நற்செய்தியை சொல்ல அவர்கள்தான் கடவுளுடைய மக்களுக்கு உதவி செய்கிறார்கள்.—வெளி. 14:6.

6 உலகம் முழுவதும் நடக்கும் பிரசங்க வேலையை பற்றிய அறிக்கையை இயர்புக்கில் பார்க்கும்போது நமக்கு எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது! மாநாட்டுக்கு மக்களை அழைப்பதிலும் நாம் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறோம்! மாநாட்டில் நாம் எல்லாரும் ஒரே மாதிரியான விஷயங்களைத்தான் கற்றுக்கொள்கிறோம். அங்கு கேட்கும் பேச்சுகள், நடிப்புகள், நாடகங்கள் எல்லாம் யெகோவாவுக்கு மிகச்சிறந்ததை செய்ய நம்மை உற்சாகப்படுத்துகிறது. நாம் எல்லாருமே ஒவ்வொரு வருஷமும் நிசான் 14-ம் தேதி சூரியன் மறைந்த பிறகு இயேசுவின் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறோம். அதில் கலந்துகொள்ளும்போதும் உலகம் முழுவதும் இருக்கும் சகோதர சகோதரிகளோடு நாம் ஒன்று சேர்ந்து இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். (1 கொ. 11:23-26) அதோடு, இயேசுவுக்கு கீழ்ப்படிவதையும் யெகோவாவுக்கு நன்றியோடு இருப்பதையும் காட்டுகிறோம். அதில் கலந்துகொள்வதற்காக சில வாரங்களுக்கு முன்பிருந்தே நிறையப் பேரை அழைக்கிறோம். இந்த விஷயத்திலும் நாம் ஒன்று சேர்ந்து உழைக்கிறோம்.

7. நாம் ஒன்று சேர்ந்து வேலை செய்வதால் என்ன நன்மை கிடைக்கிறது?

7 ஒரேயொரு வெட்டுக்கிளியால் பெரியளவில் எந்த சேதத்தையும் ஏற்படுத்த முடியாது. அதேபோல் நம்மால் தனியாக எல்லாருக்கும் நற்செய்தியைச் சொல்ல முடியாது. நாம் ஒன்று சேர்ந்து வேலை செய்வதால்தான் லட்சக்கணக்கான மக்களுக்கு யெகோவாவைப் பற்றி சொல்ல முடிகிறது; அதோடு, அவரை வணங்கவும் புகழவும் சிலருக்கு உதவ முடிகிறது.

சபையில் ஒற்றுமை

8, 9. (அ) கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்கு என்ன உதாரணத்தை பவுல் சொன்னார்? (ஆ) சபை ஒற்றுமையாக இருக்க நாம் எப்படி உதவலாம்?

8 சபை எப்படி செயல்படுகிறது என்று பவுல் எபேசு சபைக்கு விளக்கினார்; அதோடு, சபையில் இருக்கிறவர்கள் ‘எல்லாவற்றிலேயும் வளருகிறவர்களாய்’ இருக்க வேண்டும் என்றும் சொன்னார். (எபேசியர் 4:15, 16-ஐ வாசியுங்கள்.) ஒற்றுமையாக இருக்க சபையில் இருக்கிற ஒவ்வொருவரும் உதவ வேண்டும்... சபையின் தலைவரான இயேசுவைப் போல் நடக்க வேண்டும்... என்பதை புரியவைப்பதற்காக சபையை ஒரு உடலுக்கு பவுல் ஒப்பிட்டார். உடலில் இருக்கும் உறுப்புகள் எல்லாம் “அவற்றுக்கு உதவியளிக்கிற எல்லா மூட்டுகளாலும்” இணைக்கப்பட்டு ஒற்றுமையாய் இயங்குகின்றன என்று அவர் சொன்னார். அப்படியென்றால், இளைஞர்கள், பெரியவர்கள், ஆரோக்கியமானவர்கள், பலவீனமானவர்கள் என யாராக இருந்தாலும் சபை ஒற்றுமையாக இருக்க உதவ முடியும். எப்படி?

