Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நாம் யெகோவாவுக்குச் சொந்தமானவர்கள்!

நாம் யெகோவாவுக்குச் சொந்தமானவர்கள்!

“யெகோவாவைக் கடவுளாகக் கொண்ட தேசம் சந்தோஷமானது. தன்னுடைய சொத்தாக அவர் தேர்ந்தெடுத்திருக்கிற ஜனம் சந்தோஷமானது.”—சங். 33:12.

பாடல்கள்: 62, 58

1. எல்லாமே யெகோவாவுக்குச் சொந்தம் என்று ஏன் சொல்லலாம்? (ஆரம்பப் படம்)

எல்லாமே யெகோவாவுக்குத்தான் சொந்தம்! “வானமும், ஏன் வானாதி வானமும், பூமியும் அதில் உள்ளவையும்” அவருக்குத்தான் சொந்தம். (உபா. 10:14; வெளி. 4:11) மனிதர்களை அவர் படைத்திருப்பதால், எல்லா மனிதர்களும் அவருக்குச் சொந்தமானவர்கள்! (சங். 100:3) இருந்தாலும், தன்னுடைய விசேஷ சொத்தாக இருப்பதற்காக, இன்றுவரை வாழ்ந்த மக்களிலேயே சிலரை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

2. யெகோவாவின் விசேஷ சொத்து என்று பைபிள் யாரைச் சொல்கிறது?

2 உதாரணத்துக்கு, பூர்வ இஸ்ரவேலிலிருந்த யெகோவாவின் உண்மை ஊழியர்களை, ‘[யெகோவாவின்] விசேஷ சொத்து’ என்று சங்கீதம் 135 சொல்கிறது. (சங். 135:4) இஸ்ரவேலர்களாக இல்லாதவர்களும் யெகோவாவின் மக்களாக ஆவார்கள் என்று ஓசியா தீர்க்கதரிசனம் சொன்னார். (ஓசி. 2:23) பரலோகத்தில் கிறிஸ்துவோடு சேர்ந்து ஆட்சி செய்வதற்காக இஸ்ரவேலர்களாக இல்லாதவர்களை யெகோவா தேர்ந்தெடுக்க ஆரம்பித்தபோது, இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியது. (அப். 10:45; ரோ. 9:23-26) கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் பெற்றவர்கள், “தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாக” கருதப்படுகிறார்கள்; அவர்கள், யெகோவாவின் ‘விசேஷ சொத்தாக’ இருக்கிறார்கள். (1 பே. 2:9, 10) ஆனால், பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையோடு இருக்கும் உண்மையுள்ள கிறிஸ்தவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? அவர்களையும் ‘என் ஜனங்கள்’ என்றும், “நான் தேர்ந்தெடுத்த ஜனங்கள்” என்றும் யெகோவா அழைக்கிறார்.—ஏசா. 65:22.

3. (அ) இன்று யாருக்கு யெகோவாவோடு விசேஷமான பந்தம் இருக்கிறது? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

3 பரலோகத்தில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுடைய ‘சிறுமந்தையும்’, பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுடைய “வேறே ஆடுகளும்,” இன்று ‘ஒரே மந்தையாக’ யெகோவாவை ஒன்றுசேர்ந்து வணங்குகிறார்கள். (லூக். 12:32; யோவா. 10:16) யெகோவாவோடு நமக்கு இருக்கும் விசேஷமான பந்தத்துக்கு நாம் ரொம்பவே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை அவருக்குக் காட்ட நாம் ஆசைப்படுகிறோம். இந்த அருமையான பாக்கியத்துக்காக நாம் எப்படி நன்றியுள்ளவர்களாக இருக்கலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

நம் வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணிக்கிறோம்

4. தன்னோடு ஒரு பந்தத்தை வைத்துக்கொள்ள யெகோவா நம்மை அனுமதித்திருப்பதற்கு நாம் எப்படி அவருக்கு நன்றி சொல்லலாம், இதேபோன்ற விஷயத்தை இயேசு எப்படிச் செய்தார்?

