Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவது இப்போது ரொம்பவே முக்கியம்!

ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவது இப்போது ரொம்பவே முக்கியம்!

“ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்; நாள் நெருங்கி வருவதை நாம் எந்தளவுக்குப் பார்க்கிறோமோ அந்தளவுக்கு ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த வேண்டும்.” —எபி. 10:24, 25.

பாடல்கள்: 121, 119

1. இன்னும் அதிகமாக உற்சாகப்படுத்தும்படி முதல் நூற்றாண்டிலிருந்த எபிரெய கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பவுல் ஏன் அறிவுறுத்தினார்?

“அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்; சிலர் வழக்கமாகச் சபைக் கூட்டங்களுக்கு வராமல் இருந்துவிடுவதுபோல் நாமும் இருந்துவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, ஒன்றுகூடிவந்து ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த வேண்டும்; நாள் நெருங்கி வருவதை நாம் எந்தளவுக்குப் பார்க்கிறோமோ அந்தளவுக்கு ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த வேண்டும்” என்ற ஆலோசனையை, முதல் நூற்றாண்டிலிருந்த எபிரெய கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் கொடுத்தார். (எபி. 10:24, 25) ஒருவரை ஒருவர் இன்னும் அதிகமாக உற்சாகப்படுத்த வேண்டுமென பவுல் ஏன் சொல்கிறார் என்ற கேள்வி அந்தச் சகோதரர்களுக்கு இருந்திருக்கலாம். ஐந்து வருஷத்துக்குள், அதற்கான பதில் அவர்களுக்குக் கிடைத்தது. எருசலேமுக்கு யெகோவா நியாயத்தீர்ப்பு கொடுக்கும் நாள் நெருங்கி வந்ததை அவர்கள் பார்த்தார்கள். இயேசு சொன்னபடி, அந்த நகரத்திலிருந்து தப்பித்து ஓட வேண்டுமென்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். (லூக். 21:20-22; அப். 2:19, 20) கி.பி. 70-ல், ரோமர்கள் எருசலேமை அழித்தபோது, யெகோவாவின் நாள் வந்தது.

2. மற்றவர்களை உற்சாகப்படுத்துவதைப் பற்றி எப்போதையும்விட இப்போது நாம் ஏன் அதிகமாக யோசிக்க வேண்டும்?

2 இன்று நாமும் அதேபோன்ற ஒரு சூழ்நிலையில்தான் வாழ்கிறோம். யெகோவாவின் ‘படுபயங்கரமான மகா நாள்’ சீக்கிரத்தில் வரப்போகிறது. (யோவே. 2:11) “யெகோவாவின் மகா நாள் நெருங்கிவிட்டது! அது மிகவும் வேகமாக வந்துகொண்டிருக்கிறது, பக்கத்தில் வந்துவிட்டது!” என்று செப்பனியா தீர்க்கதரிசி சொன்ன வார்த்தைகள் நம் காலத்துக்கும் பொருந்துகின்றன. (செப். 1:14) அதனால்தான், நாம் “அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்.” (எபி. 10:24) சரியான சமயத்தில் நம்முடைய சகோதரர்களை உற்சாகப்படுத்த வேண்டுமென்றால், அவர்கள்மீது நாம் இன்னும் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

யாருக்கு உற்சாகம் தேவை?

3. உற்சாகப்படுத்துவதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் என்ன சொன்னார்? (ஆரம்பப் படம்)

3 “கவலை ஒருவருடைய இதயத்தைப் பாரமாக்கும். ஆனால், நல்ல வார்த்தை அதைச் சந்தோஷப்படுத்தும்.” (நீதி. 12:25) எல்லாருக்குமே சிலசமயங்களில் உற்சாகம் தேவை. மற்றவர்களை உற்சாகப்படுத்துகிற பொறுப்பில் இருக்கிறவர்களுக்குக்கூட உற்சாகம் தேவை என்பதை பவுல் தெளிவுபடுத்தினார். ரோமிலிருந்த சகோதரர்களுக்கு எழுதிய கடிதத்தில், “உங்களைப் பார்ப்பதற்கும், கடவுள் தரும் அன்பளிப்பைக் கொடுத்து உங்களைப் பலப்படுத்துவதற்கும் ஏங்குகிறேன். சொல்லப்போனால், உங்களுடைய விசுவாசத்தால் நானும் என்னுடைய விசுவாசத்தால் நீங்களும், ஒருவருக்கொருவர் உற்சாகம் பெற வேண்டும் என்று ஏங்குகிறேன்” என பவுல் குறிப்பிட்டார். (ரோ. 1:11, 12) இதிலிருந்து, அப்போஸ்தலன் பவுலுக்கும்கூட சிலசமயங்களில் உற்சாகம் தேவைப்பட்டது என்பது தெரிகிறது.ரோமர் 15:30-32-ஐ வாசியுங்கள்.

