Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளின் எல்லா பாகங்களும் இன்றும் பயனுள்ளவையா?

பைபிளின் எல்லா பாகங்களும் இன்றும் பயனுள்ளவையா?

பைபிளின் கருத்து

பைபிளின் எல்லா பாகங்களும் இன்றும் பயனுள்ளவையா?

“குறுக்கெழுத்துப் போட்டியிலும் வினாடிவினா போட்டியிலும் பதிலளிக்க பைபிளின் சில குறிப்புகள் உதவலாமே தவிர நவீன மனிதனுக்கெல்லாம் அதனால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை.”

“வம்சாவழி பட்டியல், கற்பு, கடவுள் பயம் பற்றி பைபிளிலுள்ள விஷயங்கள் அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களுக்குத்தான் பொருந்தும், 21-ஆம் நூற்றாண்டில் வாழும் நமக்கெல்லாம் பொருந்தாது.”

“பைபிள் முதன்முதலில் அச்சிடப்படும் முன்பே அதிலுள்ள விஷயங்கள் காலாவதியாகிவிட்டன.”

இந்தக் குறிப்புகள், “பைபிள்—காலாவதியான, பயனற்ற புத்தகமா?” என்ற தலைப்பைப் பற்றி விவாதித்த ஒரு வெப் சைட்டிலிருந்து சமீபத்தில் எடுக்கப்பட்டன. இந்தக் குறிப்புகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவை சரியென்று நினைக்கிறீர்களா?

இப்படிக் குருட்டாம்போக்கில் சொல்லப்படும் குறிப்புகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளாதிருக்கலாம். இருந்தாலும், பைபிளிலுள்ள எல்லாமே நமக்குப் பயனுள்ளவையா என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்? அதுமட்டுமல்ல, அநேக சர்ச்சுகளில் பயன்படுத்தப்படும் பைபிள்கள் பொதுவாக பழைய ஏற்பாடாகவும் புதிய ஏற்பாடாகவும் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதனால், பைபிளின் 75 சதவிகிதத்திற்கும் அதிகமான பகுதி காலாவதியானது, பழமையானது என்ற எண்ணம் மக்கள் மனதில் பதிந்துவிட்டது.

கடவுளுடைய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மிருக பலிகளை இப்போது யாரும் செலுத்துவதில்லை. அப்படியிருக்க, லேவியராகமப் புத்தகத்தில் உள்ள பலிகள் பற்றிய பதிவுகள் நமக்கு எதற்கு? (லேவியராகமம் 1:1–7:38) அதுமட்டுமா, 1 நாளாகமத்தின் ஆரம்ப அதிகாரங்களில் நீண்டுகொண்டே போகும் வம்சாவழி பட்டியலெல்லாம் இப்போது யாருக்குத் தேவை? (1 நாளாகமம் 1:1–9:44) அந்தப் பட்டியல்களை வைத்துக்கொண்டு நம்முடைய முன்னோர்களை கண்டுபிடிக்க முடிந்தாலாவது பரவாயில்லை, அதுவும் இல்லை என்றால் என்ன பிரயோஜனம்?

ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் பழத்தைப் பறிக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். பழம் கையில் கிடைத்த பிறகு அந்த மரத்தினால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று சொல்வீர்களா? அந்த மரத்திலிருந்து இன்னும் நிறைய பழம் வேண்டுமென்றால் அப்படிச் சொல்லமாட்டீர்கள்! சில விதங்களில் பைபிளும் அந்த ஆப்பிள் மரத்தைப் போல்தான். பைபிளிலுள்ள சங்கீதங்கள், மலைப் பிரசங்கம் போன்ற சில பாகங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியலாம், படிப்பதற்கும் “சுவையாக” இருக்கலாம் என்பது உண்மைதான். ஆப்பிள் பழத்தைப் போல் பைபிளின் அந்தக் குறிப்பிட்ட பாகங்கள் நமக்குப் பிரியமானவையாக இருக்கலாம். அதற்காக பைபிளின் மீதி பாகங்களை வேண்டாம் என ஒதுக்கிவிட முடியுமா? இதைக் குறித்து பைபிளே என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

