Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உண்மையாக இருப்பவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்

உண்மையாக இருப்பவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்

“விசுவாசத்தினாலும் பொறுமையினாலும் கடவுளுடைய வாக்குறுதிகளைப் பெற்றவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.”—எபி. 6:12.

பாடல்கள்: 86, 54

1, 2. யெப்தாவும் அவருடைய மகளும் என்ன சவாலை சந்தித்தார்கள்?

ஒரு இளம் பெண் அவளுடைய அப்பாவைப் பார்க்க ஓடி வருகிறாள். அப்பா போரில் ஜெயித்து வீட்டுக்கு பத்திரமாக திரும்பி வந்ததால் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறாள், ஆடி பாடுகிறாள். மகளோடு சேர்ந்து சந்தோஷப்படுவதற்கு பதிலாக அவளுடைய அப்பா, தன் அங்கியை கிழித்துக்கொண்டு “ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்” என்று சொல்லி அழுகிறார். பிறகு, யெகோவாவுக்கு கொடுத்த வாக்கைப் பற்றி அவளிடம் சொல்கிறார். அது அவளுடைய வாழ்க்கையையே மாற்ற போகிறது. அவளால் இனிமேல் கல்யாணம் செய்துகொள்ளவோ பிள்ளைகளை பெற்றுக்கொள்ளவோ முடியாது. ஆனால், அவள் தன் அப்பாவிடம் சொன்ன பதில் நிச்சயம் அவருக்கு ஆறுதலாக இருந்திருக்கும். யெகோவாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றவும் அவருக்கு உதவியிருக்கும். அவள் சொன்ன பதிலிலிருந்து அவளுக்கு யெகோவாமீது எந்தளவு விசுவாசம் இருந்தது என்பதும் தெரிகிறது. யெகோவா எதை செய்ய சொன்னாலும் அது அவளுடைய நன்மைக்காகத்தான் இருக்கும் என்று அவள் உறுதியாக நம்பினாள். (நியா. 11:34-37) அவளுக்கு யெகோவாமீது இருந்த விசுவாசத்தை பார்த்து அவளுடைய அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டார். அவள் செய்த தியாகத்தைப் பார்த்து யெகோவாவும் நிச்சயம் சந்தோஷப்படுவார் என்று நம்பினார்.

2 யெப்தாவுக்கும் அவருடைய மகளுக்கும் யெகோவாமீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. யெகோவா எதை செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். அதனால், கஷ்டமான சூழ்நிலையிலும் அவர்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்கள். யெகோவாவை சந்தோஷப்படுத்த ஆசைப்பட்டார்கள். அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருந்தார்கள்.

3. யெப்தா மற்றும் அவருடைய மகளின் உதாரணம் நமக்கு ஏன் பிரயோஜனமாக இருக்கிறது?

3 யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது எப்போதும் சுலபம் இல்லை. நாம் ‘விசுவாசத்திற்காகக் கடினமாய்ப் போராட’ வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (யூ. 3) அதை செய்வதற்கு யெப்தா மற்றும் அவருடைய மகளுடைய உதாரணம் நமக்கு உதவும். வாழ்க்கையில் வந்த சவால்களை அவர்கள் எப்படிச் சமாளித்தார்கள், யெகோவாவுக்கு எப்படி உண்மையாக இருந்தார்கள் என்று இப்போது பார்க்கலாம்.

மோசமான சூழ்நிலையிலும் உண்மையாக இருங்கள்

4, 5. (அ) இஸ்ரவேலர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்கு போனபோது யெகோவா அவர்களை என்ன செய்ய சொன்னார்? (ஆ) சங்கீதம் 106 சொல்கிறபடி, இஸ்ரவேலர்கள் கீழ்ப்படியாததால் என்ன நடந்தது?