4 அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுப்பதன் மூலம், யெகோவாவுக்கு நாம் நன்றியோடு இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். ஞானஸ்நானம் எடுக்கும்போது, நாம் யெகோவாவுக்குச் சொந்தமானவர்கள் என்பதையும், அவருக்குக் கீழ்ப்படிய விரும்புகிறோம் என்பதையும் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். (எபி. 12:9) இதேபோன்ற விஷயத்தைத்தான் இயேசுவும் தன்னுடைய ஞானஸ்நானத்தின்போது தெரியப்படுத்தினார். அவர் ஏற்கெனவே யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேசத்தின் பாகமாகத்தான் இருந்தார்; இருந்தாலும், தன்னையே மனப்பூர்வமாக யெகோவாவுக்கு அர்ப்பணித்தார். “என் கடவுளே, உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் எனக்குச் சந்தோஷம்” என்று அவர் சொல்வதைப் போல் அது இருந்தது.—சங். 40:7, 8.

5, 6. (அ) இயேசு ஞானஸ்நானம் எடுத்தபோது, யெகோவா எப்படி உணர்ந்தார்? (ஆ) நம்முடைய அர்ப்பணிப்பைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு எந்த உதாரணம் நமக்கு உதவும்?

5 இயேசு ஞானஸ்நானம் எடுத்தபோது, யெகோவா எப்படி உணர்ந்தார்? “இயேசு ஞானஸ்நானம் பெற்று தண்ணீருக்குள்ளிருந்து வெளியே வந்தவுடன், வானம் திறக்கப்பட்டது; கடவுளுடைய சக்தி புறாவைப் போல் அவர்மேல் இறங்குவதை யோவான் பார்த்தார். அப்போது ‘இவர் என் அன்பு மகன், நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்’ என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது” என்று பைபிள் சொல்கிறது. (மத். 3:16, 17) ஏற்கெனவே இயேசு தன்னுடைய பரலோகத் தகப்பனுக்குச் சொந்தமானவராக இருந்தார். இருந்தாலும், தன்னுடைய விருப்பத்தைச் செய்வதற்கென்றே தன் மகன் மனப்பூர்வமாகத் தன்னை அர்ப்பணித்ததைப் பார்த்து, யெகோவா சந்தோஷப்பட்டார். அதேபோல், நம்முடைய அர்ப்பணிப்பைப் பார்த்தும் யெகோவா சந்தோஷப்படுகிறார்; நம்மை ஆசீர்வதிக்கிறார்.—சங். 149:4.

6 ஆனால், யெகோவாவிடம்தான் எல்லாமே இருக்கிறதே, நம்மால் அவருக்கு என்ன கொடுத்துவிட முடியும்? இதைக் கற்பனை செய்துபாருங்கள்: ஒருவருடைய தோட்டத்தில் அழகான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஒருநாள், அவருடைய செல்ல மகள், ஒரு பூவைப் பறித்து அவருக்குக் கொடுக்கிறாள். இப்போது அவர் எப்படி உணருவார்? அந்தப் பூ ஏற்கெனவே அவருக்குச் சொந்தமானதுதான். ஆனால், தன் மகள் தனக்கு அதைப் பரிசாகக் கொடுக்கும்போது, அன்புள்ள அந்த அப்பா சந்தோஷப்படுகிறார். தன் அப்பாவுக்கு அவள் அந்தப் பூவைக் கொடுத்ததிலிருந்து, தன் அப்பாவை அவள் எவ்வளவு நேசிக்கிறாள் என்பது தெரிகிறது, இல்லையா? தோட்டத்தில் இருக்கும் மற்ற எல்லா பூக்களையும்விட, தன் மகள் தனக்குக் கொடுத்த பூதான், அந்த அப்பாவுக்குப் பெரிதாக இருக்கும். அதேபோல், நம் வாழ்க்கையை மனப்பூர்வமாக நாம் யெகோவாவுக்கு அர்ப்பணிக்கும்போது, அவர் சந்தோஷப்படுகிறார்.—யாத். 34:14.

7. தனக்கு மனப்பூர்வமாகச் சேவை செய்பவர்களைப் பற்றி யெகோவா எப்படி உணருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள மல்கியா எப்படி உதவுகிறார்?

