Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 18

அன்பும் நியாயமும் கிறிஸ்தவ சபையில்

அன்பும் நியாயமும் கிறிஸ்தவ சபையில்

“எப்போதும் ஒருவர் சுமைகளை ஒருவர் சுமந்துகொள்ளுங்கள். இப்படிச் செய்யும்போது, நீங்கள் கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள்.”—கலா. 6:2.

பாட்டு 112 யெகோவாவே தேவாதி தேவன்

இந்தக் கட்டுரையில்... *

1. எந்த இரண்டு விஷயங்களைப் பற்றி நாம் உறுதியாக இருக்கலாம்?

தன்னை வணங்குபவர்களை யெகோவா நேசிக்கிறார். எப்போதுமே அவர்களை நேசித்திருக்கிறார், இனிமேலும் நேசிப்பார்! நியாயத்தையும் அவர் நேசிக்கிறார். (சங். 33:5) அதனால், இரண்டு விஷயங்களில் நாம் உறுதியாக இருக்கலாம். (1) தன்னுடைய ஊழியர்கள் அநியாயமாக நடத்தப்படும்போது யெகோவா வேதனைப்படுகிறார். (2) அவர்களுக்குக் கண்டிப்பாக நியாயம் கிடைக்கும்படி அவர் பார்த்துக்கொள்வார். மோசேயின் மூலம் இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கொடுத்த திருச்சட்டம், அன்பை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பதை இந்தத் தொடர் கட்டுரையின் முதல் கட்டுரை விளக்கியது. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) நியாயமாக நடக்க அது எல்லாரையும் உற்சாகப்படுத்தியது. தங்களையே பாதுகாத்துக்கொள்ள முடியாத நிலையில் இருந்தவர்களுக்குக்கூட நியாயம் கிடைக்கும்படி அது பார்த்துக்கொண்டது. (உபா. 10:18) தன்னை வணங்குபவர்களை யெகோவா எந்தளவு நேசிக்கிறார் என்பதையும் அது காட்டுகிறது.

2. எந்தெந்த கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம்?

2 கி.பி. 33-ல் கிறிஸ்தவ சபை நிறுவப்பட்டபோது திருச்சட்டம் முடிவுக்கு வந்தது. அப்படியென்றால், அன்பை அடிப்படையாகக் கொண்ட, நியாயத்தைக் காட்டும்படி மற்றவர்களை உற்சாகப்படுத்துகிற, ஒரு சட்டத்திலிருந்து கிறிஸ்தவர்களால் நன்மையடைய முடியாதா? அப்படி இல்லை! கிறிஸ்தவர்களுக்கு இன்னொரு புதிய சட்டம் இருந்தது. அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். பிறகு, இந்தக் கேள்விகளுக்கான பதில்களையும் பார்ப்போம்: இந்தப் புதிய சட்டம் அன்பை அடிப்படையாகக் கொண்டது என்று ஏன் சொல்லலாம்? நியாயமாக நடக்கும்படி இது மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறது என்று ஏன் சொல்லலாம்? அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று இந்தச் சட்டம் சொல்கிறது?

‘கிறிஸ்துவின் சட்டம்’ என்றால் என்ன?

3. கலாத்தியர் 6:2-ல் சொல்லப்பட்டிருக்கும் ‘கிறிஸ்துவின் சட்டத்தில்’ எவையெல்லாம் அடங்குகின்றன?

3 கலாத்தியர் 6:2-ஐ வாசிக்கலாம். ‘கிறிஸ்துவின் சட்டத்தின்’ கீழ்தான் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு, சட்டங்கள் அடங்கிய ஒரு பட்டியலை இயேசு கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக, அறிவுரைகளையும் கட்டளைகளையும் நியமங்களையும் கொடுத்தார். இயேசு கற்றுக்கொடுத்த எல்லா விஷயங்களும் ‘கிறிஸ்துவின் சட்டத்தில்’ அடங்குகின்றன. இந்தச் சட்டத்தை நன்றாகப் புரிந்துகொள்ள, பின்வரும் விஷயங்களைக் கவனியுங்கள்.

4-5. இயேசு எந்தெந்த வழிகளில் கற்றுக்கொடுத்தார், எப்போதெல்லாம் கற்றுக்கொடுத்தார்?