4, 5. நாம் யாரையெல்லாம் உற்சாகப்படுத்தலாம், ஏன்?

4 இன்று, யெகோவாவுக்கு முழுநேர ஊழியம் செய்கிறவர்களை நாம் உற்சாகப்படுத்தலாம். உதாரணத்துக்கு, உண்மையாகச் சேவை செய்கிற பயனியர்களை யோசித்துப் பாருங்கள். பயனியர் ஊழியம் செய்வதற்காகத் தங்களுக்குப் பிடித்த நிறைய விஷயங்களை அவர்கள் தியாகம் செய்திருக்கிறார்கள். மிஷனரிகள், பெத்தேல் ஊழியர்கள், வட்டாரக் கண்காணிகள் மற்றும் அவர்களுடைய மனைவிகள், மொழிபெயர்ப்பு அலுவலகங்களில் வேலை செய்கிறவர்கள் ஆகியோரின் விஷயத்திலும் இதுதான் உண்மை. இவர்கள் எல்லாரும், யெகோவாவுக்கு நிறைய நேரம் சேவை செய்வதற்காக தியாகங்களைச் செய்கிறார்கள். அதனால், இவர்கள் எல்லாரையும் நாம் உற்சாகப்படுத்த வேண்டும். இன்னும் நிறையப் பேருக்கு, முழுநேர ஊழியத்தைத் தொடர்ந்து செய்ய ஆசையிருந்தும், சில காரணங்களால் அதைத் தொடர முடிவதில்லை. அப்படிப்பட்டவர்களையும் நாம் உற்சாகப்படுத்த வேண்டும்; அப்போது, அவர்கள் ரொம்பச் சந்தோஷப்படுவார்கள்.

5 வேறு யாருக்கு உற்சாகம் தேவை? “எஜமானைப் பின்பற்றுகிற ஒருவரையே” திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற யெகோவாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிய விரும்புவதால், நிறைய சகோதர சகோதரிகள் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள்; அவர்களை நாம் உற்சாகப்படுத்தலாம். (1 கொ. 7:39) கணவர்கள், தங்கள் மனைவிகளை உற்சாகப்படுத்தலாம். எப்படி? அவர்களை நேசிப்பதாகவும், அவர்கள் செய்கிற உதவிகளுக்காக நன்றியோடு இருப்பதாகவும் அவர்களிடம் சொல்லலாம். (நீதி. 31:28, 31) துன்புறுத்தல் அல்லது வியாதியைச் சகிக்கிற கிறிஸ்தவர்களுக்கும் உற்சாகம் தேவை. (2 தெ. 1:3-5) இப்படிப்பட்ட உண்மையுள்ள சகோதர சகோதரிகள் எல்லாருக்குமே யெகோவாவும் இயேசுவும் ஆறுதல் தருகிறார்கள்.2 தெசலோனிக்கேயர் 2:16, 17-ஐ வாசியுங்கள்.

மூப்பர்கள் உற்சாகப்படுத்தலாம்

6. ஏசாயா 32:1, 2-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறபடி, மூப்பர்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது?

6 ஏசாயா 32:1, 2-ஐ வாசியுங்கள். கஷ்டமான ஒரு காலத்தில் வாழ்வதால், அடிக்கடி நாம் சோகத்தில் மூழ்கிவிடலாம், சோர்ந்துபோய்விடலாம். நம்மை உற்சாகப்படுத்துவதற்காக, பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்களையும், வேறே ஆடுகளைச் சேர்ந்த உண்மையுள்ள ‘அதிபதிகளான’ மூப்பர்களையும் இயேசு கிறிஸ்து பயன்படுத்துகிறார். இந்த மூப்பர்கள் நம்முடைய ‘விசுவாசத்துக்கு அதிகாரிகளாக’ இல்லாமல், நம்முடைய சந்தோஷத்துக்காக நம் “சக வேலையாட்களாக” இருக்கிறார்கள். நாம் சந்தோஷமாகவும் உண்மையாகவும் இருக்க அவர்கள் உதவி செய்கிறார்கள்.—2 கொ. 1:24.

