Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 21

கடவுள் தந்த பரிசுகளுக்கு நன்றியோடு இருக்கிறீர்களா?

கடவுள் தந்த பரிசுகளுக்கு நன்றியோடு இருக்கிறீர்களா?

“என் கடவுளாகிய யெகோவாவே, எங்களுக்காக நீங்கள் செய்திருக்கிற அதிசயங்கள் எத்தனை எத்தனை! எங்களுக்காக நீங்கள் யோசித்திருக்கிற விஷயங்கள் எத்தனை எத்தனை!”சங். 40:5.

பாட்டு 110 கடவுளுடைய அதிசய செயல்கள்

இந்தக் கட்டுரையில்... *

1-2. சங்கீதம் 40:5-ன்படி, யெகோவா நமக்கு என்னென்ன பரிசுகளைத் தந்திருக்கிறார், அவற்றைப் பற்றி நாம் ஏன் யோசித்துப்பார்க்க வேண்டும்?

யெகோவா, மாபெரும் கொடை வள்ளல்! அவர் நமக்கு எத்தனையோ பரிசுகளை அள்ளித் தந்திருக்கிறார். இதோ சில பரிசுகள்: (1) அழகு ததும்பும் பூமி என்ற அருமையான வீடு. நாம் சுகமாக வாழ்வதற்காக இதைத் தந்திருக்கிறார். (2) அற்புதமாக வடிவமைக்கப்பட்ட நம்முடைய மூளை. சிந்திக்கவும், பேச்சுத்தொடர்பு வைத்துக்கொள்ளவும் இதைக் கொடுத்திருக்கிறார். (3) பொக்கிஷம் போன்ற அவருடைய வார்த்தையான பைபிள். நம் மனதில் இருக்கிற முக்கியமான சில கேள்விகளுக்கு இதன் மூலம் பதில் தருகிறார்.சங்கீதம் 40:5-ஐ வாசியுங்கள்.

2 இந்த மூன்று பரிசுகளைப் பற்றிச் சுருக்கமாக இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இவற்றைப் பற்றி ஆழமாக யோசிக்க யோசிக்க, நமக்கு நன்றியுணர்வு பெருகும். நம்முடைய அன்பான படைப்பாளரான யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற ஆசையும் அதிகமாகும். (வெளி. 4:11) பரிணாமக் கோட்பாட்டை நம்பி ஏமாந்துபோயிருக்கிறவர்களிடம் காரணங்காட்டிப் பேசுவதற்கான திறமையும் வளரும்.

அற்புத வீடாகிய பூமி

3. பூமி ஓர் அற்புதமான பரிசு என்று ஏன் சொல்லலாம்?

3 நம்முடைய வீடாகிய பூமியை யெகோவா கட்டியிருக்கிற விதத்தில் அவருடைய ஞானம் பளிச்சிடுகிறது. (ரோ. 1:20; எபி. 3:4) பூமியைத் தவிர மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. ஆனாலும், பூமி ஓர் அற்புதமான கோள்! ஏனென்றால், மனிதர்கள் வாழ்வதற்குத் தேவையான எல்லாமே பூமியில் மட்டும்தான் இருக்கின்றன!

4. மக்கள் பயணம் செய்கிற கப்பலைவிட பூமி என்ற கப்பல் அற்புதமானது என்று ஏன் சொல்லலாம்?

