Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உற்சாகம் தருகிற கடவுளான யெகோவாவைப் பின்பற்றுங்கள்

உற்சாகம் தருகிற கடவுளான யெகோவாவைப் பின்பற்றுங்கள்

‘கடவுளுக்குப் புகழ் சேரட்டும்  . . . நமக்கு வருகிற எல்லா சோதனைகளிலும் அவர் நமக்கு உற்சாகம் தருகிறார்.’ —2 கொ. 1:3, 4, அடிக்குறிப்பு.

பாடல்கள்: 23, 152

1. ஆதாமும் ஏவாளும் கலகம் செய்தபோது, மனிதகுலத்துக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் யெகோவா எப்படி கொடுத்தார்?

யெகோவா, உற்சாகம் தருகிற கடவுள்! மனிதர்கள் பாவம் செய்து, அபூரணர்களாக ஆனதிலிருந்தே அவர் உற்சாகம் தந்திருக்கிறார். சொல்லப்போனால், ஆதாமும் ஏவாளும் கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்த உடனேயே, எதிர்காலத்தில் பிறக்கப்போகிற எல்லா மனிதர்களுக்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தருகிற ஒரு தீர்க்கதரிசனத்தை அவர் சொன்னார். அந்தத் தீர்க்கதரிசனம், ஆதியாகமம் 3:15-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிசாசாகிய சாத்தானும், அவனுடைய பேய்த்தனமான எல்லா செயல்களும் முடிவுக்கு வருமென்று அந்தத் தீர்க்கதரிசனம் வாக்குறுதி அளிக்கிறது.—1 யோ. 3:8; வெளி. 12:9.

கடந்த காலத்தில் வாழ்ந்த ஊழியர்களை யெகோவா உற்சாகப்படுத்தினார்

2. யெகோவா எப்படி நோவாவை உற்சாகப்படுத்தினார்?

2 தன்னுடைய ஊழியன் நோவாவை யெகோவா எப்படி உற்சாகப்படுத்தினார் என்பதைக் கவனியுங்கள். நோவாவின் காலத்தில் வாழ்ந்த மக்கள், வன்முறை நிறைந்தவர்களாகவும் ஒழுக்கங்கெட்டவர்களாகவும் இருந்தார்கள். நோவாவும், அவருடைய குடும்பத்தாரும் மட்டும்தான் யெகோவாவை வணங்கினார்கள். உற்சாகத்தை இழப்பதற்கு நோவாவுக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தன. (ஆதி. 6:4, 5, 11; யூ. 6) ஆனால், யெகோவாவைத் தொடர்ந்து வணங்கவும், சரியானதைச் செய்யவும் தேவையான தைரியத்தை யெகோவா அவருக்குக் கொடுத்தார். (ஆதி. 6:9) அந்தப் பொல்லாத உலகத்தை அழிக்கப்போவதாக யெகோவா நோவாவிடம் சொன்னார். அதோடு, அந்த அழிவிலிருந்து தப்பிக்க நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் என்ன செய்ய வேண்டுமென்றும் சொன்னார். (ஆதி. 6:13-18) நோவாவை யெகோவா உற்சாகப்படுத்தினார் என்பதில் சந்தேகமே இல்லை!

3. யோசுவாவை யெகோவா எப்படி உற்சாகப்படுத்தினார்? (ஆரம்பப் படம்)

3 பிற்பாடு, தன்னுடைய ஊழியன் யோசுவாவை யெகோவா உற்சாகப்படுத்தினார். யோசுவா பிரமாண்டமான வேலையைச் செய்ய வேண்டியிருந்தது. அதாவது, வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குக் கடவுளுடைய மக்களை வழிநடத்திக்கொண்டு போக வேண்டியிருந்தது; அங்கே இருந்த பலம்படைத்த தேசங்களை ஜெயிக்க வேண்டியிருந்தது. பயப்படுவதற்கு யோசுவாவுக்கு நிறையக் காரணங்கள் இருந்தன என்பது யெகோவாவுக்குத் தெரியும். அதனால், மோசேயிடம் “நீ யோசுவாவைத் தலைவனாக நியமித்து, அவனுக்கு ஊக்கமும் தைரியமும் கொடு. இந்த ஜனங்களுக்கு முன்னால் அவன்தான் யோர்தானைக் கடந்து போவான். நீ பார்க்கப்போகிற அந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள அவன்தான் இந்த ஜனங்களுக்கு உதவி செய்வான்” என்று சொன்னார். (உபா. 3:28) பிறகு, யோசுவாவை யெகோவாவே உற்சாகப்படுத்தினார். “நான் ஏற்கெனவே சொன்னபடி, தைரியமாகவும் உறுதியாகவும் இரு. பயப்படாதே, திகிலடையாதே. நீ போகும் இடமெல்லாம் உன் கடவுளாகிய யெகோவா உன்னோடு இருப்பார்” என்று யோசுவாவிடம் சொன்னார். (யோசு. 1:1, 9) இதைக் கேட்டபோது, யோசுவாவுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

