Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிள்ளைகளே, உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்!

பிள்ளைகளே, உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்!

“விசுவாசம் என்பது . . . பார்க்க முடியாத காரியங்கள் நிஜமானவை என்பதற்குத் தெளிவான அத்தாட்சியைக் காண்பதாகும்.”—எபி. 11:1.

பாடல்கள்: 41, 69

1, 2. சில சமயங்களில் இளம் யெகோவாவின் சாட்சிகள் எப்படி யோசிக்கலாம், பைபிள் என்ன ஆலோசனை தருகிறது?

பிரிட்டனில் இருக்கும் ஓர் இளம் சகோதரியோடு படிக்கும் ஒரு மாணவி, “கடவுள் இருக்கார்னு நீ நம்புறனா, நீ பெரிய புத்திசாலியா இருக்கணும்” என்று சொன்னாள். ஜெர்மனியில் இருக்கும் ஒரு சகோதரர் இப்படி எழுதினார்: “படைப்பைப் பற்றி பைபிளிலுள்ள விஷயங்கள் எல்லாம் கட்டுக்கதை என்று என்னுடைய ஆசிரியர்கள் நினைக்கிறார்கள். மாணவர்கள் பரிணாமத்தை நம்புவதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதே கிடையாது.” பிரான்சில் இருக்கும் ஓர் இளம் சகோதரி, “மாணவர்கள் இன்னும் பைபிளை நம்புறத பார்த்து என் ஸ்கூல்ல இருக்கிற எல்லா டீச்சரும் ரொம்ப ஆச்சரியப்படுறாங்க” என்று சொன்னாள்.

2 கடவுள்தான் நம்மைப் படைத்தார் என்பதை இன்று நிறைய பேர் நம்புவதில்லை. நீங்கள் ஓர் இளம் யெகோவாவின் சாட்சியா அல்லது அவரைப் பற்றி கற்றுக்கொண்டிருப்பவரா? அப்படியென்றால், நம்மை யெகோவாதான் படைத்தார் என்பதை எப்படி நிரூபிப்பது என்று நீங்கள் நிறைய தடவை யோசித்திருக்கலாம்! நாம் கேட்கிற அல்லது படிக்கிற விஷயத்தைப் பற்றி கவனமாக யோசிக்க பைபிள் உதவுகிறது. “நல்யோசனை உன்னைக் காப்பாற்றும்” என்று பைபிள் சொல்கிறது. எப்படி? பொய்யான கருத்துகளைக் கேட்காமல் இருக்கவும் யெகோவாமீதுள்ள விசுவாசத்தைப் பலப்படுத்தவும் நல்யோசனை உங்களுக்கு உதவும்.நீதிமொழிகள் 2:10-12-ஐ வாசியுங்கள்.

3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம்?

3 யெகோவாமீது பலமான விசுவாசம் இருக்க வேண்டுமென்றால், அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். (1 தீ. 2:4) அதனால், பைபிளையும் நம் பிரசுரங்களையும் வாசிக்கும்போது, அதில் என்ன இருக்கிறது என்று யோசிப்பது முக்கியம். அதோடு, நீங்கள் என்ன வாசிக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியம். (மத். 13:23) இப்படி வாசிக்கும்போது, யெகோவாதான் நம்மைப் படைத்தார், அவரிடமிருந்துதான் பைபிள் வந்தது என்பதற்கு நீங்கள் நிறைய ஆதாரங்களைக் கண்டுபிடிக்கலாம். (எபி. 11:1) இதை எப்படிச் செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.

உங்கள் விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்தலாம்?

4. பரிணாமத்தை நம்புவதும் படைப்பை நம்புவதும் எந்த விதத்தில் ஒன்றாக இருக்கிறது? அதனால், நாம் எல்லாரும் என்ன செய்ய வேண்டும்?

