Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வரன் தேடுவதற்கு மக்கள் பயன்படுத்துகிற வெப்சைட்டுகளை யெகோவாவின் சாட்சிகள் பயன்படுத்தலாமா?

கல்யாணம் பண்ணிக்கொள்கிற ஓர் ஆணும் பெண்ணும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் ஈருடல் ஓருயிராக இருக்க வேண்டுமென்றும் யெகோவா ஆசைப்படுகிறார். (மத். 19:4-6) கல்யாணம் பண்ணுவதைப் பற்றி நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? அப்படி என்றால், உங்களுக்குப் பொருத்தமான ஜோடியை எப்படிக் கண்டுபிடிப்பது? அதற்கு, யெகோவா கொடுத்திருக்கிற ஆலோசனைகள் உங்களுக்கு உதவும். உங்களுக்கு எது நல்லது என்று அவருக்குத்தான் தெரியும். ஏனென்றால், அவர்தான் உங்களைப் படைத்தவர். அவர் கொடுத்திருக்கிற சில ஆலோசனைகளை இப்போது பார்க்கலாம்.

முதலில் நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் இதுதான்: “எல்லாவற்றையும்விட மனுஷனுடைய இதயமே நயவஞ்சகமானது; அது எதையும் செய்யத் துணியும்” என்று பைபிள் சொல்கிறது. (எரே. 17:9) இப்போது, உங்களுக்குப் பொருத்தமான ஜோடியை நீங்கள் கண்டுபிடிக்கிற முயற்சியில் இறங்குவதாக வைத்துக்கொள்ளலாம். ஒருவரைப் பார்த்தவுடனே உங்களுக்கு ரொம்ப பிடித்துவிடுகிறது. ஆனால், அந்தச் சமயத்தில் உங்களுடைய உணர்வுகள் உச்சத்தில் இருக்கும் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் தெளிவாக யோசிக்க முடியாதபடி அது செய்துவிடும். ஒருவேளை, உங்களுடைய உணர்வுகளுக்கு இடம் கொடுத்தால் நீங்கள் மோசமான முடிவுகளை எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. (நீதி. 28:26) அதனால்தான், ஒருவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வதற்கு முன்பே உங்கள் மனதைப் பறிகொடுத்து விடக் கூடாது. கல்யாணம் பண்ணுவதாக வாக்குக் கொடுத்து விடவும் கூடாது.

“சாமர்த்தியசாலி ஆபத்தைப் பார்த்து மறைந்துகொள்கிறான். ஆனால், அனுபவமில்லாதவன் நேராகப் போய் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறான்” என்று நீதிமொழிகள் 22:3 சொல்கிறது. அப்படி என்றால், ஜோடியைத் தேர்ந்தெடுக்க உதவுகிற வெப்சைட்டுகளைப் பயன்படுத்துவதில் என்னென்ன ஆபத்துகள் இருக்கின்றன? சிலர் முன்பின் தெரியாதவர்களோடு இந்த வெப்சைட் வழியாக அறிமுகமாகி மனதைப் பறிகொடுத்து கடைசியில் வேதனையைத்தான் அனுபவித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, சில மோசடிக்காரர்கள் போலியான அக்கவுண்ட்டைப் ஏற்படுத்தி மற்றவர்களிடமிருந்து பணத்தை சுருட்டியிருக்கிறார்கள். இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் சில சமயங்களில் யெகோவாவின் சாட்சிகள் என்ற போர்வையில் வந்திருக்கிறார்கள்.

இந்த வெப்சைட்டுகளைப் பயன்படுத்துவதில் இன்னொரு ஆபத்தும் இருக்கிறது. ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் எந்தளவு ஜோடிப் பொருத்தம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு சில வெப்சைட்டுகள் கம்ப்யூட்டர் புரோகிராம்களைப் பயன்படுத்துகின்றன. ஆனால், இதெல்லாம் பிரயோஜனமாக இருக்குமா? கல்யாணம் என்ற முக்கியமான முடிவு எடுப்பதற்கு கம்ப்யூட்டர் புரோகிராம்களை நம்பி இருப்பது புத்திசாலித்தனமாக இருக்குமா? பைபிள் ஆலோசனைகளுடன் ஒப்பிடும்போது இந்த புரோகிராம்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை.—நீதி. 1:7; 3:5-7.

இப்போது இன்னொரு ஆலோசனையைப் பார்க்கலாம்: “விவரம் தெரியாதவன் யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடுகிறான். ஆனால், சாமர்த்தியமாக நடக்கிறவன் ஒவ்வொரு அடியையும் யோசித்துதான் எடுத்து வைக்கிறான்” என்று நீதிமொழிகள் 14:15 சொல்கிறது. ஒருவர் பொருத்தமான ஜோடியா இல்லையா என்று கண்டுபிடிப்பதற்கு முன்பு அவரை பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வது முக்கியம். ஆனால், வெப்சைட் வழியாக இதைத் தெரிந்துகொள்ள முடியுமா? ‘அதுதான், எங்களுக்குள்ள தகவல்களை பரிமாறிகிட்டோமே, நாங்க ரொம்ப நேரம் மெசேஜ் பண்ணிக்கிறோமே’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஒருவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதற்கு இது மட்டுமே போதுமா? சிலர், ஒருவரை வெப்சைட்டில் பார்த்து ‘இவர்தான் எனக்கு பொருத்தமான ஜோடி’ என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால், அவரை நேரில் சந்தித்தபோது அவர்கள் நினைத்த மாதிரி இல்லாததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