7, 8. தங்களுடைய சொல்லாலும் செயலாலும் மூப்பர்கள் எப்படி மற்றவர்களை உற்சாகப்படுத்தலாம்?

7 அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய சகோதரர்களை உற்சாகப்படுத்த எப்போதும் முயற்சி செய்தார். இன்றுள்ள மூப்பர்களும் பவுலைப் போலவே செய்யலாம். துன்புறுத்தலை அனுபவித்துக்கொண்டிருந்த தெசலோனிக்கே கிறிஸ்தவர்களுக்கு அவர் இப்படி எழுதினார்: “உங்கள்மேல் கனிவான பாசம் வைத்திருப்பதால், கடவுளுடைய நல்ல செய்தியை மட்டுமல்ல, எங்கள் உயிரையே உங்களுக்காகக் கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தோம்; அந்தளவுக்கு நீங்கள் எங்களுடைய அன்புக்குரியவர்களாக ஆகியிருந்தீர்கள்.”—1 தெ. 2:8.

8 மூப்பர்களுடைய வார்த்தைகள் மற்றவர்களை ரொம்பவே உற்சாகப்படுத்தலாம். ஆனால், வெறும் வார்த்தைகள் மட்டுமே போதுமா? எபேசுவைச் சேர்ந்த மூப்பர்களிடம், “பலவீனமானவர்களுக்கு [நீங்கள்] உதவி செய்ய வேண்டும் . . . ‘வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது’ என்று எஜமானாகிய இயேசு சொன்ன வார்த்தைகளை மறந்துவிடாதீர்கள்” என பவுல் சொன்னார். (அப். 20:35) “என்னிடம் இருப்பவற்றை உங்களுக்காகச் சந்தோஷமாய்ச் செலவு செய்வேன், என்னையே முழுவதும் உங்களுக்காக அர்ப்பணிப்பேன்” என்றும் அவர் சொன்னார். தன்னால் முடிந்த சிறந்ததை அவர்களுக்குச் செய்ய விரும்பியதை செயலில் காட்டினார். (2 கொ. 12:15) அதேபோல, இன்றுள்ள மூப்பர்களும் சொல்லால் மட்டுமல்ல, செயலாலும் மற்றவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்; அவர்களை ஆறுதல்படுத்த வேண்டும். இதன் மூலம், மற்றவர்கள்மீது உண்மையிலேயே தங்களுக்கு அக்கறை இருக்கிறது என்பதைக் காட்டலாம்.—1 கொ. 14:3.

9. உற்சாகப்படுத்தும் விதத்தில் மூப்பர்கள் எப்படி ஆலோசனை கொடுக்கலாம்?

9 சகோதரர்களைப் பலப்படுத்த, மூப்பர்கள் சிலசமயங்களில் ஆலோசனை கொடுக்க வேண்டியிருக்கிறது. உற்சாகப்படுத்தும் விதத்தில் ஆலோசனை கொடுப்பது எப்படி என்பதை பைபிளிலிருந்து மூப்பர்கள் கற்றுக்கொள்ளலாம். இயேசு இந்த விஷயத்தில் மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். அவர் உயிர்த்தெழுந்த பிறகு, ஆசியா மைனரில் இருந்த சபைகளுக்குக் கடிதங்களை அனுப்பினார். எபேசு, பெர்கமு, தியத்தீரா ஆகிய சபைகளுக்குக் கடுமையான ஆலோசனைகளைக் கொடுத்தார். ஆனால், ஆலோசனை கொடுப்பதற்கு முன்பு, அவர்கள் செய்துவந்த நல்ல செயல்களைப் பாராட்டினார். (வெளி. 2:1-5, 12, 13, 18, 19) லவோதிக்கேயாவிலிருந்த சபையிடம் இயேசு இப்படிச் சொன்னார்: “என் பாசத்துக்குரிய எல்லாரையும் நான் கண்டித்துத் திருத்துவேன். அதனால், பக்திவைராக்கியத்தோடு இரு, மனம் திருந்து.” (வெளி. 3:19) ஆலோசனை கொடுக்கும் விஷயத்தில் கிறிஸ்துவைப் போலவே நடந்துகொள்ள மூப்பர்கள் முயற்சி செய்கிறார்கள்.

