Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

அக்கறை காட்டுவதால் ஆசீர்வாதங்கள் எத்தனை எத்தனை!

அக்கறை காட்டுவதால் ஆசீர்வாதங்கள் எத்தனை எத்தனை!

1948-ல் நான், அம்மா, என் தங்கை பேட்

“ஆங்கிலிக்கன் சர்ச் சத்தியத்தை சொல்லிக்கொடுப்பது இல்லை. சத்தியத்தை நீ தேடிக்கொண்டே இரு.” ஆங்கிலிக்கன் சர்ச்சுக்கு போய்க்கொண்டிருந்த என்னுடைய பாட்டி என் அம்மாவிடம் சொன்ன வார்த்தைகள்தான் அது. இப்படி அவர் சொன்ன பிறகு, என் அம்மா உண்மையான மதத்தைத் தேட ஆரம்பித்தார். ஆனால் யெகோவாவின் சாட்சிகளிடம் மட்டும் அவர் பேச விரும்பவில்லை. ஒரு தடவை, கனடாவில் டோரான்டோவில் இருந்த எங்கள் வீட்டுக்கு யெகோவாவின் சாட்சிகள் வந்தபோது என்னை ஒளிந்துகொள்ள சொல்லிவிட்டார். 1950-ல், என்னுடைய சித்தி யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பித்தார். அப்புறம் என் அம்மாவும் அவரோடு சேர்ந்து படித்தார். சித்தி வீட்டில் உட்கார்ந்துதான் பைபிள் படிப்பார்கள். பிறகு இருவரும் ஞானஸ்நானம் எடுத்தார்கள்.

உள்ளூரில் இருந்த ‘யுனைட்டெட் சர்ச் ஆஃப் கனடாவில்’ அப்பா ஒரு மூப்பராக இருந்தார். அதனால் என்னையும் என் தங்கச்சியையும் வாரா வாரம் ‘சண்டே ஸ்கூலுக்கு’ அனுப்பிவிடுவார். அதற்குப் பிறகு, காலை 11 மணிக்கு அப்பாவோடு சேர்ந்து சர்ச்சில் நடக்கிற மாஸ்-க்குப் போவோம். மதியம் அம்மாவோடு சேர்ந்து ராஜ்ய மன்றத்துக்கு போவோம். இந்த இரண்டு மதத்துக்கும் நடுவில் இருந்த வித்தியாசத்தை எங்களால் நன்றாகவே பார்க்க முடிந்தது.

1958-ல் “தெய்வீக சித்தம்” சர்வதேச மாநாட்டில் ஹட்ச்சிசன் குடும்பத்துடன்

பைபிளிலிருந்து தெரிந்துகொண்ட உண்மைகளை என்னுடைய அம்மா, அவருடைய ரொம்ப காலத்து நண்பர்களான பாப் ஹட்ச்சிசனிடமும் அவர் மனைவி மேரியோனிடமும் சொன்னார். அவர்களும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு யெகோவாவின் சாட்சிகளாக ஆனார்கள். 1958-ல் நியு யார்க் நகரத்தில் “தெய்வீக சித்தம்” சர்வதேச மாநாடு நடந்தது. எட்டு நாள் நடந்த அந்த மாநாட்டுக்கு பாப் மற்றும் மேரியோன், அவர்களுடைய மூன்று மகன்களோடு சேர்த்து என்னையும் கூட்டிக்கொண்டு போனார்கள். இப்போது நினைத்து பார்த்தால், அப்படி என்னை கூட்டிக்கொண்டு போவதற்கு அவர்கள் எவ்வளவு முயற்சி எடுத்திருக்க வேண்டுமென்று புரிகிறது. என்னுடைய வாழ்க்கையிலேயே மறக்க முடியாத மாநாடாக அது அமைந்துவிட்டது.

அக்கறை காட்டினார்கள், அதிகம் செய்தேன்

என்னுடைய டீனேஜ் வயதில் நாங்கள் ஒரு பண்ணை வீட்டில் வாழ்ந்தோம். அங்கிருக்கிற மிருகங்களை கவனித்துக்கொள்வது என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும்! அதனால், கால்நடை மருத்துவராக ஆக வேண்டுமென்று நினைத்தேன். இதைப் பற்றி என் அம்மா சபையிலிருந்த ஒரு மூப்பரிடம் சொன்னார். நாம் வாழ்ந்துக்கொண்டிருப்பது ‘கடைசி நாட்கள்’ என்பதை அவர் எனக்கு அன்பாக ஞாபகப்படுத்தினார். (2 தீ. 3:1) அதோடு, பல வருஷம் பல்கலைக்கழகத்தில் போய்ப் படிப்பது எனக்கும் யெகோவாவுக்கும் இருக்கிற பந்தத்தை எப்படி பாதிக்கும் என்றும் அவர் சொன்னார். அதனால், கால்நடை மருத்துவராகும் எண்ணத்தை கைவிட்டேன்.

பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு என்ன செய்ய போகிறேன் என்ற குழப்பம் எனக்குள் இருந்துகொண்டேதான் இருந்தது. வார இறுதி நாட்களில் ஊழியத்தில் கலந்துகொண்டாலும், அதில் அவ்வளவாக ஈடுபாடு வரவில்லை. என்னை நான் ஒரு பயனியராக கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை. டோரான்டோவில் இருந்த ஒரு பெரிய இன்சூரன்ஸ் கம்பெனியில் முழு நேர வேலையில் சேரச் சொல்லி, யெகோவாவின் சாட்சியாக இல்லாத என் அப்பாவும் சித்தப்பாவும் சொன்னார்கள். அந்தக் கம்பெனியில் என்னுடைய சித்தப்பா ஒரு பெரிய பதவியில் இருந்ததால் நானும் அங்கு வேலைக்குச் சேர்ந்தேன்.

டோரான்டோவில் வேலை செய்தபோது, நான் தொடர்ந்து ஓவர் டைம் செய்ய வேண்டியிருந்தது. சாட்சியாக இல்லாதவர்களோடு அதிக நேரம் செலவிட வேண்டியிருந்ததால், கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் சரியாகப் போக முடியவில்லை. ஆரம்பத்தில் நான் என் தாத்தாவோடுதான் தங்கியிருந்தேன். அவர் யெகோவாவின் சாட்சி கிடையாது. அவர் இறந்த பிறகு நான் தங்குவதற்கு வேறு இடம் பார்க்க வேண்டியிருந்தது.

1958-ல் என்னை மாநாட்டுக்கு கூட்டிக்கொண்டு போன பாப் மற்றும் மேரியோனை உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அவர்கள் எனக்கு அப்பா அம்மா மாதிரி. அவர்களுடைய வீட்டில் என்னை தங்க வைத்தார்கள். யெகோவாவுக்கும் எனக்கும் இருக்கிற பந்தத்தை பலப்படுத்துவதற்கு அவர்கள் ரொம்ப உதவி செய்தார்கள். 1960-ல் அவர்களுடைய மகன் ஜானும் நானும் ஒன்றாக ஞானஸ்நானம் எடுத்தோம். ஜான் பயனியர் ஆனார். நிறைய ஊழியம் செய்ய அது என்னை தூண்டியது. நானும் முன்னேறினேன். சபையில் இருக்கிற சகோதரர்களும் என்னுடைய முன்னேற்றத்தை கவனித்தார்கள். காலப்போக்கில், என்னை தேவராஜ்ய ஊழிய பள்ளியின் ஊழியராக நியமித்தார்கள். a

அருமையான மனைவியும் புதிய பாதையும்

1966-ல் எங்கள் கல்யாணத்தின்போது

1966-ல், ராண்டி பெர்கே என்ற பயனியரை நான் கல்யாணம் செய்தேன். அவள் ரொம்ப ஆர்வத்தோடு பயனியர் ஊழியம் செய்துகொண்டு இருந்தாள். தேவை அதிகம் இருக்கிற இடத்தில் சேவை செய்ய வேண்டுமென்று ரொம்ப ஆசைப்பட்டாள். எங்களுடைய பயணக் கண்காணி எங்கள் மேல் தனிப்பட்ட விதமாக நிறைய அக்கறை காட்டினார். ஒன்டாரியோவில் இருக்கிற ஆரிலியா சபைக்கு உதவி செய்வதற்கு எங்களை அங்கு போகச் சொல்லி அவர் உற்சாகப்படுத்தினார். உடனடியாக நாங்கள் அங்கு கிளம்பினோம்.