9 சபையை கவனித்துக்கொள்ள மூப்பர்களை இயேசு நியமித்திருக்கிறார். அதனால், நாம் மூப்பர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார். (எபி. 13:7, 17) இது எப்போதும் சுலபம் இல்லை. ஆனால், யெகோவாவிடம் உதவி கேட்டால் அவருடைய சக்தியை நமக்கு கொடுப்பார். மூப்பர்களுக்கு முழுமனதோடு கீழ்ப்படிய அந்த சக்தி நமக்கு உதவும். இதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: நாம் மனத்தாழ்மையாக இருந்தால்... மூப்பர்களுக்கு ஒத்துழைத்தால்... சபையில் எந்தளவு ஒற்றுமை இருக்கும்! ஒருவர்மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பு இன்னும் எந்தளவு அதிகமாகும்!

10. சபை ஒற்றுமையாக இருக்க உதவி ஊழியர்கள் என்ன செய்கிறார்கள்? (ஆரம்பப் படம்)

10 சபை ஒற்றுமையாக இருக்க உதவி ஊழியர்களும் கடினமாக உழைக்கிறார்கள். அவர்கள் செய்யும் எல்லா சேவைக்கும் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நிறைய விஷயங்களில் அவர்கள் மூப்பர்களுக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, ஊழியத்துக்கு தேவையான பத்திரிகைகளும் புத்தகங்களும் சபையில் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்கிறார்கள். கூட்டங்களுக்கு வரும் புதியவர்களை அன்போடு வரவேற்கிறார்கள். ராஜ்ய மன்றத்தை பராமரிக்கவும் சுத்தம் செய்யவும் கடுமையாக உழைக்கிறார்கள். இவர்களோடு நாம் ஒத்துழைத்தால் சபையில் ஒற்றுமை இருக்கும். எல்லாராலும் ஒழுங்கான முறையில் யெகோவாவுக்கு சேவை செய்ய முடியும்.—அப்போஸ்தலர் 6:3-6-ஐ ஒப்பிடுங்கள்.

11. சபை ஒற்றுமையாக இருக்க இளம் சகோதரர்கள் எப்படி உதவலாம்?

11 சில மூப்பர்கள் சபைக்காக பல வருஷங்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வயதாவதால் முன்புபோல் இப்போது உழைக்க முடிவதில்லை. அதனால் இளம் சகோதரர்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். பயிற்சி பெற்ற இளம் சகோதரர்களால் சபையில் நிறைய பொறுப்புகளை எடுத்து செய்ய முடியும். உதவி ஊழியர்கள் கடுமையாக உழைத்தால் எதிர்காலத்தில் அவர்களாலும் மூப்பராக தகுதிபெற முடியும். (1 தீ. 3:1, 10) சில இளம் மூப்பர்கள் நிறைய முன்னேற்றம் செய்ததால் வட்டாரக் கண்காணிகளாக சேவை செய்கிறார்கள். நிறைய சபைகளில் இருக்கிற சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்கிறார்கள். இப்படிப்பட்ட இளம் சகோதரர்கள் செய்யும் சேவைக்கு நாம் ரொம்ப நன்றியோடு இருக்கிறோம், இல்லையா!சங்கீதம் 110:3; பிரசங்கி 12:1-ஐ வாசியுங்கள்.

குடும்பத்தில் ஒற்றுமை

12, 13. ஒற்றுமையாக இருக்க குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் என்ன செய்யலாம்?

12 நம் குடும்பத்தில் இருக்கிறவர்கள் ஒற்றுமையாக இருக்க நாம் எப்படி உதவலாம்? ஒவ்வொரு வாரமும் தவறாமல் குடும்ப வழிபாடு செய்வது அதற்கு உதவியாக இருக்கும். அப்பா-அம்மாவும் பிள்ளைகளும் சேர்ந்து யெகோவாவைப் பற்றி படிக்கும்போது அவர்கள் மத்தியில் இருக்கும் அன்பு இன்னும் அதிகமாகும். ஊழியத்தில் என்ன பேசுவது என்று அவர்கள் குடும்ப வழிபாட்டில் தயாரிக்கலாம். நன்றாக ஊழியம் செய்ய அது அவர்களுக்கு உதவியாக இருக்கும். இப்படி குடும்பத்தில் இருக்கிறவர்கள் பைபிளைப் பற்றி பேசும்போது... யெகோவாவை நேசித்து அவருக்கு பிடித்த மாதிரி வாழ முயற்சி செய்யும்போது... அவர்களுக்குள் இருக்கும் பந்தம் பலப்படும்.

