Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை | தேவதூதர்கள்—உண்மையிலேயே இருக்கிறார்களா?

கெட்ட தேவதூதர்கள் இருக்கிறார்களா?

கெட்ட தேவதூதர்கள் இருக்கிறார்களா?

ஆம்! ஆனால், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? ஆரம்பக் கட்டுரைகளில் பார்த்ததுபோல், கடவுள்தான் அவர்களைப் படைத்தார்; சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் சுதந்திரத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார். முதல் ஆணும் பெண்ணும், அதாவது ஆதாமும் ஏவாளும், படைக்கப்பட்ட கொஞ்ச காலத்திலேயே, பரிபூரணமாக இருந்த ஒரு தேவதூதன், அந்தச் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பூமியில் கலகத்தை உண்டுபண்ணினான். கடவுளுக்கு எதிராகச் செயல்பட, ஆதாமையும் ஏவாளையும் தூண்டினான். (ஆதியாகமம் 3:1-7; வெளிப்படுத்துதல் 12:9) இந்தத் தேவதூதனின் பெயரைப் பற்றியோ, கலகம் செய்வதற்குமுன் பரலோகத்தில் அவனுக்கு இருந்த ஸ்தானத்தைப் பற்றியோ பைபிள் எதுவும் குறிப்பிடுவதில்லை. ஆனால், கலகம் செய்த பிறகு, பைபிள் அவனைச் சாத்தான் என்றும், பிசாசு என்றும் அழைக்கிறது. சாத்தான் என்றால் “எதிர்ப்பவன்” என்றும், பிசாசு என்றால் “அவதூறு பேசுகிறவன்” என்றும் அர்த்தம்.—மத்தேயு 4:8-11.

கடவுள்பக்தி இல்லாத அந்தத் தேவதூதன் கலகம் செய்வதை அதோடு நிறுத்தவில்லை! நோவாவின் காலத்தில், சில தேவதூதர்கள் (அவர்களுடைய எண்ணிக்கையைப் பற்றி பைபிள் எதுவும் குறிப்பிடவில்லை.) கடவுளுடைய பரலோக குடும்பத்தில், “தாங்கள் இருக்க வேண்டிய இடத்தை விட்டுவிட்டார்கள்.” அவர்கள் மனித உருவத்தில் பூமிக்கு வந்து ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டார்கள்; தாங்கள் படைக்கப்பட்டதற்கான நோக்கத்தை மறந்துவிட்டார்கள்.—யூதா 6; ஆதியாகமம் 6:1-4; 1 பேதுரு 3:19, 20.

அந்தக் கெட்ட தேவதூதர்களுக்கு என்ன ஆனது? கடவுள் இந்தப் பூமியைப் பெருவெள்ளத்தால் அழித்தபோது, அவர்கள் மனித உருவத்தை விட்டுவிட்டு மறுபடியும் பரலோகத்துக்குப் போனார்கள். ஆனால், ‘ஆரம்பத்தில் தங்களுக்கு இருந்த ஸ்தானத்தில்’ தொடர்ந்து இருக்க அந்தக் கெட்ட தேவதூதர்களை கடவுள் அனுமதிக்கவில்லை. ‘டார்டரஸ்’ என்று சொல்லப்படும் ‘பயங்கரமான [ஆன்மீக] இருட்டுக்குள்,’ அதாவது தாழ்வான நிலைக்குள் கடவுள் அவர்களைத் தள்ளினார். (யூதா 6; 2 பேதுரு 2:4) இந்தப் பேய்கள், ‘ஒளியின் தூதனைப் போல் வேஷம் போடுகிற,’ “பேய்களுடைய தலைவனான” பிசாசாகிய சாத்தானின் கட்டுப்பாட்டுக்குள் தங்களை வைத்துக்கொண்டார்கள்.—2 கொரிந்தியர் 11:14; மத்தேயு 12:24.

1914-ல், கடவுளுடைய மேசியானிய அரசாங்கம் பரலோகத்தில் தன் ஆட்சியை ஆரம்பித்ததாக பைபிள் கற்பிக்கிறது. * இந்த முக்கியமான சம்பவத்தைத் தொடர்ந்து, சாத்தானும் அவனைச் சேர்ந்த பேய்களும் பரலோகத்திலிருந்து பூமிக்குத் தள்ளப்பட்டார்கள். இந்தப் பூமியில், அநியாய அக்கிரமமும், இழிவான ஒழுக்கக்கேடும் அதிகரித்து வருகின்றன. இவை, சாத்தானுடைய பழிதீர்க்கும் எண்ணத்துக்கும் படுமோசமான செயல்களுக்கும் அத்தாட்சியாக இருக்கின்றன.—வெளிப்படுத்துதல் 12:9-12.

ஒழுக்கக்கேடும் வன்முறையும் அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது, சாத்தான் மற்றும் அவனுடைய பேய்களின் கொடூர ஆட்சியின் முடிவு ரொம்ப பக்கத்தில் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்தக் கொடூரமான தேவதூதர்கள், சீக்கிரத்தில் செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள். கடவுளுடைய அரசாங்கம் பூஞ்சோலை பூமியை ஆயிரம் வருடம் ஆட்சி செய்யும். பிறகு கடைசியாக ஒரு முறை, மனிதர்களை கொஞ்ச காலத்துக்கு சோதிப்பதற்கான வாய்ப்பு இந்தக் கெட்ட தூதர்களுக்குக் கொடுக்கப்படும். அதற்குப் பிறகு, அவர்கள் நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள்.—மத்தேயு 25:41; வெளிப்படுத்துதல் 20:1-3, 7-10.

^ பாரா. 6 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள, யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் அதிகாரம் 8-ஐ பாருங்கள். இது www.pr418.com என்ற வெப்சைட்டிலும் கிடைக்கும்.