4 “பரிணாமம் உண்மைனு விஞ்ஞானிகள் சொல்றதுனால நான் அதை நம்புறேன். ஆனா, நீ எப்படி கடவுளை நம்புற? கடவுளைதான் யாருமே பார்த்ததில்லயே!” என்று யாராவது உங்களிடம் சொல்லலாம். நிறைய பேர் இப்படித்தான் யோசிக்கிறார்கள்! நாம் யாருமே கடவுளையோ அவர் ஏதாவது ஒன்றைப் படைப்பதையோ பார்த்ததில்லை என்பது உண்மைதான். (யோவா. 1:18) ஆனால், பரிணாமவாதிகளும் பார்க்க முடியாத ஒன்றைத்தான் நம்புகிறார்கள். ஒரு வகையான உயிர் இன்னொரு வகையான உயிராக மாறுவதை விஞ்ஞானிகளோ மனிதர்களோ இதுவரை பார்த்ததில்லை. உதாரணத்துக்கு ஒரு குரங்கு, மனிதனாக மாறுவதை யாருமே பார்த்ததில்லை. (யோபு 38:1, 4) அதனால், நாம் ஆதாரங்களைப் பார்த்து, அதைப் பற்றி கவனமாக யோசித்து, பிறகு ஒரு முடிவுக்கு வர வேண்டும். படைப்பைப் பற்றி அப்போஸ்தலர் பவுல் இப்படி எழுதினார்: “காணமுடியாத அவருடைய [கடவுளுடைய] பண்புகள், அதாவது நித்திய வல்லமை, கடவுள்தன்மை ஆகியவை, உலகம் படைக்கப்பட்ட சமயத்திலிருந்தே படைப்புகள் மூலம் தெளிவாகக் காணப்படுகின்றன; அதனால் அவர்கள் சாக்குப்போக்கு சொல்ல இடமில்லை.”—ரோ. 1:20.

மற்றவர்களிடம் பேசும்போது, உங்கள் மொழியில் இருக்கிற ஆராய்ச்சிக் கருவிகளை நன்றாகப் பயன்படுத்துங்கள் (பாரா 5)

5. படைப்பைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள என்னென்ன ஆராய்ச்சிக் கருவிகள் இருக்கின்றன?

5 இயற்கையைப் பார்க்கும்போதும், அதைப் பற்றி ஆழமாக யோசிக்கும்போதும், எல்லாமே பிரமிக்க வைக்கும் விதத்தில் படைக்கப்பட்டிருப்பதை நம்மால் உணர முடியும். படைப்பாளரைப் பார்க்க முடியவில்லை என்றாலும் அவர் இருக்கிறார் என்பதை “விசுவாசத்தினால்தான் நாம் புரிந்துகொள்கிறோம்.” அவர் நிஜமானவர், அவருக்கு எல்லையற்ற ஞானம் இருக்கிறது என்று நாம் புரிந்துகொள்கிறோம். (எபி. 11:3, 27) விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளைப் பற்றி வாசிக்கும்போது, கடவுளுடைய படைப்புகளைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ளலாம். அதற்கு நிறைய ஆராய்ச்சிக் கருவிகள் இருக்கின்றன. அற்புதப் படைப்பு கடவுளின் மகிமையை வெளிப்படுத்துகிறது (ஆங்கிலம்) என்ற வீடியோவிலும், உயிர் படைக்கப்பட்டதா? (ஆங்கிலம்) மற்றும் உயிரின் தோற்றம் சிந்திக்க ஐந்து கேள்விகள் என்ற சிற்றேடுகளிலும், உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? (ஆங்கிலம்) என்ற புத்தகத்திலும் படைப்பைப் பற்றி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. விஞ்ஞானிகளும் மற்ற சிலரும் கடவுள் இருப்பதை இப்போது ஏன் நம்புகிறார்கள் என்பதைப் பற்றிய பேட்டிகள் விழித்தெழு! பத்திரிகையில் அடிக்கடி வருகின்றன. “யாருடைய கைவண்ணம்?” என்ற தொடர் கட்டுரையில் மிருகங்களைப் பற்றியும் இயற்கையின் மற்ற அம்சங்களைப் பற்றியும் நிறைய தகவல்கள் வருகின்றன. அவை செயல்படும் விதத்தை விஞ்ஞானிகள் எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் அதில் இருக்கிறது.

6. ஆராய்ச்சிக் கருவிகள் உங்களுக்கு எப்படி உதவும்?