4 இயேசு எந்தெந்த வழிகளில் கற்றுக்கொடுத்தார்? முதலாவதாக, தன்னுடைய சொல்லால் அவர் கற்றுக்கொடுத்தார். அவருடைய வார்த்தைகளுக்கு வலிமை இருந்தது. ஏனென்றால், அவருடைய வார்த்தைகள் கடவுளைப் பற்றிய உண்மைகளைத் தெரியப்படுத்தின; வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைக் கற்றுக்கொடுத்தன. அதோடு, மனிதர்களுடைய எல்லா பிரச்சினைகளுக்கும் கடவுளுடைய அரசாங்கம் முடிவுகட்டும் என்பதைக் காட்டின. (லூக். 24:19) இரண்டாவதாக, தன்னுடைய முன்மாதிரியின் மூலம் அவர் கற்றுக்கொடுத்தார். தன்னைப் பின்பற்றுபவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை, தான் வாழ்ந்த விதத்தின் மூலம் காட்டினார்.—யோவா. 13:15.

5 இயேசு எப்போதெல்லாம் கற்றுக்கொடுத்தார்? பூமியில் ஊழியம் செய்தபோது அவர் கற்றுக்கொடுத்தார். (மத். 4:23) உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகும் கற்றுக்கொடுத்தார். உதாரணத்துக்கு, ஒரு தொகுதியாக இருந்த சீஷர்களுக்குமுன், கிட்டத்தட்ட 500 சீஷர்களுக்குமுன், தோன்றினார்; ‘சீஷராக்குங்கள்’ என்ற கட்டளையை அவர்களுக்குக் கொடுத்தார். (மத். 28:19, 20; 1 கொ. 15:6) சபையின் தலைவராக, பரலோகத்துக்குப் போன பிறகும் தன் சீஷர்களுக்குத் தொடர்ந்து அறிவுரைகளைக் கொடுத்தார். உதாரணத்துக்கு, சுமார் கி.பி. 96-ம் வருஷத்தில், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் ஆலோசனையையும் தரும்படி அப்போஸ்தலன் யோவானை அவர் வழிநடத்தினார்.—கொலோ. 1:18; வெளி. 1:1.

6-7. (அ) இயேசுவின் போதனைகள் எங்கே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன? (ஆ) கிறிஸ்துவின் சட்டத்துக்கு நாம் எப்படிக் கீழ்ப்படிகிறோம்?

6 இயேசுவின் போதனைகள், அதாவது பூமியில் இருந்தபோது அவர் சொன்ன, செய்த நிறைய விஷயங்கள், நான்கு சுவிசேஷ புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மற்ற புத்தகங்களும் இயேசுவின் யோசனைகளைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. ஏனென்றால், அவற்றை எழுதியவர்கள் கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு எழுதினார்கள்; அவர்களுக்கு “கிறிஸ்துவின் சிந்தை” இருந்தது.—1 கொ. 2:16.

7 பாடங்கள்: இயேசுவின் போதனைகளில் வாழ்க்கையின் எல்லா அம்சங்களும் அடங்குகின்றன. அப்படியென்றால், வீட்டில்... வேலையில் அல்லது பள்ளியில்... சபையில்... நாம் நடந்துகொள்ள வேண்டிய விதத்தைப் பற்றி கிறிஸ்துவின் சட்டம் சொல்கிறது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தைப் படித்து, அதை ஆழமாக யோசித்துப்பார்ப்பதன் மூலம் நாம் கிறிஸ்துவின் சட்டத்தைக் கற்றுக்கொள்கிறோம். கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட அந்தப் புத்தகங்களில் இருக்கிற அறிவுரைகளின்படியும் கட்டளைகளின்படியும் நியமங்களின்படியும் வாழ்வதன் மூலம் நாம் இந்தச் சட்டத்துக்குக் கீழ்ப்படிகிறோம். கிறிஸ்துவின் சட்டத்துக்குக் கீழ்ப்படிந்தால், நம் அன்புள்ள கடவுளான யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிறோம் என்று அர்த்தம். ஏனென்றால், இயேசு கற்றுக்கொடுத்த எல்லாமே யெகோவா சொன்னதுதான்!—யோவா. 8:28.

