Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 41

‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ உண்மையாக இருங்கள்!

‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ உண்மையாக இருங்கள்!

“யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறவர்களே, அவரை நேசியுங்கள்! உண்மையாக இருக்கிறவர்களை யெகோவா பாதுகாக்கிறார்.”—சங். 31:23.

பாட்டு 154 சகித்தே ஓடுவோம்!

இந்தக் கட்டுரையில்... *

1-2. (அ) சீக்கிரத்தில் உலகத் தலைவர்கள் என்ன அறிவிப்பைச் செய்வார்கள்? (ஆ) என்னென்ன கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள வேண்டும்?

இதைக் கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்: “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்பைக் கொஞ்சம் முன்புதான் உலகத் தலைவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த உலகமே சமாதானம் தவழும் இடமாக மாறிவிட்டதாக அவர்கள் பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள். எல்லாமே அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக மக்கள் நம்ப வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், எல்லாமே அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்குமா? இல்லை, அடுத்ததாக வரவிருப்பது நிச்சயம் அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்காது! ஏனென்றால், “எதிர்பாராத நேரத்தில் திடீரென்று அவர்களுக்கு அழிவு வரும். அவர்களால் தப்பிக்கவே முடியாது.”—1 தெ. 5:3.

2 இப்போது, முக்கியமான சில கேள்விகளுக்கு நாம் பதில் தெரிந்துகொள்ளலாம். அவை: ‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ என்ன நடக்கும்? அப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்ப்பார்? மிகுந்த உபத்திரவத்தின்போது உண்மையாக இருப்பதற்கு இப்போதே நாம் எப்படித் தயாராகலாம்?—மத். 24:21.

‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ என்ன நடக்கும்?

3. வெளிப்படுத்துதல் 17:5, 15-18-ன்படி, ‘மகா பாபிலோனை’ கடவுள் எப்படி அழிப்பார்?

3 வெளிப்படுத்துதல் 17:5, 15-18-ஐ வாசியுங்கள். மிகுந்த உபத்திரவத்தின்போது “மகா பாபிலோன்” அழிக்கப்படும். ஏற்கெனவே பார்த்ததுபோல், உலகத் தலைவர்களால் அதைத் தடுக்க முடியாது. ஏனென்றால், ‘கடவுள் தன்னுடைய எண்ணத்தை அவர்களுடைய இதயங்களில் வைப்பார்.’ சர்ச் அமைப்புகள் உட்பட, பொய் மதங்கள் எல்லாவற்றையும் அழிப்பதுதான் கடவுளுடைய எண்ணம்! கடவுள் தன்னுடைய எண்ணத்தை ‘கருஞ்சிவப்பு நிறமுள்ள மூர்க்க மிருகத்தின்’ ‘பத்துக் கொம்புகளின்’ இதயங்களில் வைப்பார். ஐக்கிய நாடுகள் சபைதான் அந்த “மூர்க்க மிருகம்.” அதை ஆதரிக்கிற அரசாங்கங்கள்தான் அந்தப் பத்துக் கொம்புகள். (வெளி. 17:3, 11-13; 18:8) இந்த அரசாங்கங்கள் பொய் மதங்களின் மீது பாயும்போது, மிகுந்த உபத்திரவம் ஆரம்பமாகும். திடீரென்று நடக்கிற, திகிலூட்டுகிற ஒரு சம்பவமாக அது இருக்கும். உலகத்தில் இருக்கிற ஒவ்வொருவரையும் அது பாதிக்கும்.

4. (அ) பொய் மதங்களை அழிப்பதற்கு அரசாங்கங்கள் என்னென்ன காரணங்களைச் சொல்லலாம்? (ஆ) பொய் மதங்களின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்ன முடிவுக்கு வரலாம்?

