Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“உங்களுடைய சத்திய பாதையில் நான் நடப்பேன்”

“உங்களுடைய சத்திய பாதையில் நான் நடப்பேன்”

“யெகோவாவே, உங்களுடைய வழியை எனக்குக் கற்றுக்கொடுங்கள். உங்களுடைய சத்திய பாதையில் நான் நடப்பேன்.”—சங். 86:11.

பாடல்கள்: 26, 101

1-3. (அ) பைபிள் சத்தியத்தைப் பற்றி நாம் எப்படி உணர வேண்டும்? விளக்குங்கள். (ஆரம்பப் படங்கள்) (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

கடையில் ஒரு பொருளை வாங்கிவிட்டு, பிறகு அதைத் திருப்பிக் கொடுக்கும் பழக்கம் இன்று பரவலாக இருக்கிறது. அதுவும் ஆன்லைனில் வாங்குபவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்! தாங்கள் எதிர்பார்த்ததுபோல் அந்தப் பொருள் இல்லையென்றாலோ, அந்தப் பொருளில் ஏதாவது குறை இருந்தாலோ, அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வேறொரு பொருளை வாங்கிக்கொள்கிறார்கள் அல்லது பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்கிறார்கள்.

2 பைபிள் சத்தியத்தைப் பொறுத்தவரையில், நாம் ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டோம். சத்தியத்தை ‘வாங்கிய’ பிறகு, அதை ஒருபோதும் ‘விற்க’ மாட்டோம். அதாவது, சத்தியத்தைக் கற்றுக்கொண்ட பிறகு, அதை விட்டுவிலக மாட்டோம். (நீதிமொழிகள் 23:23-ஐ வாசியுங்கள்; 1 தீ. 2:4) முந்தின கட்டுரையில் பார்த்ததுபோல், சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்காக நாம் நிறைய நேரம் செலவு செய்திருக்கிறோம். அதோடு, பணத்தை அள்ளித்தரும் வாழ்க்கைத் தொழிலை நாம் விட்டுக்கொடுத்திருக்கலாம். அதுமட்டுமல்லாமல், உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களையும் சமாளித்திருக்கலாம். யோசிக்கும் விதத்தையும் நடந்துகொள்ளும் விதத்தையும் நாம் மாற்றியிருக்கலாம் அல்லது யெகோவாவுக்குப் பிடிக்காத பழக்கவழக்கங்களையும் சம்பிரதாயங்களையும் விட்டுக்கொடுத்திருக்கலாம். சத்தியத்தைக் கற்றுக்கொண்டதால் நாம் அனுபவிக்கும் ஆசீர்வாதங்களோடு ஒப்பிடும்போது, நாம் விட்டுக்கொடுத்தவை ஒன்றும் அவ்வளவு பெரிதல்ல என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

3 அருமையான முத்துக்களைத் தேடிப் பயணம் செய்கிற வியாபாரியைப் பற்றிய உவமையை இயேசு சொன்னார். விலைமதிப்புள்ள ஒரு முத்தைக் கண்டுபிடித்ததும், அதை வாங்குவதற்காகத் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் அவன் விற்றுவிடுகிறான். கடவுளுடைய அரசாங்கம்தான் அந்த முத்து! சத்தியத்தைத் தேடுபவர்களுக்கு அது எவ்வளவு மதிப்புள்ளதாக இருக்கிறது என்பதை இந்த உவமையின் மூலம் இயேசு காட்டினார். (மத். 13:45, 46) சத்தியத்தை முதன்முதலில் கண்டுபிடித்தபோது, அதாவது கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய சத்தியத்தையும் பைபிளிலிருக்கும் மற்ற சத்தியத்தையும் கண்டுபிடித்தபோது, அதை வாங்குவதற்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்க நாம் தயாராக இருந்தோம். சத்தியத்தை எப்போதும் மதிப்புள்ளதாக நினைத்தால், ஒருபோதும் நாம் அதை விட்டுவிலக மாட்டோம். ஆனால், கடவுளுடைய மக்களில் சிலருக்கு சத்தியத்தின் மீது இருந்த மதிப்பு குறைந்ததால் அதை விட்டுவிலகிப் போயிருக்கிறார்கள். இது வருத்தமான ஒரு விஷயம்! அப்படிச் செய்ய நாம் ஒருபோதும் விரும்ப மாட்டோம்! ‘தொடர்ந்து சத்தியத்தில் நடப்பதற்கு’ பைபிளின் அறிவுரைகளுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். (3 யோவான் 2-4-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், சத்தியத்தை முதலிடத்தில் வைக்க வேண்டும்; நாம் வாழும் விதத்தில் அது பளிச்சென்று தெரிய வேண்டும். ஆனால், சிலர் ஏன் சத்தியத்தை ‘விற்றுவிடுகிறார்கள்,’ எந்த விதத்தில் அவர்கள் அப்படிச் செய்கிறார்கள்? நாம் அப்படிச் செய்துவிடாமலிருக்க எப்படிக் கவனமாக இருக்கலாம்? ‘தொடர்ந்து சத்தியத்தில் நடக்க’ நாம் எப்படி இன்னும் உறுதியோடு இருக்கலாம்?