4, 5. (அ) கடந்த காலத்தில், தன்னுடைய ஊழியர்களை யெகோவா எப்படி உற்சாகப்படுத்தினார்? (ஆ) தன்னுடைய மகனை யெகோவா எப்படி உற்சாகப்படுத்தினார்?

4 தன்னுடைய மக்களை ஒரு தொகுதியாகவும் யெகோவா உற்சாகப்படுத்தினார். உதாரணத்துக்கு, பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போகப்பட்ட யூதர்களுக்கு உற்சாகம் தேவை என்பது யெகோவாவுக்குத் தெரியும். அதனால், அவர்களை உற்சாகப்படுத்தும் இந்தத் தீர்க்கதரிசனத்தைச் சொன்னார்: “பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன். கவலைப்படாதே, நான் உன் கடவுள். நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன். என்னுடைய நீதியான வலது கையால் உன்னைத் தாங்குவேன்.” (ஏசா. 41:10) பிற்பாடு, ஆரம்பக் கால கிறிஸ்தவர்களையும் யெகோவா உற்சாகப்படுத்தினார். அதேபோல் இன்று நம்மையும் உற்சாகப்படுத்துகிறார்.2 கொரிந்தியர் 1:3, 4-ஐ வாசியுங்கள்.

5 தன்னுடைய மகனையும் யெகோவா உற்சாகப்படுத்தினார். இயேசு ஞானஸ்நானம் எடுத்த பிறகு, வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது; அந்தக் குரலை இயேசு கேட்டார். அந்தக் குரல் இப்படிச் சொன்னது: “இவர் என் அன்பு மகன், நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்.” (மத். 3:17) இயேசு ஊழியம் செய்த காலம் முழுவதும், இந்த வார்த்தைகள் அவருக்கு எவ்வளவு பக்கபலமாக இருந்திருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

இயேசு மற்றவர்களை உற்சாகப்படுத்தினார்

6. இயேசு சொன்ன தாலந்து பற்றிய உவமை நம்மை எப்படி உற்சாகப்படுத்துகிறது?

6 உண்மையாக இருக்க மற்றவர்களை உற்சாகப்படுத்தியதன் மூலம், இயேசு யெகோவாவைப் பின்பற்றினார். உதாரணத்துக்கு, அவர் சொன்ன தாலந்து பற்றிய உவமை, உண்மையாக இருக்க மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறது. அந்த உவமையில் வரும் எஜமான், உண்மையாக நடந்துகொண்ட ஒவ்வொரு அடிமையிடமும், “சபாஷ்! உண்மையுள்ள நல்ல அடிமையே, நீ கொஞ்சக் காரியங்களில் உண்மையுள்ளவனாக இருந்தாய்; அதனால், நிறைய காரியங்களைக் கவனித்துக்கொள்ள உன்னை நியமிப்பேன். உன் எஜமானோடு சேர்ந்து நீயும் சந்தோஷப்படு” என்று சொன்னதாக இயேசு சொன்னார். (மத். 25:21, 23) இந்த வார்த்தைகள், யெகோவாவுக்குத் தொடர்ந்து உண்மையோடு சேவை செய்ய இயேசுவின் சீஷர்களை உற்சாகப்படுத்தியது.

7. இயேசு எப்படி அப்போஸ்தலர்களை உற்சாகப்படுத்தினார், முக்கியமாக பேதுருவை எப்படி உற்சாகப்படுத்தினார்?

