மிகுந்த உபத்திரவம் என்றால் என்ன?
பைபிள் தரும் பதில்
மனிதகுலம் இதுவரைக்கும் சந்திக்காத படுமோசமான வேதனைகளை மிகுந்த உபத்திரவம் கொண்டுவரும். பைபிள் தீர்க்கதரிசனத்தின்படி, மிகுந்த உபத்திரவம் ”கடைசி நாட்களில்“ அல்லது ‘முடிவு காலத்தில்’ நடக்கும். (2 தீமோத்தேயு 3:1; தானியேல் 12:4) அது “உபத்திரவ நாட்களாக இருக்கும். கடவுள் உலகத்தைப் படைத்ததுமுதல் அதுவரை அப்படிப்பட்ட உபத்திரவம் வந்திருக்காது, அதற்குப் பிறகும் வராது.”—மாற்கு 13:19; தானியேல் 12:1; மத்தேயு 24:21, 22.
மிகுந்த உபத்திரவத்தின்போது நடக்கும் சம்பவங்கள்
பொய் மதத்தின் அழிவு. கண்ணை மூடி திறப்பதற்குள், பொய் மதம் அழிக்கப்படும். (வெளிப்படுத்துதல் 17:1, 5; 18:9, 10, 21) ஐநா சபையை ஆதரிக்கிற அரசாங்கங்கள்தான் இதை செய்யும். கடவுள் தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, அந்த எண்ணத்தை அவர்களுடைய மனதில் வைப்பார்.—வெளிப்படுத்துதல் 17:3, 15-18. a
உண்மை வணக்கத்தின் மீது தாக்குதல். எசேக்கியேல் தரிசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, ‘மாகோகு தேசத்தின் கோகு’ என்பது தேசங்களின் கூட்டணி. அது உண்மை வணக்கத்தாரை துடைத்தழிக்க முயற்சி செய்யும். ஆனால், தன்னுடைய வணக்கத்தார் அழிக்கப்படாமல் கடவுள் அவர்களைப் பாதுகாப்பார்.—எசேக்கியேல் 38:1, 2, 9-12, 18-23.
மக்கள் மீது வரும் நியாயத்தீர்ப்பு. இயேசு எல்லா மனிதர்களையும் நியாயந்தீர்ப்பார். “செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் ஒரு மேய்ப்பன் தனித்தனியாகப் பிரிப்பதுபோல், அவர்களை அவர் பிரிப்பார்.” (மத்தேயு 25:31-33) இயேசுவுடைய சகோதரர்களுக்கு நாம் ஒவ்வொருவரும் உதவி செய்கிறோமா இல்லையா என்பதை வைத்துத்தான் இந்த நியாயத்தீர்ப்பு நடக்கும். பரலோகத்தில் அவரோடு சேர்ந்து ஆட்சி செய்யப் போகிறவர்கள்தான் இயேசுவுடைய சகோதரர்கள்.—மத்தேயு 25:34-46.
கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாக்களை கூட்டிச்சேர்ப்பது. கிறிஸ்துவோடு சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மையுள்ள நபர்கள் இந்த பூமியில் இறந்தவுடனே பரலோகத்தில் வாழ்வதற்காக உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.—மத்தேயு 24:31; 1 கொரிந்தியர் 15:50-53; 1 தெசலோனிக்கேயர் 4:15-17.
அர்மகெதோன். இது, ‘சர்வவல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் போர்’ என்றும் ‘யெகோவாவின் நாள்’ என்றும் அழைக்கப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 16:14, 16; ஏசாயா 13:9; 2 பேதுரு 3:12) கிறிஸ்து யாரையெல்லாம் பொல்லாதவர்கள் என்று நியாயந்தீர்க்கிறாரோ அவர்களெல்லாம் நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள். (செப்பனியா 1:18; 2 தெசலோனிக்கேயர் 1:6-10) பைபிளில், உலகம் முழுவதும் இருக்கிற அரசியல் அமைப்புக்கு படமாக இருக்கிற ஏழு தலை கொண்ட மூர்க்க மிருகமும் அழிக்கப்படும்.—வெளிப்படுத்துதல் 19:19-21.
மிகுந்த உபத்திரவத்துக்குப் பின்பு நடக்கும் சம்பவங்கள்
சாத்தானும் அவனுடைய பேய்களும் அதலபாதாளத்துக்குள் தள்ளப்படுவது. ஒரு பலம் படைத்த தேவதூதர், சாத்தானையும் அவனுடைய பேய்களையும் “அதலபாதாளத்துக்குள்” அதாவது, செயல்பட முடியாத நிலைமைக்கு தள்ளிவிடுவார். (வெளிப்படுத்துதல் 20:1-3) அங்கே சாத்தானுடைய நிலைமை சிறையில் இருக்கிற மாதிரி இருக்கும். அவனால் யாரையும் ஏமாற்ற முடியாது.—வெளிப்படுத்துதல் 20:7.
ஆயிர வருட அரசாட்சி ஆரம்பம். கடவுளுடைய அரசாங்கம் தன்னுடைய 1000 வருட அரசாட்சியை ஆரம்பிக்கும். அது மனிதர்களுக்கு ஆசீர்வாதங்களை அள்ளி அள்ளித் தரும். (வெளிப்படுத்துதல் 5:9, 10; 20:4, 6) எண்ண முடியாதளவுக்குத் “திரள் கூட்டமான மக்கள்” ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பிப்பார்கள்.’ பூமியில் ஆரம்பிக்கப் போகிற அந்த ஆயிர வருட அரசாட்சியில் வாழ்வார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9, 14; சங்கீதம் 37:9-11.
a வெளிப்படுத்துதல் புத்தகம், பொய் மதங்களை மகா பாபிலோன் என்று அழைக்கிறது. அதை ‘பேர்போன விபச்சாரி’ என்றும் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 17:1, 5) மகா பாபிலோனை அழிக்கப்போகிற கருஞ்சிவப்பு நிறமுள்ள மூர்க்க மிருகம் ஒரு உலகளாவிய அமைப்பைக் குறிக்கிறது. அது எல்லா தேசங்களையும் ஒன்றிணைப்பதற்கும், அவற்றை பிரதிநிதித்துவம் செய்வதற்கும் ஏற்படுத்தப்பட்டது. அது முதலில் சர்வதேச சங்கம் என்று அழைக்கப்பட்டது. இப்போது ஐநா சபை என்று அழைக்கப்படுகிறது.