சிலர் சத்தியத்தை ‘விற்றுவிடுவது’ ஏன், எப்படி?

4. இயேசுவின் காலத்திலிருந்த சிலர் ஏன் தொடர்ந்து சத்தியத்தில் நடக்கவில்லை?

4 இயேசுவின் காலத்தில், ஆரம்பத்தில் சத்தியத்தை ஏற்றுக்கொண்ட சிலர், தொடர்ந்து அதில் நடக்கத் தவறினார்கள். உதாரணத்துக்கு, ஒரு பெரிய கூட்டத்துக்கு இயேசு அற்புதமாக உணவு கொடுத்த பிறகு, அவர்கள் அவரைப் பின்தொடர்ந்து கலிலேயா கடலின் அக்கரைக்குப் போனார்கள். ஆனால், இயேசு சொன்ன ஒரு விஷயத்தைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். “மனிதகுமாரனின் சதையைச் சாப்பிட்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தால் தவிர நீங்கள் வாழ்வு பெற மாட்டீர்கள்” என்று அவர் சொன்னார். அதன் அர்த்தத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்வதற்குப் பதிலாக, “இவர் சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது; யாரால் இதைக் கேட்டுக்கொண்டிருக்க முடியும்?” என்று சொன்னார்கள். பிறகு, “அவருடைய சீஷர்களில் பலர் அவரைப் பின்பற்றுவதை நிறுத்திவிட்டு, தாங்கள் விட்டுவந்த காரியங்களைக் கவனிப்பதற்காகத் திரும்பிப் போய்விட்டார்கள்.”—யோவா. 6:53-66.

5, 6. (அ) நம் காலத்திலிருக்கும் சிலர் எப்படிச் சத்தியத்தை விட்டுப் போயிருக்கிறார்கள்? (ஆ) ஒருவர் எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகச் சத்தியத்தைவிட்டு விலகிவிடலாம்?

5 நம் காலத்திலும் சிலர் சத்தியத்தை விட்டுவிலகிப் போயிருப்பது வருத்தமான ஒரு விஷயம். அவர்கள் அப்படிச் செய்ததற்கு என்ன காரணம்? பைபிள் வசனத்துக்குக் கொடுக்கப்பட்ட புதிய விளக்கத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போயிருக்கலாம் அல்லது பொறுப்பிலிருக்கும் ஒரு சகோதரருடைய சொல்லோ செயலோ அவர்களைப் புண்படுத்தியிருக்கலாம். இன்னும் சிலருக்கு, பைபிளிலிருந்து மற்றவர்கள் கொடுத்த ஆலோசனை பிடிக்காமல் போயிருக்கலாம் அல்லது சபையிலிருக்கிற யாருடனாவது அவர்களுக்குப் பயங்கரக் கருத்துவேறுபாடு ஏற்பட்டிருக்கலாம். வேறு சிலர், விசுவாச துரோகிகளுடைய அல்லது நம்மைப் பற்றி பொய்களைப் பரப்புகிறவர்களுடைய போதனைகளைக் கேட்க ஆரம்பித்திருக்கலாம். இதுபோன்ற சில காரணங்களால் யெகோவாவையும் அவருடைய சபையையும் விட்டு சிலர் வேண்டுமென்றே விலகிப் போயிருக்கிறார்கள். (எபி. 3:12-14) பேதுருவைப் போல் இவர்களும் இயேசுவின் மேல் நம்பிக்கை வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு கூட்டத்தார் அவரை விட்டுவிலகியபோது, அப்போஸ்தலர்களும் அப்படிச் செய்ய நினைக்கிறார்களா என்று இயேசு அவர்களிடம் கேட்டார். அதற்கு பேதுரு, “எஜமானே, நாங்கள் யாரிடம் போவோம்? முடிவில்லாத வாழ்வைத் தருகிற வார்த்தைகள் உங்களிடம்தானே இருக்கின்றன” என்று சொன்னார்.—யோவா. 6:67-69.