7 தங்களில் யார் உயர்ந்தவன் என்று அப்போஸ்தலர்கள் அடிக்கடி வாக்குவாதம் செய்தபோதும், இயேசு பொறுமையோடு நடந்துகொண்டார். மனத்தாழ்மையாக இருக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்தினார். அதோடு, மற்றவர்கள் அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று நினைப்பதற்குப் பதிலாக, அவர்கள் மற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று சொன்னார். (லூக். 22:24-26) நிறைய தடவை பேதுரு தவறுகள் செய்தார், இயேசுவுக்கு ஏமாற்றம் அளித்தார். (மத். 16:21-23; 26:31-35, 75) இருந்தாலும், பேதுருவை இயேசு ஒதுக்கிவிடவில்லை. அதற்குப் பதிலாக, அவரை உற்சாகப்படுத்தினார்; மற்றவர்களை உற்சாகப்படுத்துகிற பொறுப்பையும் அவருக்குக் கொடுத்தார்.—யோவா. 21:16.

கடந்த கால உதாரணங்கள்

8. படைத் தலைவர்களையும் மக்களையும் எசேக்கியா எப்படி உற்சாகப்படுத்தினார்?

8 உற்சாகப்படுத்துகிற விஷயத்தில் இயேசு பரிபூரண முன்மாதிரி வைத்தார் என்று பார்த்தோம். ஆனால், அவர் இந்தப் பூமிக்கு வருவதற்கு முன்பே, யெகோவாவின் ஊழியர்கள், மற்றவர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, எசேக்கியாவைப் பற்றிப் பார்க்கலாம். எருசலேமை அசீரியர்கள் தாக்கவிருந்த சமயத்தில், படைத் தலைவர்களையும் மக்களையும் எசேக்கியா ஒன்றுகூட்டி, அவர்களை உற்சாகப்படுத்தினார். “எசேக்கியா சொன்னதைக் கேட்டதும் அவர்களுக்குத் தைரியம் வந்தது.”2 நாளாகமம் 32:6-8-ஐ வாசியுங்கள்.

9. உற்சாகப்படுத்துகிற விஷயத்தில் யோபுவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

9 உற்சாகப்படுத்துகிற விஷயத்தில் யோபுவிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ளலாம். அவருக்கே உற்சாகம் தேவைப்பட்டபோதும், உற்சாகப்படுத்துவது எப்படியென்று தன்னுடைய போலி நண்பர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அவர்களிடம், ‘நான் உங்களுடைய இடத்தில் இருந்திருந்தால், உங்களை தைரியப்படுத்தியிருப்பேன், ஆறுதல் சொல்லி உங்கள் கவலைகளைப் போக்கியிருப்பேன்’ என்று சொன்னார். (யோபு 16:1-5) கடைசியில், எலிகூவிடமிருந்தும் யெகோவாவிடமிருந்தும் யோபுவுக்கு உற்சாகம் கிடைத்தது.—யோபு 33:24, 25; 36:1, 11; 42:7, 10.

10, 11. (அ) யெப்தாவின் மகளுக்கு ஏன் உற்சாகம் தேவைப்பட்டது? (ஆ) நாம் யாரை உற்சாகப்படுத்தலாம்?

10 நியாயாதிபதியான யெப்தாவின் மகளுக்கும் உற்சாகம் தேவைப்பட்டது. ஒருசமயம், அம்மோனியர்களுக்கு எதிராக யெப்தா போர் செய்ய வேண்டியிருந்தது. யெகோவா தனக்கு வெற்றியைத் தந்தால், வீட்டுக்குத் திரும்பி வரும்போது, தன்னைச் சந்திக்க வரும் முதல் நபரை அவருக்கு அர்ப்பணிக்கப்போவதாக யெப்தா வாக்குக் கொடுத்தார். அதாவது, அந்த நபரை வழிபாட்டுக் கூடாரத்துக்கு அனுப்பப்போவதாகச் சொன்னார். இஸ்ரவேலர்கள் போரில் ஜெயித்த பிறகு, யெப்தா வீடு திரும்பினார். அப்போது, அவருடைய ஒரே மகள் அவரைச் சந்திக்க வந்தாள். அவளைப் பார்த்ததும் யெப்தாவின் இதயம் சுக்குநூறாக உடைந்துபோனது. ஆனாலும், தான் கொடுத்த வாக்கை அவர் காப்பாற்றினார்; வாழ்நாள் முழுவதும் வழிபாட்டுக் கூடாரத்தில் சேவை செய்ய தன் மகளை அனுப்பிவைத்தார்.—நியா. 11:30-35.