4 மகா பாபிலோனை அழிப்பதற்கு என்ன காரணங்களை உலகத் தலைவர்கள் சொல்லப்போகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. உலக சமாதானத்துக்கு மதங்கள் தடையாக இருப்பதாகவும், அரசியல் விவகாரங்களில் அவை மூக்கை நுழைப்பதாகவும் அவர்கள் சொல்லலாம். அல்லது, மிதமிஞ்சிய சொத்துகளை மத அமைப்புகள் குவித்துவைத்திருப்பதாக அவர்கள் சொல்லலாம். (வெளி. 18:3, 7) பொய் மதங்களை அரசாங்கங்கள் அழிக்கும்போது என்ன நடக்கலாம்? அந்த மதங்களைச் சேர்ந்த தனி நபர்கள் ஒவ்வொருவரையும் அவை அழித்துவிடுமா? அப்படி நடப்பதற்கு அவ்வளவாக வாய்ப்பில்லை. மத அமைப்புகளைத்தான் அவை அழிக்கும். மத அமைப்புகள் அழிந்த பிறகு, தங்களுடைய மதத் தலைவர்கள் தங்களை ஏமாற்றிவிட்டதாக மக்கள் நினைப்பார்கள். அதோடு, தங்களுக்கும் மதத்துக்கும் ஆரம்பத்திலிருந்தே எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அவர்கள் வெளிப்படையாகச் சொல்லலாம்.

5. மிகுந்த உபத்திரவத்தைப் பற்றி யெகோவா என்ன வாக்குக் கொடுத்திருக்கிறார், ஏன்?

5 பொய் மதங்கள் அழிக்கப்படுகிற காலம் எவ்வளவு நீண்டதாக இருக்கும் என்பதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. ஆனால், ரொம்பக் காலம் நீடிக்காது என்பது உறுதி. (வெளி. 18:10, 21) ஏனென்றால், தன்னால் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களும்’ உண்மை மதமும் தப்பிப்பதற்காக, மிகுந்த உபத்திரவம் நடக்கப்போகிற ‘அந்த நாட்களைக் குறைக்கப்போவதாக’ யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். (மாற். 13:19, 20) அப்படியென்றால், மிகுந்த உபத்திரவத்தின் ஆரம்பத்துக்கும் அர்மகெதோன் போருக்கும் இடைப்பட்ட காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்ப்பார்?

தூய வணக்கத்தின் பக்கம் தொடர்ந்து உறுதியாக நில்லுங்கள்!

6. பொய் மதத்தோடு இருக்கிற தொடர்பைத் துண்டித்துக்கொண்டால் மட்டும் போதுமா? விளக்குங்கள்.

6 முந்தின கட்டுரையில் பார்த்ததுபோல், மகா பாபிலோனுக்கும் நமக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்கக் கூடாது என்று யெகோவா எதிர்பார்க்கிறார். அப்படியென்றால், பொய் மதத்தோடு இருக்கிற தொடர்பைத் துண்டித்துக்கொண்டால் மட்டும் போதுமா? போதாது! யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்யவும் வேண்டும். அதாவது, தூய வணக்கத்தின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டும். இதைச் செய்வதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன.

கஷ்டமான சமயங்களில்கூட கூட்டங்களைத் தவறவிடாமல் இருக்க உறுதியாக இருப்போம் (பாரா 7) *

7. (அ) ஒழுக்கம் சம்பந்தமாக யெகோவா கொடுத்திருக்கிற நீதியான நெறிமுறைகளுக்குக் கீழ்ப்படிவதில் நாம் எப்படி உறுதியாக இருக்கலாம்? (ஆ) ஒன்றுகூடி வரும்படி எபிரெயர் 10:24, 25 ஏன் சொல்கிறது, அதன்படி செய்வது இப்போது ஏன் ரொம்ப முக்கியம்?