7 மல்கியா 3:16-ஐ வாசியுங்கள். யெகோவாவுக்கு உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பதும், ஞானஸ்நானம் எடுப்பதும் ஏன் முக்கியம்? தாயின் வயிற்றில் உருவானபோதே, உங்களைப் படைத்த யெகோவாவுக்குத்தான் நீங்கள் சொந்தம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவரை உங்கள் ஆட்சியாளராக ஏற்றுக்கொண்டு, அவருக்கு உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும்போது, அவர் இன்னும் எவ்வளவு சந்தோஷப்படுவார் என்பதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்! (நீதி. 23:15) தனக்கு மனப்பூர்வமாகச் சேவை செய்கிறவர்களை யெகோவா தெரிந்துவைத்திருக்கிறார்; தன்னுடைய ‘நினைவுப் புத்தகத்தில்’ அவர்களுடைய பெயரை எழுதிவைக்கிறார்.

8, 9. தன்னுடைய ‘நினைவுப் புத்தகத்தில்’ யாருடைய பெயர் எழுதப்பட்டிருக்கிறதோ, அவர்களிடமிருந்து யெகோவா எதை எதிர்பார்க்கிறார்?

8 யெகோவாவின் ‘நினைவுப் புத்தகத்தில்’ நம் பெயர் தொடர்ந்து இருக்க வேண்டுமென்றால், நாம் செய்ய வேண்டிய ஒரு விஷயத்தைப் பற்றி மல்கியா சொல்லியிருக்கிறார். அதாவது, யெகோவாவுக்குப் பயந்து நடக்க வேண்டுமென்றும், அவருடைய பெயரைப் பற்றி எப்போதும் தியானித்துப் பார்க்க வேண்டுமென்றும் அவர் சொன்னார். வேறு யாரையாவது அல்லது வேறு எதையாவது நாம் வழிபட்டால், யெகோவாவின் புத்தகத்திலிருந்து நம் பெயர் நீக்கப்படும்!—யாத். 32:33; சங். 69:28.

9 அதனால், யெகோவாவின் விருப்பத்தைச் செய்வதாக வாக்குக் கொடுப்பதும், ஞானஸ்நானம் எடுப்பதும் மட்டுமே போதாது. ஏனென்றால், இவற்றை நம் வாழ்க்கையில் ஒரு தடவைதான் செய்கிறோம். ஆனால், யெகோவாவை வழிபடுவது என்பது, வாழ்க்கை முழுவதும் செய்ய வேண்டிய ஒரு விஷயம்! நாம் உயிரோடு இருக்கும்வரை, ஒவ்வொரு நாளும், யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிறோம் என்பதை நம்முடைய செயல்களால் நிரூபிக்க வேண்டும்.—1 பே. 4:1, 2.

உலக ஆசைகளை ஒதுக்கித்தள்ளுகிறோம்

10. யெகோவாவுக்குச் சேவை செய்கிறவனுக்கும் செய்யாதவனுக்கும் இருக்கிற என்ன வித்தியாசம் தெளிவாகத் தெரிய வேண்டும்?

10 காயீனும் சாலொமோனும் இஸ்ரவேலர்களும் யெகோவாவை வழிபடுவதாகச் சொல்லிக்கொண்டு, அவருக்கு உண்மையில்லாமல் போய்விட்டதை முந்தின கட்டுரையில் படித்தோம். இதிலிருந்து, யெகோவாவை வழிபடுவதாக வெறுமனே வாயளவில் சொன்னால் போதாது என்பது தெரிகிறது. நாம் கெட்டதை வெறுக்க வேண்டும், நல்லதை நேசிக்க வேண்டும்! (ரோ. 12:9) ‘நீதிமானுக்கும் கெட்டவனுக்கும், கடவுளுக்குச் சேவை செய்கிறவனுக்கும் செய்யாதவனுக்கும் உள்ள வித்தியாசம்’ தெளிவாகத் தெரியும் என்று யெகோவா சொல்கிறார்.—மல். 3:18.

11. நாம் யெகோவாவின் பக்கம்தான் இருக்கிறோம் என்பது மற்றவர்களுக்கு ஏன் தெளிவாகத் தெரிய வேண்டும்?

