Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

hadynyah/E+ via Getty Images

விழிப்புடன் இருங்கள்!

எங்கும் உணவு தட்டுப்பாடு—போர் மற்றும் வானிலை மாற்றத்தால்! பைபிள் என்ன சொல்கிறது?

எங்கும் உணவு தட்டுப்பாடு—போர் மற்றும் வானிலை மாற்றத்தால்! பைபிள் என்ன சொல்கிறது?

 உக்ரைன் போராலும் வானிலை மாற்றத்தாலும் உலகம் முழுவதும் உணவு தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. வளர்ந்து வரும் நாடுகளில் இது ரொம்பவே அதிகமாக இருப்பதால் போதுமான சாப்பாடு கிடைக்காமல் அங்கு நிறைய பேர் கஷ்டப்படுகிறார்கள்.

  •    “போராலும்... வானிலை மாற்றத்தாலும்... விலைவாசி ஏறியிருப்பதாலும்... இன்னும் பல காரணங்களாலும் உணவு கிடைப்பதும் அதை உற்பத்தி செய்வதும் ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது.”—அன்டோனியோ குட்டரஸ், ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர், ஜூலை 17, 2023.  

  •    “தானியங்களைப் பத்திரமாக உக்ரைனிலிருந்து ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தத்தை ரஷ்யா முறித்துக்கொண்டது. அதனால் உலகம் முழுவதும் உணவு தட்டுப்பாடு வரும், முக்கியமாக, வட ஆப்பிரிக்கா... மத்தியக் கிழக்கு... மாதிரியான நாடுகளில் விலைவாசி எகிறிவிடும் என்று நிபுணர்கள் நினைக்கிறார்கள்.”—Atalayar.com, ஜூலை 23, 2023.

 உணவு தட்டுப்பாட்டைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் பைபிள் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.

உணவு தட்டுப்பாடு வரும் என்று பைபிள் முன்பே சொன்னது

  •    ‘ஜனத்துக்கு எதிராக ஜனமும் நாட்டுக்கு எதிராக நாடும் சண்டை போடும், அடுத்தடுத்து பல இடங்களில் பஞ்சங்கள் . . . ஏற்படும்’ என்று இயேசு முன்பே சொல்லிவிட்டார்.—மத்தேயு 24:7.

  •    அடையாள அர்த்தமுள்ள நான்கு குதிரைவீரர்களைப் பற்றி பைபிளிலுள்ள வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது. அதில் ஒரு குதிரைவீரன் போர்களுக்கு அடையாளமாக இருக்கிறான். அவனுக்குப் பிறகு வரும் குதிரைவீரன் பஞ்சத்துக்கு அடையாளமாக இருக்கிறான். அவன் வரும்போது உணவுக்குப் பயங்கரமான தட்டுப்பாடு இருக்கும், கிடைக்கிற கொஞ்சநஞ்ச உணவின் விலைகூட அநியாயத்துக்கு அதிகமாக இருக்கும். இதைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “ஒரு கறுப்புக் குதிரை வந்தது. அதன்மேல் உட்கார்ந்திருந்தவனின் கையில் ஒரு தராசு இருந்தது. பின்பு, . . . ஒரு குரல் வருவதுபோல் எனக்குக் கேட்டது; அது, ‘ஒரு தினாரியுவுக்கு [அதாவது, ஒரு நாள் கூலிக்கு] ஒரு படி கோதுமை, ஒரு வெள்ளிக் காசுக்கு மூன்று படி பார்லி’ . . . என்று சொன்னது.”—வெளிப்படுத்துதல் 6:5, 6.

 உணவு நெருக்கடி பற்றி பைபிள் சொன்ன இந்தத் தீர்க்கதரிசனங்கள் நம் காலத்தில் நிறைவேறிவருகின்றன. இந்தக் காலத்தைத்தான் ‘கடைசி நாட்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (2 தீமோத்தேயு 3:1) ‘கடைசி நாட்களை’ பற்றியும், வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்லும் நான்கு குதிரைவீரர்களின் சவாரியைப் பற்றியும் இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்வதற்கு, 1914-லிருந்து உலகம் மாறிவிட்டது என்ற வீடியோவையும், “நான்கு குதிரைவீரர்கள்—இவர்கள் யார்?” என்ற கட்டுரையையும் பாருங்கள்.

பைபிள் எப்படி உதவும்?

  •    எவ்வளவு பெரிய பிரச்சினைகளையும் சமாளிப்பதற்குத் தேவையான நல்ல நல்ல ஆலோசனைகள் பைபிளில் இருக்கின்றன. உணவுத் தட்டுப்பாட்டையும் விலைவாசி உயர்வையும் சமாளிப்பதற்குக்கூட அந்த ஆலோசனைகள் உதவுகின்றன. இதற்குச் சில உதாரணங்களை, “குறைந்த வருமானத்தில் குடும்பத்தை ஓட்டுவது எப்படி?” என்ற கட்டுரையில் பாருங்கள்.

  •    இன்று இருக்கும் நிலைமை நல்லபடியாக மாறும் என்ற நம்பிக்கையையும் பைபிள் கொடுக்கிறது. ‘பூமியில் ஏராளமாகத் தானியம் விளைகிற’ ஒரு காலம் வரும் என்று அது சொல்கிறது. (சங்கீதம் 72:16) அப்போது, பசி-பட்டினியே இருக்காது, எல்லாருமே வயிறு நிறைய திருப்தியாகச் சாப்பிடுவார்கள். எதிர்காலம் சம்பந்தமாக பைபிள் தரும் நம்பிக்கையைப் பற்றியும், அதை நீங்கள் ஏன் நம்பலாம் என்பதைப் பற்றியும் அதிகமாகத் தெரிந்துகொள்ள, “சந்தோஷப் பாதையில் செல்ல—நம்பிக்கை” என்ற கட்டுரையைப் பாருங்கள்.