7 முதலாவதாக, ஒழுக்கம் சம்பந்தமாக யெகோவா கொடுத்திருக்கிற நீதியான நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும். இந்த உலகத்தில் இருக்கிற கேவலமான பழக்கங்களை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். உதாரணத்துக்கு, ஆணும்-ஆணும் பெண்ணும்-பெண்ணும் கல்யாணம் செய்துகொள்வதையும், ஓரினப்புணர்ச்சி சம்பந்தப்பட்ட மற்ற பழக்கவழக்கங்களையும் இந்த உலகம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் இவை உட்பட, பாலியல் முறைகேடு சம்பந்தப்பட்ட எந்தப் பழக்கவழக்கங்களையும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். (மத். 19:4, 5; ரோ. 1:26, 27) இரண்டாவதாக, சகோதர சகோதரிகளோடு சேர்ந்து யெகோவாவை வணங்குவதை விட்டுவிடக் கூடாது. ராஜ்ய மன்றங்களில், தேவைப்பட்டால் வீடுகளில் அல்லது ரகசியமான வேறு இடங்களில், சகோதர சகோதரிகளோடு நாம் கூடிவர வேண்டும். என்ன நடந்தாலும் சரி, கூட்டங்களுக்குப் போவதை நாம் ஒருபோதும் விட்டுவிட மாட்டோம். யெகோவாவின் “நாள் நெருங்கி வருவதை நாம் எந்தளவுக்குப் பார்க்கிறோமோ அந்தளவுக்கு” ஒன்றுகூடி வர வேண்டும்.எபிரெயர் 10:24, 25-ஐ வாசியுங்கள்.

8. நாம் அறிவிக்கிற செய்தியில் என்ன மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது?

8 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை இப்போது நாம் பிரசங்கிக்கிறோம், சீஷராக்கும் வேலையை மும்முரமாகச் செய்கிறோம். ஆனால் மிகுந்த உபத்திரவத்தின்போது, நாம் அறிவிக்கிற செய்தியில் மாற்றம் ஏற்படலாம். அந்தச் செய்தி, ஆலங்கட்டிகள் தங்களைத் தாக்குவது போன்ற உணர்வை மக்களுக்குக் கொடுக்கும். (வெளி. 16:21) சாத்தானுடைய இந்த உலகம் சீக்கிரத்தில் அழிந்து நாசமாகப்போகிறது என்ற செய்தியை நாம் ஒருவேளை அறிவிக்கலாம். ஆனால், என்ன அறிவிக்க வேண்டும், அதை எப்படி அறிவிக்க வேண்டும் என்பதெல்லாம் போகப் போக நமக்குத் தெரியவரும். நூற்றுக்கும் அதிகமான வருஷங்களாக நாம் பயன்படுத்திவருகிற ஊழிய முறைகளையே பயன்படுத்துவோமா அல்லது வேறுசில முறைகளைப் பயன்படுத்துவோமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! எது எப்படியிருந்தாலும், யெகோவாவின் நியாயத்தீர்ப்புச் செய்தியை அஞ்சா நெஞ்சத்தோடு அறிவிக்கிற அருமையான பாக்கியம் நமக்குக் கிடைக்கும் என்று நம்பலாம்.—எசே. 2:3-5.

9. நம்முடைய செய்தியைக் கேட்டு தேசங்கள் என்ன செய்யலாம், ஆனால் நாம் எதில் உறுதியாக இருக்கலாம்?

9 நாம் அறிவிக்கப்போகிற செய்தியால் இன்னொரு விஷயம் நடப்பதற்கும் அதிக வாய்ப்பிருக்கிறது. அதாவது, நம் செய்தியைக் கேட்டு தேசங்கள் கோபத்தில் கொதிக்கலாம், நிரந்தரமாக நம்முடைய வாயை அடைப்பதற்கு முயற்சி செய்யலாம். ஆனால், ஊழியம் செய்வதற்கு இப்போது எப்படி யெகோவாவை நம்பியிருக்கிறோமோ, அதேபோல் அப்போதும் அவரை நம்பியிருக்க வேண்டும். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான பலத்தை அவர் நிச்சயம் கொடுப்பார். இதில் சந்தேகமே வேண்டாம்!—மீ. 3:8.

கடவுளுடைய மக்களுக்கு எதிரான தாக்குதலைச் சந்திக்கத் தயாராக இருங்கள்

10. லூக்கா 21:25-28-ல் சொல்லியிருப்பதுபோல், மிகுந்த உபத்திரவத்தின்போது பெரும்பாலான மக்கள் என்ன செய்வார்கள்?