அன்பை அடிப்படையாகக் கொண்ட சட்டம்

8. கிறிஸ்துவின் சட்டத்துக்கு எது அஸ்திவாரம்?

8 உறுதியான அஸ்திவாரத்தின் மேல் கட்டப்பட்ட ஒரு வீட்டில் குடியிருப்பவர்கள் நிச்சயம் பாதுகாப்பாக உணருவார்கள். அதேபோல், உறுதியான அஸ்திவாரத்தை அடிப்படையாகக் கொண்ட சட்டத்துக்குக் கீழ்ப்படிபவர்கள் பாதுகாப்பாக உணருவார்கள். அப்படிப்பட்ட ஒரு பலமான அஸ்திவாரம்தான் கிறிஸ்துவின் சட்டத்துக்கு அடிப்படையாக இருக்கிறது. அன்புதான் அந்த அஸ்திவாரம்! ஏன் அப்படிச் சொல்கிறோம்?

மற்றவர்களிடம் அன்பாக நடந்துகொள்ளும்போது, நாம் ‘கிறிஸ்துவின் சட்டத்துக்கு’ கீழ்ப்படிகிறோம் (பாராக்கள் 9-14) *

9-10. அன்பால் தூண்டப்பட்டு இயேசு செயல்பட்டார் என்பதை எந்த உதாரணங்கள் காட்டுகின்றன, நாம் எப்படி அவரைப் பின்பற்றலாம்?

9 முதலாவது, அன்பால் தூண்டப்பட்டுதான் இயேசு எல்லாவற்றையும் செய்தார். மனம் உருகுவது, அதாவது கரிசனை காட்டுவது, அன்பின் வெளிக்காட்டாக இருக்கிறது. இயேசு அப்படி மனம் உருகியதால்தான் மக்களுக்குக் கற்றுக்கொடுத்தார், அவர்களைக் குணமாக்கினார், அவர்களுடைய பசியைப் போக்கினார், இறந்தவர்களை உயிரோடு எழுப்பினார். (மத். 14:14; 15:32-38; மாற். 6:34; லூக். 7:11-15) இதையெல்லாம் செய்வதற்கு நிறைய நேரத்தையும் சக்தியையும் செலவு செய்ய வேண்டியிருந்தாலும், அவருடைய தேவைகளைவிட மற்றவர்களுடைய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். இதையெல்லாம் அவர் மனதாரச் செய்தார். எல்லாவற்றையும்விட, மற்றவர்களுக்காகத் தன்னுடைய உயிரையே கொடுப்பதன் மூலம் உன்னத அன்பை வெளிக்காட்டினார்.—யோவா. 15:13.

10 பாடங்கள்: நம்முடைய தேவைகளைவிட மற்றவர்களுடைய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலமும் நம்முடைய ஊழியப் பகுதியில் இருக்கும் மக்கள்மீது கரிசனை காட்டுவதன் மூலமும் நம்மால் இயேசுவைப் பின்பற்ற முடியும். கரிசனையால் தூண்டப்பட்டு நல்ல செய்தியைப் பிரசங்கிக்கும்போதும் கற்றுக்கொடுக்கும்போதும், நாம் கிறிஸ்துவின் சட்டத்துக்குக் கீழ்ப்படிகிறோம் என்று அர்த்தம்.

11-12. (அ) நம்மீது யெகோவா அதிக அக்கறை வைத்திருக்கிறார் என்பதை எது காட்டுகிறது? (ஆ) யெகோவாவைப் போலவே நாம் எப்படி அன்பு காட்டலாம்?

11 இரண்டாவது, தன்னுடைய தந்தையின் அன்பை இயேசு வெளிக்காட்டினார். தன்னுடைய தந்தையை யார் வணங்குகிறார்களோ, அவர்கள்மீது தன்னுடைய தந்தைக்கு எந்தளவு அக்கறை இருக்கிறது என்பதை, தன்னுடைய ஊழியக் காலத்தின்போது இயேசு காட்டினார். அவர் கற்றுக்கொடுத்த நிறைய விஷயங்களில் இவையும் அடங்கும்: நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பரலோகத் தந்தைக்கு ரொம்பவே மதிப்புள்ளவர்கள்! அவர் நம்மை பொக்கிஷமாக நினைக்கிறார்! (மத். 10:31) மனம் திருந்தி சபைக்கு வருகிற காணாமல்போன ஆட்டை வரவேற்க யெகோவா ஆசை ஆசையாகக் காத்திருக்கிறார். (லூக். 15:7, 10) தன்னுடைய மகனின் உயிரை நமக்காக மீட்புவிலையாகக் கொடுத்ததன் மூலம் அவர் நம்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதைக் காட்டியிருக்கிறார்.—யோவா. 3:16.