11 தன்னுடைய மக்களாக இருக்கும்படி யெகோவா நம்மைத் தேர்ந்தெடுத்திருப்பதற்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்! நாம் யெகோவாவின் பக்கம்தான் இருக்கிறோம் என்பது மற்றவர்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும். (மத். 5:16; 1 தீ. 4:15) உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் யெகோவாவுக்கு உண்மையா இருக்குறத மத்தவங்களால பார்க்க முடியுதா? நான் ஒரு யெகோவாவின் சாட்சிங்குறத எந்த தயக்கமும் இல்லாம சொல்றேனா?’ ஒருவேளை, நாம் யெகோவாவுக்குச் சொந்தமானவர்கள் என்பதைச் சொல்வதற்கு வெட்கப்பட்டால், யெகோவாவுடைய மனது எவ்வளவு கஷ்டப்படும்!—சங். 119:46; மாற்கு 8:38-ஐ வாசியுங்கள்.

நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதை நீங்கள் வாழும் விதம் காட்டுகிறதா? (பாராக்கள் 12, 13)

12, 13. தாங்கள் யெகோவாவின் சாட்சிகளா இல்லையா என்பது மற்றவர்களுக்குத் தெரியாதளவுக்கு சிலர் எப்படி நடந்துகொண்டிருக்கிறார்கள்?

12 சில கிறிஸ்தவர்கள், ‘இந்த உலகத்தின் சிந்தையின்படி’ நடந்துகொள்வது வருத்தமான ஒரு விஷயம். அவர்கள் அப்படி நடந்துகொள்வதால், யெகோவாவை வணங்காதவர்களுக்கும் இவர்களுக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. (1 கொ. 2:12) ‘இந்த உலகத்தின் சிந்தை,’ தங்களுடைய சொந்த விருப்பங்களின்படி செய்வதிலேயே குறியாக இருக்கும்படி மக்களைத் தூண்டுகிறது. (எபே. 2:3) உதாரணத்துக்கு, எவ்வளவுதான் ஆலோசனைகளைக் கேட்டாலும் சிலர் அடக்கமில்லாமல் உடுத்துகிறார்கள். கிறிஸ்தவ கூட்டங்களில்கூட, இறுக்கமாகவும், உடல் பாகங்கள் தெரிகிற விதத்திலும் உடுத்துகிறார்கள். அல்லது கொஞ்சம்கூட அடக்கமில்லாத முடி அலங்காரங்களைச் செய்துகொள்கிறார்கள். (1 தீ. 2:9, 10) இப்படிச் செய்யும்போது, இவர்கள் உண்மையில் யெகோவாவின் சாட்சிகள்தானா என்ற சந்தேகம் மற்றவர்களுக்கு வந்துவிடுகிறது.—யாக். 4:4.

13 இந்த உலகத்துக்கும் தங்களுக்கும் அவ்வளவு வித்தியாசம் இல்லை என்பதை, சில யெகோவாவின் சாட்சிகள், வேறுசில வழிகளிலும் காட்டியிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, சில பார்ட்டிகளில், கிறிஸ்தவர்கள் சிலருடைய நடனமும் நடத்தையும் பொருத்தமற்ற விதத்தில் இருந்திருக்கிறது. சிலர், தங்களுடைய பாவ சிந்தனைகளை வெளிப்படுத்தும் விதத்தில் தங்களுடைய ஃபோட்டோக்களை சோஷியல் மீடியாவில் போட்டிருக்கிறார்கள்; கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். ஒருவேளை, மோசமான பாவம் செய்தவர்கள் கண்டிக்கப்படுவதுபோல இவர்கள் கண்டிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால், அவர்களுடைய கெட்ட முன்மாதிரி, இந்த உலகத்திலிருந்து வித்தியாசமாக இருப்பதற்காகக் கடினமாக முயற்சி செய்கிற சகோதர சகோதரிகளைப் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.—1 பேதுரு 2:11, 12-ஐ வாசியுங்கள்.