4 பூமி, விண்வெளி என்ற கடலில் மிதக்கிற கப்பல் போன்றது! ஆனால், மக்கள் பயணம் செய்கிற கப்பலுக்கும் பூமிக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. கப்பலில் பயணம் செய்கிற மக்கள், ஆக்சிஜனையும் உணவையும் தண்ணீரையும் தாங்களாகவே தயாரிக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாக வைத்துக்கொள்வோம். கழிவுகளையும் வெளியேற்ற முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம். இந்த நிலைமையில், கப்பலில் பயணம் செய்கிற மக்கள் எவ்வளவு நாள் உயிரோடு இருக்க முடியும்? சீக்கிரத்திலேயே செத்துவிடுவார்கள், இல்லையா? ஆனால், பூமி என்ற கப்பலைப் பற்றி யோசித்துப்பாருங்கள். கோடிக்கணக்கான மக்களையும் உயிரினங்களையும் அது வாழ வைக்கிறது. ஆக்சிஜனையும் உணவையும் தண்ணீரையும் தானாகவே உற்பத்தி செய்கிறது. மிக முக்கியமான இந்தப் பொருள்களுக்கெல்லாம் ஒருபோதும் பற்றாக்குறை ஏற்படுவதில்லை. கழிவுகளை விண்வெளியிலும் அது கொட்டுவதில்லை. இருந்தாலும், பூமி அம்சமாக இருக்கிறது; மனிதர்களும் மற்ற உயிரினங்களும் அதில் வாழ முடிகிறது. இது எப்படிச் சாத்தியம்? மறுசுழற்சி செய்யும் திறனோடு யெகோவா பூமியைப் படைத்திருக்கிறார்! அற்புதமான இரண்டு மறுசுழற்சி முறைகளை இப்போது சுருக்கமாகப் பார்க்கலாம். ஒன்று, ஆக்சிஜன் சுழற்சி. இன்னொன்று, நீர் சுழற்சி.

5. ஆக்சிஜன் சுழற்சி என்றால் என்ன, அது எதை நிரூபிக்கிறது?

5 சில உயிரினங்களும் மனிதர்களும் வாழ்வதற்கு ஆக்சிஜன் தேவை. இந்த உயிரினங்கள் ஒவ்வொரு வருஷமும் பத்தாயிரம் கோடி டன் ஆக்சிஜனை சுவாசிப்பதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. அதே சமயத்தில், கழிவு வாயுவான கார்பன்-டை-ஆக்சைடையும் இவை வெளிவிடுகின்றன. அப்படியென்றால், இந்த உயிரினங்கள் எல்லா ஆக்சிஜனையும் எடுத்துக்கொண்டு, “கழிவு வாயுவான” கார்பன்-டை-ஆக்சைடால் வளிமண்டலத்தை நிரப்பிவிடுகின்றனவா? இல்லை! ஏனென்றால், யெகோவா வேறொரு ஏற்பாடு செய்திருக்கிறார்! அதாவது, கார்பன்-டை-ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளிவிடுவதற்காக, ராட்சத மரங்கள்முதல் சின்னஞ்சிறிய பாசிகள்வரை நிறைய தாவர வகைகளைப் படைத்திருக்கிறார். அப்போஸ்தலர் 17:24, 25-ல் சொன்ன வார்த்தைகளை ஆக்சிஜன் சுழற்சி நிரூபிக்கிறது. கடவுள்தான் “எல்லாருக்கும் உயிரையும் சுவாசத்தையும் . . . தருகிறார்” என்று அந்த வசனம் சொல்கிறது.

6. நீர் சுழற்சி என்றால் என்ன, இது எதை நிரூபிக்கிறது? (“ நீர் சுழற்சிஓர் அற்புத பரிசு” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