12 பாடங்கள்: யெகோவாவைப் போல் நாம் எப்படி அன்பு காட்டலாம்? (எபே. 5:1, 2) நம்முடைய சகோதர சகோதரிகள் ஒவ்வொருவரையும் நாம் மதிப்புள்ளவர்களாக நினைக்கிறோம்; அவர்களைப் பொக்கிஷம்போல் பார்க்கிறோம். யெகோவாவிடம் திரும்பி வருகிற ‘காணாமல்போன ஆட்டை’ நாம் சந்தோஷமாக வரவேற்கிறோம். (சங். 119:176) நம்முடைய நேரத்தையும் சக்தியையும் நம்முடைய சகோதர சகோதரிகளுக்காகப் பயன்படுத்தும்போது, குறிப்பாக அவர்களுக்கு உதவி தேவைப்படும் சமயத்தில் அப்படிப் பயன்படுத்தும்போது, நாம் அவர்கள்மீது அன்பு வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். (1 யோ. 3:17) மற்றவர்களை அன்பாக நடத்தும்போது, நாம் கிறிஸ்துவின் சட்டத்துக்குக் கீழ்ப்படிகிறோம் என்று அர்த்தம்.

13-14. (அ) யோவான் 13:34, 35-ல் இயேசு என்ன கட்டளையைக் கொடுத்தார், அதைப் புதிய கட்டளை என்று ஏன் சொல்கிறோம்? (ஆ) அந்தப் புதிய கட்டளைக்கு நாம் எப்படிக் கீழ்ப்படிகிறோம்?

13 மூன்றாவது, தன்னைப் பின்பற்றுபவர்கள் சுயதியாக அன்பைக் காட்ட வேண்டும் என்ற கட்டளையை இயேசு கொடுத்தார். (யோவான் 13:34, 35-ஐ வாசியுங்கள்.) இயேசு கொடுத்த இந்தக் கட்டளை புதிய கட்டளையாக இருந்தது. ஏனென்றால், திருச்சட்டத்தில் சொல்லப்படாத ஒரு வகையான அன்பைக் காட்டும்படி இந்தக் கட்டளை சொன்னது. அதாவது, இயேசு நம்மீது அன்பு காட்டியதைப் போல் சக வணக்கத்தார்மீது நாம் அன்பு காட்ட வேண்டும்! அதற்கு, சுயதியாக அன்பு * தேவைப்படுகிறது! நாம் எந்தளவுக்கு நம்மை நேசிக்கிறோமோ அதைவிட அதிகமாக நம்முடைய சகோதர சகோதரிகளை நேசிக்க வேண்டும். இயேசுவைப் போலவே, நம்முடைய உயிரையே கொடுக்கும் அளவுக்கு அவர்கள்மீது அன்பு காட்ட வேண்டும்.

14 பாடங்கள்: இந்தப் புதிய கட்டளைக்கு நாம் எப்படிக் கீழ்ப்படியலாம்? எளிமையாகச் சொன்னால், சகோதர சகோதரிகளுக்காக நாம் தியாகங்கள் செய்ய வேண்டும்! உயிரைக் கொடுக்கும் அளவுக்கு பெரிய தியாகம் செய்வது மட்டுமல்ல, சின்னச் சின்ன தியாகங்களைச் செய்யவும் நாம் தயாராக இருக்கிறோம். உதாரணத்துக்கு, நமக்குச் சிரமமாக இருந்தாலும், வயதான ஒரு சகோதரரையோ சகோதரியையோ கூட்டத்துக்குக் கூட்டிக்கொண்டு வருவதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்யும்போது... ஒரு சகோதரர் அல்லது சகோதரியின் சந்தோஷத்துக்காக நம் ஆசைகளை விட்டுக்கொடுக்கும்போது... நிவாரண வேலையில் ஈடுபடுவதற்காக வேலையில் விடுப்பு எடுக்கும்போது... கிறிஸ்துவின் சட்டத்துக்குக் கீழ்ப்படிகிறோம் என்று அர்த்தம். அதுமட்டுமல்ல, சபையில் இருக்கிற ஒவ்வொருவரும் நம்முடைய சபையைப் புகலிடமாக நினைப்பதற்கும் உதவுகிறோம்.