4 யெகோவாவுக்கு கீழ்ப்படியாததால் இஸ்ரவேலர்களுக்கு வந்த விளைவுகளைப் பற்றி யெப்தாவும் அவருடைய மகளும் ஒவ்வொரு நாளும் யோசித்துப் பார்த்திருப்பார்கள். கிட்டத்தட்ட 300 வருஷங்களுக்கு முன்பு இஸ்ரவேலர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்கு போனபோது, அங்கே பொய் கடவுள்களை வணங்கிய எல்லாரையும் அழிக்கும்படி யெகோவா சொல்லியிருந்தார். ஆனால், அவர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படியவில்லை. (உபா. 7:1-4) அதோடு, நிறைய இஸ்ரவேலர்கள் கானான் தேசத்து மக்களைப் போலவே பொய் கடவுள்களை வணங்க ஆரம்பித்தார்கள்; ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.சங்கீதம் 106:34-39-ஐ வாசியுங்கள்.

5 இஸ்ரவேலர்கள் கீழ்ப்படியாததால் யெகோவா அவர்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றவில்லை. (நியா. 2:1-3, 11-15; சங். 106:40-43) இந்த கஷ்டமான காலங்களிலும் யெப்தா, யெப்தாவின் மகள், எல்க்கானா, அன்னாள், சாமுவேல் போன்றவர்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. அது அவர்களுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்திருக்கும். இருந்தாலும், யெகோவாவுக்கு பிடித்த மாதிரி வாழ அவர்கள் தீர்மானமாக இருந்தார்கள்.—1 சா. 1:20-28; 2:26.

6. நம்மை சுற்றியிருக்கிற மக்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள்,ஆனால் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

6 கானான் தேசத்து மக்களை போல்தான் இன்று இருக்கும் மக்களும் நடந்துகொள்கிறார்கள். செக்ஸ், வன்முறை, பணம் போன்ற விஷயங்களிலேயே மூழ்கியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட விஷயங்களில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க யெகோவா நம்மை எச்சரிக்கிறார். சுற்றியிருந்த மக்களிடம் இருந்து இஸ்ரவேலர்களை பாதுகாக்க நினைத்தது போலவே நம்மையும் பாதுகாக்க அவர் ஆசைப்படுகிறார். அப்படியென்றால், இஸ்ரவேலர்களிடம் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்வோமா? (1 கொ. 10:6-11) இந்த உலக மக்களைப் போல் நடந்துகொள்ளாமல் இருக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். (ரோ. 12:2) நாம் அப்படி செய்வோமா?

மனக்கசப்பை வளர்க்காதீர்கள் உண்மையாக இருங்கள்

7. (அ) சொந்த மக்களே யெப்தாவை எப்படி நடத்தினார்கள்? (ஆ) ஆனால், யெப்தா எப்படி நடந்துகொண்டார்?

7 யெப்தா வாழ்ந்த காலத்திலும், இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு கீழ்ப்படியாததால் பெலிஸ்தர்களாலும் அம்மோனியர்களாலும் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். (நியா. 10:7, 8) எதிரி நாடுகளிலிருந்து வந்த பிரச்சினைகளோடு சேர்த்து யெப்தாவுக்கு அவருடைய சகோதரர்களிடம் இருந்தும் இஸ்ரவேல் தலைவர்களிடம் இருந்தும் நிறைய பிரச்சினைகள் வந்தது. யெப்தாவின் சகோதரர்கள் அவர்மீது பொறாமைப்பட்டார்கள், அவரை வெறுத்தார்கள். அவருடைய சொத்துபத்துகளை எல்லாம் எடுத்துக்கொண்டு அவரை ஊரைவிட்டே துரத்திவிட்டார்கள். (நியா. 11:1-3) ஆனால், யெப்தா அவர்கள்மீது மனக்கசப்பை வளர்த்துக்கொண்டாரா? இல்லை. அதனால்தான், இஸ்ரவேலிலுள்ள மூப்பர்கள் யெப்தாவிடம் உதவிக்காக கெஞ்சியபோது உடனே அவர்களுக்கு உதவி செய்தார். (நியா. 11:4-11) இப்படி நடந்துகொள்ள எது யெப்தாவுக்கு உதவியது?