ஆரிலியாவுக்கு வந்த கையோடு, ராண்டியோடு சேர்ந்து நானும் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தேன். அவளுக்கு இருந்த உற்சாகம் என்னையும் தொற்றிக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். பயனியர் ஊழியத்தில் முழுமூச்சோடு இறங்கிய பின்பு, பைபிளைப் பயன்படுத்தி மக்களுக்கு சத்தியத்தை சொல்லிக்கொடுப்பதும், மக்கள் அதைப் புரிந்து ஏற்றுக்கொள்வதும் எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது! ஆரிலியாவில் இருக்கிற ஒரு அருமையான தம்பதி தங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் செய்து யெகோவாவின் சாட்சியாக ஆவதற்கு எங்களால் உதவ முடிந்தது. அதை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறோம்.

மொழியும் மாறியது எண்ணமும் மாறியது

ஒரு தடவை டோரான்டோவுக்குப் போயிருந்த சமயத்தில், அர்னால்டு மெக்னமாரா என்ற சகோதரரை பார்த்தேன். பெத்தேலில் முக்கியமான பொறுப்பில் இருந்த சகோதரர்களில் இவரும் ஒருவர். ‘நீங்கள் விசேஷ பயனியராக சேவை செய்ய விரும்புகிறீர்களா?’ என்று கேட்டார். உடனடியாக, “கண்டிப்பாக! எங்கு வேண்டுமானாலும் போகிறேன். கியுபெக்கைத் தவிர!” என்று சொன்னேன். அந்தச் சமயத்தில், கனடாவில் இருந்து பிரிந்து கியுபெக் ஒரு தனி நாடாக ஆக வேண்டுமென்று மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் செய்துகொண்டு இருந்தார்கள். அதனால் கனடாவில் இருந்த ஆங்கில மொழி பேசும் மக்களுக்கு கியுபெக்கில் இருந்த பிரெஞ்சு மொழி பேசும் மக்கள்மேல் தப்பெண்ணம் பரவியிருந்தது. என்னையும் அது தொற்றியிருந்தது.

ஆனால், “இந்தச் சமயத்தில் கியுபெக்குக்கு மட்டும்தான் விசேஷ பயனியர்களை கிளை அலுவலகம் அனுப்புகிறார்கள்,” என்று அர்னால்டு என்னிடம் சொன்னார். உடனடியாக சரி என்று சொல்லிவிட்டேன். அங்கு போய் சேவை செய்வதில் என்னுடைய மனைவிக்கும் ஆர்வம் இருந்ததென்று எனக்கு ஏற்கெனவே தெரியும். வாழ்க்கையில் நான் எடுத்த ஒரு மிகச் சிறந்த முடிவு அது என்று எனக்கு அப்புறம்தான் புரிந்தது.

ஐந்து வாரத்துக்கு நடந்த ஒரு பிரெஞ்சு மொழி வகுப்பில் நாங்கள் சேர்ந்தோம். அது முடிந்த பிறகு, நாங்களும் எங்களோடு இன்னொரு தம்பதியும், மான்ட்ரீலுக்கு வடகிழக்கில் 540 கிலோமீட்டருக்கு அந்தப் பக்கத்தில் இருந்த ரிமோஸ்கி என்ற இடத்துக்கு போனோம். ஒரு தடவை சபை கூட்டத்தில் அறிவிப்புகள் செய்யும் போது நான் இப்படி சொல்லிவிட்டேன். வரப் போகிற மாநாட்டில் “ஆஸ்திரியாவில் இருந்து பிரதிநிதிகள்” வருவார்கள் என்று சொல்வதற்கு பதிலாக “ஆஸ்ட்ரிச் (நெருப்புக்கோழி) பிரதிநிதிகள்” வருவார்கள் என்று சொல்லிவிட்டேன். பிரெஞ்சு மொழியில் நான் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கிறது என்பது நன்றாகத் தெரிந்தது.

