Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

Ahmad Gharabli/AFP via Getty Images

விழிப்புடன் இருங்கள்!

உலக நாடுகள் கைகோர்த்து பருவநிலை மாற்றத்தை தடுக்க முடியுமா?—பைபிள் என்ன சொல்கிறது?

உலக நாடுகள் கைகோர்த்து பருவநிலை மாற்றத்தை தடுக்க முடியுமா?—பைபிள் என்ன சொல்கிறது?

 நவம்பர் 20, 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று, COP27 ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாடு முடிந்தது. அதில், வரலாற்று சிறப்புமிக்க ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதாவது, பருவநிலை மாற்றத்தால் வரும் பாதிப்புகளை சமாளிக்க ஏழை நாடுகளுக்கு நிதி உதவி செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அரசாங்கங்கள் எடுக்கும் இப்படிப்பட்ட முயற்சிகளால் பருவநிலை மாற்றத்தை தடுக்க முடியாது என்பதுதான் பலரின் கருத்து!

  •    ”பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளையும் நஷ்டங்களையும் ஈடு செய்ய நிதி உதவி செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை நான் வரவேற்கிறேன் . . . ஆனால், அதுமட்டுமே போதாது. . . . நம்முடைய உலகம் இன்னமும் தீவிர சிகிச்சை பிரிவில்தான் இருக்கிறது.”—அன்டோனியோ குட்டரெஸ், ஐ.நா சபையின் பொது செயலாளர், நவம்பர் 19, 2022.

  •    ”பருவநிலை மாற்றத்தால் ஏற்படவிருக்கும் அழிவின் விளிம்பில் பூமி இருக்கிறது.”—மேரி ராபின்ஸன், அயர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் தலைவர், நவம்பர் 20, 2022.

 இந்த பூமியின் கதி என்ன ஆகுமோ என்று டீனேஜர்களும் இளைஞர்களும் கவலைப்படுகிறார்கள். ஆனால், உலக நாடுகளெல்லாம் ஒன்றாக சேர்ந்து உழைத்தால் உண்மையிலேயே பருவநிலை மாற்றத்தை சரி செய்ய முடியுமா? இதை பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

உலக நாடுகள் ஒன்றுசேர்ந்து ஜெயிக்குமா?

 பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அழிவுகளை கட்டுப்படுத்த அரசாங்கங்கள் எடுக்கும் முயற்சிகள் சில நல்ல பலன்களை தந்திருப்பது என்னவோ உண்மைதான்! ஆனாலும் அவர்களால் இந்த பிரச்சினைக்கு முழுமையாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்று பைபிள் காட்டுகிறது. ஏன்? இரண்டு காரணங்கள் இதோ:

  •    “கோணலாக இருப்பதை நேராக்க முடியாது.”—பிரசங்கி 1:15.

     அர்த்தம்: இன்றைக்கு அரசாங்கங்களால், தாங்கள் செய்ய நினைக்கும் எல்லாவற்றையும் செயல்படுத்த முடிவதில்லை. ஏனென்றால், மனிதர்களுக்கு தங்களையே ஆட்சி செய்யும் திறன் இல்லை. (எரேமியா 10:23) உலகப் பிரச்சினைகளை தீர்க்க, தேசங்கள் எல்லாம் ஒன்றாக கைகோர்த்து எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அவர்களால் அவற்றை சரி செய்ய முடியாது.

  •    “மனிதர்கள் சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, . . . எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக” இருப்பார்கள்.—2 தீமோத்தேயு 3:2, 3.

     அர்த்தம்: நம் காலத்தில் மக்கள் எப்படி இருப்பார்கள் என்று பைபிள் முன்னதாகவே சொன்னது. அதேபோல், மக்கள் சுயநலக்காரர்களாகவும், ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து ஒரு நல்ல விஷயத்தை செய்வோம் என்ற விருப்பம் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள்.

நம்பிக்கை இழக்க வேண்டாம்!

 பூமியின் எதிர்காலம் மனித அரசாங்கங்களை நம்பி இல்லை. திறமையான ஒரு அரசரை கடவுள் ஏற்படுத்தியிருக்கிறார். அவர்தான் இயேசு கிறிஸ்து! அவரை பற்றி பைபிள் சொல்கிறது:

  •    ”ஆட்சி செய்யும் அதிகாரம் அவருடைய தோளின் மேல் இருக்கும். ஞானமுள்ள ஆலோசகர், வல்லமையுள்ள கடவுள், என்றென்றுமுள்ள தகப்பன், சமாதானத்தின் அதிபதி என்றெல்லாம் அவர் அழைக்கப்படுவார்.”—ஏசாயா 9:6.

 கடவுளுடைய அரசாங்கத்துக்கு, அதாவது பரலோகத்தில் இருந்து ஆட்சி செய்யும் ஒரு அரசாங்கத்துக்கு, இயேசு ராஜாவாக இருக்கிறார். (மத்தேயு 6:10) அவருக்கு அதிகாரமும் ஞானமும் இருக்கிறது. பூமியையும் அதில் குடியிருக்கிறவர்களையும் நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையும் அவருக்கு இருக்கிறது. (சங்கீதம் 72:12, 16) அவருடைய ஆட்சியின் கீழ், இந்த பரலோக அரசாங்கம் பூமியை “அழிக்கிறவர்களை” அழிக்கும்; பூமியின் சுற்றுச்சூழலை மறுபடியும் நல்ல நிலைமைக்கு கொண்டுவரும்.—வெளிப்படுத்துதல் 11:18, அடிக்குறிப்பு; ஏசாயா 35:1, 7.

 பருவநிலை மாற்றத்துக்கான ஒரே நிரந்தர தீர்வை பற்றி இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ள, “மோசமான பருவநிலை மாற்றத்தை சமாளிக்க பைபிள் உதவுமா?” என்ற கட்டுரையை பாருங்கள்.