“ஏமாற்றுப் பேர்வழிகளோடு நான் பழகுவதில்லை. வெளிவேஷம் போடுகிறவர்களோடு சேருவதில்லை” என்று சங்கீதக்காரர் எழுதினார். (சங். 26:4) வெப்சைட் வழியாக ஜோடியைத் தேடுகிற நிறைய பேர் மற்றவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களைக் கொடுக்கிறார்கள். அவர்களுடைய சுயரூபத்தை மறைத்து விடுகிறார்கள். இன்னும் சிலர், யெகோவாவின் சாட்சிகள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையிலேயே ஞானஸ்நானம் எடுத்துவிட்டார்களா? யெகோவாவிடம் அவர்களுக்கு ஒரு நல்ல பந்தம் இருக்கிறதா? சபையின் மதிப்புமரியாதையை அவர்கள் சம்பாதித்திருக்கிறார்களா? அவர்கள் ஞானமாக நடந்துகொள்கிற ஆட்களா? இல்லையென்றால், நாம் தவிர்க்க வேண்டிய ‘கெட்ட சகவாசங்களில்’ ஒருவரா? (1 கொ. 15:33; 2 தீ. 2:20, 21) பைபிள் நியமங்களின்படி கல்யாணம் செய்வதற்கு அவர்களுக்குத் தகுதி இருக்கிறதா? அவர்களைப் பற்றி நன்றாகத் தெரிந்த ஒரு யெகோவாவின் சாட்சியிடம் பேசாமல் இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் தெரிந்துகொள்ள முடியாது. (நீதி. 15:22) யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற ஒருவர் “விசுவாசிகளாக இல்லாதவர்களோடு பிணைக்கப்பட” ஒருபோதும் விரும்ப மாட்டார்.—2 கொ. 6:14; 1 கொ. 7:39.

வெப்சைட்டுகள் வழியாகத் துணையைத் தேர்ந்தெடுக்கிற விஷயத்தில் இவ்வளவு ஆபத்துகள் இருப்பதால், வேறு சில வழிகளில் ஒருவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளலாம். அப்போது, உங்களுடைய கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். அப்படி என்றால், என்னென்ன வழிகள் இருக்கின்றன? ஒன்றாகக் கூடுவதற்குத் தடை இல்லாத சமயங்களில் கூட்டங்களிலும், மாநாடுகளிலும், சகோதர சகோதரிகள் ஒன்றாகக் கூடிவருகிற மற்ற சமயங்களிலும், தங்களுக்குப் பொருத்தமானவரைப் பார்த்து தேர்ந்தெடுப்பதற்கு யெகோவாவின் சாட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

நேரமெடுத்து பழகும்போது உங்கள் இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியான குறிக்கோள்களும் எண்ணங்களும் இருக்கின்றனவா என்பது தெரிந்துவிடும்

ஆனால், கோவிட்-19 பெருந்தொற்று மாதிரியான சூழ்நிலைகளில் நம்மால் ஒன்றாகக் கூடிவர முடியாதபோது, கம்ப்யூட்டர் புரோகிராம்களைப் பயன்படுத்தி கூட்டங்களில் கலந்துகொள்கிறோம். இந்த மாதிரியான சமயங்களிலும் பொருத்தமான ஜோடியைத் தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. நீங்கள் யாரைக் கல்யாணம் பண்ண வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர் பேச்சுகள் எப்படிக் கொடுக்கிறார், எப்படிப் பதில் சொல்கிறார் என்று பாருங்கள். (1 தீ. 6:11, 12) பிரேக்-அவுட் ரூமில் போயும் நீங்கள் ஒருவரையொருவர் நன்றாகத் தெரிந்துகொள்ளலாம். கம்ப்யூட்டர் புரோகிராமைப் பயன்படுத்தி சகோதர சகோதரிகள் ஒன்றாகக் கூடிவருகிற மற்ற சமயங்களிலும் நீங்கள் யாரை விரும்புகிறீர்களோ அவர் மற்றவர்களோடு எப்படிப் பழகுகிறார் என்று பாருங்கள். அப்போது, அவர் உண்மையிலேயே எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். (1 பே. 3:4) அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள... தெரிந்துகொள்ள... உங்கள் இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியான குறிக்கோள்களும் எண்ணங்களும் இருக்கின்றனவா இல்லையா என்பது தெரியவரும். நீங்கள் இரண்டு பேரும் பொருத்தமான ஜோடியா இல்லையா என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

பைபிளில் சொல்லியிருக்கிற ஆலோசனைகளைக் கேட்டு நாம் பொருத்தமான ஜோடியைத் தேர்ந்தெடுத்தால் நீதிமொழிகள் 18:22-ல் சொல்லியிருக்கிற விஷயத்தை நம்முடைய வாழ்க்கையிலும் அனுபவிக்கலாம். ‘நல்ல மனைவியைத் [அல்லது கணவனை] தேடிக்கொள்கிற [ஒருவர்] நல்ல ஆசீர்வாதத்தைத் தேடிக்கொள்கிறார். யெகோவாவின் பிரியத்தையும் பெறுகிறார்’ என்று அந்த வசனம் சொல்கிறது.