6 மேலே சொல்லப்பட்ட 2 சிற்றேடுகளைப் பற்றி அமெரிக்காவில் இருக்கும் 19 வயது சகோதரர் இப்படிச் சொன்னார்: “இந்த ரெண்டுமே விலைமதிக்க முடியாத சிற்றேடுகள், இதை கிட்டத்தட்ட 12 தடவை படிச்சிருப்பேன்!” பிரான்சில் இருக்கும் ஒரு சகோதரி இப்படி எழுதினார்: “‘யாருடைய கைவண்ணம்?’ கட்டுரைகளை படிக்குறப்போ எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கும். பெரிய பெரிய பொறியாளர்கள் இயற்கையில இருக்கிறத காப்பி அடிக்கலாம். ஆனா, அது எதுவும் இயற்கையில் இருக்கிற ரொம்ப சிக்கலான வடிவமைப்புகளுக்கு ஈடாகாதுங்கிறத அந்த கட்டுரைகள்ல இருந்து தெரிஞ்சுக்கிட்டேன்.” தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் 15 வயது பிள்ளையின் அப்பா அம்மா இப்படிச் சொல்கிறார்கள்: “விழித்தெழு! பத்திரிகையில வர்ற ‘பேட்டி’யதான் அவ முதல்ல படிப்பா.” படைப்பாளர் இருக்கிறார் என்பதற்கான நிறைய ஆதாரங்களை இந்தப் பிரசுரங்களில் பார்க்க முடியும். பொய் போதனைகளைக் கண்டுபிடிக்கவும் அவற்றை நம்பாமல் இருக்கவும் இவை உதவும். அப்போது, எப்படிப்பட்ட புயல் அடித்தாலும் வேரூன்றி நிற்கும் மரத்தைப் போல உங்கள் விசுவாசம் உறுதியாக இருக்கும்.—எரே. 17:5-8.

பைபிள்மீதுள்ள உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்

7. சிந்திக்கும் திறனை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று கடவுள் ஏன் விரும்புகிறார்?

7 பைபிளைப் பற்றி நியாயமான கேள்விகள் கேட்பது தவறா? இல்லை! ஒரு விஷயத்தை மற்றவர்கள் நம்புகிறார்கள் என்பதற்காக நீங்களும் நம்ப வேண்டும் என்று யெகோவா எதிர்பார்ப்பதில்லை. பைபிளைப் பற்றி தெரிந்துகொள்ளவும், அது உண்மையிலேயே அவரிடமிருந்துதான் வந்திருக்கிறது என்பதற்கான ஆதாரத்தைப் பார்க்கவும், உங்கள் “சிந்திக்கும் திறனை” பயன்படுத்த வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். பைபிளைப் பற்றி எந்தளவு தெரிந்துகொள்கிறீர்களோ, அந்தளவு அதன்மீது இருக்கும் விசுவாசம் பலப்படும். (ரோமர் 12:1, 2; 1 தீமோத்தேயு 2:4-ஐ வாசியுங்கள்.) பைபிளைப் பற்றி தெரிந்துகொள்வதற்கான ஒரு வழி, நீங்கள் அதிகமாகத் தெரிந்துகொள்ள நினைக்கும் குறிப்பிட்ட விஷயங்களை ஆராய்ச்சி செய்து படிப்பதாகும்.

8, 9. (அ) சிலர் எதையெல்லாம் சுவாரஸ்யமாகப் படிக்கிறார்கள்? (ஆ) படித்த விஷயங்களை ஆழ்ந்து யோசித்ததில் சிலருக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது?