மற்றவர்களும் உற்சாகப்படுத்தலாம்

பெற்றோர்களே, மற்றவர்களை உற்சாகப்படுத்த உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித் தருகிறீர்களா? (பாரா 18)

10. நாம் எல்லாருமே எப்படி ஒருவரை ஒருவர் பலப்படுத்தலாம்?

10 மூப்பர்கள் மட்டும்தான் மற்றவர்களை உற்சாகப்படுத்த வேண்டுமா? ‘பிரயோஜனமாய் இருப்பதற்காக, சூழ்நிலைக்கு ஏற்றபடி, மற்றவர்களைப் பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளை’ பேசும்படி கிறிஸ்தவர்கள் எல்லாரிடமும் பவுல் சொன்னார். (எபே. 4:29) அதனால், மற்றவர்களுக்கு என்ன தேவை என்பதை நாம் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அப்போதுதான், அவர்களுக்கு நம்மால் உதவ முடியும். எபிரெய கிறிஸ்தவர்களுக்கு பவுல் இப்படி எழுதினார்: “பலமில்லாத கைகளையும் தள்ளாடுகிற முழங்கால்களையும் பலப்படுத்துங்கள்; நீங்கள் போகிற பாதைகளை எப்போதும் நேராக்குங்கள்; அப்போதுதான், பலவீனமான கைகால் மூட்டுகள் பிசகிப்போகாது, அவை குணமாகும்.” (எபி. 12:12, 13) சின்னப் பிள்ளைகள் உட்பட, நாம் எல்லாருமே நம்முடைய வார்த்தைகளால் மற்றவர்களை உற்சாகப்படுத்தவும் பலப்படுத்தவும் முடியும்.

11. மனச்சோர்விலிருந்து மீண்டு வருவதற்கு மார்த்தாவுக்கு எது உதவி செய்தது?

11 மார்த்தா என்ற சகோதரி கொஞ்சக் காலமாக மனச்சோர்வால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) “என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டு ஒருநாள் ஜெபம் செய்துகொண்டிருந்தேன். அப்போது, வயதான சகோதரி ஒருவரைச் சந்தித்தேன். அவர் என்னிடம் ரொம்ப அன்பாகவும் கரிசனையாகவும் நடந்துகொண்டார். அந்தச் சமயத்தில், எனக்கு அதுதான் தேவையாக இருந்தது. எனக்கு இருந்ததைப் போன்ற ஒரு பிரச்சினை தனக்கும் இருந்ததாக அவர் சொன்னார். அவருடைய அனுபவத்தைக் கேட்டது எனக்கு ஆறுதலாக இருந்தது” என்று அவர் எழுதினார். தன்னுடைய வார்த்தைகள் மார்த்தாவை இந்தளவு உற்சாகப்படுத்தும் என்று அந்த வயதான சகோதரி எதிர்பார்த்திருக்கவே மாட்டார்!

12, 13. பிலிப்பியர் 2:1-4-ல் இருக்கிற ஆலோசனையின்படி நாம் எப்படி நடந்துகொள்ளலாம்?

12 பிலிப்பியில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் இப்படி எழுதினார்: “கிறிஸ்தவர்களான நீங்கள் ஒருவருக்கொருவர் உற்சாகத்தையும், அன்பினால் ஆறுதலையும், அக்கறையையும், கனிவான பாசத்தையும், கரிசனையையும் காட்டுகிறீர்கள் என்றால், ஒரே சிந்தையோடும் ஒரே அன்போடும் ஒரே உள்ளத்தோடும் ஒரே யோசனையோடும் அதைச் செய்து என்னைச் சந்தோஷத்தால் நிரப்புங்கள். எதையும் பகையினாலோ வறட்டு கௌரவத்தினாலோ செய்யாமல், மனத்தாழ்மையினால் செய்யுங்கள். மற்றவர்களை உங்களைவிட உயர்ந்தவர்களாகக் கருதுங்கள். உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்.”—பிலி. 2:1-4.

