Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எதிர்காலத்தைக் கணிக்க முடியுமா?

எதிர்காலத்தைக் கணிக்க முடியுமா?

உங்கள் எதிர்காலமும் உங்கள் குடும்பத்தின் எதிர்காலமும் எப்படி இருக்குமென யோசித்திருக்கிறீர்களா? எதிர்காலத்தில் செழிப்பாக வாழ்வீர்களா, வறுமையில் வாடுவீர்களா? மற்றவர்களுடைய அன்பும் அரவணைப்பும் கிடைக்குமா, தனிமையில் வாட வேண்டியிருக்குமா? நீண்ட காலம் வாழ்வீர்களா, கொஞ்சக் காலம் வாழ்வீர்களா? இதுபோன்ற கேள்விகள் ஆயிரக்கணக்கான வருஷங்களாக மக்களின் மனதைக் குடைந்துகொண்டே இருக்கின்றன.

இன்றைய நிபுணர்கள், மாறிவரும் உலக நிலைமைகளை ஆராய்வதன் மூலம் எதிர்காலத்தைக் கணிக்கிறார்கள். பெரும்பாலான கணிப்புகள் சரியாக இருந்திருந்தாலும், மற்றவை தவறாக இருந்திருக்கின்றன. அவற்றில் சில, ரொம்பவே தவறாக இருந்திருக்கின்றன. உதாரணத்துக்கு, “வரப்போற வயர்லெஸ் தொழில்நுட்ப யுகத்துல போரே இருக்காது” என்று வயர்லெஸ் டெலிகிராஃபை கண்டுபிடித்த கூல்யெல்மோ மார்க்கோனி 1912-ல் கணித்தார். 1962-ல், பீட்டில்ஸ் என்ற இசைக் குழுவை நிராகரித்த டெக்கா ரெக்கார்ட் கம்பெனியைச் சேர்ந்த ஒருவர், ‘கிட்டார் இசைக் குழுவெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா காணாமபோயிடும்’ என்று கணித்தார்.

நிறைய பேர் தங்கள் எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியைத் தேடிப் போகிறார்கள். சிலர், ஜோதிடர்களிடம் போகிறார்கள். வேறு சிலர், பத்திரிகைகளிலும் செய்தித்தாள்களிலும் வெளிவருகிற ராசிபலன்களைப் பார்க்கிறார்கள். இன்னும் சிலர், குறிசொல்கிற அல்லது ஆவிகளோடு தொடர்புகொள்கிற ஆட்களிடம் விசாரிக்கிறார்கள். இந்த ஆட்கள் ஜோசிய சீட்டுகள், எண்கள், கைரேகைகள் போன்றவற்றை வைத்து எதிர்காலத்தை “கணிப்பதாக” சொல்லிக்கொள்கிறார்கள்.

அந்தக் காலத்தில் சிலர், தங்கள் எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ள ஆண் அல்லது பெண் சாமியார்களிடம் போனார்கள். உதாரணத்துக்கு, பெர்சிய ராஜாவான கோரேசை எதிர்த்துப் போரிட்டால் வெற்றி கிடைக்குமா என்று தெரிந்துகொள்ள லிடியா நாட்டின் ராஜாவான க்ரீஸஸ் விரும்பினார்; அதற்காக, கிரீஸிலுள்ள டெல்ஃபி ஊரைச் சேர்ந்த ஒரு சாமியாருக்கு விலைமதிப்புள்ள பரிசுகளை அனுப்பினார். கோரேசை எதிர்த்துப் போரிட்டால், க்ரீஸஸ் “ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை” அழித்துவிடுவார் என்று அந்தச் சாமியார் சொன்னார். க்ரீஸசும் வெற்றி கிடைக்குமென்ற நம்பிக்கையோடு போரிட்டார். ஆனால், அவர் அழித்தது தன்னுடைய சாம்ராஜ்யத்தைத்தான்!

அந்தச் சாமியாரின் தெளிவற்ற கணிப்பு பிரயோஜனம் இல்லாமல்போனது. போரில் யாருக்கு வெற்றி கிடைத்திருந்தாலும், அந்தக் கணிப்பு சரியானதுபோல் தெரிந்திருக்கும். சாமியாரின் கணிப்பை நம்பிய க்ரீஸசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. ஆனால், எதிர்காலத்தைத் தெரிந்துகொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் இன்றைய வழிமுறைகள் மக்களுக்குப் பிரயோஜனமாக இருந்திருக்கின்றனவா?