10 லூக்கா 21:25-28-ஐ வாசியுங்கள். மிகுந்த உபத்திரவத்தின்போது மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோவார்கள். ஏனென்றால், அவர்கள் மலைபோல் நம்பிக்கொண்டிருந்த அரசியல், வர்த்தகம், பலம்படைத்த வேறுசில அம்சங்கள் எல்லாமே மண்ணைக் கவ்வ ஆரம்பித்திருக்கும். மனித சரித்திரத்திலேயே இதுவரை இல்லாத ஓர் இருண்ட காலமாக அது இருக்கும். அந்தச் சமயத்தில், தங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் மக்கள் “தத்தளிப்பார்கள்,” கவலை அவர்களை வாட்டிவதைக்கும். (செப். 1:14, 15) உலகத்தின் பாகமாக இல்லாததால், யெகோவாவின் மக்களுக்கும் அந்தச் சமயத்தில் சில கஷ்டங்கள் வரலாம். அடிப்படைத் தேவைகள்கூட இல்லாமல் போகலாம்.

11. (அ) தேசங்களின் முழு கவனமும் ஏன் யெகோவாவின் மக்கள்மீது இருக்கும்? (ஆ) மிகுந்த உபத்திரவத்தை நினைத்து நாம் ஏன் பயப்பட வேண்டியதில்லை?

11 மிகுந்த உபத்திரவத்தின்போது, யெகோவாவின் சாட்சிகளுடைய மதம் மட்டும் மிச்சம் இருப்பதை மக்கள் கவனிப்பார்கள். ஒரு கட்டத்தில், அது அவர்களை எரிச்சலடையச் செய்யும். சோஷியல் மீடியா உட்பட பல வழிகளில் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்துவதன் மூலம் அவர்கள் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தலாம். நம்முடைய மதம் மட்டும் அழியாமல் இருப்பதைப் பார்த்து உலகத் தலைவர்களும், அவர்களுடைய அரசனாகிய சாத்தானும் நம்மீது வெறுப்பைக் கொட்டுவார்கள். இந்த உலகத்தின் எல்லா மதங்களையும் பூண்டோடு அழிக்க வேண்டும் என்ற அவர்களுடைய எண்ணம் நிறைவேறாததால், அவர்களுடைய முழு கவனமும் நம்மீது இருக்கும். அப்போது, மாகோகு தேசத்தின் கோகு * என்ற ஸ்தானத்தை தேசங்கள் ஏற்கும். அவையெல்லாம் ஒன்றுசேர்ந்துகொண்டு, தங்களுடைய சக்தியையெல்லாம் ஒன்றுதிரட்டி, யெகோவாவின் மக்களை வெறித்தனமாகத் தாக்கும். (எசே. 38:2, 14-16) அந்தச் சமயத்தில் நடக்கப்போகிற ஒவ்வொரு நுணுக்கமான விஷயமும் நமக்குத் தெரியாததால், என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று நினைத்து நாம் கவலைப்பட ஆரம்பித்துவிடலாம். ஆனால், நாம் ஒருபோதும் பயப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்குத் தேவையான எல்லா அறிவுரைகளையும் யெகோவா கொடுப்பார். (சங். 34:19) ‘விடுதலை நெருங்கிவருவது’ நமக்குத் தெரிவதால், ‘நேராக நிமிர்ந்து நின்று [நம்முடைய] தலைகளை உயர்த்தலாம்.’ * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

12. மிகுந்த உபத்திரவத்தின்போது விசுவாசத்தை இழந்துவிடாமல் இருக்க, “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” நம்மை எப்படித் தயார்படுத்தி வந்திருக்கிறது?