13 மற்றவர்களுக்கு உதவுவதற்கான வாய்ப்புகளை நாம் தேட வேண்டும். நம் சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்துவதற்கு, “அன்பினால் ஆறுதலையும், அக்கறையையும், கனிவான பாசத்தையும், கரிசனையையும்” காட்ட வேண்டும்.

உற்சாகப்படுத்துவதற்கான சில வழிகள்

14. உற்சாகப்படுத்துவதற்கான ஒரு வழி எது?

14 ஆன்மீக ரீதியில் முன்னேற நாம் சிலருக்கு உதவி செய்திருப்போம். அவர்கள் யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்துவருவதைக் கேள்விப்படும்போது நாம் சந்தோஷப்படுகிறோம். அப்போஸ்தலன் யோவானின் விஷயத்திலும் இது உண்மையாக இருந்தது. அதனால்தான் அவர், “என் பிள்ளைகள் தொடர்ந்து சத்தியத்தில் நடக்கிறார்கள் என்பதைக் கேள்விப்படும்போது ஏற்படுகிற சந்தோஷத்தைவிட அதிகமான சந்தோஷம் எனக்கு வேறு எதுவும் இல்லை” என்று எழுதினார். (3 யோ. 4) தங்களிடம் பல வருஷங்களுக்கு முன்பு பைபிள் படிப்பு படித்தவர்கள், யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்வதைக் கேள்விப்படும்போது பயனியர்கள் ரொம்பச் சந்தோஷப்படுகிறார்கள். அதுவும் அவர்களிடம் பைபிள் படித்த சிலர், இப்போது பயனியர் சேவைகூட செய்துகொண்டிருக்கலாம். அதனால், பயனியர்கள் சோர்ந்துபோகும்போது, ஒரு விஷயத்தை நாம் அவர்களுக்கு ஞாபகப்படுத்தலாம்; அதாவது, மற்றவர்களுக்கு அவர்கள் எப்படியெல்லாம் உதவியிருக்கிறார்கள் என்பதை அவர்களிடம் சொல்லலாம்.

15. யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்கிறவர்களை உற்சாகப்படுத்த நாம் என்ன செய்யலாம்?

15 வட்டாரக் கண்காணிகள் ஒரு சபையைச் சந்தித்து முடிக்கும்போது, சபையில் இருக்கிற சிலர் அவர்களுக்கு நன்றி சொல்லி கார்டு கொடுக்கிறார்கள். அது தங்களுக்கும் தங்கள் மனைவிகளுக்கும் உற்சாகம் தருவதாக வட்டாரக் கண்காணிகள் பலர் சொல்கிறார்கள். யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்கிற மூப்பர்கள், மிஷனரிகள், பயனியர்கள், பெத்தேல் ஊழியர்கள் ஆகியோரையும் நாம் இதேபோல் உற்சாகப்படுத்தலாம். நீங்கள் நன்றி சொல்லும்போது, அவர்களுக்கு எந்தளவு உற்சாகம் கிடைக்கும் என்பதை நீங்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள்.

நாம் எல்லாரும் மற்றவர்களை எப்படி உற்சாகப்படுத்தலாம்?

16. நாம் செய்கிற சின்னச் சின்ன விஷயங்கள் எப்படி மற்றவர்களை உற்சாகப்படுத்தும்?

16 ‘மத்தவங்கள உற்சாகப்படுத்துற மாதிரி எனக்கு பேச வராதே’ என்று நினைக்கிறீர்களா? உற்சாகப்படுத்துவது ஒன்றும் அவ்வளவு கஷ்டம் கிடையாது. மற்றவர்களைப் பார்த்து அன்பாகப் புன்னகை செய்யுங்கள். பதிலுக்கு அவர்கள் புன்னகை செய்யாவிட்டால், அநேகமாக அவர்களுக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். ஒருவேளை, தங்கள் மனதில் இருக்கிற பாரத்தை யாரிடமாவது இறக்கி வைக்க அவர்கள் நினைக்கலாம். அவர்கள் சொல்வதை நீங்கள் பொறுமையாகக் கேட்டாலே போதும், அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்.—யாக். 1:19.

17. ஒரு இளம் சகோதரருக்கு எப்படி உற்சாகம் கிடைத்தது?

