Skip to content

மிருகங்கள் சொர்க்கத்துக்குப் போகுமா?

மிருகங்கள் சொர்க்கத்துக்குப் போகுமா?

பைபிள் தரும் பதில்

 பூமியிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள ஆட்கள்தான் பரலோகத்துக்குப் போவார்கள் என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 14:1, 3) அவர்கள் இயேசுவோடு சேர்ந்து ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள், குருமார்களாக சேவை செய்வார்கள். (லூக்கா 22:28-30; வெளிப்படுத்துதல் 5:9, 10) ஏராளமான மக்கள் பூஞ்சோலை பூமியில் வாழ்வதற்கு உயிரோடு எழுப்பப்படுவார்கள்.—சங்கீதம் 37:11, 29.

 செல்லப் பிராணிகளுக்கென்று ஒரு சொர்க்கம் இருப்பதாக பைபிளில் எங்கேயும் சொல்லப்படவில்லை. அதற்கு நல்ல காரணம் இருக்கிறது. ‘பரலோக அழைப்பில் பங்குகொள்கிறவர்கள்’ ஒருசில படிகளை எடுக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 3:1) அந்தப் படிகள் என்னவென்றால், பைபிளைப் பற்றி திருத்தமாக தெரிந்துகொள்வது... விசுவாசத்தை வளர்த்துக்கொள்வது... கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது... ஆகியவைதான். இதையெல்லாம் மிருகங்களால் செய்ய முடியாது. (மத்தேயு 19:17; யோவான் 3:16; 17:3) மனிதர்களை மட்டும்தான் என்றென்றும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு கடவுள் படைத்தார், மிருகங்களை அல்ல.—ஆதியாகமம் 2:16, 17; 3:22, 23.

 மனிதர்கள் இறந்த பின்பு, உயிர்த்தெழுந்தால்தான் பரலோகத்துக்குப் போக முடியும். (1 கொரிந்தியர் 15:42) நிறைய உயிர்த்தெழுதல் பதிவுகளைப் பற்றி பைபிள் சொல்கிறது. (1 ராஜாக்கள் 17:17-24; 2 ராஜாக்கள் 4:32-37; 13:20, 21; லூக்கா 7:11-15; 8:41, 42, 49-56; யோவான் 11:38-44; அப்போஸ்தலர் 9:36-42; 20:7-12) ஆனால், மனிதர்கள்தான் உயிர்த்தெழுப்பப்பட்டார்கள், மிருகங்கள் கிடையாது.

 மிருகங்களுக்கு ஆத்துமா இருக்கிறதா?

 இல்லை. மனிதர்களை மட்டுமல்ல, மிருகங்களையும் ஆத்துமா என்று பைபிள் சொல்கிறது. முதல் மனிதனான ஆதாம் படைக்கப்பட்டபோது, அவனுக்கு ஒரு ஆத்துமா கொடுக்கப்பட்டதாக பைபிள் சொல்வதில்லை, அதற்கு பதிலாக அவன், “ஜீவாத்துமாவானான்” என்று அது சொல்கிறது. (ஆதியாகமம் 2:7, தமிழ் O.V. பைபிள்) ‘பூமியிலிருக்கும் மண்ணும்’ ‘ஜீவசுவாசமும்’ சேர்ந்ததுதான் ஒரு ஆத்துமா.

 ஆத்துமா சாகுமா?

 ஆம், ஆத்துமா சாகும் என்று பைபிள் சொல்கிறது. (எசேக்கியேல் 18:20) சாகும்போது மனிதர்களும் சரி, மிருகங்களும் சரி மண்ணுக்கே திரும்புகிறார்கள். (பிரசங்கி 3:19, 20) அதாவது, எங்கேயும் இல்லாமல் போகிறார்கள். a

 மிருகங்கள் பாவம் செய்யுமா?

 இல்லை. பாவம் என்றால் கடவுளுடைய சட்டங்களுக்கு எதிராக எதையாவது யோசிப்பது அல்லது செய்வது. ஒழுக்க சம்பந்தமாக தீர்மானங்களை எடுக்க முடிந்த ஒருவரால்தான் பாவமே செய்ய முடியும். ஆனால், அப்படி முடிவெடுக்கிற திறமை மிருகங்களுக்கு கிடையாது. அவற்றுக்கு இருக்கும் குறைந்த ஆயுள் காலத்தில், அவை வெறுமனே இயல்புணர்ச்சியால் செயல்படுகின்றன. (2 பேதுரு 2:12) அவற்றின் ஆயுசு முடியும்போது, பாவம் செய்யாவிட்டாலும் அவை சாகின்றன.

 மிருகங்களைக் கொடுமைப்படுத்துவது சரியா?

 இல்லை. கடவுள், மிருகங்கள்மேல் மனிதர்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறாரே தவிர, அவற்றை கொடுமைப்படுத்துவதற்கு உரிமை கொடுக்கவில்லை. (ஆதியாகமம் 1:28; சங்கீதம் 8:6-8) சின்னச் சின்ன பறவைகள் உட்பட ஒவ்வொரு மிருகங்கள் மேலும் கடவுள் அக்கறை வைத்திருக்கிறார். (யோனா 4:11; மத்தேயு 10:29) மிருகங்களை நன்றாக கவனித்துக்கொள்ளச் சொல்லி கடவுள் தன்னை வணங்குகிறவர்களுக்கு கட்டளை கொடுத்திருக்கிறார்.—யாத்திராகமம் 23:12; உபாகமம் 25:4; நீதிமொழிகள் 12:10.

a அதிகம் தெரிந்துகொள்ள, “பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?” என்ற புத்தகத்தில் அதிகாரம் 6-ஐப் பாருங்கள்.