ரிமோஸ்கியில் இருந்த வெள்ளை மாளிகை

ரிமோஸ்கியில், கல்யாணமாகாத நான்கு சகோதரிகள் எங்கள் நான்கு பேருடன் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் ஆர்வமாக ஊழியம் செய்கிறவர்கள். அதுமட்டுமல்ல, யுபர்டோ தம்பதியும் அவர்களுடைய இரண்டு மகள்களும்கூட எங்களோடு சேர்ந்துக்கொண்டார்கள். யுபர்டோ தம்பதி, அந்த ஊரில் ஏழு படுக்கையறை கொண்ட ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்தார்கள். அங்கு தங்குகிற பயனியர்கள் வாடகையை பகிர்ந்துகொண்டார்கள். அந்த வீடும் அங்கிருந்த தூண்களும் வெள்ளையாக இருந்தது. அதனால், அதை வெள்ளை மாளிகை என்று சொல்வோம். பொதுவாக, அந்த வீட்டில் நாங்கள் 12 அல்லது 14 பேர் இருப்போம். நாங்கள் விசேஷ பயனியர்களாக இருந்ததால், காலையிலும் மத்தியானத்திலும் சாயங்காலத்திலும் வெளி ஊழியத்துக்கு போவோம். எங்களோடு ஊழியம் செய்வதற்கு எப்பவும் யாராவது வருவார்கள்; பனிக்காலங்களில், மாலை நேரத்தில் குளிர் நடுங்கிக்கொண்டு இருந்தாலும்கூட! இதற்காக, நாங்கள் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

நாங்கள் எல்லாருமே ஒரு குடும்பம் மாதிரி ரொம்ப நெருக்கம் ஆகிவிட்டோம். சில சமயத்தில், சாயங்காலத்தில் நெருப்பு மூட்டி எல்லாரும் ஒன்றாக சேர்ந்து உட்கார்ந்துகொள்வோம். அல்லது எல்லாரும் சேர்ந்து சமைத்து சாப்பிடுவதற்கென்று ஒரு நாளை வைத்துக்கொள்வோம். எங்களோடு இருந்த ஒரு சகோதரர் இசைக் கருவியை வாசிப்பார். அதனால், சனிக்கிழமை சாயங்காலத்தில் பெரும்பாலும் நாங்கள் ஆடிப் பாடி சந்தோஷமாக இருப்போம்.

ரிமோஸ்கியில் நாங்கள் செய்த ஊழியம் பலன் கொடுத்தது. வெறும் ஐந்து வருஷத்தில் எங்களோடு பைபிள் படித்த நிறைய பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள். அது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சபையில் இருந்த பிரஸ்தாபிகளுடைய எண்ணிக்கை கிட்டத்தட்ட 35 ஆக உயர்ந்தது.

கியுபெக்கில் நற்செய்தியாளர்களாக வேலை செய்வதற்கு எங்களுக்கு நல்ல பயிற்சி கிடைத்தது. ஊழியத்திலும் சரி, மற்ற தேவைகளை கவனித்துக்கொள்வதிலும் சரி, யெகோவா எங்களுக்கு எப்படி உதவி செய்தார் என்பதை நாங்கள் பார்த்தோம். அதுமட்டுமல்ல, பிரெஞ்சு மக்களையும் அவர்களுடைய மொழியையும் கலாச்சாரத்தையும் நாங்கள் நேசிக்கக் கற்றுக்கொண்டோம். இதனால், மற்ற கலாச்சாரங்களையும் நாங்கள் நேசிக்க ஆரம்பித்தோம்.—2 கொ. 6:13.

ஆனால் திடீரென்று கிளை அலுவலகம் எங்களை ட்ராக்கடி என்ற டவுனுக்குப் போகச் சொன்னார்கள். நியு ப்ரன்ஸ்விக்கின் கிழக்கு கரையோரத்தில் அது இருக்கிறது. இந்த மாற்றம் எங்களுக்கு சவாலாக இருந்தது. ஏனென்றால், அப்போதுதான் அந்த ஊரில் ஒரு அப்பார்ட்மென்ட்டை குத்தகைக்கு எடுத்திருந்தோம். அதோடு, ஒரு பள்ளியில் பகுதிநேர டீச்சர் வேலைக்காக காண்ட்ராக்ட்டில் கையெழுத்து போட்டிருந்தேன். அதுமட்டுமல்ல, எங்களோடு பைபிள் படித்துக்கொண்டு இருந்த சிலர், அப்போதுதான் பிரஸ்தாபிகளாக ஆகியிருந்தார்கள். ராஜ்ய மன்றத்தை கட்டிக்கொண்டு இருந்த வேலையும் பாதியில் இருந்தது.