6 சூரியனிலிருந்து பூமி கனகச்சிதமான தூரத்தில் இருப்பதால், நீர் திரவநிலையிலேயே இருக்கிறது. ஒருவேளை, பூமி இன்னும் கொஞ்சம் சூரியனுக்குப் பக்கத்திலிருந்தால் என்ன நடக்கும்? பூமியில் இருக்கிற நீர் முழுவதும் கொதித்து ஆவியாகிவிடும். இந்தப் பூமி வெப்ப உலையாகிவிடும்; உயிரினங்கள் வாழ முடியாத பொட்டல்காடாகிவிடும். ஒருவேளை சூரியனைவிட்டு இன்னும் கொஞ்சம் தள்ளியிருந்தால்? பூமியில் இருக்கிற நீர் முழுவதும் உறைந்துவிடும்; முழு பூமியும் பனிப் பிரதேசமாகிவிடும். ஆனால், யெகோவா கச்சிதமான இடத்தில் பூமியை வைத்திருக்கிறார். அதனால், நீர் சுழற்சியின் மூலம் உயிரினங்கள் வாழ முடிகிறது. கடல்நீரையும் பூமியின் மேற்பரப்பில் இருக்கிற நீரையும் சூரியன் சூடாக்கி, ஆவியாக்குகிறது. பிறகு, மேகங்களை உருவாக்குகிறது. ஒரு வருஷத்துக்கு எவ்வளவு நீரை ஆவியாக்குகிறது தெரியுமா? இந்தப் பூமியின் எல்லா ஏரிகளிலும் இருக்கிற நீரைவிட பல மடங்கு அதிகமான நீரை ஆவியாக்குகிறது! இந்த நீர், மழையாகவோ பனியாகவோ பூமியில் பொழிவதற்கு முன், கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு வளிமண்டலத்தில் இருக்கிறது. கடைசியில், மறுபடியும் கடலுக்கு அல்லது மற்ற நீர்நிலைகளுக்குத் திரும்புகிறது. இப்படி, நீர் சுழற்சி தொடர்ந்து நடக்கிறது. இந்த அற்புதமான, உயிர்காக்கிற நீர் சுழற்சி எதை நிரூபிக்கிறது? யெகோவா ஞானமானவர், அபார வல்லமை படைத்தவர் என்பதை நிரூபிக்கிறது.—யோபு 36:27, 28; பிர. 1:7.

7. சங்கீதம் 115:16-ல் சொல்லியிருக்கிற யெகோவாவின் பரிசுக்கு நாம் என்னென்ன வழிகளில் நன்றி காட்டலாம்?

7 பூமி என்ற இந்த அற்புதமான கோளுக்கும், இதிலிருக்கிற அருமையான பொருள்களுக்கும் நன்றி காட்டுவதற்கு சில வழிகள் இருக்கின்றன. (சங்கீதம் 115:16-ஐ வாசியுங்கள்.) ஒரு வழி, யெகோவாவின் படைப்புகளைப் பற்றி ஆழமாக யோசித்துப்பார்ப்பது! அப்போது, தினமும் யெகோவா நமக்குத் தருகிற எல்லாவற்றுக்கும் நன்றி சொல்ல வேண்டுமென்ற ஆசை நமக்கு வரும். இன்னொரு வழி, நாம் இருக்கிற இடத்தை முடிந்தளவு சுத்தமாக வைத்துக்கொள்வது!

அற்புதமான நம்முடைய மூளை

8. நம்முடைய மூளையை அற்புதமான படைப்பு என்று ஏன் சொல்லலாம்?

8 மனித மூளை அற்புதமான விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய தாயின் வயிற்றில் நாம் இருந்தபோது, ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் நம்முடைய மூளை வளர்ந்தது. ஒவ்வொரு நிமிஷமும் ஆயிரக்கணக்கான புதிய செல்கள் உருவாயின. முழு வளர்ச்சியடைந்த ஒரு மனிதனின் மூளையில் பத்தாயிரம் கோடி நரம்பு செல்கள் (நியூரான்கள்) இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். இவையெல்லாம் ஒன்றுசேர்ந்து சுமார் 1.5 கிலோகிராம் எடையுள்ள மனித மூளையை உருவாக்குகின்றன. மனித மூளைக்கு இருக்கிற அற்புதமான சில திறமைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

9. பேச்சுத்திறன் என்பது கடவுளிடமிருந்த கிடைத்த ஒரு பரிசு என்று ஏன் சொல்லலாம்?