யெகோவாவின் பக்கம் இருப்பதில் உறுதியாக இல்லாத நபர்களால் நீங்கள் பாதிக்கப்படாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்

14. யெகோவாவோடு நமக்கு இருக்கிற விசேஷமான பந்தத்தைக் காத்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

14 உடலின் ஆசையையும் கண்களின் ஆசையையும் பொருள் வசதிகளைப் பகட்டாகக் காட்டிக்கொள்கிற ஆசையையும் இந்த உலகம் தூண்டுகிறது. (1 யோ. 2:16) ஆனால், நாம் யெகோவாவுக்குச் சொந்தமானவர்கள்; அதனால், நாம் வித்தியாசமானவர்களாக இருக்கிறோம். “கடவுள்பக்தியற்ற நடத்தையையும் உலக ஆசைகளையும்” நாம் ஒதுக்கித்தள்ளுகிறோம். ‘தெளிந்த புத்தியுள்ளவர்களாக, நீதிமான்களாக, கடவுள்பக்தி உள்ளவர்களாக இந்த உலகத்தில் வாழ்கிறோம்.’ (தீத். 2:12) நம் முழு வாழ்க்கையும், அதாவது, நாம் எப்படி பேசுகிறோம்... சாப்பிடுகிறோம்... குடிக்கிறோம்... உடுத்துகிறோம்... வேலை செய்கிறோம்... என்று எல்லாமே, நாம் யெகோவாவுக்குச் சொந்தமானவர்கள் என்பதை தெளிவாகக் காட்ட வேண்டும்.1 கொரிந்தியர் 10:31, 32-ஐ வாசியுங்கள்.

நாம் ‘ஒருவர்மேல் ஒருவர் ஆழ்ந்த அன்பு வைத்திருக்கிறோம்’

15. சகோதர சகோதரிகளை அன்போடும் தயவோடும் நடத்துவது ஏன் முக்கியம்?

15 நம் சகோதர சகோதரிகளை நடத்துகிற விதத்தின் மூலம், யெகோவாவோடு இருக்கிற நட்பை நாம் உயர்வாக மதிக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். நம்மைப் போலவே அவர்களும் யெகோவாவுக்குச் சொந்தமானவர்கள்! இதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டால், எப்போதும் அவர்களை அன்போடும் தயவோடும் நடத்துவோம். (1 தெ. 5:15) இது எந்தளவுக்கு முக்கியம்? அதைப் பற்றித் தன்னுடைய சீஷர்களிடம் இயேசு இப்படிச் சொன்னார்: “நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்.”—யோவா. 13:35.

16. தன்னுடைய மக்களை யெகோவா எந்தளவு நேசிக்கிறார் என்பதை திருச்சட்டத்தில் சொல்லப்பட்ட ஒரு விஷயம் எப்படிக் காட்டுகிறது?

16 சபையில் இருக்கிற சகோதர சகோதரிகளை எப்படி நடத்த வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள, திருச்சட்டத்தில் சொல்லப்பட்ட ஒரு விஷயம் நமக்கு உதவும். யெகோவாவின் ஆலயத்தில், வழிபாட்டில் பயன்படுத்துவதற்காக சில பாத்திரங்கள் தனியாக ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தன. லேவியர்கள் அந்தப் பாத்திரங்களை எப்படிக் கையாள வேண்டும் என்பது திருச்சட்டத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது; அதன்படி செய்யாதவர்கள் கொலை செய்யப்படுவார்கள்! (எண். 1:50, 51) தன்னுடைய வழிபாட்டில் பயன்படுத்தப்பட்ட இந்தப் பொருள்களைக் கையாளுகிற விஷயத்துக்கே யெகோவா அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்றால், தங்களை அர்ப்பணித்திருக்கும் தன்னுடைய உண்மை ஊழியர்கள், ஒருவரையொருவர் எப்படி நடத்த வேண்டுமென்ற விஷயத்துக்கு இன்னும் எந்தளவு முக்கியத்துவம் கொடுப்பார்! “உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்” என்று சொல்வதன் மூலம், நாம் அவருக்கு எந்தளவு மதிப்பானவர்கள் என்பதை யெகோவா நமக்குத் தெரியப்படுத்துகிறார்.—சக. 2:8.

17. யெகோவா எதையெல்லாம் ‘கவனிக்கிறார்’?