8, 9. (அ) திருச்சட்டத்தில் இருந்த என்ன விஷயங்கள் யெப்தாவுக்கு உதவியாக இருந்தது? (ஆ) யெப்தாவுக்கு எது ரொம்ப முக்கியமாக இருந்தது?

8 யெப்தா ஒரு சிறந்த போர்வீரனாக இருந்ததோடு இஸ்ரவேல் மக்களுடைய சரித்திரத்தையும் திருச்சட்டத்தையும் நன்றாக தெரிந்துவைத்திருந்தார். யெகோவா அவருடைய மக்களிடம் எப்படி நடந்துகொண்டார் என்பதை வைத்து யெகோவாவுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று யெப்தா தெரிந்துவைத்திருந்தார். (நியா. 11:12-27) அதையெல்லாம் யோசித்துப் பார்த்துதான் வாழ்க்கையில் தீர்மானங்களை எடுத்தார். கோபப்படுவது, பழிவாங்குவது எல்லாம் யெகோவாவுக்கு பிடிக்காது என்பதையும்... தன்னுடைய மக்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்று அவர் விரும்புவதையும்... யெப்தா புரிந்துவைத்திருந்தார். முக்கியமாக, தன்னை வெறுக்கிறவர்களிடமும் அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று திருச்சட்டத்தில் இருந்து தெரிந்துவைத்திருந்தார்.யாத்திராகமம் 23:5; லேவியராகமம் 19:17, 18-ஐ வாசியுங்கள்.

9 யோசேப்பின் உதாரணமும் யெப்தாவுக்கு ரொம்ப உதவியாக இருந்திருக்கும். யோசேப்புடைய அண்ணன்கள் அவரை வெறுத்தாலும் யோசேப்பு அவர்கள்மீது இரக்கம் காட்டியதை யெப்தா யோசித்துப் பார்த்திருப்பார். (ஆதி. 37:4; 45:4, 5) இப்படிச் செய்தது, யெகோவாவுக்கு பிடித்த மாதிரி இருக்க யெப்தாவுக்கு உதவியாக இருந்திருக்கும். தன்னுடைய சகோதரர்கள் நடந்துகொண்ட விதம் யெப்தாவுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தாலும் அவர்கள்மீது அவர் மனக்கசப்பை வளர்த்துக்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, யெகோவாவுக்காகவும் அவருடைய மக்களுக்காகவும் போர் செய்வதைத்தான் யெப்தா முக்கியமாக நினைத்தார். (நியா. 11:9) யெகோவாவுக்கு உண்மையாக இருக்க அவர் தீர்மானமாக இருந்ததால் அவருக்கும் இஸ்ரவேலர்களுக்கும் நிறைய ஆசீர்வாதங்கள் கிடைத்தது.—எபி. 11:32, 33.

10. யெகோவாவுக்கு பிடித்த மாதிரி நடப்பதற்கு பைபிள் நியமங்கள் நமக்கு எப்படி உதவும்?

10 நாமும் யெப்தாவைப் போல் நடப்போமா? சகோதர சகோதரிகள் யாராவது நம்மை கஷ்டப்படுத்தினால் நாம் என்ன செய்வோம்? எந்தக் காரணத்துக்காகவும் நாம் யெகோவாவை சேவிப்பதை நிறுத்திவிடக் கூடாது. கூட்டத்துக்கோ ஊழியத்துக்கோ போகாமல் இருக்கக் கூடாது. யெப்தாவைப் போல் எப்போதும் யெகோவாவுக்கு கீழ்ப்படிய வேண்டும். அப்போதுதான் கஷ்டமான சூழ்நிலைகளை நம்மால் சமாளிக்க முடியும். மற்றவர்களுக்கு நல்ல உதாரணமாகவும் இருக்க முடியும்.—ரோ. 12:20, 21; கொலோ. 3:13.

