Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

நன்மை தீமை அறிவதற்கான மரத்தின் பழத்தைச் சாப்பிட்டால் ஏவாள் சாக மாட்டாள் என்று சாத்தான் சொன்னபோது, இன்று பரவலாக இருக்கிற ‘ஆத்துமா அழியாது’ என்ற தவறான கோட்பாட்டை அறிமுகப்படுத்தினானா?

அப்படி இருக்க வாய்ப்பே இல்லை! தடை செய்யப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால், ஏவாளுடைய உடல்தான் அழியுமே தவிர அவளுடைய ஆத்துமா எங்கேயாவது உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும் என்று சாத்தான் சொல்லவில்லை. பாம்பைப் பயன்படுத்தி அவன் பேசியபோது, அவள் அந்தப் பழத்தைச் சாப்பிட்டால் ‘கண்டிப்பாகச் செத்துப்போக மாட்டாள்’ என்றுதான் சொன்னான். அதாவது, அவள் தொடர்ந்து உயிர் வாழ்வாள் என்றும், கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டிய அவசியம் இல்லாமல் இந்தப் பூமியில் சந்தோஷமாக வாழ்வாள் என்றும் சொல்லாமல் சொன்னான்.—ஆதி. 2:17; 3:3-5.

ஆத்துமா அழியாது என்ற தவறான கோட்பாடு ஏதேன் தோட்டத்தில் பிறக்கவில்லை என்றால், அது எப்போது பிறந்தது? நமக்குச் சரியாகத் தெரியாது. ஆனால், நோவா காலத்தில் வந்த பெருவெள்ளத்தின்போது பொய் மத வழிபாடுகள் சுவடு தெரியாமல் அழிந்துவிட்ட விஷயம் நமக்குத் தெரியும். நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் மட்டும்தான் அந்த வெள்ளத்திலிருந்து தப்பித்தார்கள் என்பதால், பொய் மத நம்பிக்கைகளைப் பரப்புவதற்கு அப்போது யாரும் இருந்திருக்க மாட்டார்கள்.

அதனால், ஆத்துமா அழியாது என்ற கோட்பாடு பெருவெள்ளத்துக்குப் பிறகுதான் தலைதூக்கியிருக்க வேண்டும். பாபேலில் மொழிகளைக் கடவுள் குழப்பியபோது, ஜனங்கள் “பூமி முழுவதும்” சிதறிப்போனார்கள். அப்போது, மனிதர்களுக்கு அழியாத ஆத்துமா இருக்கிறது என்ற தவறான நம்பிக்கையையும் சுமந்துகொண்டு போனார்கள். (ஆதி. 11:8, 9) இந்தத் தவறான கோட்பாடு எப்போது ஆரம்பித்திருந்தாலும் சரி, ‘பொய்க்குத் தகப்பனாக’ இருக்கிற பிசாசாகிய சாத்தான் இதற்குப் பின்னால் இருந்திருக்கிறான் என்பது உறுதி. இது இந்தளவுக்குப் பரவியிருப்பதைப் பார்த்து அவன் உச்சிகுளிர்ந்துபோயிருக்கிறான்!—யோவா. 8:44.