நம் மனதைக் குடையும் கேள்வி
முன்பின் தெரியாத ஒரு இடத்துக்கு நீங்கள் போவதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்த இடத்துக்கு நீங்கள் எப்படிப் போவீர்கள்?
1. நீங்களாகவே குத்துமதிப்பாக ஒரு வழியில் போவீர்களா?
2. நிறைய பேர் எந்த வழியில் போகிறார்களோ அதில் போவீர்களா?
3. கூகுள் மேப்பை பார்த்து அல்லது அந்த இடத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்த ஒருவரிடம் கேட்டு போவீர்களா?
முதல் இரண்டு வழியைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் நீங்கள் நினைத்த இடத்துக்குத்தான் போவீர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், மூன்றாவது வழியைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் நீங்கள் போக வேண்டிய இடத்துக்குக் கண்டிப்பாகப் போவீர்கள்.
நம் வாழ்க்கையும் ஒரு பயணம்தான். அந்தப் பயணம், சந்தோஷமான எதிர்காலத்துக்குப் போய் சேர வேண்டும் என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம். அந்த ஆசை நிறைவேறுமா இல்லையா என்பது, வாழ்க்கையில் நாம் எப்படிப்பட்ட முடிவுகள் எடுக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது.
வாழ்க்கையில் நாம் எடுக்கும் சில முடிவுகள் ரொம்பவே முக்கியமானது. அதனால், அந்த விஷயங்களில் முடிவு எடுக்கும்போது எது சரி, எது தவறு என்றெல்லாம் நாம் யோசிப்போம். அந்த முடிவுகளால் நல்லது நடந்தாலும் சரி, கெட்டது நடந்தாலும் சரி, அதன் விளைவுகளை நாமும் நமக்கு வேண்டியவர்களும் ரொம்பக் காலத்துக்கு அனுபவிப்போம். அந்த மாதிரி சில முக்கியமான விஷயங்கள் இதோ:
கல்யாணம், செக்ஸ்
நேர்மையாக நடந்துகொள்வது, வேலை, பணம்
பிள்ளைகளை வளர்ப்பது
மற்றவர்களை நடத்தும் விதம்
நாமும் நம்முடைய குடும்பமும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் இந்த விஷயங்களில் நாம் நல்ல முடிவுகளை எடுத்தே ஆக வேண்டும், இல்லையா?
இப்போது கேள்வி என்னவென்றால்: நல்ல முடிவுகளை எப்படி எடுப்பது?
நல்ல முடிவுகளை எடுக்க பைபிள் நமக்கு உதவி செய்யும். அதில் இருக்கும் விஷயங்களை நாம் தாராளமாக நம்பலாம். இதைப் பற்றித்தான் இந்தப் பத்திரிகையில் பார்க்கப்போகிறோம்.