எங்களை மாறிப்போக சொன்ன அந்த வாரக் கடைசியில், நாங்கள் ஒரே ஜெபமாக செய்துகொண்டு இருந்தோம்! ட்ராக்கடிக்கு நேரில் போனோம். ரிமோஸ்கியில் இருந்து அந்த இடம் ரொம்ப வித்தியாசமாக இருந்தது. ஆனால் நாங்கள் அங்கு போக வேண்டுமென்று யெகோவா நினைப்பதால், அங்கு போக முடிவு செய்தோம். யெகோவாவை நாங்கள் சோதித்துப் பார்த்தோம். (மல். 3:10) எங்கள் முன்னால் இருந்த ஒவ்வொரு தடையையும் அவர் எடுத்துப் போடுவதைப் பார்த்தோம். என்னுடைய மனைவி ராண்டிக்கு யெகோவாவிடம் ஒரு நல்ல பந்தம் இருந்தது. அவள் சுயநலம் இல்லாதவள். நகைச்சுவையாகவும் பேசுவாள். அதனால் இந்த இடத்தைக் காலி செய்து போவது அவ்வளவு கஷ்டமாகத் தெரியவில்லை.

நாங்கள் போயிருந்த புது சபையில் ராபர்ட் ராஸ் என்ற ஒரே ஒரு மூப்பர்தான் இருந்தார். அவரும் அவருடைய மனைவி லிண்டாவும் அங்கே பயனியராக சேவை செய்திருந்தார்கள். அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்த பிறகு, அங்கேயே தங்கிவிட்டார்கள். அவர்களுடைய குட்டிப் பையனைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தாலும், எங்களையும் ரொம்ப நன்றாக உபசரித்தார்கள். அவர்களுடைய உபசரிப்பும் அவர்கள் சுறுசுறுப்பாக செய்துவந்த ஊழியமும் எங்களை ரொம்ப உற்சாகப்படுத்தியது.

தேவை இருக்கும் இடத்தில் சேவை ஆனந்தமே!

பனிக்காலத்தில் முதல் வட்டார சேவையில்

ட்ராக்கடியில் இரண்டு வருஷம் பயனியராக இருந்தோம். எங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. பயணக் கண்காணியாக சேவை செய்வதற்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. ஆங்கில மொழி பேசும் வட்டாரத்தில் ஏழு வருஷம் சேவை செய்தோம். பிறகு, கியுபெக்கில் பிரெஞ்சு மொழி பேசும் வட்டாரத்துக்கு நியமிக்கப்பட்டோம். அந்தச் சமயத்தில் மாவட்ட கண்காணியாக இருந்த லியோன்ஸ் க்ரிப்போ என்ற சகோதரர் என்னுடைய பேச்சை ரொம்ப பாராட்டுவார். “கேட்பவர்களுக்கு இன்னும் பிரயோஜனமாக இருக்கிற மாதிரி இந்தப் பேச்சை எப்படிக் கொடுக்கலாம்?” bஎன்று எப்போதும் அவர் என்னிடம் கேட்பார். இப்படி என்மேல் தனிப்பட்ட விதமாக அக்கறை எடுத்து அவர் உதவியதால், நான் எளிமையாக, எல்லாருக்கும் புரியும் விதத்தில் நன்றாக பேச்சு கொடுக்க முடிந்தது.

1978-ல், மான்ட்ரீலில் நடந்த “வெற்றியுள்ள விசுவாசம்” என்ற சர்வதேச மாநாட்டில், எனக்கு கிடைத்த நியமிப்பை என்னால் மறக்கவே முடியாது. அங்கு வரும் எல்லாருக்கும் உணவு ஏற்பாடு செய்கிற வேலையை எனக்கு கொடுத்தார்கள். 80,000 பேரை நாங்கள் எதிர்பார்த்தோம். எல்லாருக்கும் உணவு கொடுப்பதற்கு நாங்கள் புதிதாக ஒரு ஏற்பாட்டை செய்ய வேண்டியிருந்தது. சமையல் செய்வதற்கான பொருட்கள், மெனு, சமையல் செய்கிற விதம் என்று எல்லாமே ரொம்ப புதிதாக இருந்தது. எங்களிடம் கிட்டத்தட்ட 20 பெரிய ஃப்ரிட்ஜ் இருந்தது. ஆனால் சிலசமயம் அது வேலை செய்யாமல் போய்விடும். மாநாடு ஆரம்பிப்பதற்கு முந்தின நாள், அந்த ஸ்டேடியத்தில் ஒரு விளையாட்டு நிகழ்ச்சி நடந்துகொண்டு இருந்ததால், அன்றைக்கு நடுராத்திரி வரைக்கும் எங்களால் உள்ளே நுழையக்கூட முடியவில்லை. சமைப்பதற்குத் தேவையான எந்த ஏற்பாட்டையும் செய்ய முடியவில்லை. காலை உணவு கொடுக்க, விடிவதற்கு முன்பே நாங்கள் அடுப்பை பற்ற வைக்க வேண்டியிருந்தது. நாங்கள் ரொம்ப களைப்பாக இருந்தோம். ஆனால் என்னோடு வாலண்டியர்களாக வேலை செய்தவர்களுடைய கடின உழைப்பு, முதிர்ச்சி, நகைச்சுவையைப் பார்த்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். நாங்கள் ரொம்ப நெருக்கமானோம். நட்பு மலர்ந்தது. இன்றுவரை அது நிலைத்திருக்கிறது. 1940-க்கும் 1960-க்கும் இடையில் இதே கியுபெக்கில்தான் கடுமையான துன்புறுத்தல் இருந்தது. ஆனால் அதே இடத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த மாநாட்டை அனுபவித்தது சொல்ல முடியாது சந்தோஷத்தை அள்ளித் தந்தது.