குடும்ப வழிபாடு குடும்ப பந்தத்தை பலப்படுத்துகிறது (பாராக்கள் 12, 15)

13 கணவனும் மனைவியும் ஒருவரோடு ஒருவர் எப்படி ஒத்துழைக்கலாம்? (மத். 19:6) அவர்கள் இருவருமே யெகோவாமீது அன்பு வைத்தால்... ஒன்றாக சேர்ந்து அவரை வணங்கினால்... திருமண வாழ்க்கையில் சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் இருப்பார்கள். ஆபிரகாம்-சாராள், ஈசாக்கு-ரெபெக்காள், எல்க்கானா-அன்னாள் போல் அவர்களும் ஒருவர்மீது ஒருவர் பாசமாக இருக்க வேண்டும். (ஆதி. 26:8; 1 சா. 1:5, 8; 1 பே. 3:5, 6) கணவனும் மனைவியும் இதை செய்தால் ஒற்றுமையாக இருக்க முடியும், யெகோவாவோடும் நெருங்கியிருக்க முடியும்.பிரசங்கி 4:12-ஐ வாசியுங்கள்.

14. உங்கள் கணவனோ மனைவியோ யெகோவாவை சேவிக்கவில்லை என்றாலும் திருமண பந்தத்தை பலப்படுத்த நீங்கள் என்ன செய்யலாம்?

14 யெகோவாவை வணங்காத ஒருவரை கல்யாணம் செய்யக் கூடாது என்று பைபிள் தெளிவாக சொல்கிறது. (2 கொ. 6:14) இருந்தாலும் சிலருடைய துணை யெகோவாவின் சாட்சியாக இல்லாமல் இருக்கலாம். எப்படியென்றால், சிலர் கல்யாணமான பிறகு யெகோவாவின் சாட்சியாக ஆகியிருக்கலாம்; ஆனால், அவர்களுடைய கணவனோ மனைவியோ யெகோவாவை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். இன்னும் சிலர் ஒரு யெகோவாவின் சாட்சியையே கல்யாணம் செய்திருக்கலாம், ஆனால் பிறகு அந்த நபர் யெகோவாவை வணங்காமல் போயிருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கிற கிறிஸ்தவர்களும் பைபிள் ஆலோசனைகளுக்கு கீழ்ப்படிந்து அவர்களுடைய திருமண பந்தத்தை பலப்படுத்துகிறார்கள். இது எப்போதும் சுலபமாக இருக்காது. இதற்கு ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். மேரியும் அவளுடைய கணவர் டேவிட்டும் சேர்ந்து யெகோவாவை சேவித்தார்கள். பிறகு டேவிட் கூட்டங்களுக்கு போவதை நிறுத்திவிட்டார். இருந்தாலும் மேரி ஒரு நல்ல மனைவியாக நடக்கவும் கிறிஸ்தவ குணங்களைக் காட்டவும் முயற்சி செய்தாள். அவளுடைய 6 பிள்ளைகளுக்கு யெகோவாவைப் பற்றி கற்றுக்கொடுத்தாள்; தொடர்ந்து கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் போனாள். பிறகு அவளுடைய பிள்ளைகள் எல்லாரும் வளர்ந்து பெரியவர்களாகி சொந்தக்காலில் நிற்க ஆரம்பித்தார்கள். தனியாக யெகோவாவுக்கு சேவை செய்வது மேரிக்கு கஷ்டமாக இருந்தாலும் தொடர்ந்து யெகோவாவுக்கு சேவை செய்தாள். மேரி டேவிட்டுக்காக வைத்துவிட்டு போன பத்திரிகைகளை அவர் படிக்க ஆரம்பித்தார். பிறகு டேவிட் சில கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார். அவருடைய 6 வயது பேரன் எப்போதும் தாத்தாவுக்காக கூட்டங்களில் இடம் பிடிப்பான். டேவிட் கூட்டத்துக்கு வரவில்லை என்றால் அவன், “தாத்தா, நீங்க கூட்டத்துக்கு வருவீங்கனு நான் பார்த்துட்டே இருந்தேன்” என்று சொல்வான். 25 வருஷங்களாக யெகோவாவை சேவிக்காத டேவிட், திரும்பவும் யெகோவாவை சேவிக்க ஆரம்பித்தார். இப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து யெகோவாவை வணங்குவதால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள்.