12 மிகுந்த உபத்திரவத்தின்போது நம்முடைய விசுவாசத்தை இழந்துவிடாமல் இருக்க, “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” நம்மை நிறைய வழிகளில் தயார்படுத்தி வந்திருக்கிறது. (மத். 24:45) உதாரணத்துக்கு, 2016, 2017 மற்றும் 2018-ல் நடந்த மண்டல மாநாடுகளைப் பற்றி யோசித்துப்பாருங்கள். யெகோவாவின் நாள் நெருங்கிவருகிற இந்தச் சமயத்தில், நமக்குத் தேவையான குணங்களை அதிகமாக வளர்த்துக்கொள்ள இந்த மாநாடுகள் ரொம்ப உதவியாக இருந்தன. அந்தக் குணங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

உண்மைத்தன்மையையும், சகிப்புத்தன்மையையும், தைரியத்தையும் பலப்படுத்துங்கள்

“மிகுந்த உபத்திரவத்திலிருந்து” தப்பிப்பதற்கு இப்போதே தயாராகுங்கள் (பாராக்கள் 13-16) *

13. நம்முடைய உண்மைத்தன்மையை நாம் எப்படிப் பலப்படுத்தலாம், அதை இப்போதே செய்வது ஏன் முக்கியம்?

13 உண்மைத்தன்மை: “யெகோவாவுக்கு உண்மையாக இருங்கள்!” என்பதுதான் 2016-ல் நடந்த மண்டல மாநாட்டின் தலைப்பு. யெகோவாவோடு நெருங்கிய பந்தம் இருந்தால்தான் நாம் அவருக்கு உண்மையாக இருக்க முடியும் என்பதை இந்த மாநாட்டிலிருந்து கற்றுக்கொண்டோம். உள்ளப்பூர்வமான ஜெபம், ஊக்கமான பைபிள் படிப்பு ஆகியவற்றின் மூலம் நாம் யெகோவாவிடம் நெருங்கிவர முடியும் என்பது இந்த மாநாட்டில் ஞாபகப்படுத்தப்பட்டது. இதையெல்லாம் செய்தால், எவ்வளவு பெரிய பிரச்சினைகளைக்கூட நம்மால் சமாளிக்க முடியும். சாத்தானுடைய உலகத்துக்கு முடிவு நெருங்க நெருங்க, கடவுளுக்கும் அவருடைய அரசாங்கத்துக்கும் நாம் காட்டுகிற உண்மைத்தன்மைக்குப் பயங்கர சோதனைகள் வரும் என்று எதிர்பார்க்கலாம். மக்கள் நம்மை தொடர்ந்து கேலி கிண்டல் செய்யலாம். (2 பே. 3:3, 4) இதற்கு ஒரு காரணம், நாம் நடுநிலையோடு இருப்பதுதான். அதனால், உண்மைத்தன்மையோடு இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் இப்போதே உறுதியாக இருக்க வேண்டும். அப்போதுதான், மிகுந்த உபத்திரவத்தின்போதும் நம்மால் தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையோடு இருக்க முடியும்.

14. (அ) இன்று நம்மை வழிநடத்திவருகிற சகோதரர்களுடைய விஷயத்தில் என்ன மாற்றம் ஏற்படும்? (ஆ) அந்தச் சமயத்தில் நாம் ஏன் உண்மைத்தன்மையைக் காட்ட வேண்டும்?

14 இப்போது ஆளும் குழுவினர் நம்மை வழிநடத்தி வருகிறார்கள். ஆனால், மிகுந்த உபத்திரவத்தின்போது இதில் மாற்றம் ஏற்படும். ஏனென்றால், அர்மகெதோன் போரில் ஈடுபடுவதற்காக, மிகுந்த உபத்திரவத்தின் ஒரு கட்டத்தில், அபிஷேகம் செய்யப்பட்ட எல்லா கிறிஸ்தவர்களும் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள். (மத். 24:31; வெளி. 2:26, 27) அப்போது, ஆளும் குழுவில் உள்ளவர்கள் இந்தப் பூமியில் இருக்க மாட்டார்கள். ஆனாலும், திரள் கூட்டத்தார் எப்போதும்போல் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பார்கள். அதில் இருக்கிற தகுதிவாய்ந்த சகோதரர்கள் நம்மை வழிநடத்துவார்கள். இந்தச் சகோதரர்களை ஆதரிப்பதன் மூலமும், இவர்கள் வழியாக கடவுள் தருகிற வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிவதன் மூலமும் நம்முடைய உண்மைத்தன்மையைக் காட்ட வேண்டும். ஏனென்றால், நமக்கு வாழ்வா சாவா என்பது அதில்தான் அடங்கியிருக்கிறது.

