Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

“திருச்சட்டத்தின் மூலம் திருச்சட்டத்துக்கு இறந்துவிட்டேன்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னதன் அர்த்தம் என்ன?​—கலா. 2:19.

கலாத்தியர் 2:19-ல் “நான் கடவுளுக்கென்று வாழ்வதற்காக, திருச்சட்டத்தின் மூலம் திருச்சட்டத்துக்கு இறந்துவிட்டேன்” என்று பவுல் சொன்னார்.

ரோமப் பேரரசைச் சேர்ந்த கலாத்தியா பகுதியில் இருந்த சபைகளில் சில சகோதரர்கள், போலிப் போதகர்களின் போதனைகளைக் கேட்க ஆரம்பித்தார்கள். அந்தப் போதகர்கள், மீட்பு வேண்டும் என்றால் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். முக்கியமாக, விருத்தசேதனம் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், அதெல்லாம் தேவையில்லை என்பது பவுலுக்கு நன்றாகத் தெரியும். அதனால், அந்தப் போலி போதகர்களுடைய போதனை தப்பு என்று புரியவைத்தார். இயேசு கிறிஸ்துவின் மீட்புப் பலியில் சகோதரர்களுக்கு இருந்த விசுவாசத்தைப் பலப்படுத்தினார். திருச்சட்டம் இனிமேலும் தேவையில்லை என்று கலாத்தியாவில் உள்ள சபைகளுக்கு எழுதியபோதுதான் கலாத்தியர் 2:19-ல் இருக்கிற வார்த்தைகளை பவுல் சொன்னார்.​—கலா. 2:4; 5:2.

இறந்தவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று பைபிள் சொல்கிறது. (பிர. 9:5) அப்படியென்றால், “திருச்சட்டத்துக்கு இறந்துவிட்டேன்” என்று பவுல் எந்த அர்த்தத்தில் சொன்னார்? இனிமேலும் அவர் திருச்சட்டத்தின் கீழே இல்லை என்ற அர்த்தத்தில் சொன்னார். ஆனால், மீட்புப் பலியில் விசுவாசம் வைப்பதன் மூலம் “கடவுளுக்கென்று வாழ்வதாக” சொன்னார்.

பவுல் கடவுளுக்கென்று வாழ்வது “திருச்சட்டத்தின் மூலம்”தான் சாத்தியமானது. எப்படி? திருச்சட்டத்துக்கு ஒரு முக்கியமான பங்கு இருந்தது. அதாவது, “வாக்குறுதி கொடுக்கப்பட்ட சந்ததி வரும்வரை குற்றங்களை வெளிப்படுத்துவதற்காக அது சேர்க்கப்பட்டது.” (கலா. 3:19) பாவ இயல்புள்ள, குறையுள்ள மனிதனால் திருச்சட்டத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க முடியாது என்றும், பரிபூரணமான ஒரு பலி அவர்களுக்குத் தேவை என்றும் திருச்சட்டம் ஞாபகப்படுத்தியது. வேறு வார்த்தைகளில் சொன்னால், திருச்சட்டம் ‘சந்ததியிடம்’ அதாவது, கிறிஸ்துவிடம் மக்களை வழிநடத்தியது. இப்படி, இயேசுமேல் விசுவாசம் வைக்கிறவர்கள் கடவுளுடைய பார்வையில் நீதிமான்களாக அறிவிக்கப்படுவார்கள். (கலா. 3:24) அதைத்தான் கலாத்தியர் 2:16-ல் “திருச்சட்டத்தின் செயல்களால் அல்ல, கிறிஸ்து இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தால்தான் ஒருவன் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்படுகிறான்” என்று பவுல் சொன்னார். திருச்சட்டத்தின் மூலம்தான் இயேசுவை ஏற்றுக்கொண்டு, அவர்மேல் பவுல் விசுவாசம் வைத்தார், நீதிமானாக அறிவிக்கப்பட்டார். “திருச்சட்டத்துக்கு இறந்து” “கடவுளுக்கென்று” வாழ்ந்தார். இனிமேலும் அவர் திருச்சட்டத்தின் கட்டுப்பாட்டில் இல்லை, கடவுளுடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தார்.

இதே மாதிரியான ஒரு கருத்தைத்தான் ரோமர்களுக்கு எழுதிய கடிதத்திலும் பவுல் சொன்னார். “என் சகோதரர்களே . . . [கிறிஸ்துவுடைய] பலியின் மூலம் திருச்சட்டத்தைப் பொறுத்தவரை இறந்தவர்களானீர்கள். . . . நம்மைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த திருச்சட்டத்தைப் பொறுத்தவரை நாம் இறந்திருப்பதால், இப்போது அதிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறோம்” என்று சொன்னார். (ரோ. 7:4, 6) இந்த வசனங்களிலும் சரி, கலாத்தியர் 2:19-லும் சரி, திருச்சட்டத்துக்குக் கீழே பாவிகளாக கண்டனம் செய்யப்பட்டு இறந்துபோவதைப் பற்றி பவுல் சொல்லவில்லை. அதிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பதைப் பற்றித்தான் சொன்னார். அப்படியென்றால், இனிமேலும் அவரும் சரி, மற்றவர்களும் சரி, திருச்சட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. கிறிஸ்துவின் மீட்புப் பலியில் விசுவாசம் வைப்பதன் மூலம் அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.