1985-ல், மான்ட்ரீலில், மாநாட்டுக்கு முன்பு மாநாட்டு வேலைகளைச் செய்யும்போது

மான்ட்ரீலில் நடந்த பெரிய மாநாடுகளில், என்னோடு வேலை செய்த கண்காணிகளிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ஒரு மாநாட்டில், இப்போது ஆளும் குழுவில் சேவை செய்யும் டேவிட் ஸ்ப்லேன், மாநாட்டுக் கண்காணியாக இருந்தார். இன்னொரு மாநாட்டில், அந்த நியமிப்பு எனக்கு கிடைத்தது. அப்போது டேவிட் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

நான் 36 வருஷம் பயணக் கண்காணியாக சேவை செய்ததற்குப் பிறகு, 2011-ல், மூப்பர்களுக்கான பள்ளியில் போதகராக சேவை செய்யும் நியமிப்பு கிடைத்தது. இரண்டு வருஷத்தில், என் மனைவியும் நானும் 75 வித்தியாசமான படுக்கைகளில் தூங்க வேண்டியிருந்தது. நாங்கள் செய்த தியாகங்கள் எதுவுமே வீண் போகவில்லை. ஒவ்வொரு வாரமும் பள்ளியின் கடைசி நாளில், மூப்பர்கள் மனம் குளிர்ந்துபோவார்கள். யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள ஆளும் குழு அவர்களுக்கு எந்தளவு உதவி செய்கிறார்கள் என்பதை நினைத்துதான்!

அப்புறம், ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் நான் போதகராக இருந்தேன். நிறைய சமயத்தில், மாணவர்கள் அட்டவணையைப் பார்த்தே திணறிவிடுவார்கள். ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட ஏழு மணிநேரம் வகுப்பில் உட்கார வேண்டும், தினமும் சாயங்காலம் மூன்று மணிநேரம் ஹோம்வொர்க் செய்ய வேண்டும். அதுதவிர, வாராவாரம் நாலைந்து நியமிப்புகளையும் வகுப்பில் செய்ய வேண்டும். அந்த மாணவர்களிடம், யெகோவாவுடைய உதவி இருந்தால்தான் இதையெல்லாம் உங்களால் செய்ய முடியும் என்று நானும் பள்ளியின் இன்னொரு போதகரும் சொல்வோம். யெகோவாவை சார்ந்திருந்ததால் நினைத்ததைவிட அந்த மாணவர்களால் அதிகம் செய்ய முடிந்தது. அதை நினைத்து அவர்கள் ஆச்சரியப்பட்டதெல்லாம் இன்னும் என் நெஞ்சில் நிற்கிறது!

அக்கறை காட்டுவது ஆசீர்வாதங்களை அள்ளித்தரும்

என்னுடைய அம்மா எப்பவுமே மற்றவர்கள்மேல் தனிப்பட்ட விதமாக அக்கறை காட்டுவார். அதனால், அவரிடம் பைபிள் படித்தவர்கள் நன்றாக முன்னேறினார்கள். என்னுடைய அப்பாவின் மனதும் மாறியது. அம்மா இறந்து மூன்று நாளுக்கு அப்புறம், பொதுப் பேச்சைக் கேட்பதற்கு அப்பா ராஜ்ய மன்றத்துக்கு வந்தார். எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம்! அன்று தொடங்கி அடுத்த 26 வருஷங்கள் என் அப்பா தவறாமல் கூட்டங்களுக்குப் போனார். அப்பா ஞானஸ்நானம் எடுக்கவில்லைதான். ஆனால், ஒவ்வொரு வாரமும் அவர்தான் முதல் ஆளாக கூட்டங்களுக்கு வருவார் என்று அங்கிருக்கிற மூப்பர்கள் என்னிடம் சொன்னார்கள்.