6 வேறுசிலர், கொஞ்சம் கொஞ்சமாக சத்தியத்தை விட்டுவிலகியிருக்கிறார்கள். சொல்லப்போனால், தங்களுக்கு அப்படி நடப்பதை அவர்கள் உணராமலேயே இருந்திருக்கலாம். இப்படிப்பட்டவர்கள், ஆற்றங்கரையிலிருந்து மெல்லமெல்ல நகர்ந்து தூரமாகப் போய்விடுகிற ஒரு படகைப் போல்தான் இருக்கிறார்கள். நாமும் அதேபோல் ‘வழிதவறிப் போகாதபடி’ கவனமாக இருக்க வேண்டும் என்று பைபிள் எச்சரிக்கிறது. (எபி. 2:1) பொதுவாக, சத்தியத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வழிதவறிப் போகிறவர்கள், அதை உணராமலேயே அப்படிப் போய்விடலாம். இப்படிப்பட்டவர்கள், யெகோவாவோடு தங்களுக்கு இருக்கும் பந்தம் பலவீனமாவதற்கு விட்டுவிடுகிறார்கள்; கடைசியில், அந்தப் பந்தத்தை முழுமையாக இழந்துவிடுகிறார்கள். இந்த நிலைமை நமக்கு வராமலிருக்க நாம் எப்படிக் கவனமாக இருக்கலாம்?

சத்தியத்தை விற்றுவிடாதபடி கவனமாக இருப்பது எப்படி?

7. சத்தியத்தில் தொடர்ந்து நடக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

7 சத்தியத்தில் தொடர்ந்து நடக்க, யெகோவா சொல்லும் எல்லா விஷயங்களையும் ஏற்றுக்கொள்வதோடு, அவற்றுக்குக் கீழ்ப்படியவும் வேண்டும். சத்தியம்தான் நம் வாழ்க்கையில் மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். அதோடு, நாம் செய்கிற ஒவ்வொரு விஷயத்திலும் பைபிள் நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். தாவீது ராஜா தன்னுடைய ஜெபத்தில், “உங்களுடைய சத்திய பாதையில் நான் நடப்பேன்” என்று யெகோவாவிடம் வாக்குக் கொடுத்தார். (சங். 86:11) சத்தியத்தில் தொடர்ந்து நடக்க தாவீது உறுதியாக இருந்தார்; அவரைப் போலவே நாமும் உறுதியாக இருக்க வேண்டும். இல்லையென்றால், சத்தியத்துக்காக எவற்றையெல்லாம் விட்டுக்கொடுத்தோமோ, அவற்றைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுவோம். அவற்றில் சிலவற்றை மறுபடியும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றுகூட நினைக்க ஆரம்பித்துவிடுவோம். ஆனால், பைபிள் சத்தியங்களில் சிலவற்றை மட்டுமே ஏற்றுக்கொண்டு மற்றவற்றை ஒதுக்கிவிட முடியுமா? இல்லை! ‘சத்தியத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு’ அதில் நடக்க வேண்டும். (யோவா. 16:13) சத்தியத்தைக் கற்றுக்கொள்ளவும், அதன்படி நடக்கவும், நாம் விட்டுக்கொடுத்த ஐந்து விஷயங்களைப் பற்றி முந்தின கட்டுரையில் படித்தோம். விட்டுவந்த விஷயங்களுக்கே திரும்பிப் போய்விடாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.—மத். 6:19.

8. ஒரு கிறிஸ்தவர் தன்னுடைய நேரத்தைச் செலவிடும் விதத்துக்கும், சத்தியத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? ஓர் உதாரணத்தைச் சொல்லுங்கள்.