நியாயமாக நடக்க மற்றவர்களை உற்சாகப்படுத்திய சட்டம்

15-17. (அ) இயேசுவின் செயல்கள், நியாயத்தைப் பற்றிய அவருடைய எண்ணத்தை எப்படி வெளிக்காட்டின? (ஆ) கிறிஸ்துவை நாம் எப்படிப் பின்பற்றலாம்?

15 பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் “நியாயம்” என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது? பொதுவாக, கடவுளுடைய பார்வையில் எது சரியோ, அதைச் செய்வதைக் குறிக்கிறது. அதுவும், பாரபட்சம் இல்லாமல் அப்படிச் செய்வதைக் குறிக்கிறது. நியாயமாக நடந்துகொள்ள கிறிஸ்துவின் சட்டம் மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறது என்று எப்படிச் சொல்லலாம்?

மற்றவர்களால் இழிவாகப் பார்க்கப்பட்ட பெண்கள் உட்பட, எல்லா பெண்களையும் மரியாதையாகவும் தயவாகவும் இயேசு நடத்தினார் (பாரா 16) *

16 முதலாவதாக, இயேசுவின் செயல்கள், நியாயத்தைப் பற்றிய அவருடைய எண்ணத்தை எப்படி வெளிப்படுத்தின என்று கவனியுங்கள். அவருடைய காலத்திலிருந்த யூத மதத் தலைவர்கள், யூதரல்லாதவர்களை வெறுத்தார்கள். சாதாரண யூத மக்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். பெண்களை அவர்கள் மதிக்கவே இல்லை. ஆனால், இயேசு அப்படி நடந்துகொள்ளவில்லை. அவர் எல்லாரிடமும் நியாயமாகவும் பாரபட்சம் இல்லாமலும் நடந்துகொண்டார். தன்மீது விசுவாசம் வைத்த யூதரல்லாத மற்றவர்களையும் அவர் ஏற்றுக்கொண்டார். (மத். 8:5-10, 13) தப்பெண்ணம் இல்லாமல் அவர் எல்லாருக்கும் பிரசங்கித்தார்; பணக்காரர்கள் ஏழைகள் என எந்த வித்தியாசமும் பார்க்கவில்லை. (மத். 11:5; லூக். 19:2, 9) பெண்களை ஒருபோதும் கடுகடுப்பாகவோ கொடூரமாகவோ அவர் நடத்தவில்லை. மற்றவர்களால் இழிவாகப் பார்க்கப்பட்ட பெண்கள் உட்பட, எல்லா பெண்களையும் மரியாதையாகவும் தயவாகவும் நடத்தினார்.—லூக். 7:37-39, 44-50.

17 பாடங்கள்: மற்றவர்களிடம் பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்வதன் மூலம் நம்மால் இயேசுவைப் பின்பற்ற முடியும். அதோடு, பணக்காரர்களாக இருந்தாலும் சரி, ஏழைகளாக இருந்தாலும் சரி, எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, நம் செய்தியைக் கேட்க விரும்புகிற எல்லாருக்கும் பிரசங்கிப்பதன் மூலம் நம்மால் இயேசுவைப் பின்பற்ற முடியும். கிறிஸ்தவ ஆண்கள், பெண்களை மரியாதையோடு நடத்துவதன் மூலம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள். இப்படியெல்லாம் செய்யும்போது, நாம் கிறிஸ்துவின் சட்டத்துக்குக் கீழ்ப்படிகிறோம் என்று அர்த்தம்.

