Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை | தேவதூதர்கள்—உண்மையிலேயே இருக்கிறார்களா?

தேவதூதர்களைப் பற்றிய உண்மைகள்

தேவதூதர்களைப் பற்றிய உண்மைகள்

தேவதூதர்களைப் பற்றிய உண்மைகளை, அதாவது அவர்கள் யார், அவர்கள் எப்படி வந்தார்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் ஆகிய கேள்விகளுக்கான பதில்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளைத் தவிர வேறெங்கும் இதற்கான பதிலைக் கண்டுபிடிக்க முடியாது. (2 தீமோத்தேயு 3:16) தேவதூதர்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

  • கடவுளைப் போலவே தேவதூதர்களும் பார்க்க முடியாத உருவத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு “சதையும் எலும்புகளும்” இல்லை. உண்மையுள்ள தேவதூதர்கள், பரலோகத்தில் கடவுளுக்கு முன்னால் இருக்கிறார்கள்.—லூக்கா 24:39; மத்தேயு 18:10; யோவான் 4:24.

  • சில சமயங்களில், கடவுள் கொடுத்த நியமிப்புகளை பூமியில் நிறைவேற்றுவதற்காக அவர்கள் மனித உருவெடுத்திருக்கிறார்கள். அந்த நியமிப்பை நிறைவேற்றிய பிறகு, மனித உருவத்தை விட்டிருக்கிறார்கள்.—நியாயாதிபதிகள் 6:11-23; 13:15-20.

  • பைபிளில், தேவதூதர்கள் ஆண்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் எப்போதும் ஆண்களாகவே உருவெடுத்திருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் ஆண் உருவத்திலோ பெண் உருவத்திலோ இருப்பதில்லை. அவர்கள் கல்யாணம் செய்வதும் இல்லை, பிள்ளைகளைப் பெற்றெடுப்பதும் இல்லை. இந்தப் பூமியில், அவர்கள் முதலில், குழந்தைகளாகவோ பிள்ளைகளாகவோ அல்லது மனிதர்களாகவோ வரவில்லை. அவர்கள் யெகோவாவால் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான், ‘உண்மைக் கடவுளின் மகன்கள்’ என்று பைபிள் அவர்களை அழைக்கிறது.—யோபு 1:6, அடிக்குறிப்பு; சங்கீதம் 148:2, 5.

  • ‘மனிதர்களுடைய மொழிகள் தேவதூதர்களுடைய மொழிகள்’ என்று பைபிள் சொல்லும்போது, தேவதூதர்களுக்கு மொழியும் பேச்சாற்றலும் இருக்கிறது என்று தெரிகிறது. மனிதர்களிடம் பேசுவதற்கு கடவுள் தேவதூதர்களைப் பயன்படுத்தியிருந்தாலும், அவர்களிடம் ஜெபம் செய்யவோ அவர்களை வணங்கவோ கடவுள் நம்மை அனுமதிப்பதில்லை.—1 கொரிந்தியர் 13:1; வெளிப்படுத்துதல் 22:8, 9.

  • பல்லாயிரக்கணக்கில் தேவதூதர்கள் இருக்கிறார்கள். சொல்லப்போனால், அவர்களுடைய எண்ணிக்கை கோடிக்கணக்கில் இருக்கிறது.—தானியேல் 7:10; வெளிப்படுத்துதல் 5:11.

  • தேவதூதர்கள் ‘பலம்படைத்தவர்கள்,’ அதாவது மனிதர்களைவிட பலமடங்கு பலம்படைத்தவர்கள். அவர்கள் மனிதர்களைவிட அதிபுத்திசாலிகளும்கூட! மனிதர்களால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அவர்களால் வேகமாகப் பயணம் செய்ய முடியும்.—சங்கீதம் 103:20; தானியேல் 9:20-23.

  • தேவதூதர்களுக்கு அதிக ஞானமும் பலமும் இருந்தாலும், அவர்களுக்கு சில வரம்புகளும் இருக்கின்றன. அதோடு, அவர்களுக்குத் தெரியாத சில விஷயங்களும் இருக்கின்றன.—மத்தேயு 24:36; 1 பேதுரு 1:12.

  • தேவதூதர்கள் வித்தியாசமான சுபாவங்களோடும், தெய்வீக குணங்களோடும், சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் சுதந்திரத்தோடும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் மனிதர்களைப் போல, அவர்களால் நல்லது எது, கெட்டது எது என்பதைத் தீர்மானிக்க முடியும். வருத்தமான விஷயம் என்னவென்றால், சில தேவதூதர்கள் கடவுளுக்கு எதிராகச் செயல்பட தீர்மானித்தார்கள்.—யூதா 6