9 நம்முடைய பேச்சுத்திறன் ஓர் அற்புதம்! நாம் பேசும்போது என்ன நடக்கிறது என்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். ஒவ்வொரு வார்த்தையையும் நாம் உச்சரிக்கும்போது நம்முடைய நாக்கு, தொண்டை, உதடுகள், தாடை மற்றும் மார்பு பகுதிகளில் இருக்கிற கிட்டத்தட்ட 100 தசைகளின் அசைவுகளை மூளை ஒருங்கிணைக்கிறது. நாம் பேசுவது மற்றவர்களுக்குப் புரிய வேண்டுமென்றால், இந்தத் தசைகள் அதனதன் வரிசையில் வேலை செய்ய வேண்டும். மொழியைக் கற்றுக்கொண்டு அதைப் பேசுகிற திறமையைப் பற்றி 2019-ல் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. வார்த்தைகளை அடையாளம் கண்டுகொண்டு அவற்றுக்குப் பிரதிபலிக்கிற திறமை பிறந்த குழந்தைகளுக்கு இருப்பதாக அதில் தெரியவந்தது. நிறைய ஆராய்ச்சியாளர்கள் நம்புவதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது. அதாவது, ஒரு மொழியை அடையாளம் கண்டுகொண்டு அதைக் கற்றுக்கொள்கிற திறமையோடுதான் நாம் பிறக்கிறோம் என்பதை அது உறுதிப்படுத்துகிறது. பேச்சுத்திறன் என்பது கடவுளிடமிருந்து கிடைத்த ஓர் அற்புதமான பரிசு!—யாத். 4:11.

10. கடவுள் கொடுத்த பேச்சுத்திறன் என்ற பரிசுக்கு நாம் எப்படி நன்றி காட்டலாம்?

10 பேச்சுத்திறன் என்ற பரிசுக்கு நன்றி காட்டுவதற்கு ஒரு வழி இருக்கிறது. பரிணாமக் கோட்பாட்டை நாம் ஏன் ஏற்றுக்கொள்வதில்லை என்று கேட்பவர்களிடம், கடவுளை நாம் ஏன் நம்புகிறோம் என்பதைப் பற்றி விளக்குவதுதான் அது! (சங். 9:1; 1 பே. 3:15) இந்தக் கோட்பாட்டை ஆதரிப்பவர்கள், இந்தப் பூமியும் அதிலிருப்பவையும் தானாகத் தோன்றின என நாம் நம்ப வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். அதனால், நாம் என்ன செய்யலாம்? பைபிளையும் இந்தக் கட்டுரையில் பார்த்த விஷயங்களையும் வைத்து நாம் அவர்களிடம் பேசலாம். அதோடு, நாம் சொல்வதைக் கேட்க விரும்புபவர்களிடம், யெகோவாதான் வானத்தையும் பூமியையும் படைத்தார் என்று நாம் நம்புவதற்கான காரணத்தை விளக்கலாம்.—சங். 102:25; ஏசா. 40:25, 26.

11. நம்முடைய மூளையை ஓர் அற்புதம் என்று சொல்வதற்கான ஒரு காரணம் என்ன?

11 நம்முடைய ஞாபக சக்தி, அற்புதமான ஒரு விஷயம்! 2 கோடி புத்தகங்களில் இருக்கிற தகவல்களைச் சேகரித்து வைக்கிற திறன் நம்முடைய மூளைக்கு இருப்பதாக ஒரு எழுத்தாளர் சொல்லியிருந்தார். ஆனால், அதைவிட அதிக சக்தி நம் மூளைக்கு இருப்பதாக இப்போது சொல்கிறார்கள். இந்த ஞாபக சக்தி நமக்கு இருப்பதால், ஒரு விசேஷ திறமை நம்மிடம் இருக்கிறது. அது என்ன?

12. மற்ற உயிரினங்களுக்கும் நமக்கும் இருக்கிற வித்தியாசம் என்ன?

12 பூமியில் இருக்கிற மற்ற உயிரினங்களைவிட மனிதனுக்கு ஒரு விசேஷ திறமை இருக்கிறது. கடந்தகால அனுபவங்களிலிருந்து நல்ல பாடங்களைக் கற்றுக்கொள்கிற திறமைதான் அது! இந்தத் திறமை இருப்பதால் நல்ல நெறிகளைக் கற்றுக்கொள்ளவும், யோசிக்கிற விதத்தையும் வாழும் விதத்தையும் மாற்றிக்கொள்ளவும் முடிகிறது. (1 கொ. 6:9-11; கொலோ. 3:9, 10) சொல்லப்போனால், சரி எது தவறு எது என்று புரிந்துகொள்வதற்கு நம்முடைய மனசாட்சிக்குப் பயிற்சி தர முடிகிறது. (எபி. 5:14) அன்பு, கரிசனை, கருணை போன்ற குணங்களைக் காட்டக் கற்றுக்கொள்ளவும் முடிகிறது. அதோடு, யெகோவாவைப் போலவே நீதியாக நடந்துகொள்ள முடிகிறது.