11 அப்படிச் செய்வது யெப்தாவுக்குக் கஷ்டமாக இருந்தது; ஆனால், அவருடைய மகளுக்கு அதைவிட கஷ்டமாக இருந்திருக்கும். ஆனாலும், தன் அப்பா கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவள் தயாராக இருந்தாள். (நியா. 11:36, 37) இனிமேல் அவளால் கல்யாணம் செய்துகொள்ளவோ குழந்தைகளைப் பெற்றெடுக்கவோ முடியாது; யெப்தாவின் வம்சமும் அதோடு முடிந்துவிடும். இந்தச் சூழ்நிலையில் அவளுக்கு ஆறுதலும் உற்சாகமும் ரொம்பவே தேவைப்பட்டன. அதனால், “கீலேயாத்தைச் சேர்ந்த யெப்தாவின் மகளைப் பார்த்துப் பாராட்டுவதற்காக இஸ்ரவேலிலுள்ள இளம் பெண்கள் வருஷா வருஷம் நான்கு நாட்களுக்கு அவளிடம் போய் வந்தார்கள். இது இஸ்ரவேலில் ஒரு வழக்கமாக ஆனது.” (நியா. 11:39, 40) யெப்தாவின் மகளை நினைக்கும்போது, யெகோவாவின் சேவையில் அதிகமாக ஈடுபடுவதற்காகக் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கும் கிறிஸ்தவர்கள் நமக்கு ஞாபகம் வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களை நாம் பாராட்டி, உற்சாகப்படுத்தலாம் இல்லையா?—1 கொ. 7:32-35.

அப்போஸ்தலர்கள் சகோதரர்களை உற்சாகப்படுத்தினார்கள்

12, 13. பேதுரு எப்படி ‘தன் சகோதரர்களை பலப்படுத்தினார்’?

12 தான் இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி, அப்போஸ்தலன் பேதுருவிடம் இயேசு இப்படிச் சொன்னார்: “சீமோனே, சீமோனே, இதோ! கோதுமையைப் புடைத்தெடுப்பதுபோல் உங்கள் எல்லாரையும் புடைத்தெடுக்க வேண்டும் என்று சாத்தான் கேட்டிருக்கிறான். ஆனால், நீ விசுவாசத்தை விட்டுவிடாமல் இருக்க வேண்டுமென்று உனக்காக மன்றாடியிருக்கிறேன். நீ மனம் திருந்தியதும் உன் சகோதரர்களைப் பலப்படுத்து.”—லூக். 22:31, 32.

அப்போஸ்தலர்களுடைய கடிதங்கள் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தின, இன்று நம்மையும் உற்சாகப்படுத்துகின்றன (பாராக்கள் 12-17)

13 முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவ சபையை வழிநடத்தியவர்களில் பேதுருவும் ஒருவர். (கலா. 2:9) பெந்தெகொஸ்தே நாளன்றும் அதற்குப் பிறகும், அவர் தைரியமாகச் செயல்பட்டு சகோதரர்களை உற்சாகப்படுத்தினார். நிறைய வருஷங்கள் சேவை செய்த பிறகு, அவர்களுக்கு இப்படி எழுதினார்: “இந்தக் கடிதத்தைச் சுருக்கமாக எழுதியிருக்கிறேன். உங்களை உற்சாகப்படுத்துவதற்காகவும், கடவுளுடைய அளவற்ற கருணை உண்மையானது என்பதை உங்களுக்கு ஆணித்தரமாக எடுத்துக்காட்டுவதற்காகவும் இதை எழுதியிருக்கிறேன்; அந்த அளவற்ற கருணையை இழந்துவிடாதீர்கள்.” (1 பே. 5:12) அவர் எழுதிய கடிதங்கள் அன்றிருந்த கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தின. யெகோவாவின் வாக்குறுதிகள் முழு அளவில் நிறைவேறுவதற்காகக் காத்திருக்கிற நம்மையும் அவை உற்சாகப்படுத்துகின்றன.—2 பே. 3:13.

14, 15. யோவான் எழுதிய பைபிள் புத்தகங்கள் நம்மை எப்படி உற்சாகப்படுத்துகின்றன?