18-19. நியாயத்தைப் பற்றி இயேசு என்ன கற்றுக்கொடுத்தார், அதிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

18 இரண்டாவதாக, நியாயத்தைப் பற்றி இயேசு என்ன கற்றுக்கொடுத்தார் என்று கவனியுங்கள். மற்றவர்களை நியாயமாக நடத்துவதற்குத் தேவையான நியமங்களை அவர் கற்றுக்கொடுத்தார். உதாரணத்துக்கு, பொன் விதியைப் பற்றி யோசித்துப்பாருங்கள். (மத். 7:12) மற்றவர்கள் நம்மை நியாயமாக நடத்த வேண்டும் என்று நாம் ஆசைப்படுவதால், நாமும் மற்றவர்களை நியாயமாக நடத்த வேண்டும். நாம் அப்படி நியாயமாக நடத்தினால், அவர்களும் நம்மை நியாயமாக நடத்துவதற்கு வாய்ப்பிருக்கிறது. யாராவது நம்மை அநியாயமாக நடத்தினால் என்ன செய்வது? ‘இரவும் பகலும் கூப்பிடுபவர்களுக்கு [யெகோவா] நியாயம் வழங்குவார்’ என்பதில் நம்பிக்கை வைக்கும்படி, தன்னைப் பின்பற்றியவர்களுக்கு இயேசு கற்றுக்கொடுத்தார். (லூக். 18:6, 7) அவருடைய வார்த்தைகள் இந்த வாக்குறுதியை அளிக்கின்றன: நியாயத்தை விரும்புகிற நம்முடைய கடவுளுக்கு, இந்தக் கடைசி நாட்களில் நாம் அனுபவிக்கிற எல்லா சோதனைகளைப் பற்றியும் நன்றாகத் தெரியும்; சரியான சமயத்தில் நமக்கு நியாயம் கிடைக்கும்படி அவர் பார்த்துக்கொள்வார்!—2 தெ. 1:6.

19 பாடங்கள்: இயேசு கற்றுக்கொடுத்த நியமங்களைப் பின்பற்றும்போது, மற்றவர்களை நாம் நியாயமாக நடத்துவோம். சாத்தானுடைய இந்த உலகத்தில் நாம் அநியாயமாக நடத்தப்பட்டிருந்தால் என்ன செய்வது? யெகோவா நமக்கு நிச்சயம் நியாயம் வழங்குவார் என்பதைத் தெரிந்துகொள்வதன் மூலம் நாம் ஆறுதலடையலாம்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நடத்த வேண்டிய விதம்

20-21. (அ) அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படி மற்றவர்களை நடத்த வேண்டும்? (ஆ) ஒரு கணவர் எப்படி சுயதியாக அன்பைக் காட்டலாம், ஓர் அப்பா எப்படி தன் பிள்ளைகளை நடத்த வேண்டும்?

20 கிறிஸ்துவின் சட்டம் அன்பை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், அதிகாரத்தில் இருப்பவர்கள், தங்களுடைய கவனிப்பின் கீழ் இருப்பவர்களை மதிப்பு மரியாதையோடும் அன்போடும் நடத்த வேண்டும். கிறிஸ்துவின் வழி அன்பின் வழி என்பதை அவர்கள் மறக்கக் கூடாது.

21 குடும்பத்தில். ‘கிறிஸ்து சபையை நேசிப்பது’ போல் கணவர்களும் தங்கள் மனைவிகளை நேசிக்க வேண்டும். (எபே. 5:25, 28, 29) தன்னுடைய தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் முக்கியத்துவம் தருவதைவிட, தன் மனைவியின் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் முக்கியத்துவம் தருவதன் மூலம் ஒரு கணவர் கிறிஸ்து காட்டியதைப் போன்ற சுயதியாக அன்பைக் காட்ட வேண்டும். இப்படிப்பட்ட அன்பைக் காட்டுவது சில ஆண்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஏனென்றால், மற்றவர்களை நியாயமாகவும் அன்பாகவும் நடத்துவதை உயர்வாக நினைக்காத ஒரு கலாச்சாரத்தில் அவர்கள் வளர்க்கப்பட்டிருக்கலாம். இப்படிப்பட்டவர்களுக்கு, தங்களிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களை விட்டுவிடுவது கஷ்டமாக இருக்கலாம். ஆனால், கிறிஸ்துவின் சட்டத்துக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றால், அவர்கள் கண்டிப்பாக மாற்றங்களைச் செய்ய வேண்டும். சுயதியாக அன்பைக் காட்டும் ஒரு கணவர், தன் மனைவியின் மரியாதையைச் சம்பாதிக்கிறார். தன் பிள்ளைகள்மீது உண்மையான அன்பு வைத்திருக்கும் ஓர் அப்பா, தன்னுடைய சொல்லாலும் செயலாலும் அவர்களைக் காயப்படுத்த மாட்டார். (எபே. 4:31) அதற்குப் பதிலாக, தன் பிள்ளைகள் பாதுகாப்பாக உணரும் விதத்தில் தன்னுடைய அன்பையும் ஆதரவையும் காட்டுவார். இப்படிப்பட்ட ஓர் அப்பா, தன் பிள்ளைகளின் அன்பையும் நம்பிக்கையையும் சம்பாதிக்கிறார்.