சுமார் கி.பி. 65-ல் அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதத்தில், “பரிசுத்த எழுத்துக்களை நீ சிசுப் பருவத்திலிருந்தே அறிந்திருக்கிறாய்; அவை உனக்கு ஞானத்தைத் தந்து கிறிஸ்து இயேசு மீதுள்ள விசுவாசத்தின் மூலம் உன்னை மீட்புக்கு வழிநடத்துபவையாக இருக்கின்றன” என்று நினைப்பூட்டினார். பின்பு, “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கின்றன. அவை கற்பிப்பதற்கும், கடிந்துகொள்வதற்கும், காரியங்களைச் சரிசெய்வதற்கும், கடவுளுடைய நீதிநெறியின்படி கண்டித்துத் திருத்துவதற்கும் பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன” என்று சொன்னார். (2 தீமோத்தேயு 3:15, 16) “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கின்றன . . . பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன” என்று பவுல் எழுதியபோது புதிய ஏற்பாடு பற்றி மட்டும்தான் கூறினாரா?

“பரிசுத்த எழுத்துக்களை நீ சிசுப் பருவத்திலிருந்தே அறிந்திருக்கிறாய்” என்று பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதியதைக் கவனியுங்கள். சிலர் சொல்கிறபடி பவுல் அந்தக் கடிதத்தை எழுதியபோது தீமோத்தேயு 30 வயதை தாண்டியிருந்தால், கிட்டத்தட்ட இயேசுவின் மரணத்தின்போது அவர் ஒரு சிசுவாக இருந்திருக்க வேண்டும். அந்தச் சமயத்தில் புதிய ஏற்பாடு, அதாவது கிரேக்க வேதாகமம், இன்னும் எழுதவே ஆரம்பிக்கப்படவில்லை. தீமோத்தேயுவின் தாய் ஒரு யூதப் பெண் என்பதால் தன் பிள்ளைக்கு அவர் கற்றுக்கொடுத்த பரிசுத்த எழுத்துகள் பழைய ஏற்பாட்டை, அதாவது எபிரெய வேதாகமத்தை, சேர்ந்ததாக இருந்திருக்க வேண்டும். (அப்போஸ்தலர் 16:1) எனவே, “வேதவசனங்கள் எல்லாம்” என்று பவுல் சொன்னபோது மிருக பலிகளையும் வம்சாவழி பட்டியல்களையும் உடைய பழைய ஏற்பாடு முழுவதையும் சேர்த்துத்தான் குறிப்பிட்டிருப்பார்.

அவர் எழுதி இப்போது 1,900-க்கும் அதிகமான வருடங்கள் உருண்டோடிவிட்டாலும் பழைய ஏற்பாட்டிலிருந்து நாம் இன்றும் அநேக பயனுள்ள விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம். பார்க்கப்போனால், கடவுள் தாம் தேர்ந்தெடுத்த மக்களைக் கொண்டு பைபிளை எழுதி, அதைப் பாதுகாத்திருக்காவிட்டால் இன்று நம் கையில் பைபிளே இருந்திருக்காது. (ரோமர் 3:1, 2) பூர்வ இஸ்ரவேலர் காலத்தில், கடவுளுடைய சட்டங்கள் என்பது வருங்கால சந்ததிகளுக்காக பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு புனித காட்சிப்பொருளாக மட்டும் இருக்கவில்லை, அவை அந்தத் தேசத்தின் அரசியல் சாசனமாகவே இருந்தன. அந்தச் சட்டங்களிலுள்ள நுணுக்கமான விஷயங்கள் தேவையற்றதுபோல் நாம் நினைக்கலாம்; ஆனால், ஒரு தேசமாக அவர்கள் பாதுகாக்கப்படுவதற்கும் சுமூகமாக இயங்குவதற்கும் அவை மிக மிக முக்கியமாக இருந்தன. அதுமட்டுமல்ல, மேசியாவை அடையாளம் கண்டுகொள்ள இந்த வம்சாவழி பட்டியல்கள் தேவைப்பட்டன. ஏனென்றால், தாவீது ராஜாவின் வம்சத்தில் மேசியா பிறப்பார் என்று முன்பே தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்தது.—2 சாமுவேல் 7:12, 13; லூக்கா 1:32; 3:23-31.