14 அப்போஸ்தலன் யோவானும் முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவ சபையை வழிநடத்தினார். இயேசுவின் ஊழியத்தைப் பற்றிய சுவாரஸ்யமான சுவிசேஷப் பதிவை அவர் எழுதினார். அதிலிருக்கிற விஷயங்கள் நூற்றுக்கணக்கான வருஷங்களாக கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தியிருக்கின்றன; இன்றும் உற்சாகப்படுத்துகின்றன. உதாரணத்துக்கு, அன்புதான் உண்மையான சீஷர்களின் அடையாளம் என்று இயேசு சொன்னதை யோவான் மட்டும்தான் பதிவு செய்திருக்கிறார்.யோவான் 13:34, 35-ஐ வாசியுங்கள்.

15 யோவான் எழுதிய மூன்று கடிதங்களிலும் அருமையான சத்தியங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, நம்முடைய தவறுகளை நினைத்து நாம் சோர்ந்துபோகும்போது, இயேசுவின் மீட்புப் பலி “எல்லா பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்கும்” என்ற வசனம் நமக்கு ஆறுதல் தருகிறது. (1 யோ. 1:7) அதற்குப் பிறகும் குற்றவுணர்ச்சி நம்மை வாட்டிவதைத்தால், “கடவுள் நம் இதயத்தைவிட உயர்ந்தவராக இருக்கிறார்” என்ற வசனம் நம்மை ஆறுதல்படுத்துகிறது. (1 யோ. 3:20) “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று யோவான் மட்டும்தான் எழுதியிருக்கிறார். (1 யோ. 4:8, 16) தான் எழுதிய இரண்டாவது மற்றும் மூன்றாவது கடிதங்களில், தொடர்ந்து ‘சத்தியத்தில் நடக்கும்’ கிறிஸ்தவர்களை யோவான் பாராட்டுகிறார்.—2 யோ. 4; 3 யோ. 3, 4.

16, 17. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பவுல் எப்படி உற்சாகப்படுத்தினார்?

16 சகோதரர்களை உற்சாகப்படுத்துவதில் அப்போஸ்தலன் பவுல் அருமையான முன்மாதிரி வைத்தார். இயேசு இறந்து கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, பெரும்பாலான அப்போஸ்தலர்கள் எருசலேமில் தங்கியிருந்தார்கள்; அங்கிருந்துதான் ஆளும் குழு செயல்பட்டது. (அப். 8:14; 15:2) யூதேயாவிலிருந்த கிறிஸ்தவர்கள், ஒரே கடவுளை வணங்கிய ஆட்களிடம் கிறிஸ்துவைப் பற்றிப் பிரசங்கித்தார்கள். ஆனால், பல கடவுள்களை வணங்கிய கிரேக்கர்களிடமும் ரோமர்களிடமும் மற்றவர்களிடமும் பிரசங்கிக்கும்படி கடவுளுடைய சக்தி பவுலைத் தூண்டியது.—கலா. 2:7-9; 1 தீ. 2:7.

17 இப்போது துருக்கி என்று அழைக்கப்படுகிற பகுதியிலும், கிரீஸ், இத்தாலி போன்ற இடங்களிலும் பவுல் பயணம் செய்தார். அங்கே வாழ்ந்த யூதரல்லாத மக்களிடம் பிரசங்கித்து, கிறிஸ்தவ சபைகளை ஆரம்பித்தார். அங்கிருந்த புதிய கிறிஸ்தவர்கள் பல கஷ்டங்களைச் சந்தித்தார்கள். அவர்களுடைய சொந்த மக்களே அவர்களைத் துன்பப்படுத்தினார்கள். அதனால், அவர்களுக்கு உற்சாகம் தேவைப்பட்டது. (1 தெ. 2:14) கிட்டத்தட்ட கி.பி. 50-ல், தெசலோனிக்கேயில் இருந்த புதிய சபைக்கு உற்சாகமூட்டும் ஒரு கடிதத்தை பவுல் எழுதினார். “உங்களுக்காக நாங்கள் ஜெபம் செய்யும்போதெல்லாம் கடவுளுக்கு நன்றி சொல்கிறோம். விசுவாசத்தால் நீங்கள் செய்கிற ஊழியத்தையும், உங்களுடைய அன்பான உழைப்பையும், . . . நீங்கள் காட்டுகிற சகிப்புத்தன்மையையும் . . . எப்போதும் நினைத்துக்கொள்கிறோம்” என்று அதில் குறிப்பிட்டார். (1 தெ. 1:2, 3) ஒருவரை ஒருவர் பலப்படுத்தும்படியும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார். “ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துங்கள், ஒருவரை ஒருவர் பலப்படுத்துங்கள்” என்று எழுதினார்.—1 தெ. 5:11.