22. ஒன்று பேதுரு 5:1-3-ன்படி, ‘ஆடுகள்’ யாருக்குச் சொந்தமானவை, அவர்களை எப்படி நடத்த வேண்டும்?

22 சபையில். ‘ஆடுகள்’ தங்களுக்குச் சொந்தமானவை கிடையாது என்பதை மூப்பர்கள் ஞாபகம் வைப்பது அவசியம். (யோவா. 10:16; 1 பேதுரு 5:1-3-ஐ வாசியுங்கள்.) “கடவுளுடைய மந்தை,” “கடவுளுக்குமுன்,” ‘கடவுளுடைய சொத்து’ போன்ற வார்த்தைகள், ஆடுகள் யெகோவாவுக்குச் சொந்தமானவை என்பதை மூப்பர்களுக்கு ஞாபகப்படுத்துகின்றன. தன்னுடைய ஆடுகளை அன்பாகவும் கனிவாகவும் நடத்த வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். (1 தெ. 2:7, 8) மேய்ப்பர்களாக, தங்களுடைய பொறுப்புகளை அன்பான விதத்தில் நிறைவேற்றுகிற மூப்பர்கள், யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதோடு, சகோதர சகோதரிகளின் அன்பையும் மரியாதையையும் சம்பாதிக்கிறார்கள்.

23-24. (அ) மோசமான தவறை ஒருவர் செய்துவிட்டால், மூப்பர்கள் அதை எப்படிக் கையாளுவார்கள்? (ஆ) இதுபோன்ற தவறுகளைச் சரி செய்யும்போது மூப்பர்கள் எதை மனதில் வைக்க வேண்டும்?

23 மோசமான பாவத்தைச் செய்தவர்களைக் கையாளும் விஷயத்தில் மூப்பர்களுக்கு இருக்கும் பொறுப்பு என்ன? திருச்சட்டத்தின் கீழிருந்த நியாயாதிபதிகள் மற்றும் பெரியோர்களுக்கு இருந்த பொறுப்புக்கும், இன்று மூப்பர்களுக்கு இருக்கிற பொறுப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது. திருச்சட்டத்தின் கீழிருந்த நியமிக்கப்பட்ட ஆண்கள், ஆன்மீக விஷயங்களை மட்டுமல்லாமல் சமுதாயப் பிரச்சினைகளையும் குற்றவியல் வழக்குகளையும் விசாரித்தார்கள். ஆனால், கிறிஸ்துவின் சட்டத்தின் கீழிருக்கிற மூப்பர்கள், யெகோவாவின் வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட குற்றங்களை மட்டுமே விசாரிக்கிறார்கள். சமுதாய மற்றும் குற்றவியல் வழக்குகளை விசாரிப்பதற்கு அரசாங்க அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துவைத்திருக்கிறார்கள். இதுபோன்ற வழக்குகளை விசாரிப்பதற்குக் கடவுள் அவர்களை அனுமதித்திருக்கிறார் என்பதையும் மனதில் வைக்கிறார்கள். அபராதம் விதிப்பது அல்லது சிறைத் தண்டனை கொடுப்பது போன்ற அதிகாரமும் இதில் அடங்குகிறது.—ரோ. 13:1-4.