மோசே மூலம் கடவுள் கொடுத்த சட்டத்தின்கீழ் இன்று கிறிஸ்தவர்கள் இல்லையென்றாலும் முன்னறிவிக்கப்பட்ட மேசியாவான இயேசு கிறிஸ்துமீது அவர்கள் விசுவாசம் வைக்க வேண்டும். இயேசு உண்மையிலேயே முன்னறிவிக்கப்பட்ட “தாவீதின் மகன்” என்பதை பைபிளில் பதிவாகியுள்ள வம்சாவழி பட்டியல்கள் நிரூபிக்கின்றன. அதுமட்டுமல்ல, மிருக பலிகள் பற்றி பைபிளில் உள்ள விவரங்கள், எல்லா பலிகளையும்விட மிக முக்கியமான இயேசுவின் பலியின் மகத்துவத்தையும் அதில் விசுவாசம் வைக்க வேண்டியதன் அவசியத்தையும் நமக்கு உணர்த்துகின்றன.—எபிரெயர் 9:11, 12.

ரோமிலிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபைக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “வேதவசனங்களின் மூலம் உண்டாகிற சகிப்புத்தன்மையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கை பெறும்படி, முற்காலத்தில் எழுதப்பட்ட அனைத்தும் நம்முடைய அறிவுரைக்காகவே எழுதப்பட்டன.” (ரோமர் 15:4) பைபிள் நம்முடைய நன்மைக்காக எழுதப்பட்டாலும் நம்முடைய நன்மைக்காக மட்டுமே அல்ல என்பதை இந்த வசனம் நினைவுபடுத்துகிறது. ஏவப்பட்ட இந்த வார்த்தைகள், சுமார் 3,500 வருடங்களுக்கும் மேலாக கடவுளுடைய மக்களுக்குத் தேவையான வழிநடத்துதலையும் போதனைகளையும் சிட்சையையும் அளித்தன. எப்படியென்றால், அவர்கள் சீனாய் வனாந்தரத்தில் இருந்தபோது மட்டுமல்லாமல், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் இருந்தபோதும், பாபிலோனுக்கு சிறைக் கைதிகளாகச் சென்றபோதும், ரோம ஆட்சியின்கீழ் இருந்தபோதும், இப்போது உலகெங்கிலும் பரவி இருக்கும்போதும் உதவின, உதவுகின்றன. இப்படி வேறு எந்தப் புத்தகமும் உரிமைபாராட்டிக்கொள்ள முடியாது. ஆப்பிள் மரத்தின் வேர்களைப் போல், மேலோட்டமாகப் பார்த்தால் பைபிளின் சில பாகங்களுடைய முக்கியத்துவம் வெளியில் தெரியாமல் இருக்கலாம். ஆனால், கொஞ்சம் தோண்டிப் பார்த்தால் அதன் மகிமை புரியும், மிகுந்த பலன்களையும் அள்ளித்தரும்! (g10-E 03)

நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?

● ‘பரிசுத்த எழுத்துக்கள்’ தீமோத்தேயுவுக்கு எவ்வளவு காலமாகப் பரிச்சயம்?—2 தீமோத்தேயு 3:15.

● பைபிளின் எந்தப் பாகங்கள் ஏவப்பட்டவை, பயனுள்ளவை?—2 தீமோத்தேயு 3:16.

● ‘முற்காலத்தில் எழுதப்பட்ட அனைத்திலிருந்தும்’ நாம் எப்படிப் பயனடையலாம்?—ரோமர் 15:4.

[பக்கம் 25-ன் படங்கள்]

பலிகள் பற்றி பைபிளிலுள்ள விவரங்கள் இயேசுவின் பலியின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ள உதவுகின்றன