17 ஆன்ரே என்ற இளம் சகோதரரின் குடும்பத்திலிருந்த பலர் யெகோவாவுக்குச் சேவை செய்வதை நிறுத்திவிட்டார்கள். முன்பு மூப்பராகச் சேவை செய்த ஆன்ரேயின் அப்பாவும் அவர்களில் ஒருவர்! இதை நினைத்து ஆன்ரே ரொம்பச் சோகமாக இருந்தார். அதைக் கவனித்த ஒரு வட்டாரக் கண்காணி, காபி குடிப்பதற்கு அவரை வெளியே கூட்டிக்கொண்டு போனார். ஆன்ரே சொன்னதையெல்லாம் அவர் காதுகொடுத்துக் கேட்டார். அதன் பிறகுதான், ஆன்ரேக்கு ஒரு விஷயம் புரிந்தது. அதாவது, தான் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தால் மட்டுமே, தன் குடும்பத்தார் சத்தியத்துக்குத் திரும்பி வருவார்கள் என்பதும், தன்னால் செய்ய முடிந்த ஒரே உதவி அதுதான் என்பதும் அவருக்குப் புரிந்தது. 46-ம்  சங்கீதத்தையும், செப்பனியா 3:17, மாற்கு 10:29, 30 ஆகிய வசனங்களையும் படித்ததுகூட ஆன்ரேக்கு ஆறுதலாக இருந்தது.

நாம் ஒவ்வொருவருமே மற்றவர்களை உற்சாகப்படுத்தலாம் (பாரா 18)

18. (அ) உற்சாகப்படுத்துவதைப் பற்றி சாலொமோன் ராஜா என்ன எழுதினார்? (ஆ) என்ன செய்யும்படி அப்போஸ்தலன் பவுல் சொன்னார்?

18 மார்த்தா, ஆன்ரே ஆகியோரின் அனுபவத்திலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? சோர்ந்துபோயிருக்கிறவர்களை நம்மில் யார் வேண்டுமானாலும் உற்சாகப்படுத்தலாம். “சரியான சமயத்தில் சொல்லப்படுகிற வார்த்தை எவ்வளவு அருமையானது! ஒருவரின் சந்தோஷப் பார்வை இதயத்தைப் பூரிப்பாக்கும். நல்ல செய்தி எலும்புகளுக்கு ஊட்டமளிக்கும்” என்று சாலொமோன் ராஜா எழுதினார். (நீதி. 15:23, 30, அடிக்குறிப்பு) யாராவது சோர்ந்துபோயிருப்பதையோ சோகமாக இருப்பதையோ கவனித்திருக்கிறீர்களா? அவர்களை உற்சாகப்படுத்த சின்னச் சின்ன விஷயங்களைச் செய்தால்கூட போதும். உதாரணத்துக்கு, காவற்கோபுரத்திலிருந்தோ நம்முடைய வெப்சைட்டிலிருந்தோ சில பகுதிகளை அவர்களுக்கு வாசித்துக் காட்டலாம். ஒன்றுசேர்ந்து ராஜ்ய பாடலைப் பாடுவதுகூட உற்சாகத்தைத் தரும் என்று பவுல் சொன்னார். அதனால்தான், “சங்கீதங்களாலும் புகழ் பாடல்களாலும் நன்றியோடு பாடப்படுகிற பக்திப்பாடல்களாலும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொடுத்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருங்கள். உங்கள் இதயத்திலிருந்து யெகோவாவை புகழ்ந்து பாடிக்கொண்டே இருங்கள்” என்று அவர் எழுதினார்.—கொலோ. 3:16; அப். 16:25.

19. நாட்கள் போகப் போக, உற்சாகப்படுத்துவது ஏன் ரொம்பவே அவசியம், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

19 யெகோவாவின் நாள் நெருங்க நெருங்க, ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவது ரொம்பவே முக்கியம். (எபி. 10:25) “நீங்கள் இப்போது செய்து வருகிறபடியே எப்போதும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துங்கள், ஒருவரை ஒருவர் பலப்படுத்துங்கள்” என்று பவுல் சொன்னார். அப்படிச் செய்தால் நமக்குச் சந்தோஷம் கிடைக்கும்!—1 தெ. 5:11.

^ பாரா. 11 பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.