15. நம்முடைய சகிப்புத்தன்மையை நாம் எப்படிப் பலப்படுத்தலாம், இப்போதே அதைச் செய்வது ஏன் முக்கியம்?

15 சகிப்புத்தன்மை: “சோர்ந்துவிடாதீர்கள்!” என்பதுதான் 2017-ல் நடந்த மண்டல மாநாட்டின் தலைப்பு. சோதனைத் தீயைத் தாக்குப்பிடிப்பதற்குத் தேவையான உதவியை இந்த மாநாடு தந்தது. நாம் எந்தளவு சகிப்புத்தன்மையைக் காட்டுகிறோம் என்பது, நம்முடைய சூழ்நிலைகளைப் பொறுத்து அல்ல, நாம் எந்தளவு யெகோவாவை நம்பியிருக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது என்று இந்த மாநாட்டிலிருந்து கற்றுக்கொண்டோம். (ரோ. 12:12) ‘முடிவுவரை சகித்திருப்பவர் மீட்புப் பெறுவார்’ என்ற இயேசுவின் வாக்குறுதியை நாம் எப்போதும் மறக்கக் கூடாது. (மத். 24:13) எப்பேர்ப்பட்ட சோதனை வந்தாலும் நாம் தொடர்ந்து உண்மையாக இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது. ஒவ்வொரு சோதனையையும் நாம் வெற்றிகரமாகத் தாண்டிவரும்போது, மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்கு முன்பே நம்முடைய விசுவாசம் பலப்படும்.

16. நாம் தைரியமாக இருப்போமா இல்லையா என்பது எதைப் பொறுத்தது, இப்போதே எப்படித் தைரியத்தை வளர்த்துக்கொள்ளலாம்?

16 தைரியம்: “தைரியமாக இருங்கள்!” என்பதுதான் 2018-ல் நடந்த மண்டல மாநாட்டின் தலைப்பு. தைரியம் என்பது, நம்முடைய திறமைகளைப் பொறுத்தது கிடையாது என்பதை இந்த மாநாட்டிலிருந்து கற்றுக்கொண்டோம். சகிப்புத்தன்மையைப் போல்தான் தைரியமும்! நாம் எந்தளவு யெகோவாவை நம்பியிருக்கிறோமோ, அந்தளவு தைரியமாக இருப்போம். அவரை இன்னும் அதிகமாக நம்பியிருக்க நாம் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்? தினமும் பைபிளைப் படிப்பதன் மூலமும், கடந்த காலத்தில் யெகோவா தன்னுடைய மக்களை எப்படியெல்லாம் காப்பாற்றியிருக்கிறார் என்பதை நன்றாக யோசித்துப்பார்ப்பதன் மூலமும் அதைக் கற்றுக்கொள்ளலாம். (சங். 68:20; 2 பே. 2:9) மிகுந்த உபத்திரவம் நடக்கும் சமயத்தில் தேசங்கள் நம்மைத் தாக்கும்போது, நாம் தைரியமாக இருக்க வேண்டும்; இதுவரை இல்லாதளவுக்கு யெகோவாவை நம்பியிருக்க வேண்டும். (சங். 112:7, 8; எபி. 13:6) இப்போதே யெகோவாவை நம்பியிருந்தால், கோகுவின் தாக்குதலைத் தாக்குப்பிடிப்பதற்கான தைரியம் அப்போது கிடைக்கும். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