15. உங்களுக்கு கல்யாணமாகி ரொம்ப வருஷம் ஆகியிருந்தால் இளம் தம்பதிகளுக்கு நீங்கள் எப்படி உதவி செய்யலாம்?

15 குடும்பத்தில் இருக்கும் சந்தோஷத்தை கெடுக்க சாத்தான் முயற்சி செய்கிறான். அதனால், கணவனும் மனைவியும் ஒற்றுமையாக இருக்க கடினமாக உழைக்க வேண்டும். உங்களுக்கு கல்யாணமாகி எத்தனை வருஷங்கள் ஆகியிருந்தாலும் சரி, திருமண பந்தத்தை பலப்படுத்த நீங்கள் என்ன செய்யலாம், எப்படிப் பேசலாம் என்று யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு கல்யாணமாகி ரொம்ப வருஷங்கள் ஆகியிருந்தால் இளம் தம்பதிகளுக்கு நீங்கள் நல்ல உதாரணமாக இருக்கலாம். அவர்களை உங்கள் குடும்ப வழிபாட்டுக்குக் கூப்பிடலாம். கல்யாணமாகி எத்தனை வருஷங்கள் ஆகியிருந்தாலும் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டும், ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் உங்களிடம் இருந்து கற்றுக்கொள்வார்கள்.—தீத். 2:3-7.

‘நாம் கர்த்தரின் பர்வதத்துக்கு போவோம் வாருங்கள்’

16, 17. கடவுளை ஒற்றுமையாக சேவிக்கும் அவருடைய மக்கள் எப்படிப்பட்ட காலத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்?

16 பண்டிகை கொண்டாடுவதற்காக இஸ்ரவேலர்கள் எருசலேமுக்கு போகும்போது ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்தார்கள். பயணத்துக்கு தேவையானதை எல்லாம் சேர்ந்தே தயார்படுத்தினார்கள். ஒன்று சேர்ந்து பயணம் செய்தார்கள். ஆலயத்தில் யெகோவாவை ஒற்றுமையாக வணங்கி அவரைப் புகழ்ந்தார்கள். (லூக். 2:41-44) இன்று நாமும் புதிய உலகத்தில் வாழ்வதற்காக தயாராகிறோம். அதனால் மற்றவர்களோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும், அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். இன்னும் எந்தெந்த வழிகளில் இதை செய்யலாம் என்று யோசித்துப் பாருங்கள்.

17 உலகத்தில் இருக்கும் மக்கள் எந்த விஷயத்திலும் ஒத்துப்போவதில்லை. நிறைய விஷயங்களுக்காக சண்டை போடுகிறார்கள். ஆனால் நாம் சமாதானமாக இருக்கவும் பைபிளைப் புரிந்துகொள்ளவும் யெகோவா உதவி செய்திருக்கிறார். அதற்காக நாம் அவருக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்! உலகம் முழுவதும் இருக்கும் அவருடைய மக்கள் அவருக்கு பிடித்த மாதிரி அவரை வணங்குகிறார்கள். எப்போதையும்விட இந்த கடைசி நாட்களில் அவரை இன்னும் ஒற்றுமையாக வணங்குகிறார்கள். ‘கர்த்தரின் பர்வதத்துக்கு போவோம் வாருங்கள்’ என்று ஏசாயாவும் மீகாவும் சொன்னதுபோல் அவர்களும் சொல்கிறார்கள். (ஏசா. 2:2-4; மீகா 4:2-4-ஐ வாசியுங்கள்.) எதிர்காலத்தில் பூமியில் இருக்கும் எல்லாரும் ஒற்றுமையாக இருப்பதையும் ஒன்று சேர்ந்து யெகோவாவை வணங்குவதையும் பார்க்கும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்!