தியாகங்கள் செய்வதன் மூலம் விசுவாசத்தைக் காட்டுங்கள்

11, 12. யெப்தா யெகோவாவுக்கு என்ன வாக்குக் கொடுத்தார், எதை மனதில் வைத்து அந்த வாக்கைக் கொடுத்தார்?

11 யெகோவாவுடைய உதவி இருந்தால்தான் அம்மோனியர்களிடம் இருந்து இஸ்ரவேலர்களை விடுதலை செய்ய முடியும் என்று யெப்தாவுக்கு தெரியும். அதனால், போரில் ஜெயித்து வீடு திரும்பும்போது வீட்டிலிருந்து வெளியே வரும் முதல் நபரை “சர்வாங்க தகனபலியாக” கொடுப்பதாக அவர் யெகோவாவுக்கு வாக்குக் கொடுத்தார். (நியா. 11:30, 31) எதை மனதில் வைத்து அவர் அப்படி சொன்னார்?

12 மனிதர்களைப் பலியாக கொடுப்பது யெகோவாவுக்கு கொஞ்சம்கூட பிடிக்காது என்று யெப்தாவுக்கு நன்றாக தெரியும்; அதனால், மனித பலியைப் பற்றி அவர் சொல்லவில்லை. (உபா. 18:9, 10) திருச்சட்டத்தின்படி, “சர்வாங்க தகனபலி” என்பது யெகோவாவுக்கு முழுமையாக கொடுக்கும் ஒரு பலியை அர்த்தப்படுத்துகிறது. அப்படியென்றால், யெப்தா எந்த அர்த்தத்தில் பலி கொடுப்பதாக சொன்னார்? யெகோவாவுக்கு பலி கொடுப்பதாக சொன்ன நபர் தன் வாழ்க்கையை யெகோவாவுக்கே அர்ப்பணிப்பார், வாழ்நாள் முழுவதும் யெகோவாவுடைய ஆலயத்தில் சேவை செய்வார் என்ற அர்த்தத்தில் யெப்தா அப்படி சொன்னார். யெப்தா கேட்டது போல் யெகோவா அவருக்கு போரில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தார். (நியா. 11:32, 33) ஆனால், யெப்தா யாரை பலியாக கொடுக்கப்போகிறார்?

13, 14. நியாயாதிபதிகள் 11:35-ல் யெப்தா சொன்ன வார்த்தைகள் அவருக்கு யெகோவாமீது விசுவாசம் இருந்ததை எப்படி காட்டுகிறது?

13 இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் இருந்த சூழ்நிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். யெப்தா போரில் இருந்து திரும்பி வந்தபோது வீட்டில் இருந்து வந்த முதல் நபர் அவருடைய ஒரே மகள்! இப்போது யெப்தா என்ன செய்வார்? யெகோவாவுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவாரா? வாழ்நாள் முழுவதும் அவருடைய செல்ல மகளை யெகோவாவுடைய ஆலயத்தில் சேவை செய்ய அனுமதிப்பாரா?