8 நேரம். சத்தியத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போகாமலிருக்க, நாம் நேரத்தை ஞானமாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், பொழுதுபோக்கு... இன்டர்நெட்... டிவி... என நம் நேரம் பஞ்சாய்ப் பறந்துவிடும். இவையெல்லாம் தவறென்று சொல்ல முடியாது என்றாலும், தனிப்பட்ட படிப்புக்காகவும் ஊழியத்துக்காகவும் நாம் செலவு செய்துகொண்டிருந்த நேரத்தை இவை திருடிவிடலாம். எம்மா * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) என்ற சகோதரியின் விஷயத்தில் இதுதான் நடந்தது. சின்ன வயதிலிருந்தே குதிரைகள் என்றால் அவருக்கு ரொம்ப இஷ்டம்! முடிந்தபோதெல்லாம் அவர் குதிரை சவாரி செய்வார். ஆனால், இதிலேயே தன்னுடைய நேரமெல்லாம் கரைந்துவிடுவதை நினைத்து அவருடைய மனசாட்சி உறுத்தியது. அதனால், எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற விஷயத்தில் ஒரு தீர்மானத்துக்கு வந்தார். அதோடு, குதிரை சாகசங்கள் செய்த காரி வெல்ஸ் என்ற சகோதரியின் அனுபவத்திலிருந்தும் பாடம் கற்றுக்கொண்டார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இப்போது, யெகோவாவுடைய சேவையில் ரொம்ப நேரத்தைச் செலவிடுகிறார். யெகோவாவை வணங்கும் தன் குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் செலவிட இப்போது அவருக்கு நிறைய நேரம் இருக்கிறது. கடவுளோடு இன்னும் நெருக்கமான ஒரு பந்தத்தை வளர்த்துக்கொண்டதாகவும் அவர் சொல்கிறார். தன் நேரத்தை ஞானமாகப் பயன்படுத்துவதை நினைத்து அவர் ரொம்பச் சந்தோஷப்படுகிறார்.

9. பொருள் வசதிகளுக்கு நாம் எப்படி முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிடலாம்?

9 பொருள் வசதிகள். சத்தியத்தில் தொடர்ந்து நடக்க வேண்டும் என்றால், பொருள் வசதிகளுக்கு நாம் அதிக முக்கியத்துவம் தரக் கூடாது. நாம் சத்தியத்தை கற்றுக்கொண்டபோது, பொருள் வசதிகளைவிட யெகோவாவுக்குச் சேவை செய்வதுதான் முக்கியம் என்பதை உணர்ந்து, அவற்றைச் சந்தோஷமாக விட்டுக்கொடுத்தோம். நாட்கள் போகப்போக, மற்றவர்கள் பயன்படுத்துகிற நவீன எலக்ட்ரானிக் சாதனங்களையும் அவர்களிடம் இருக்கும் மற்ற பொருள்களையும் பார்த்து நாம் ஏங்க ஆரம்பித்துவிடலாம். நம்மிடம் இருப்பதை வைத்து யெகோவாவுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்வதைவிட, பொருள் வசதிகள்மீது நம் கவனம் போகலாம். தேமாவுக்கு அதுதான் நடந்தது. அவன் “இந்த உலகத்தின் மேல் ஆசை வைத்து,” அப்போஸ்தலன் பவுலோடு சேர்ந்து சேவை செய்யும் நியமிப்பை விட்டுவிட்டான். (2 தீ. 4:10) யெகோவாவுக்குச் சேவை செய்வதைவிட பொருள் வசதிகள்மேல் அவனுக்கு அதிக ஆசை இருந்திருக்கலாம். அல்லது, பவுலோடு சேர்ந்து சேவை செய்வதற்காக சில விஷயங்களை விட்டுக்கொடுக்க அவனுக்கு மனம் இல்லாமல் போயிருக்கலாம். இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? முன்பு, நமக்கும் பொருள் வசதிகள்மீது அதிக ஆசை இருந்திருக்கலாம். ஜாக்கிரதையாக இல்லையென்றால், அதே ஆசை மறுபடியும் நம் மனதில் துளிர்விட ஆரம்பிக்கலாம். கடைசியில், சத்தியத்தின்மீது இருக்கும் ஆசையைவிட பொருள் வசதிகளின்மீது இருக்கும் ஆசை அதிகமாகிவிடலாம்.