ஆளும் குழு உற்சாகப்படுத்துகிறது

18. முதல் நூற்றாண்டிலிருந்த ஆளும் குழு பிலிப்புவை எப்படி உற்சாகப்படுத்தியது?

18 முதல் நூற்றாண்டில், சபையை முன்னின்று வழிநடத்திய சகோதரர்கள் உட்பட, கிறிஸ்தவர்கள் எல்லாரையும் உற்சாகப்படுத்துவதற்கு ஆளும் குழுவை யெகோவா பயன்படுத்தினார். கிறிஸ்துவைப் பற்றி சமாரியர்களிடம் பிலிப்பு பிரசங்கித்தபோது, ஆளும் குழு அவருக்கு ஆதரவு கொடுத்தது. கிறிஸ்தவர்களாக ஆன சமாரியர்களுக்குக் கடவுளுடைய சக்தி கிடைக்க வேண்டும் என்று ஜெபம் செய்வதற்காக, அதன் அங்கத்தினர்களான பேதுருவையும் யோவானையும் அனுப்பி வைத்தது. (அப். 8:5, 14-17) ஆளும் குழுவின் ஆதரவால், பிலிப்புவுக்கும் புதிதாக கிறிஸ்தவர்களாக ஆன சகோதர சகோதரிகளுக்கும் ரொம்பவே உற்சாகம் கிடைத்தது.

19. ஆளும் குழுவிடமிருந்து வந்த கடிதத்தை வாசித்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எப்படி உணர்ந்தார்கள்?

19 பிற்பாடு, முக்கியமான ஒரு தீர்மானத்தை ஆளும் குழு எடுக்க வேண்டியிருந்தது. ஒருசமயம், திருச்சட்டத்தின்படி யூதர்கள் விருத்தசேதனம் செய்துகொண்டதைப் போலவே, யூதரல்லாத கிறிஸ்தவர்களும் செய்துகொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழும்பியது. (அப். 15:1, 2) அதைப் பற்றி முடிவெடுப்பதற்காக, ஆளும் குழுவினர் கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்தார்கள்; வேத வசனங்களை ஆராய்ந்து பார்த்தார்கள். பிறகு, இனிமேலும் விருத்தசேதனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்ற தீர்மானத்துக்கு வந்தார்கள். அதை விளக்கமாக ஒரு கடிதத்தில் எழுதி சகோதரர்கள் மூலமாக சபைகளுக்குத் தெரியப்படுத்தினார்கள். அதை வாசித்த கிறிஸ்தவர்கள் “உற்சாகமும் சந்தோஷமும் அடைந்தார்கள்.”—அப். 15:27-32.

20. (அ) ஆளும் குழுவினர் எப்படி நம் எல்லாரையும் உற்சாகப்படுத்துகிறார்கள்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

20 இன்று, பெத்தேல் ஊழியர்களையும் மற்ற விசேஷ முழுநேர ஊழியர்களையும், சொல்லப்போனால், நம் எல்லாரையும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவினர் உற்சாகப்படுத்துகிறார்கள். அதனால், முதல் நூற்றாண்டிலிருந்த சகோதரர்களைப் போலவே நமக்கும் உற்சாகமும் சந்தோஷமும் கிடைக்கிறது. அதோடு, சத்தியத்தை விட்டுப் போனவர்களைத் திரும்பி வரும்படி உற்சாகப்படுத்துவதற்காக, யெகோவாவிடம் திரும்பி வந்துவிடுங்கள் என்ற சிற்றேட்டை 2015-ல் ஆளும் குழுவினர் வெளியிட்டார்கள். அடுத்த கட்டுரையில், மற்றவர்களை உற்சாகப்படுத்துகிற பொறுப்பு நம்மை வழிநடத்துகிற சகோதரர்களுக்குத்தான் இருக்கிறதா அல்லது நம் எல்லாருக்கும் இருக்கிறதா என்பதைப் பற்றிப் பார்ப்போம்.