விடுதலையை எதிர்பார்த்து ஆர்வமாகக் காத்திருங்கள்

சீக்கிரத்தில் ஆரம்பிக்கப்போகிற அர்மகெதோன் போரில், இயேசுவும் அவரோடு சேர்ந்த பரலோகப் படைவீரர்களும் கடவுளுடைய எதிரிகளை நாசமாக்குவார்கள் (பாரா 17)

17. அர்மகெதோனை நினைத்து நாம் ஏன் பயப்பட வேண்டியதில்லை? (அட்டைப் படம்)

17 முந்தின கட்டுரையில் பார்த்ததுபோல், நம்மில் நிறைய பேருடைய வாழ்க்கை முழுவதும் கடைசி நாட்களிலேயே கழிந்திருக்கும். ஆனால், நமக்கு இன்னொரு அருமையான வாய்ப்பு இருக்கிறது. மிகுந்த உபத்திரவம் நடக்கப்போகும் காலப் பகுதியிலும் நாம் வாழ்வோம், அதிலிருந்து தப்பிப்போம். அர்மகெதோன் போர், இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்தின் உச்சக்கட்டமாக இருக்கும்! ஆனால், அந்தப் போரை நினைத்து நாம் பயப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், இது நம்முடைய போர் அல்ல, யெகோவாவின் போர்! (நீதி. 1:33; எசே. 38:18-20; சக. 14:3) யெகோவா எப்போது கட்டளை கொடுக்கிறாரோ, அப்போது இயேசு பரலோகப் படையை போர்க்களத்துக்கு வழிநடத்துவார். அபிஷேகம் செய்யப்பட்ட எல்லா கிறிஸ்தவர்களும், லட்சக்கணக்கான தேவதூதர்களும் இயேசுவோடு சேர்ந்து போர் செய்வார்கள். சாத்தானையும், பேய்களையும், பூமியிலிருக்கிற அவர்களுடைய படையையும் எதிர்த்து இவர்கள் போர் செய்வார்கள்.​—தானி. 12:1; வெளி. 6:2; 17:14.

18. (அ) யெகோவா என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறார்? (ஆ) எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையோடு இருக்க, வெளிப்படுத்துதல் 7:9, 13-17 வசனங்கள் எப்படி உதவுகின்றன?

18 “உன்னைத் தாக்குவதற்காக உருவாக்கப்படுகிற எந்த ஆயுதமும் ஒன்றுமில்லாமல் போகும்” என்ற வாக்குறுதியை யெகோவா கொடுத்திருக்கிறார். (ஏசா. 54:17) அதோடு, தன்னுடைய உண்மை ஊழியர்களாகிய “திரள் கூட்டமான மக்கள்,” ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பிப்பார்கள்’ என்றும், தொடர்ந்து தனக்குப் பரிசுத்த சேவை செய்வார்கள் என்றும் யெகோவா உறுதியளித்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 7:9, 13-17-ஐ வாசியுங்கள்.) எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையோடு இருப்பதற்கு பைபிள் எந்தளவு உதவுகிறது என்று பார்த்தீர்களா! தனக்கு ‘உண்மையாக இருக்கிறவர்களை யெகோவா பாதுகாப்பார்’ என்பது நமக்குத் தெரியும். (சங். 31:23) தன்னைப் பற்றிச் சொல்லப்பட்ட எல்லா குற்றச்சாட்டுகளும் பொய் என்பதையும், மகிமைக்கும் புகழுக்கும் தான் மட்டுமே தகுதியானவர் என்பதையும் யெகோவா நிரூபிக்கப்போகும் காலம் வரப்போகிறது. அப்போது, யெகோவாவை நேசிக்கிறவர்களும், அவரைப் புகழ்கிறவர்களும் அளவில்லாத ஆனந்தம் அடைவார்கள்.​—எசே. 38:23.

19. என்ன அருமையான வாய்ப்பு நமக்குக் காத்திருக்கிறது?