10. எந்த விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும்?

10 மற்றவர்களோடு இருக்கும் உறவு. சத்தியத்தில் தொடர்ந்து நடப்பதற்கு, யெகோவாவை வணங்காதவர்கள் நம்மைக் கட்டுப்படுத்தாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் சத்தியத்தை கற்றுக்கொண்டபோது, சாட்சிகளாக இல்லாத குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் நமக்கு இருந்த உறவில் மாற்றம் ஏற்பட்டது. சிலர் நம்முடைய புதிய நம்பிக்கைகளை மதித்திருக்கலாம், வேறுசிலர் அதை எதிர்த்திருக்கலாம். (1 பே. 4:4) நாம் அவர்களோடு சுமுகமான உறவை வைத்துக்கொள்ளவும் தயவாக நடந்துகொள்ளவும் விரும்புகிறோம் என்பது உண்மைதான். ஆனால், அவர்களைப் பிரியப்படுத்த வேண்டும் என்பதற்காக யெகோவாவின் தராதரங்களை நாம் விட்டுக்கொடுக்க முடியாது. அதோடு, 1 கொரிந்தியர் 15:33 சொல்வதுபோல், யெகோவாவை நேசிப்பவர்களை நம்முடைய நெருங்கிய நண்பர்களாக வைத்துக்கொள்வதுதான் ஞானமானது!

11. அசுத்தமான எண்ணங்களையும் செயல்களையும் நாம் எப்படித் தவிர்க்கலாம்?

11 அசுத்தமான எண்ணங்களும் செயல்களும். யெகோவாவின் பார்வையில் சுத்தமாகவும் பரிசுத்தமாகவும் இருந்தால்தான் சத்தியத்தில் நாம் தொடர்ந்து நடக்க முடியும். (ஏசா. 35:8; 1 பேதுரு 1:14-16-ஐ வாசியுங்கள்.) சத்தியத்தை கற்றுக்கொண்டபோது, பைபிள் தராதரங்களின்படி வாழ்வதற்காக நாம் மாற்றங்களைச் செய்தோம். நம்மில் சிலருக்கு பெரிய பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்திருக்கும். ஆனால், ஒழுக்கங்கெட்ட ஒரு வாழ்க்கைக்காக இப்போது வாழும் சுத்தமான வாழ்க்கையை விட்டுக்கொடுக்காமல் இருக்க நாம் எப்போதுமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒழுக்கங்கெட்ட விஷயத்தைச் செய்வதற்கான தூண்டுதலைத் தவிர்க்க எது நமக்கு உதவும்? நாம் பரிசுத்தமாக இருப்பதற்காக, யெகோவா என்ன ஏற்பாட்டைச் செய்திருக்கிறார் என்பதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். தன்னுடைய பாசத்துக்குரிய மகனாகிய இயேசு கிறிஸ்துவின் விலைமதிக்க முடியாத உயிரை நமக்காகக் கொடுத்திருக்கிறார். (1 பே. 1:18, 19) இயேசுவின் மீட்புப் பலி நமக்குக் கிடைத்திருக்கும் எப்பேர்ப்பட்ட பரிசு என்பதை எப்போதும் மனதில் வைத்திருந்தால், யெகோவாவின் பார்வையில் நாம் சுத்தமாக இருக்க முடியும்.

12, 13. (அ) கொண்டாட்டங்களை யெகோவா பார்ப்பது போலவே நாமும் பார்ப்பது ஏன் நல்லது? (ஆ) இப்போது எதைப் பற்றிப் பார்ப்போம்?