14 இந்த முறையும் சரியான தீர்மானம் எடுக்க திருச்சட்டத்தில் இருக்கிற நியமங்கள் யெப்தாவுக்கு உதவியிருக்கும். யெகோவாவுடைய மக்கள் எப்போதுமே அவருக்கு மிகச்சிறந்ததை கொடுக்க வேண்டும் என்று யாத்திராகமம் 23:19 சொல்கிறது. இந்த வார்த்தைகள் யெப்தாவுடைய ஞாபகத்துக்கு வந்திருக்கலாம். அதோடு, ஒருவர் யெகோவாவுக்கு ஒரு வாக்குக் கொடுத்தால் அவர் “சொல்தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்ய” வேண்டும் என்றும் திருச்சட்டம் சொல்கிறது. (எண். 30:2) ஒருவேளை யெப்தா வாழ்ந்த காலத்தில் அன்னாளும் வாழ்ந்திருக்கலாம்; அன்னாளைப் போலவே யெப்தாவும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டியிருந்தது. அதனால், தன்னுடைய மகள் காலமெல்லாம் ஆசரிப்பு கூடாரத்தில் சேவை செய்ய வேண்டியிருக்கும்... அவளால் பிள்ளைகளை பெற்றுக்கொள்ளவே முடியாது... யெப்தாவுக்கென்று ஒரு சந்ததி இருக்காது... அவருடைய பரம்பரை சொத்தை அனுபவிக்க யாரும் இருக்க மாட்டார்கள்... என்பதெல்லாம் யெப்தாவுக்கு நன்றாக தெரியும். (நியா. 11:34) இருந்தாலும் “நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது” என்று யெப்தா சொன்னார். (நியா. 11:35) யெப்தா செய்த தியாகத்தை யெகோவா ஏற்றுக்கொண்டார், அவரை ஆசீர்வதித்தார். யெப்தாவைப் போல நீங்களும் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பீர்களா?

15. யெகோவாவுக்கு நாம் என்ன வாக்குக் கொடுத்திருக்கிறோம், கொடுத்த வாக்கை நாம் எப்படி காப்பாற்றலாம்?

15 யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணித்தபோது, இனி என்ன கஷ்டம் வந்தாலும் அவருக்காகத்தான் வாழ்வோம் என்று வாக்குக் கொடுத்தோம். இந்த வாக்கைக் காப்பாற்றுவது எப்போதுமே சுலபம் இல்லை என்று நமக்கு தெரியும். இருந்தாலும் நமக்கு பிடிக்காத ஒன்றை செய்யும்படி யாராவது சொன்னால் நாம் எப்படி நடந்துகொள்வோம்? நமக்கு கஷ்டமாக இருந்தாலும் நாம் யெகோவாவுக்கு கீழ்ப்படியும்போது அவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவோம். நமக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்களோடு ஒப்பிடும்போது நாம் செய்யும் தியாகங்கள் ஒன்றுமே இல்லை. (மல். 3:10) ஆனால் யெப்தா கொடுத்த வாக்கை கேட்டபோது அவருடைய மகள் என்ன சொன்னாள்?

யெப்தாவையும் அவருடைய மகளையும் போல் நாம் எப்படி விசுவாசமாக இருக்கலாம்? (பாராக்கள் 16, 17)

16. யெப்தா கொடுத்த வாக்கை கேள்விப்பட்டபோது அவருடைய மகள் என்ன செய்தாள்? (ஆரம்பப் படம்)

16 யெப்தா கொடுத்த வாக்குக்கும் அன்னாள் கொடுத்த வாக்குக்கும் வித்தியாசம் இருந்தது. யெகோவாவுடைய ஆலயத்தில் நசரேயனாக சேவை செய்ய தன் மகனை கொடுப்பதாக அன்னாள் வாக்குக் கொடுத்தாள். (1 சா. 1:11) நசரேயனாக இருந்த ஒருவரால் கல்யாணம் செய்துகொண்டு பிள்ளைகளை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், யெப்தாவின் மகளால் அதையெல்லாம் செய்ய முடியாது. ஏனென்றால் அவளை “சர்வாங்க தகனபலியாக” கொடுப்பதாக அவளுடைய அப்பா வாக்குக் கொடுத்தார். (நியா. 11:37-40) இதை கொஞ்சம் யோசித்து பாருங்கள்: தன்னுடைய அப்பா இஸ்ரவேலின் தலைவராக இருந்ததால் அந்த ஊரிலேயே அழகும் அறிவும் உள்ள ஒரு மாவீரனை அவள் கல்யாணம் செய்திருக்கலாம். ஆனால் இப்போது அவள் ஆசரிப்பு கூடாரத்தில் சாதாரண வேலைகளை செய்ய வேண்டியிருந்தது. இருந்தாலும் யெகோவாவுக்கு சேவை செய்வதுதான் முக்கியம் என்று அவள் நினைத்தாள். அதனால்தான் அவளுடைய அப்பாவிடம், “உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்குச் செய்யும்” என்றாள். (நியா. 11:36) யெகோவாவுக்கு சேவை செய்வதற்காக கல்யாணம் செய்வதையும் பிள்ளைகளை பெற்றெடுப்பதையும் அவள் தியாகம் செய்தாள். யெப்தாவின் மகளைப் போல் நாம் எப்படி நடந்துகொள்ளலாம்?

