Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இப்போதே சந்தோஷமாக வாழ

இப்போதே சந்தோஷமாக வாழ

நோயோ முதுமையோ மரணமோ இல்லாத அருமையான வாழ்க்கை உங்களுக்குக் காத்திருக்கிறது! ஆனால், இன்று நிறைய பிரச்சினைகளோடு நாம் போராட வேண்டியிருக்கிறது. இருந்தாலும், இப்போதே சந்தோஷமாக வாழ முடியுமா? முடியும். இப்போதே நிம்மதியாகவும் திருப்தியாகவும் வாழ்வதற்கான வழியை பைபிள் உங்களுக்குக் காட்டுகிறது. சில பிரச்சினைகளைச் சமாளிக்க பைபிள் எப்படி உதவும் என்று பார்க்கலாம்.

திருப்தியோடு இருப்பது

பைபிள் ஆலோசனை: “பண ஆசையில்லாமல் வாழுங்கள். உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள்.”​எபிரெயர் 13:5.

நமக்கு இது தேவை, அது தேவை என்றும், அவையெல்லாம் நம்மிடம் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும் என்றும் இந்த உலகம் சொல்கிறது. ஆனால், “உள்ளதை வைத்துத் திருப்தியோடு” வாழ நம்மால் முடியும் என்று பைபிள் சொல்கிறது. எப்படி?

‘பண ஆசையை’ தவிருங்கள். ‘பண ஆசையினால்’ மக்கள் தங்களுடைய ஆரோக்கியத்தையும், குடும்பத்தையும், நட்பையும், ஒழுக்கத்தையும், கண்ணியத்தையும்கூட தூக்கியெறியத் துணிந்துவிடுகிறார்கள். (1 தீமோத்தேயு 6:10) வெறும் பணத்துக்காக இதையெல்லாம் இழந்து என்ன லாபம்? முடிவில், அவர்களுக்கு ‘திருப்தி’ கிடைப்பதில்லையே!​—பிரசங்கி 5:10.

பொருள்கள் அல்ல, மனிதர்கள்தான் முக்கியம். பொருள்கள் பயன் தருவது உண்மைதான். ஆனால், பொருள்களால் அன்பு காட்டவோ, நன்றி காட்டவோ முடியாது. மனிதர்களால் மட்டும்தான் இவற்றைச் செய்ய முடியும். சொல்லப்போனால், ‘உண்மையான நண்பர்[கள்]’ நம் மனநிறைவுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறார்கள்.​—நீதிமொழிகள் 17:17.

பைபிள் ஆலோசனைகளின்படி நடந்தால் நாம் இப்போதே சந்தோஷமாக வாழலாம்

உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளிப்பது

பைபிள் ஆலோசனை: “சந்தோஷமான உள்ளம் அருமையான மருந்து.”​நீதிமொழிகள் 17:22.

உடல்நலப் பிரச்சினைகளைத் தாங்கிக்கொள்ள உதவும் “அருமையான மருந்து” சந்தோஷம்தான். ஆனால், உடம்புக்கு முடியாமல் போகும்போது நாம் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்?

நன்றியோடு இருங்கள். நம்முடைய பிரச்சினையைப் பற்றியே நாம் யோசித்துக்கொண்டிருந்தால், ‘எல்லா நாளும் திண்டாட்டமாகத்தான்’ இருக்கும். (நீதிமொழிகள் 15:15) அதனால், “நன்றியுள்ளவர்களாக இருப்பதைக் காட்டுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (கொலோசெயர் 3:15) உங்கள் வாழ்க்கையில் உள்ள நல்ல விஷயங்களுக்காக நன்றியோடு இருங்கள், அவை எவ்வளவு சின்ன விஷயமாக இருந்தாலும் சரி! அழகான சூரிய மறைவு, இதமான தென்றல் காற்று, ஒருவருடைய அன்பான புன்னகை—இதெல்லாம் நம் வாழ்க்கைக்குச் சுவை சேர்க்கும்!

மற்றவர்களுக்கு உதவுங்கள். உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படும் சமயங்களில்கூட, ‘வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கும்.’ (அப்போஸ்தலர் 20:35) நாம் செய்யும் உதவிகளுக்காக மற்றவர்கள் நன்றி சொல்லும்போது நமக்கு மனநிறைவு கிடைக்கிறது; நம் பிரச்சினையை மறக்க அது உதவுகிறது. சந்தோஷமாக வாழ நாம் மற்றவர்களுக்கு உதவினால் நமக்கும் வாழ்க்கையில் சந்தோஷம் கிடைக்கும்.

திருமண பந்தத்தைப் பலப்படுத்துவது

பைபிள் ஆலோசனை: “மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.”​பிலிப்பியர் 1:10.

கணவனும் மனைவியும் சேர்ந்து செலவிடும் நேரம் குறையக் குறைய அவர்களுடைய உறவில் விரிசல் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாகும். அதனால், திருமண பந்தத்தைக் கட்டிக்காப்பதற்கு அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.

எல்லாவற்றையும் சேர்ந்து செய்யுங்கள். தனித்தனியாக அவரவருக்குப் பிடித்ததைச் செய்வதற்குப் பதிலாக, எல்லாவற்றையும் சேர்ந்து செய்ய நீங்கள் ஏன் திட்டமிடக் கூடாது? “தனியாக இருப்பதைவிட இரண்டு பேராகச் சேர்ந்திருப்பது நல்லது” என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 4:9) நீங்கள் ஒன்றாகச் சேர்ந்து சமைக்கலாம், வாக்கிங் போகலாம், காபி குடிக்கலாம், அல்லது பொழுதுபோக்கில் ஈடுபடலாம்.

அன்பை வெளிக்காட்டுங்கள். தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் அன்பும் மரியாதையும் காட்ட வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (எபேசியர் 5:28, 33) அன்பாக புன்னகைப்பது, ஆசையாக அரவணைப்பது, சின்னச் சின்ன அன்பளிப்புகளைத் தருவது போன்றவைகூட திருமண பந்தத்தைப் பலப்படுத்தும். கணவனும் மனைவியும் ஒருவரிடம் ஒருவர் மட்டும்தான் காதல் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.​—எபிரெயர் 13:4.