12 கடவுள் வெறுக்கும் சம்பிரதாயங்களும் பழக்கவழக்கங்களும். தங்களுடைய கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும்படி, குடும்பத்தாரும் கூடவேலை செய்பவர்களும் கூடப்படிக்கிறவர்களும் நம்மைக் கட்டாயப்படுத்தலாம். யெகோவா வெறுக்கிற கொண்டாட்டங்களிலும் சம்பிரதாயங்களிலும் கலந்துகொள்வதற்கான தூண்டுதல் வரும்போது, அதைச் சமாளிக்க எது நமக்கு உதவும்? யெகோவா அந்தக் கொண்டாட்டங்களை வெறுப்பதற்கான காரணங்களை மனதில் தெளிவாக வைத்துக்கொள்வது நமக்கு உதவும். அதைத் தெரிந்துகொள்ள, நம்முடைய பிரசுரங்களை ஆராய்ச்சி செய்யலாம். அதோடு, அந்தப் பண்டிகைகள் எப்படி ஆரம்பமாயின என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். இவற்றைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று நன்றாக யோசித்துப் பார்க்கும்போது, ‘நம் எஜமானுக்கு பிரியமானதைத்தான் செய்கிறோம்’ என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். (எபே. 5:10) யெகோவாமீதும் அவருடைய வார்த்தையின்மீதும் நாம் நம்பிக்கை வைத்தால், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயப்பட மாட்டோம்.—நீதி. 29:25.

13 நாம் என்றென்றும் சத்தியத்தில் நடக்கத்தான் ஆசைப்படுகிறோம். தொடர்ந்து சத்தியத்தில் நடக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் இன்னும் உறுதியோடு இருக்க எது நமக்கு உதவும்? மூன்று விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

தொடர்ந்து சத்தியத்தில் நடக்க இன்னும் உறுதியோடு இருங்கள்

14. (அ) சத்தியத்தை விட்டுவிலகக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதற்கு, தவறாமல் பைபிளைப் படிப்பது எப்படி உதவும்? (ஆ) நமக்கு ஏன் ஞானமும் புத்திமதியும் புத்தியும் தேவை?

14 முதலில், பைபிளைத் தொடர்ந்து படியுங்கள்; கற்றுக்கொண்டவற்றை ஆழமாக யோசித்துப் பாருங்கள். இதைத் தவறாமல் செய்ய நேரம் ஒதுக்குங்கள். எவ்வளவு அதிகமாகப் படிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக சத்தியத்தை நேசிப்பீர்கள்; அதை விட்டுவிடக் கூடாது என்ற தீர்மானத்திலும் உறுதியோடு இருப்பீர்கள். “சத்தியத்தை வாங்கு” என்று நீதிமொழிகள் 23:23 சொல்கிறது. அதோடு, “ஞானத்தையும் புத்திமதியையும் புத்தியையும் வாங்கு” என்றும் சொல்கிறது. இதை எப்படிச் செய்வது? பைபிள் சத்தியங்களை வெறுமனே தெரிந்துவைத்திருந்தால் மட்டுமே போதாது, அதன்படி வாழவும் வேண்டும். நாம் புத்தியைச் சம்பாதிக்கும்போது, ஏற்கெனவே தெரிந்த விஷயங்களோடு புதிதாகக் கற்றுக்கொண்ட விஷயங்களை ஒப்பிட்டுப் பார்ப்போம். அப்படிக் கற்றுக்கொண்ட விஷயங்களின்படி செய்ய ஞானம் நம்மைத் தூண்டுகிறது. சிலசமயங்களில், நாம் செய்ய வேண்டிய மாற்றங்களைப் பற்றிச் சொல்வதன் மூலம், சத்தியம் நமக்குப் புத்திமதி கொடுக்கிறது. வெள்ளியைவிட விலைமதிப்புள்ள இந்தப் புத்திமதிக்கு நாம் உடனடியாகக் கீழ்ப்படிய வேண்டும்.—நீதி. 8:10.

15. சத்தியம் எப்படி ஓர் இடுப்புவாரைப் போல நம்மைப் பாதுகாக்கிறது?