17 தன்னுடைய மக்கள் ஒருவரையொருவர் எப்படி நடத்துகிறார்கள் என்பதை ‘யெகோவா கவனிக்கிறார்’ என்று மல்கியா தீர்க்கதரிசி சொன்னார். (மல். 3:16) “தனக்குச் சொந்தமானவர்களை யெகோவா அறிந்திருக்கிறார்.” (2 தீ. 2:19) நாம் செய்கிற, சொல்கிற ஒவ்வொரு விஷயமும் அவருக்குத் தெரியும். (எபி. 4:13) சகோதர சகோதரிகளிடம் நாம் அன்பில்லாமல் நடந்துகொள்ளும்போது, அதையும் யெகோவா கவனிக்கிறார். அதேசமயத்தில், நாம் உபசரிக்கும் குணத்தைக் காட்டுவதையும், தாராள குணத்தைக் காட்டுவதையும், மன்னிப்பதையும், அன்பு காட்டுவதையும் அவர் கவனிக்கிறார்.—எபி. 13:16; 1 பே. 4:8, 9.

“யெகோவா தன்னுடைய மக்களைக் கைவிட மாட்டார்”

18. தன்னுடைய மக்களாக யெகோவா நம்மைத் தேர்ந்தெடுத்திருப்பதற்கு நாம் எப்படி அவருக்கு நன்றி சொல்லலாம்?

18 யெகோவாவின் மக்களாகிய நாம், அவருக்குச் சொந்தமானவர்களாக இருப்பதற்காக எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம் என்பதை அவருக்குக் காட்ட நாம் விரும்புகிறோம். நம் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணித்திருப்பது எவ்வளவு ஞானமான ஒரு செயல் என்பது நமக்குத் தெரியும். “சீர்கெட்டு நெறிகெட்டுப்போன தலைமுறையின் நடுவே” நாம் வாழ்ந்தாலும், நம்மால் ‘குற்றமில்லாதவர்களாகவும் கபடமில்லாதவர்களாகவும்’ வாழ முடியும்; “உலகத்தில் விளக்குகளாக” ஒளிவீசவும் முடியும். (பிலி. 2:15) அதனால், யெகோவா வெறுக்கிற எதையும் செய்யாமலிருக்க நாம் தீர்மானமாக இருக்கிறோம். (யாக். 4:7) அதோடு, நம்முடைய சகோதர சகோதரிகளை நேசிக்கிறோம், மதிக்கிறோம்; ஏனென்றால், அவர்களும் யெகோவாவுக்குச் சொந்தமானவர்கள்!—ரோ. 12:10.

19. தனக்குச் சொந்தமானவர்களை யெகோவா எப்படி ஆசீர்வதிக்கிறார்?

19 “யெகோவா தன்னுடைய மக்களைக் கைவிட மாட்டார்” என்று பைபிள் வாக்குறுதி தருகிறது. (சங். 94:14) இது ஒரு உத்தரவாதம்! வாழ்க்கையில் என்ன நடந்தாலும் சரி, யெகோவா நம்மோடு இருப்பார். நாம் இறந்தாலும் யெகோவா நம்மை மறக்க மாட்டார். (ரோ. 8:38, 39) “நாம் வாழ்ந்தாலும் யெகோவாவுக்காக வாழ்கிறோம், இறந்தாலும் யெகோவாவுக்காக இறக்கிறோம். அதனால், நாம் வாழ்ந்தாலும் இறந்தாலும் யெகோவாவுக்கு சொந்தமானவர்களாக இருக்கிறோம்.” (ரோ. 14:8) இறந்துபோன தன்னுடைய உண்மையுள்ள நண்பர்களை யெகோவா மறுபடியும் உயிரோடு கொண்டுவரும் அந்த நாளுக்காக நாம் காத்திருக்கிறோம். (மத். 22:32) ஆனால் இப்போதே, நம் அப்பாவாகிய யெகோவாவிடமிருந்து வரும் அருமையான பரிசுகளை நாம் அனுபவிக்கிறோம். பைபிள் சொல்வதுபோல, “யெகோவாவைக் கடவுளாகக் கொண்ட தேசம் சந்தோஷமானது. தன்னுடைய சொத்தாக அவர் தேர்ந்தெடுத்திருக்கிற ஜனம் சந்தோஷமானது.”—சங். 33:12.