8 சிலர் பைபிள் தீர்க்கதரிசனங்களைச் சுவாரஸ்யமாகப் படிக்கிறார்கள். அல்லது சரித்திர ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், தொல்லியல் நிபுணர்கள் சொன்னதோடு பைபிள் பதிவுகளை ஒப்பிட்டுப் பார்க்க விரும்புகிறார்கள். உதாரணத்துக்கு, ஆதியாகமம் 3:15-ஐ எடுத்துக்கொள்ளுங்கள். யெகோவாவுக்கும் அவர் ஆட்சி செய்யும் விதத்துக்கும் எதிராக ஆதாம், ஏவாள் கலகம் செய்த பிறகு, யெகோவா ஆதியாகமம் 3:15-ல் இருக்கும் முக்கியமான தீர்க்கதரிசனத்தைச் சொன்னார். பைபிளிலுள்ள தீர்க்கதரிசனங்களில் இதுதான் முதல் தீர்க்கதரிசனம். கடவுளுடைய ஆட்சிதான் மிகச் சிறந்தது, அதுதான் எல்லா கஷ்டங்களுக்கும் முடிவுகட்டும் என்பதைக் கடவுளுடைய அரசாங்கம் எப்படி நிரூபிக்கப் போகிறதென்று புரிந்துகொள்ள இந்தத் தீர்க்கதரிசனம் உதவும். ஆதியாகமம் 3:15-ஐப் படிப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறும் என்பதைப் பற்றி கூடுதல் தகவல்களைத் தரும் வசனங்களை பட்டியல் போடுங்கள். அடுத்து, அந்த வசனங்கள் எப்போது எழுதப்பட்டன என்று கண்டுபிடியுங்கள், பிறகு அதை வரிசைப்படுத்துங்கள். அப்போது, ஒவ்வொரு பைபிள் எழுத்தாளரும் வித்தியாசமான காலப்பகுதிகளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும், அந்தத் தீர்க்கதரிசனத்தை இன்னும் தெளிவாக்குகிற விதத்தில் ஏதோ ஒரு விஷயத்தை எழுதியிருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அதை எழுதுவதற்குக் கடவுளுடைய சக்திதான் அவர்களை வழிநடத்தியிருக்கிறது என்பதை மற்றவர்களுக்கு நிரூபிக்க இது உதவியாக இருக்கும்.—2 பே. 1:21.

9 பைபிளிலுள்ள ஒவ்வொரு புத்தகத்திலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய விவரங்கள் எப்படிச் சொல்லப்பட்டிருக்கின்றன என்று ஜெர்மனியில் இருக்கும் ஒரு சகோதரர் யோசித்துப் பார்த்தார். “பைபிளை 40 பேர் எழுதியிருந்தாலும் ஒவ்வொரு புத்தகத்துலயும் கடவுளோட அரசாங்கத்த பத்தி இருக்கு. அதுல நிறைய பேர் வேற வேற காலப்பகுதியில வாழ்ந்தவங்க, அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் பழகுனதும் கிடையாது” என்று அவர் சொன்னார். காவற்கோபுரத்தில் இருக்கிற ஒரு கட்டுரையை ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு சகோதரி படித்தார். பிறகு, ஆதியாகமம் 3:15 மற்றும் மேசியாவோடு பஸ்கா எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று புரிந்துகொண்டார். [1] (பின்குறிப்பு) அவர் இப்படி எழுதினார்: “அப்படி படிச்சதுக்கு அப்புறம், யெகோவா எவ்ளோ நல்லவர்னு புரிஞ்சுக்கிட்டேன். இஸ்ரவேலர்களுக்கு இப்படியொரு ஏற்பாட்ட செய்யணும்னு ஒருத்தர் யோசிச்சதும், அது இயேசு மூலமா நிறைவேறுனதும் என்னை ரொம்ப கவர்ந்திடுச்சு. தீர்க்கதரிசனமா இருந்த பஸ்கா உணவு எவ்ளோ பெரிய விஷயம்னு நல்லா யோசிச்சு பார்த்தேன்.” இந்தச் சகோதரி இப்படி உணர்ந்ததுக்கு என்ன காரணம்? படித்ததைப் பற்றி ஆழ்ந்து யோசித்தார், அதைப் புரிந்துகொண்டார். அவருடைய விசுவாசம் பலப்படவும் யெகோவாவிடம் நெருங்கிப்போகவும் இது அவருக்கு உதவியது.—மத். 13:23.

10. பைபிள்மீதுள்ள நம் விசுவாசத்தைப் பலப்படுத்த பைபிள் எழுத்தாளர்களின் நேர்மை எப்படி உதவுகிறது?

