Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

பூர்வ இஸ்ரவேல் மக்கள், தினசரி வழக்குகளைத் தீர்ப்பதற்குத் திருச்சட்டத்தின் நியமங்களைக் கடைப்பிடித்தார்களா?

சிலசமயங்களில் கடைப்பிடித்தார்கள்! ஒரு உதாரணத்தைக் கவனிக்கலாம். உபாகமம் 24:14, 15 இப்படிச் சொல்கிறது: “கஷ்டத்திலும் வறுமையிலும் வாடுகிற கூலியாளுக்குக் கூலி தராமல் ஏமாற்றக் கூடாது, அவன் உங்கள் சகோதரனாக இருந்தாலும் சரி, உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்துக்காரனாக இருந்தாலும் சரி. . . . நீங்கள் அப்படிக் கொடுக்காவிட்டால் உங்களைப் பற்றி யெகோவாவிடம் முறையிடுவான், அப்போது நீங்கள் பாவம் செய்தவர்களாக இருப்பீர்கள்.”

வயலில் வேலை பார்த்தவரின் மனு எழுதப்பட்டிருந்த மண் ஓடு

கி.மு. ஏழாம் நூற்றாண்டில், வயலில் வேலை பார்த்த ஒருவர் அப்படி முறையிட்டதாகத் தெரிகிறது. ஒரு குறிப்பிட்ட அளவு தானியத்தைக் கொண்டுபோய்ச் சேர்க்காததாக சொல்லப்பட்ட அந்தக் கூலியாளுக்காக ஒரு மனு எழுதப்பட்டதாகத் தெரிகிறது. மண் ஓட்டில் எழுதப்பட்ட அந்த மனு அஸ்தோத்துக்குப் பக்கத்தில் கண்டெடுக்கப்பட்டது. அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது: “சில நாட்களுக்கு முன்பு, உங்கள் அடிமை [மனுதாரர்] அறுவடை செய்ததையெல்லாம் கொண்டுபோய்ச் சேர்த்த பிறகு, ஷோபேயின் மகன் ஹோஷயாஹூ வந்து, உங்கள் அடிமையின் உடையை எடுத்துக்கொண்டு போய்விட்டார். . . . கொளுத்தும் வெயிலில் என்னோடு சேர்ந்து அறுவடை செய்துகொண்டிருந்த எல்லாருமே, . . . நான் சொல்வது உண்மை என்று சாட்சி சொல்வார்கள். நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. . . . அடியேனின் உடையைத் திருப்பி அனுப்ப வேண்டிய கடமை தங்களுக்கு இல்லையென்று ஆளுநர் நினைத்தால், இரக்கத்தின் அடிப்படையிலாவது அப்படிச் செய்ய வேண்டும்! உங்கள் அடிமை உடை இல்லாமல் இருக்கும்போது நீங்கள் அமைதியாக இருக்கக் கூடாது.”

இந்த மனு, “ஒரு கூலியாள் [தன் உடையை] பெற்றுக்கொள்ள எந்தளவு துடித்தார் என்பதை மட்டுமல்ல, . . . பைபிளிலிருந்த சட்டங்களை அவர் எந்தளவு தெரிந்துவைத்திருந்தார் என்பதையும் காட்டுகிறது. முக்கியமாக, ஏழைகளைக் கொடுமைப்படுத்தக் கூடாதென்று லேவியராகமம் மற்றும் உபாகமம் புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள கட்டளைகளை அவர் தெரிந்துவைத்திருந்ததைக் காட்டுகிறது” என்று சரித்திராசிரியரான சைமன் ஸ்காமா சொல்கிறார்.