13. சங்கீதம் 77:11, 12-ன்படி, ஞாபக சக்தி என்ற பரிசை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

13 ஞாபக சக்தி என்ற பரிசுக்கு நன்றி காட்ட நிறைய வழிகள் இருக்கின்றன. ஒரு வழி, கடந்த காலத்தில் யெகோவா நமக்கு உதவியதையும், நம்மை ஆறுதல்படுத்தியதையும் எப்போதும் நினைத்துப்பார்ப்பது! இப்படிச் செய்யும்போது, எதிர்காலத்திலும் யெகோவா நமக்கு உதவுவார் என்ற நம்பிக்கை அதிகமாகும். (சங்கீதம் 77:11, 12-ஐ வாசியுங்கள்; சங். 78:4, 7) இன்னொரு வழி, மற்றவர்கள் நமக்குச் செய்த நல்ல விஷயங்களை நினைத்துப்பார்ப்பதும், அவர்களுக்கு நன்றியோடு இருப்பதும்தான்! நன்றியோடு இருப்பவர்கள் சந்தோஷமாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். யெகோவாவுக்கு அபார ஞாபக சக்தி இருக்கிறது! ஆனாலும், சில விஷயங்களை மறந்துவிட வேண்டுமென்று அவர் நினைக்கிறார். உதாரணத்துக்கு, நாம் மனம் திருந்தும்போது, நம்முடைய தவறுகளை மன்னித்து மறந்து விட வேண்டுமென்று நினைக்கிறார். (சங். 25:7; 130:3, 4) இந்த விஷயத்தில், அவரைப் போலவே நாம் நடந்துகொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார். அதாவது, மற்றவர்கள் நம்மிடம் மன்னிப்பு கேட்கும்போது, அவர்கள் செய்த தவறுகளை மன்னித்து மறந்து விட வேண்டும்.—மத். 6:14; லூக். 17:3, 4.

யெகோவாவுக்குப் புகழ் சேர்ப்பதற்காக மூளை என்ற பரிசைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பரிசுக்கு நாம் நன்றி காட்டலாம் (பாரா 14) *

14. மூளை என்ற அற்புத பரிசுக்கு நாம் நன்றியோடு இருக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?

14 மூளை என்ற அற்புதமான பரிசைக் கொடுத்த யெகோவாவுக்குப் புகழ் சேர்ப்பதன் மூலம் அந்தப் பரிசுக்கு நாம் நன்றி காட்டலாம். சிலர், சுயநலத்துக்காக தங்களுடைய மூளையைப் பயன்படுத்துகிறார்கள். அதாவது, சரி எது தவறு எது என்பதற்கான நெறிகளைத் தாங்களாகவே ஏற்படுத்திக்கொள்கிறார்கள். நாமாகவே ஏற்படுத்திக்கொண்ட நெறிமுறைகளைவிட யெகோவா ஏற்படுத்தியிருக்கிற நெறிமுறைகள்தான் உயர்ந்தவை! ஏனென்றால், நம்மைப் படைத்தவரே அவர்தான்!! (ரோ. 12:1, 2) அவருடைய நெறிமுறைகளின்படி வாழும்போது, நம் வாழ்க்கை சமாதானமாக இருக்கும். (ஏசா. 48:17, 18) அதோடு, நாம் எதற்காக வாழ்கிறோமோ அதைச் செய்ய முடியும். அதாவது, நம்மைப் படைத்தவரும் நம்முடைய அப்பாவுமான யெகோவாவைச் சந்தோஷப்படுத்த முடியும்.—நீதி. 27:11.

பைபிள்—விலையுயர்ந்த பரிசு!