10 பைபிள் எழுத்தாளர்களின் நேர்மையைப் பற்றியும் யோசித்துப் பாருங்கள். அவர்கள் உண்மைகளைச் சொல்ல பயப்படவில்லை. அன்றிருந்த எழுத்தாளர்கள் தங்களுடைய தேசம் மற்றும் தலைவர்களைப் பற்றிய நல்ல விஷயங்களை மட்டுமே எழுதினார்கள். ஆனால் யெகோவாவின் தீர்க்கதரிசிகள், இஸ்ரவேல் மக்களும் அவர்களுடைய ராஜாக்களும் செய்த நல்ல விஷயங்களை மட்டுமல்ல, கெட்ட விஷயங்களையும் எழுதினார்கள். (2 நா. 16:9, 10; 24:18-22) தங்களுடைய தவறுகளைப் பற்றியும் மற்ற ஊழியர்களுடைய தவறுகளைப் பற்றியும்கூட அவர்கள் எழுதினார்கள். (2 சா. 12:1-14; மாற். 14:50) “இப்படிப்பட்ட நேர்மையைப் பார்க்குறது ரொம்ப கஷ்டம்” என்று பிரிட்டனில் இருக்கும் ஓர் இளம் சகோதரர் சொன்னார். “பைபிள் யெகோவாகிட்ட இருந்துதான் வந்திருக்குங்குற நம்பிக்கையையும் இது பலப்படுத்துது” என்றும் சொன்னார்.

11. பைபிள் கடவுளிடமிருந்து வந்திருக்கிறது என்பதை நம்புவதற்கு அதில் இருக்கும் ஆலோசனைகள் எப்படி உதவியாக இருக்கின்றன?

11 பைபிள் ஆலோசனைகளின்படி வாழும்போது மக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. பைபிள் கடவுளிடமிருந்துதான் வந்திருக்கிறது என்று மக்களை நம்ப வைப்பதற்கு இது உதவுகிறது. (சங்கீதம் 19:7-11-ஐ வாசியுங்கள்.) ஜப்பானில் இருக்கும் ஓர் இளம் சகோதரி இப்படி எழுதினார்: “நாங்க எல்லாரும் பைபிள் சொல்றபடி நடந்தப்போ, உண்மையிலயே ரொம்ப சந்தோஷமா இருந்தோம். எங்க குடும்பத்துல சமாதானமும், ஒற்றுமையும், அன்பும் இருந்துச்சு.” தாங்கள் நம்பிக்கொண்டிருந்த சில விஷயங்கள் பொய் என்பதைப் புரிந்துகொள்ள பைபிள் நிறைய பேருக்கு உதவியிருக்கிறது. (சங். 115:3-8) சர்வவல்லமையுள்ள கடவுளான யெகோவாவை நம்பியிருக்க இது மக்களுக்கு உதவுகிறது, நல்ல எதிர்கால நம்பிக்கையைத் தருகிறது. கடவுள் இல்லை என்று சொல்லும் சிலர், இயற்கையைக் கடவுளாக ஆக்கிவிடுகிறார்கள். இன்னும் சிலர், மக்களால் நல்ல எதிர்காலத்தைக் கொண்டுவர முடியும் என்கிறார்கள். ஆனால், மக்கள் இதுவரை செய்திருப்பதைப் பார்க்கும்போது, உலகத்தில் இருக்கும் பிரச்சினைகளுக்கு அவர்களால் தீர்வு கொண்டுவர முடியவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.—சங். 146:3, 4.

மற்றவர்களிடம் எப்படி நியாயங்காட்டிப் பேசலாம்?

12, 13. படைப்பைப் பற்றியோ பைபிளைப் பற்றியோ மற்றவர்களிடம் எப்படிப் பேசலாம்?

12 படைப்பைப் பற்றியோ பைபிளைப் பற்றியோ மற்றவர்களிடம் பேசும்போது, அவர்கள் உண்மையிலேயே எதை நம்புகிறார்கள் என்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள். பரிணாமத்தை நம்பும் சிலர், கடவுள் இருக்கிறார் என்றும் நம்புகிறார்கள். உயிருள்ள எல்லாவற்றையும் படைக்க கடவுள் பரிணாமத்தைப் பயன்படுத்தினார் என்று அவர்கள் சொல்கிறார்கள். வேறு சிலர், பரிணாமத்தைப் பற்றி பள்ளியில் படிப்பதால் அதை நம்புகிறார்கள். இன்னும் சிலர், மதத்தில் நம்பிக்கை இழந்துவிட்டதால் கடவுள்மீது நம்பிக்கை வைப்பதை நிறுத்தியிருக்கிறார்கள். அதனால், ஒருவர் எதை நம்புகிறார், ஏன் நம்புகிறார் என்று அவரிடம் முதலில் கேளுங்கள். பிறகு, அவர் சொல்வதை நன்றாகக் கவனியுங்கள். அப்படிச் செய்யும்போது, நீங்கள் சொல்வதைக் காதுகொடுத்து கேட்க அவர் தயாராக இருப்பார்.—தீத். 3:2.

