Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

1921—நூறு வருஷங்களுக்கு முன்பு

1921—நூறு வருஷங்களுக்கு முன்பு

ஜனவரி 1, 1921, காவற்கோபுரத்தில் பைபிள் மாணாக்கர்களிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது: “இந்த வருடத்தில் நாம் உடனடியாக செய்ய வேண்டிய முக்கியமான வேலை என்ன?” அந்தக் கேள்விக்கு ஏசாயா 61:1, 2-ல் இருக்கிற வார்த்தைகள் பதிலாக கொடுக்கப்பட்டது. இவைதான் அந்த வார்த்தைகள்: “தாழ்மையானவர்களுக்கு நல்ல செய்தி சொல்ல யெகோவா என்னைத் தேர்ந்தெடுத்தார். . . . , யெகோவாவின் அனுக்கிரக வருஷத்தைப் பற்றித் தெரிவிப்பதற்காகவும், நம் கடவுள் பழிவாங்கப்போகிற நாளைப் பற்றி அறிவிப்பதற்காகவும் . . .  அவர் என்னை அனுப்பினார்.” இப்படி, ஊழியத்தை இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று அவர்கள் ஞாபகப்படுத்தப்பட்டார்கள்.

தைரியமான ஊழியர்கள்

இந்த வேலையைச் செய்வதற்கு பைபிள் மாணாக்கர்களுக்குத் தைரியம் தேவைப்பட்டது. தாழ்மையானவர்களுக்கு ‘நல்ல செய்தியை’ அறிவிப்பதோடு கெட்டவர்களுக்கு நம்முடைய கடவுள் “பழிவாங்கப்போகிற நாளை” பற்றியும் அறிவிக்க வேண்டியிருந்தது.

கனடாவில் ஜெ.ஹெச். ஹாஸ்கின், என்ற ஒரு சகோதரர் இருந்தார். அங்கே எதிர்ப்பு இருந்தாலும் தைரியமாக பிரசங்கித்துக்கொண்டிருந்தார். 1921-ல், மெத்தடிஸ்ட் சர்ச்சை சேர்ந்த ஒரு போதகரை அவர் பார்த்தார். அவரிடம், “நாம பைபிள பத்தி பேசலாம். ஆனா நமக்குள்ள ஒருவேள கருத்து வேறுபாடு வந்தாலும் நாம சமாதானமா பிரிஞ்சுடுவோம்” என்று சொன்னார். ஆனால், அந்தப் போதகர் அப்படி நடந்துகொள்ளவில்லை. அதைப் பற்றி ஹாஸ்கின் இப்படிச் சொன்னார்: “நாங்க கொஞ்ச நேரம்தான் பேசியிருப்போம். அதுக்குள்ள அவரு கதவ ‘டமாரு’ன்னு சாத்திட்டாரு. அவரு சாத்துன வேகத்தில அதில இருக்கிற கண்ணாடி எல்லாம் உடஞ்சு விழுந்துடுமோன்னு நினச்சேன்.”

“கிறிஸ்தவங்களா இல்லாதவங்ககிட்ட போய் பேச வேண்டியது தானே?” என்று அவர் கத்தினார். அதற்கு சகோதரர் ஹாஸ்கின் எந்தப் பதிலும் பேசவில்லை. ஆனால், அவர் போன பின்பு, “அப்படிப்பட்ட ஒருத்தர்கிட்டதான் நான் பேசிட்டு இருந்தேன்னு நினைக்கறேன்!” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டார்.

அந்தப் போதகர் அடுத்த நாள் அவருடைய சர்ச்சில் போதித்தபோது சகோதரர் ஹாஸ்கினைப் பற்றித் தப்புத்தப்பாகப் பேசினார். “அந்த ஊருக்கு இதுவரைக்கும் வந்தவங்களிலேயே நான்தான் பயங்கரமான ஏமாத்து பேர்வழினும் என்னை கொல்லனும்னும் சர்ச்சில இருந்தவங்ககிட்ட சொல்லியிருக்கிறார்” என்று சகோதரர் ஹாஸ்கின் சொன்னார். ஆனால், இதையெல்லாம் பார்த்து அவர் பயந்துவிடவில்லை. தொடர்ந்து பிரசங்கித்தார், நிறைய பேரிடம் அவரால் சத்தியத்தைச் சொல்ல முடிந்தது. “அங்க பிரசங்கிக்கறது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. சிலரு என்னை பார்த்து, ‘கடவுள்தான் உங்கள அனுப்பியிருக்கணும்’னுகூட சொன்னாங்க. எனக்கு என்னென்ன தேவையோ அதெல்லாம் கொடுக்கறதா சொன்னாங்க” என்று அவர் சொல்கிறார்.

பைபிள் படிப்பு திட்டம்—தனி நபர்களுக்கும் குடும்பங்களுக்கும்

ஆர்வம் காட்டினவர்கள் இன்னும் முன்னேறுவதற்கு த கோல்டன் ஏஜ் * பத்திரிகையில், பைபிள் படிப்புத் திட்டங்களை பைபிள் மாணாக்கர்கள் வெளியிட ஆரம்பித்தார்கள். அதில் ஒன்றுதான், பிள்ளைகளுக்கான பைபிள் படிப்புத் திட்டம். அதில் அப்பாவும் அம்மாவும் பிள்ளைகளிடம் கலந்து பேசுவதற்குச் சில கேள்விகள் இருந்தன. “அந்தக் கேள்விகளை அப்பா அம்மா கேட்பார்கள். அதற்கான பதிலை பிள்ளைகள் பைபிளிலிருந்து கண்டுபிடிக்க உதவுவார்கள்.” சில கேள்விகள் பைபிளில் இருக்கிற அடிப்படையான விஷயங்களைத் தெரிந்துகொள்ள உதவின. அதில் ஒன்று: “பைபிளில் எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன?” மற்ற கேள்விகள் தைரியமாகப் பிரசங்கிக்க பிள்ளைகளுக்கு உதவின. உதாரணத்துக்கு இந்தக் கேள்வியைச் சொல்லலாம்: “ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஏதோ ஒரு வகையில் துன்புறுத்தலைச் சந்தித்துதான் ஆக வேண்டுமா?”