15. பைபிள் என்ற பரிசு, மக்கள்மேல் யெகோவா வைத்திருக்கிற அன்பின் அடையாளம் என்று எப்படிச் சொல்லலாம்?

15 கடவுள் கொடுத்த ஓர் அன்பான பரிசுதான் பைபிள். நம்மை அவர் ரொம்ப நேசிப்பதால், பைபிளை எழுதும்படி அவர் மனிதர்களைத் தூண்டினார். நாம் எப்படி உருவானோம்... நாம் எதற்காக வாழ்கிறோம்... நம் எதிர்காலம் எப்படி இருக்கும்... போன்ற முக்கியமான கேள்விகளுக்கு பைபிளில் அவர் பதில் சொல்லியிருக்கிறார். இந்தக் கேள்விகளுக்கு நாம் பதில் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, பைபிளை மொழிபெயர்க்கும்படி பல நூற்றாண்டுகளாக மனிதர்களை அவர் தூண்டியிருக்கிறார். இன்று, முழுமையாகவோ பகுதியாகவோ 3,000-க்கும் அதிகமான மொழிகளில் பைபிள் கிடைக்கிறது. வரலாற்றிலேயே மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டு, வினியோகிக்கப்படுகிற புத்தகம் என்றால் அது பைபிள்தான்! மக்கள் எங்கே வாழ்ந்தாலும் சரி, என்ன மொழி பேசினாலும் சரி, தங்களுடைய சொந்த மொழியிலேயே பைபிளைப் படிக்கிற வாய்ப்பு நிறைய பேருக்கு இருக்கிறது.—“ ஆப்பிரிக்க மொழிகளில் பைபிள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.

16. (அ) மத்தேயு 28:19, 20-ன்படி பைபிள் என்ற பரிசுக்கு நாம் எப்படி நன்றி காட்டலாம்? (ஆ) பைபிள் என்ற பரிசுக்கு நன்றி காட்ட வேறென்ன வழிகள் இருக்கின்றன?

16 தினமும் பைபிளைப் படிப்பது... அது சொல்லித்தரும் பாடங்களை ஆழமாக யோசிப்பது... அதன்படி செய்வதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வது... ஆகியவற்றின் மூலம் பைபிள் என்ற பரிசுக்கு நாம் நன்றி காட்டலாம். அதோடு, பைபிள் சொல்லும் செய்தியை நம்மால் முடிந்தளவு நிறைய பேரிடம் சொல்வதன் மூலமும் நம்முடைய நன்றியைக் காட்டலாம்.—சங். 1:1-3; மத். 24:14; மத்தேயு 28:19, 20-ஐ வாசியுங்கள்.

17. எந்தெந்த பரிசுகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்த்தோம், அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

17 அழகு ததும்பும் பூமி என்ற அருமையான வீடு, அற்புதமாக வடிவமைக்கப்பட்ட நம்முடைய மூளை, பொக்கிஷம் போன்ற பைபிள் ஆகிய பரிசுகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்த்தோம். ஆனால், வேறுசில பரிசுகளையும் யெகோவா கொடுத்திருக்கிறார். பார்க்க முடியாத அந்தப் பொக்கிஷங்களைப் பற்றி அடுத்த கட்டுரையில் சிந்திக்கலாம்.

பாட்டு 112 யெகோவாவே தேவாதி தேவன்

^ பாரா. 5 யெகோவாவுக்கும், அவர் நமக்குத் தந்திருக்கிற மூன்று பரிசுகளுக்கும் நன்றியோடு இருப்பதற்கு இந்தக் கட்டுரை உதவும். கடவுள் இருக்கிறாரா என்று சந்தேகப்படுகிறவர்களிடம் காரணங்காட்டிப் பேசவும் உதவும்.

^ பாரா. 64 படவிளக்கம்: வேறு நாட்டிலிருந்து குடிமாறி வந்திருப்பவர்களுக்கு பைபிளைப் பற்றிச் சொல்லித்தருவதற்காக, ஒரு சகோதரி அவர்களுடைய மொழியைக் கற்றுக்கொள்கிறார்.