வாசகர் கேட்கும் கேள்விகள்
பிரசங்கி 5:8 அரசாங்க அதிகாரிகளைப் பற்றி மட்டுமே சொல்கிறதா அல்லது யெகோவாவைப் பற்றியும் சொல்கிறதா?
“ஏழைகள் ஒடுக்கப்படுவதையும் நீதி நியாயம் புரட்டப்படுவதையும் எங்கேயாவது பார்த்தால் அதிர்ச்சி அடையாதே. அப்படிச் செய்கிற அதிகாரியை அவருடைய உயர் அதிகாரி கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார். அவர்கள் இரண்டு பேருக்கு மேலேயும் உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள்” என்று பிரசங்கி 5:8 சொல்கிறது. இது நம்மை யோசிக்க வைக்கிறது, இல்லையா?
மேலோட்டமாகப் பார்த்தால், இந்த வசனம் அரசாங்க அதிகாரிகளைப் பற்றி மட்டுமே சொல்வதுபோல் தெரியலாம். ஆனால், யெகோவாவைப் பற்றிய ஓர் உண்மையையும் இந்த வசனம் சொல்வதாகத் தெரிகிறது. இந்த உண்மை நமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தரும்.
ஏழைகளை ஒடுக்கி, நீதியைப் புரட்டுகிற ஓர் அதிகாரியைப் பற்றி பிரசங்கி 5:8 சொல்கிறது. அப்படிப்பட்ட அதிகாரி, தனக்கும் மேல் ஓர் அதிகாரி இருப்பதையும், அவர் தன்னை கவனித்துக்கொண்டிருப்பதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். சொல்லப்போனால், இவர்கள் இரண்டு பேருக்கு மேலும் உயர் அதிகாரிகள் இருக்கலாம். வருத்தமான விஷயம் என்னவென்றால், இந்த அதிகாரிகள் எல்லாருமே ஊழல் பேர்வழிகளாக இருக்கலாம். இப்படி எல்லா மட்டத்தில் இருக்கிற அதிகாரிகளும் அநியாயம் செய்வதால், சாதாரண மக்கள் அவதிப்பட வேண்டியிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், உயர் அதிகாரிகளைக்கூட யெகோவா கவனித்துக்கொண்டிருக்கிறார் என்ற உண்மை நமக்கு ஆறுதலைத் தருகிறது. அதனால், யெகோவாவிடம் நாம் உதவி கேட்கலாம். நம் பாரத்தையெல்லாம் அவர்மேல் போட்டுவிடலாம். (சங். 55:22; பிலி. 4:6, 7) “தன்னை முழு இதயத்தோடு நம்புகிறவர்களுக்குத் தன்னுடைய பலத்தைக் காட்டுவதற்காக யெகோவாவுடைய கண்கள் இந்தப் பூமி முழுவதையும் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன” என்பது நமக்குத் தெரியும்.—2 நா. 16:9.
அப்படியென்றால், பிரசங்கி 5:8-லிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? ஒவ்வொரு அரசாங்க அதிகாரிக்கும் மேல் ஓர் உயர் அதிகாரி இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். அதைவிட முக்கியமாக, எல்லா அதிகாரிகளுக்கும் மேல் உன்னத அதிகாரியான யெகோவா இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். இன்று, தன் மகன் மூலம் அவர் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார். அந்த மகனான இயேசு கிறிஸ்துவைத்தான் தன்னுடைய அரசாங்கத்தின் அரசராக நியமித்திருக்கிறார். எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கிற சர்வ வல்லமையுள்ள கடவுளான யெகோவாவும் சரி, அவருடைய மகனும் சரி, எப்போதும் நீதியாகவும் நியாயமாகவும்தான் நடந்துகொள்வார்கள்.