19 சாத்தானுடைய ஆதிக்கம் இல்லாத புதிய உலகத்தில் வாழப்போகிற மக்களைப் பற்றி 2 தீமோத்தேயு 3:2-5 வசனங்கள் சொல்வதாக இருந்தால், அவற்றில் என்ன சொல்லப்பட்டிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? (“ எதிர்காலத்தில் இருக்கப்போகிற மக்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.) இதைப் பற்றி, ஆளும் குழுவின் அங்கத்தினராக இருந்த சகோதரர் ஜார்ஜ் கேங்கஸ் * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இப்படிச் சொன்னார்: “உலகம் அற்புதமான ஓர் இடமாக மாறியிருக்கும், எல்லாரும் யெகோவாவை மட்டும்தான் வணங்குவார்கள்! புதிய உலகத்தில் வாழ்கிற வாய்ப்பு சீக்கிரத்தில் உங்களுக்குக் கிடைக்கப்போகிறது. யெகோவா எவ்வளவு காலம் இருப்பாரோ, அவ்வளவு காலம் நீங்களும் இருப்பீர்கள். நம் வாழ்க்கைக்கு முடிவே இருக்காது.” அது ஓர் அற்புதமான வாய்ப்பு!

பாட்டு 32 உறுதியாய் நில்லுங்கள்!

^ பாரா. 5 சீக்கிரத்தில் “மிகுந்த உபத்திரவம்” வரப்போவது நமக்குத் தெரியும். யெகோவாவின் மக்களாகிய நமக்கு அப்போது என்ன நடக்கும்? அந்தச் சமயத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்ப்பார்? மிகுந்த உபத்திரவத்தின்போது நாம் உண்மையாக இருக்க என்னென்ன குணங்களை இப்போது வளர்த்துக்கொள்ள வேண்டும்? இதற்கான பதில்களை இந்தக் கட்டுரை தரும்.

^ பாரா. 11 வார்த்தைகளின் விளக்கம்: மாகோகு தேசத்தின் கோகு (சுருக்கமாக, கோகு) என்ற சொற்றொடர், மிகுந்த உபத்திரவத்தின்போது யெகோவாவின் மக்களைத் தாக்குவதற்காக ஒன்றுசேருகிற தேசங்களின் கூட்டணியைக் குறிக்கிறது.

^ பாரா. 11 அர்மகெதோன் போருக்கு முன்னால் நடக்கப்போகிற சம்பவங்களைப் பற்றி விளக்கமாகத் தெரிந்துகொள்ள, கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது! என்ற புத்தகத்தின் 21-வது அதிகாரத்தைப் பாருங்கள். மாகோகு தேசத்தின் கோகுவுடைய தாக்குதலைப் பற்றியும், அர்மகெதோன் போரின்போது தன்னுடைய மக்களை யெகோவா எப்படிக் காப்பாற்றுவார் என்பதைப் பற்றியும் விவரமாகத் தெரிந்துகொள்ள, தூய வணக்கம்​—பூமியெங்கும்! என்ற புத்தகத்தின் 17, 18 அதிகாரங்களைப் பாருங்கள்.

^ பாரா. 16 “அன்பு ஒருபோதும் ஒழியாது”! என்பதுதான் 2019-ம் வருஷத்தின் மண்டல மாநாட்டின் தலைப்பு. யெகோவாவின் அன்பான அரவணைப்பில் எப்போதும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்ற உறுதியை இந்த மாநாடு தருகிறது.​—1 கொ. 13:8.

^ பாரா. 19 டிசம்பர் 1, 1994 காவற்கோபுரத்தில் வந்த ‘அவருடைய கிரியைகள் அவரோடே கூடப்போம்’ என்ற கட்டுரையைப் பாருங்கள்.

^ பாரா. 64 படங்களின் விளக்கம்: மிகுந்த உபத்திரவத்தின்போது, யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு சிறிய தொகுதி, சபைக் கூட்டத்துக்காக தைரியமாக ஒரு காட்டில் ஒன்றுகூடி வருகிறார்கள்.

^ பாரா. 66 படங்களின் விளக்கம்: யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களாகிய திரள் கூட்டமான மக்கள், மிகுந்த உபத்திரவத்திலிருந்து சந்தோஷமாகத் தப்பித்து வருகிறார்கள்!