17. (அ) யெப்தாவையும் அவருடைய மகளையும் போல் நாம் எப்படி விசுவாசத்தைக் காட்டலாம்? (ஆ) எபிரெயர் 6:10-12 உள்ள வார்த்தைகள் தியாகங்களை செய்ய உங்களை எப்படி உற்சாகப்படுத்துகிறது?

17 இன்று ஆயிரக்கணக்கான இளம் கிறிஸ்தவர்கள் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள், சிலர் பிள்ளைகளை பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்கள். இதெல்லாம் இப்போதைக்கு வேண்டாம் என்று நினைக்கிறார்கள். ஏன்? யெகோவாவுக்கு முழுமையாக சேவை செய்வதற்காக இந்த தியாகங்களை செய்கிறார்கள். அதுமட்டுமல்ல, வயதான சகோதர சகோதரிகளும் தங்கள் பிள்ளைகளோடும் பேரப்பிள்ளைகளோடும் நேரம் செலவு செய்வதை தியாகம் செய்கிறார்கள். அதற்கு பதிலாக, தங்கள் நேரத்தையும் சக்தியையும் யெகோவாவுடைய சேவையில் செலவு செய்கிறார்கள். சிலர் கட்டுமான வேலையில் ஈடுபடுகிறார்கள், அல்லது ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொண்டு தேவையுள்ள இடத்தில் சேவை செய்கிறார்கள். இன்னும் சிலர் நினைவுநாள் சமயத்தில் அதிகமாக ஊழியம் செய்கிறார்கள். முழுமனதோடு இவர்கள் செய்யும் தியாகங்களை எல்லாம் யெகோவா ஒருநாளும் மறக்க மாட்டார். (எபிரெயர் 6:10-12-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுக்கு அதிகமாக சேவை செய்ய உங்களாலும் இப்படிப்பட்ட தியாகங்களை செய்ய முடியுமா?

என்ன கற்றுக்கொண்டோம்?

18, 19. யெப்தாவையும் அவருடைய மகளையும் பற்றி நாம் என்ன கற்றுக்கொண்டோம், அவர்களைப் போல் நாம் எப்படி நடந்துகொள்ளலாம்?

18 யெப்தா தன் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்தாலும் அவர் எப்போதுமே யெகோவாவுக்கு பிடித்த தீர்மானங்களை எடுத்தார். சுற்றியிருந்த மக்களைப் போல் நடந்துகொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். மற்றவர்களால் அவருக்கு பல பிரச்சினைகள் வந்தாலும் அவர் மனக்கசப்பை வளர்த்துக்கொள்வதற்கு பதிலாக யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார். யெப்தாவும் அவருடைய மகளும் மனப்பூர்வமாக தியாகங்கள் செய்ததால் யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார். உண்மை வணக்கத்தை பாதுகாக்க அவர்களை பயன்படுத்தினார். மற்றவர்கள் யெகோவாவுக்கு பிடிக்காததை செய்தபோதும் யெப்தாவும் அவருடைய மகளும் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்கள்.

19 “விசுவாசத்தினாலும் பொறுமையினாலும் கடவுளுடைய வாக்குறுதிகளைப் பெற்றவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (எபி. 6:12) அப்படியென்றால் நாமும், யெப்தாவையும் அவருடைய மகளையும் போல் உண்மையாக இருக்கலாம், யெகோவா கொடுக்கும் ஆசீர்வாதங்களையும் அனுபவிக்கலாம்.