எனக்கும் என்கூடப் பிறந்த மூன்று தங்கைகளுக்கும் என் அம்மா ஒரு நல்ல முன்மாதிரி. என்னுடைய தங்கைகளும் அவர்களுடைய கணவர்களும் யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்து வருகிறார்கள். அதில் இரண்டு தங்கைகள், நம் அமைப்புடைய கிளை அலுவலகங்களில் சேவை செய்கிறார்கள். ஒருத்தி போர்ச்சுகலில், இன்னொருத்தி ஹெய்டியில்.

இப்போது, ஒன்டாரியோவில் இருக்கும் ஹேமில்டனில் என் மனைவி ராண்டியும் நானும் விசேஷ பயனியர்களாக இருக்கிறோம். பயணக் கண்காணியாக இருந்த சமயத்தில், மற்றவர்களுடைய மறுசந்திப்புகளுக்கும் பைபிள் படிப்புகளுக்கும் போவதில் சந்தோஷப்பட்டோம். ஆனால் இப்போது எங்களோடு பைபிள் படிப்பவர்கள் யெகோவாவிடம் நெருங்கி வருவதைப் பார்ப்பது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் இருக்கும் புது சபையில் சகோதர சகோதரிகளோடு நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம். அவர்களுடைய கஷ்டகாலத்திலும் நல்ல காலத்திலும் அவர்களுக்கு யெகோவா எப்படி உதவி செய்கிறார் என்பதைப் பார்ப்பது எங்களுக்கு உற்சாகம் தருகிறது.

எங்களுடைய வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, எத்தனையோ பேர் தனிப்பட்ட விதமாக எங்களுக்கு அக்கறை காட்டியிருக்கிறார்கள். நான் சந்தோஷத்தோடு அதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள் மாதிரியே மற்றவர்கள்மேல் “ஆழ்ந்த அக்கறை” காட்டுவதற்கு நாங்கள் இருவரும் முயற்சி செய்திருக்கிறோம். (2 கொ. 7:6, 7) யெகோவாவுக்கு அதிகமாக செய்வதற்கு நிறைய பேரை உற்சாகப்படுத்தியிருக்கிறோம். உதாரணத்துக்கு, ஒரு குடும்பத்தில் இருந்த மனைவியும், மகனும், மகளும் பயனியர் செய்து வந்தார்கள். அந்தக் கணவரிடம், பயனியர் செய்வதைப் பற்றி அவர் எப்போதாவது யோசித்திருக்கிறாரா என்று கேட்டேன். அதற்கு அவர், வீட்டில் மூன்று பேர் பயனியர் செய்வதற்கு, தான் உதவி செய்து வருவதாகச் சொன்னார். அதற்கு நான், “யெகோவாவைவிட உங்களால் அவர்களுக்கு நன்றாக உதவி செய்ய முடியுமா?” என்று அவரிடம் கேட்டேன். பயனியர்கள் அனுபவிக்கும் சந்தோஷத்தை அவரையும் ருசித்துப் பார்க்கச் சொன்னேன். ஆறு மாதத்துக்குப் பிறகு அவரும் ஒரு பயனியர் ஆகிவிட்டார்.

ராண்டியும் நானும் “அடுத்த தலைமுறைக்கு” யெகோவாவுடைய “அற்புதமான செயல்களை” பற்றிச் சொல்லிக்கொண்டே இருப்போம். யெகோவாவுடைய சேவையில் நாங்கள் எந்தளவு சந்தோஷத்தை அனுபவித்தோமோ அந்தளவு சந்தோஷத்தை அவர்களும் அனுபவிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். —சங். 71:17, 18.

a இப்போது இதை வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தின் கண்காணி என்று சொல்கிறார்கள்.

b லியோன்ஸ் க்ரிப்போவின் வாழ்க்கை சரிதையை பிப்ரவரி 2020 காவற்கோபுர பத்திரிகையில், பக்கங்கள் 26-30-ல் பாருங்கள்.