13 படைப்பாளர் இருக்கிறார் என்று நம்புவது முட்டாள்தனம் என யாராவது சொன்னால் நீங்கள் என்ன சொல்லலாம்? உயிர் எப்படி ஆரம்பமானது என்று விளக்கும்படி அவரிடம் மரியாதையோடு கேளுங்கள். உயிர் ஏதோ ஒன்றிலிருந்து வந்திருந்தால், முதல் முதலில் இருந்த உயிருக்கு, அதே போன்ற உயிரை உண்டுபண்ணும் திறன் இருந்திருக்க வேண்டும். அப்படி உண்டுபண்ணுவதற்கு, அந்த உயிருக்கு நிறைய விஷயங்கள் தேவைப்பட்டிருக்கும் என்று வேதியியல் பேராசிரியர் ஒருவர் சொன்னார். அவற்றில் சிலவற்றைப் பற்றி இப்படிச் சொன்னார்: ‘(1) அந்த உயிருக்குத் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு தோல் தேவைப்பட்டிருக்கும், (2) ஆற்றலைப் பெறவும் அதைப் பயன்படுத்தவும் திறன் இருந்திருக்க வேண்டும், (3) தோற்றத்தையும் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான தகவல் இருந்திருக்க வேண்டும், (4) அந்தத் தகவலை நகலெடுக்கும் திறன் இருந்திருக்க வேண்டும்.’ அதோடு அவர் இப்படிச் சொன்னார்: “மிகச் சிறிய உயிரில்கூட இவ்வளவு சிக்கலான விஷயங்கள் இருப்பதைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது!”

14. படைப்பைப் பற்றி பேசும்போது எப்படிச் சுலபமாக நியாயங்காட்டிப் பேசலாம்?

14 படைப்பைப் பற்றி பேசும்போது, பவுலைப் போலவே நீங்களும் சுலபமாக நியாயங்காட்டிப் பேசலாம். “ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவரால் உண்டாக்கப்படுகிறது, ஆனால் எல்லாவற்றையும் உண்டாக்கியவர் கடவுளே” என்று அவர் எழுதினார். (எபி. 3:4) ஒரு வீட்டை யாராவது வடிவமைத்து, கட்டியிருக்க வேண்டுமென்றால், வீட்டைவிட மிகவும் சிக்கலான உயிரினங்களையும் யாராவது ஒருவர் வடிவமைத்து, உருவாக்கியிருக்க வேண்டும்! மற்றவர்களிடம் பேசும்போது, நம் பிரசுரங்களையும் பயன்படுத்தலாம். கடவுள் நம்பிக்கை இல்லாத ஓர் இளைஞரிடம் ஒரு சகோதரி பேசினார். மேலே சொல்லப்பட்ட 2 சிற்றேடுகளை அவருக்குக் கொடுத்தார். ஒரு வாரத்துக்குப் பிறகு, “கடவுள் இருக்கார்னு நான் இப்போ நம்புறேன்” என்று அவர் சொன்னார். அந்த இளைஞருக்கு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது; பிறகு அவர் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆனார்.

15, 16. பைபிள் கடவுளிடமிருந்து வந்தது என்று விளக்குவதற்கு முன்பு நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் எப்போதும் எதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்?

15 பைபிளைப் பற்றி யாருக்காவது சந்தேகங்கள் இருந்தால், அவரிடம் எப்படிப் பேசலாம்? ஏற்கெனவே சொன்னபடி, அவர் எதை நம்புகிறார் என்று கேளுங்கள். அதோடு, அவருக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்றும் கண்டுபிடியுங்கள். (நீதி. 18:13) அறிவியலில் ஆர்வம் இருந்தால், பைபிள் எப்படி அறிவியல்பூர்வமாகத் துல்லியமாக இருக்கிறது என்று சொல்லலாம். சரித்திரம் பிடிக்குமென்றால், சரித்திரப் புத்தகத்தில் இருக்கும் ஒரு சம்பவத்தைச் சொல்லி, அது நடப்பதற்கு பல வருடங்களுக்கு முன்பே அதைப் பற்றி பைபிளில் இருக்கிறது என்று விளக்கலாம். இன்னும் சிலருக்கு, அவர்களுடைய வாழ்க்கைக்குப் பிரயோஜனமானதைப் பற்றி சொல்லலாம். உதாரணத்துக்கு, மலைப் பிரசங்கத்தில் இருக்கும் நடைமுறையான ஆலோசனைகளைப் பற்றி சொல்லலாம். அப்படிச் சொல்லும்போது, நீங்கள் சொல்வதை அவர்கள் காதுகொடுத்துக் கேட்பார்கள்.