15 அடுத்ததாக, சத்தியத்தைத் தினமும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். சத்தியத்தை, ஒரு போர்வீரனுடைய இடுப்புவாரோடு பைபிள் ஒப்பிடுகிறது. (எபே. 6:14) பைபிள் காலங்களிலிருந்த போர்வீரர்களுக்கு அவர்களுடைய இடுப்புவார் பாதுகாப்பைத் தந்தது. ஆனால், அதை அவர்கள் இறுக்கமாகக் கட்டியிருக்க வேண்டும். இல்லையென்றால், அது அவர்களுக்கு உதவியாக இருக்காது. சத்தியமும் ஓர் இடுப்புவாரைப் போல்தான் இருக்கிறது. அது நம்மை எப்படிப் பாதுகாக்கிறது? பைபிள் சத்தியம் எப்போதுமே நமக்கு நெருக்கமாக இருக்கும்படி பார்த்துக்கொண்டால், கெட்ட எண்ணங்களிலிருந்து அது நம்மைப் பாதுகாக்கும். அதோடு, நல்ல தீர்மானங்கள் எடுக்கவும் உதவும். ஒரு பெரிய பிரச்சினையையோ தவறு செய்வதற்கான தூண்டுதலையோ நாம் சந்திக்கும்போது, சரியானதைச் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தில் இன்னும் உறுதியோடு இருக்க பைபிள் சத்தியம் நமக்கு உதவும். ஒரு போர்வீரன், எப்படி இடுப்புவார் இல்லாமல் போருக்குப் போக மாட்டானோ அதேபோல் நாமும் சத்தியத்தைவிட்டுப் போக மாட்டோம். தினமும் பைபிள் சத்தியங்களைக் கடைப்பிடிக்கிறோமா என்று நாம் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். போர்வீரன் தன் இடுப்புவாரில் ஒரு வாளையும் வைத்திருப்பான். இதேபோன்ற ஒன்றை நாம் எப்படிச் செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.

16. சத்தியத்தைக் கற்றுக்கொடுப்பது, சத்தியத்தில் தொடர்ந்து நடக்க எப்படி நமக்கு உதவும்?

16 மூன்றாவதாக, உங்களால் முடிந்தளவுக்கு மும்முரமாக பைபிள் சத்தியத்தை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். பைபிள், ஒரு வாள் போன்றது! ஒரு திறமையான போர்வீரன் தன்னுடைய வாளை எப்படி இறுக்கமாகப் பிடித்திருப்பானோ, அதேபோல் கடவுளுடைய வார்த்தையை நாமும் இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். (எபே. 6:17) ‘சத்திய வார்த்தையைச் சரியாகப் பயன்படுத்துகிற’ திறமையான போதகர்களாக நம் எல்லாராலும் ஆக முடியும். (2 தீ. 2:15) மற்றவர்களுக்கு பைபிளிலிருந்து கற்றுக்கொடுக்கும்போது அந்தச் சத்தியங்கள் நம் மனதில் ஆழமாகப் பதியும்; அதை இன்னும் அதிகமாக நாம் நேசிப்போம். சத்தியத்தில் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதில் இன்னும் தீர்மானமாக இருப்போம்.

17. சத்தியத்தை நீங்கள் ஏன் விலைமதிப்புள்ளதாக நினைக்கிறீர்கள்?

17 யெகோவா நமக்குக் கொடுத்திருக்கும் ஓர் அருமையான பரிசுதான் சத்தியம். நம் பரலோகத் தகப்பனோடு நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ள அது உதவுகிறது. நம்மிடம் இருப்பவற்றிலேயே சத்தியம்தான் அதிக விலைமதிப்புள்ளது. யெகோவா நமக்கு ஏற்கெனவே ஏராளமான சத்தியங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறார். ஆனால், இது வெறும் ஆரம்பம்தான்! என்றென்றும் நமக்குக் கற்றுத்தருவதாக அவர் வாக்குக் கொடுக்கிறார். அதனால், விலைமதிக்க முடியாத ஒரு முத்தைப் போல சத்தியத்தைப் பொக்கிஷமாகப் பாதுகாத்திடுங்கள். ‘சத்தியத்தை தொடர்ந்து வாங்குங்கள், அதை ஒருபோதும் விற்றுவிடாதீர்கள்.’ அப்படிச் செய்தால், “உங்களுடைய சத்திய பாதையில் நான் நடப்பேன்” என்ற வாக்குறுதியைக் காப்பாற்றிய தாவீதைப் போல் உங்களாலும் காப்பாற்ற முடியும்.—சங். 86:11.

^ பாரா. 8 பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.

^ பாரா. 8 JW பிராட்காஸ்டிங்கில், பேட்டிகளும் அனுபவங்களும் > பைபிள் ஆளையே மாற்றுகிறது என்ற பகுதியில் பாருங்கள்.