பைபிளைப் பற்றி ஏற்கெனவே நிறைய தெரிந்தவர்களுக்கு இன்னொரு படிப்புத் திட்டம் இருந்தது. காலங்களின் தெய்வீக திட்டத்தைப் பற்றி ஆழமான படிப்பு என்பதுதான் அதன் பெயர். இதில் சிந்தனையைத் தூண்டும் கேள்விகள் இருந்தன. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் வேதாகமத்தில் படிப்புகள் தொகுதி ஒன்றில் பதில்கள் இருந்தன. இந்தப் படிப்புத் திட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் பிரயோஜனம் அடைந்தார்கள். ஆனாலும், டிசம்பர் 21, 1921-ல் வந்த த கோல்டன் ஏஜ் பத்திரிகையில் இந்த இரண்டு படிப்புத் திட்டங்களும் இனிமேல் வராது என்று அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. ஏன் இந்தத் திடீர் மாற்றம்?

ஒரு புதிய புத்தகம்!

கடவுளுடைய சுரமண்டலம் புத்தகம்

எந்தப் பகுதியைப் படிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் கார்டு

கேள்விகள் அடங்கிய கார்டுகள்

புதிதாக பைபிளைப் படிக்க ஆரம்பித்தவர்கள், பைபிளை முறையாகப் படிப்பது அவசியம் என்பதை முன்நின்று வழிநடத்திய சகோதரர்கள் நினைத்தார்கள். அதனால், நவம்பர் 1921-ல் கடவுளின் சுரமண்டலம் என்ற புத்தகத்தை வெளியிட்டார்கள். அந்தப் புத்தகத்தை ஆர்வமாக வாங்கியவர்கள் சுரமண்டல பைபிள் படிப்பு திட்டத்தில் சேர்ந்துவிட்டார்கள். அதில் சேர்ந்து படித்தவர்கள், “கடவுள் மனிதர்களுக்கு முடிவில்லாத வாழ்க்கையைக் கொடுக்கப்போகிறார்” என்பதைப் புரிந்துகொண்டார்கள். அப்படியென்றால், இந்தப் படிப்பு எப்படி நடந்தது?

ஆர்வம் காட்டியவர்களுக்கு அந்தப் புத்தகத்தை அனுப்பி வைப்பார்கள். அதோடு, அந்தப் புத்தகத்தில் இருக்கிற எந்தப் பக்கங்களைப் படிக்க வேண்டும் என்று எழுதப்பட்ட ஒரு சின்ன கார்டையும் அனுப்புவார்கள். அதற்கு அடுத்த வாரம் இன்னொரு கார்டை அனுப்புவார்கள். அதில் அவர் ஏற்கெனவே படித்து வைத்திருந்த பகுதிகளுக்கான கேள்விகள் இருக்கும். அதே கார்டில், அதற்கு அடுத்த வாரம் என்ன படிக்க வேண்டும் என்பதையும் எழுதியிருப்பார்கள்.

இப்படி 12 வாரங்களுக்கு, உள்ளூர் சபையில் இருந்து கார்டு அனுப்புவார்கள். பெரும்பாலும், வயதானவர்களும் வீட்டுக்கு வீடு போக முடியாதவர்களும் இந்தக் கார்டை அனுப்பினார்கள். “என்னுடைய அக்கா தைல்லால நடக்க முடியாது. கடவுளுடைய சுரமண்டலம் புத்தகம் வந்தவுடனே அவங்களால சுறுசுறுப்பா சேவை செய்ய முடிஞ்சது. ஒவ்வொரு வாரமும் கார்டு அனுப்பினாங்க” என்று அமெரிக்காவில் இருக்கிற அன்னா கே. காட்னர் என்ற சகோதரி சொன்னார். இப்படி, ஒருவர் 12 வாரம் படித்து முடித்தவுடனே சபையில் இருந்து ஒருவர் அவர் வீட்டுக்குப் போய் பைபிளைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள உதவி செய்வார்.

தைல் காட்னர், வீல்சேரில்

இனி செய்ய வேண்டிய வேலை

1921-ன் கடைசியில் எல்லா சபைகளுக்கும் சகோதரர் ஜெ. எஃப்.  ரதர்ஃபர்ட் ஒரு கடிதம் எழுதினார். “இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு இந்த வருஷம் ஊழியத்தை அருமையாகச் செய்திருக்கிறோம். நிறைய பேருக்கு பிரசங்கித்திருக்கிறோம்” என்று அதில் எழுதியிருந்தார். இனிமேல் செய்யப்போகிற வேலையைப் பற்றியும் அவர் இப்படி எழுதியிருந்தார்: “செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. இந்த அருமையான வேலையைச் செய்வதற்கு எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.” அவர் கொடுத்த அறிவுரையின்படியே பைபிள் மாணாக்கர்கள் செய்தார்கள். 1922-ல் அதுவரைக்கும் செய்யாத அளவுக்கு பிரசங்க வேலையை அதிகமாகச் செய்தார்கள்.

^ த கோல்டன் ஏஜ் பத்திரிகை 1937-ல் கான்ஸலேஷன் என்றும் 1946-ல் விழித்தெழு! என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.