16 நாம் யாரிடமும் வாக்குவாதம் செய்ய விரும்புவதில்லை என்பதை ஞாபகத்தில் வையுங்கள். நம்மிடம் பேசுவது அவர்களுக்குச் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். அவர்கள் நம்மிடம் பைபிளைப் பற்றி ஆர்வமாகக் கற்றுக்கொள்ள வேண்டும். அதனால், மரியாதையோடு கேள்வி கேளுங்கள், அவர்கள் சொல்வதை நன்றாகக் கவனியுங்கள். உங்கள் நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் பணிவோடு சொல்லுங்கள். அதுவும், பெரியவர்களிடம் மரியாதையாகப் பேசுவது ரொம்பவே முக்கியம். நீங்கள் மரியாதை கொடுக்கும்போது, அவர்களும் மரியாதை கொடுப்பார்கள். நீங்கள் இளம் பிள்ளைகளாக இருந்தாலும், நீங்கள் நம்புகிற விஷயத்தைப் பற்றி ஆழமாக யோசித்திருக்கிறீர்கள் என்பதைப் பார்க்கும்போது அவர்கள் ஆச்சரியப்படுவார்கள். ஆனால், யாராவது உங்களிடம் வாக்குவாதம் செய்தாலோ உங்களைக் கிண்டல் செய்தாலோ அவர்களிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை.—நீதி. 26:4.

விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்

17, 18. (அ) பைபிள்மீதுள்ள விசுவாசத்தைப் பலப்படுத்த உங்களுக்கு எது உதவும்? (ஆ) அடுத்த கட்டுரையில் என்ன கேள்விக்கான பதிலைப் பார்க்கப் போகிறோம்?

17 பைபிளின் முக்கியமான போதனைகள் நமக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், நம் விசுவாசம் பலமாக இருக்க வேண்டுமென்றால், புதையல்களைத் தேடுவது போல் பைபிளில் இருக்கும் ஆழமான உண்மைகளைத் தேட வேண்டும். (நீதி. 2:3-6) உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழி, முழு பைபிளையும் படிப்பதாகும். அதனால், ஒரு வருடத்துக்குள் பைபிளை வாசித்து முடிக்க நீங்கள் முயற்சி செய்யலாம். அப்படி வாசித்தது, இளம் வயதில் யெகோவாவிடம் நெருங்குவதற்கு ஒரு வட்டாரக் கண்காணிக்கு உதவியது. “முழு பைபிளையும் வாசிச்சதுக்கு அப்புறம், அது கடவுளோட வார்த்தைனு நல்லா புரிஞ்சிக்கிட்டேன். ரொம்ப சின்ன பிள்ளையா இருந்தப்போ நான் படிச்ச பைபிள் கதைகளோட அர்த்தம் அப்போதான் நல்லா புரிஞ்சது” என்று அவர் சொன்னார். படிக்கிற விஷயங்களை நன்றாகப் புரிந்துகொள்ள, உங்கள் மொழியில் கிடைக்கிற ஆராய்ச்சிக் கருவிகளைப் பயன்படுத்துங்கள். உவாட்ச்டவர் லைப்ரரி (டிவிடி), உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி, உவாட்ச்டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ் அல்லது யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு ஆகியவை இருந்தால் அவற்றைப் பயன்படுத்துங்கள்.

18 பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு யெகோவாவைப் பற்றி உங்களால்தான் மிகச் சிறந்த விதத்தில் கற்றுக்கொடுக்க முடியும். பிள்ளைகள் விசுவாசத்தை வளர்த்துக்கொள்வதற்கு நீங்கள் எப்படி உதவலாம்? இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

[முடிவு குறிப்பு]