24 சபையில் இருக்கும் ஒருவர் மோசமான பாவத்தைச் செய்துவிட்டால், மூப்பர்கள் அதை எப்படிக் கையாளுவார்கள்? அந்தப் பாவம் எந்தளவு மோசமானது என்பதை எடைபோட்டுப் பார்ப்பதற்கும், தீர்மானங்களை எடுப்பதற்கும் பைபிளைப் பயன்படுத்துகிறார்கள். கிறிஸ்துவின் சட்டத்துக்கு அன்புதான் அடிப்படை என்பதை மனதில் வைக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி உதவலாம் என்று யோசித்துப்பார்க்க, இந்த அன்பு மூப்பர்களைத் தூண்டுகிறது. தவறு செய்தவர் மனம் திருந்தியிருக்கிறாரா என்றும் யெகோவாவோடு இருக்கிற பந்தத்தில் ஏற்பட்டிருக்கிற விரிசலைச் சரி செய்ய அவருக்கு உதவ முடியுமா என்றும் யோசித்துப்பார்க்க, அன்பு அவர்களைத் தூண்டுகிறது.

25. அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

25 கிறிஸ்துவின் சட்டத்தின் கீழிருப்பதற்கு நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம்! இந்தச் சட்டத்துக்குக் கீழ்ப்படிய நாம் எல்லாரும் கடினமாக உழைக்கும்போது, சபை ஒரு புகலிடமாக இருக்கும்; சபையில் இருக்கிற ஒவ்வொருவரும் அன்பையும் மதிப்பையும் பாதுகாப்பையும் உணருவார்கள். இருந்தாலும், ‘பொல்லாதவர்கள்’ ‘மேலும் மேலும் மோசமாக’ ஆகிக்கொண்டிருக்கும் ஓர் உலகத்தில்தான் நாம் வாழ்கிறோம். (2 தீ. 3:13) அதனால், நாம் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குழந்தை பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட விஷயத்தைக் கையாளும்போது, கிறிஸ்தவ சபையில் இருப்பவர்கள் எப்படி யெகோவாவின் நியாயத்தை வெளிக்காட்டலாம்? இந்தக் கேள்விக்கான பதிலை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

பாட்டு 109 யெகோவாவின் தலைமகனை வாழ்த்தி வரவேற்போம்!

^ பாரா. 5 இந்தக் கட்டுரையும் இதைத் தொடர்ந்து வரும் இரண்டு கட்டுரைகளும் ஒரு தொடர் கட்டுரையின் பாகமாக இருக்கின்றன. அன்பையும் நியாயத்தையும் யெகோவா நேசிக்கிறார் என்பதில் நாம் ஏன் உறுதியாக இருக்கலாம் என்பதை இந்தக் கட்டுரைகள் விளக்கும். தன்னுடைய மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். அதோடு, இந்தப் பொல்லாத உலகத்தில் நியாயம் கிடைக்காமல் தவிப்பவர்களை அவர் ஆறுதல்படுத்துகிறார்.

^ பாரா. 1 பிப்ரவரி 2019 காவற்கோபுரத்தில் வெளிவந்த, “அன்பும் நியாயமும்—பூர்வ இஸ்ரவேலில்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

^ பாரா. 13 வார்த்தைகளின் விளக்கம்: நம்முடைய தேவைகளுக்கும் நலனுக்கும் முக்கியத்துவம் தருவதைவிட, மற்றவர்களுடைய தேவைகளுக்கும் நலனுக்கும் முக்கியத்துவம் தரும்படி சுயதியாக அன்பு நம்மைத் தூண்டுகிறது. மற்றவர்களுக்கு உதவுவதற்காக அல்லது நன்மை செய்வதற்காக, எதையாவது விட்டுக்கொடுக்க அல்லது இழக்க நாம் தயாராக இருப்போம்.

^ பாரா. 61 படங்களின் விளக்கம்: தன்னுடைய ஒரே மகனை இழந்து தவிக்கும் ஒரு விதவையை இயேசு கவனிக்கிறார். இயேசுவின் மனம் உருகியதால், அந்த இளைஞனை உயிர்த்தெழுப்புகிறார்.

^ பாரா. 63 படங்களின் விளக்கம்: சீமோன் என்ற ஒரு பரிசேயனின் வீட்டில் இயேசு விருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். அப்போது ஒரு பெண், (ஒருவேளை, அவள் ஒரு விபச்சாரியாக இருந்திருக்கலாம்) அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரால் கழுவி, தன்னுடைய கூந்தலால் துடைத்து, பாதங்களின் மேல் எண்ணெய் ஊற்றியிருக்கிறாள். அந்தப் பெண் செய்ததை சீமோன் கண்டனம் செய்கிறார்; இயேசுவோ அவளை ஆதரித்துப் பேசுகிறார்.