Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்துகொள்வது முக்கியமா?

படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்துகொள்வது முக்கியமா?

இதுவரை பார்த்ததை வைத்து, படைத்தவர் இருக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியென்றால், பைபிளையும் அவர்தான் கொடுத்திருக்கிறார் என்பதற்கான ஆதாரங்களை நீங்கள் ஏன் அலசிப்பார்க்கக் கூடாது? பைபிளை நம்புவதால் என்ன நன்மை என்று தெரிந்துகொள்ளுங்கள்.

சந்தோஷமாக வாழ முடியும்

பைபிள் இப்படிச் சொல்கிறது: “[கடவுள்] வானத்திலிருந்து மழையையும், பருவ காலங்களில் அமோக விளைச்சலையும், ஏராளமான உணவையும் உங்களுக்குத் தந்து, உங்கள் உள்ளத்தைச் சந்தோஷத்தால் நிரப்பி நன்மை செய்திருக்கிறார்.”—அப்போஸ்தலர் 14:17.

குறிப்பு: இயற்கை வளங்கள் எல்லாமே படைத்தவர் கொடுத்திருக்கும் பரிசு! உங்கள்மேல் அக்கறை இருப்பதால்தான் இவற்றைக் கொடுத்திருக்கிறார்! இதைப் புரிந்துகொள்ளும்போது அந்தப் பரிசுகளை நீங்கள் பார்க்கும் விதமே மாறிவிடும்; அவற்றை நினைத்து சந்தோஷப்படுவீர்கள்.

நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்

பைபிள் இப்படிச் சொல்கிறது: “நீதி, நியாயம், நேர்மை என்னவென்று புரிந்துகொள்வாய், நல்ல வழிகள் எல்லாவற்றையும் தெரிந்துகொள்வாய்.”—நீதிமொழிகள் 2:9.

குறிப்பு: சந்தோஷமாக இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களைப் படைத்தவருக்குத் தெரியும். அவர் கொடுத்திருக்கிற பைபிளைப் படிக்கும்போது வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகளைத் தெரிந்துகொள்வீர்கள்.

மனதைக் குடையும் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்

பைபிள் இப்படிச் சொல்கிறது: “கடவுளைப் பற்றிய அறிவைக் கண்டடைவாய்.”—நீதிமொழிகள் 2:5.

குறிப்பு: படைத்தவர் இருக்கிறார் என்று தெரிந்துகொள்வதால் சில முக்கியமான கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும். ‘ஏன் வாழ்கிறோம்? ஏன் கஷ்டப்படுகிறோம்? இறந்தபிறகு என்ன ஆகிறது?’ இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களை அவர் கொடுத்திருக்கும் பைபிளில் கண்டுபிடிக்க முடியும்.

எதிர்காலத்தை நம்பிக்கையோடு பார்க்க முடியும்

பைபிள் இப்படிச் சொல்கிறது: “யெகோவா * சொல்வது இதுதான்: ‘நீங்கள் அழிந்துபோக வேண்டும் என்றல்ல, நிம்மதியாக வாழ வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். உங்களுக்கு நல்ல எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கவே ஆசைப்படுகிறேன்.”—எரேமியா 29:11.

குறிப்பு: இன்று இருக்கிற கஷ்டங்களைத் தீர்க்கப்போவதாகவும் மரணத்தை ஒழிக்கப்போவதாகவும் கடவுள் சொல்லியிருக்கிறார். இதை நம்பும்போது எதிர்காலத்தை நம்பிக்கையோடு பார்க்க முடியும். இன்று இருக்கும் பிரச்சினைகளையும் தைரியமாக சந்திக்க முடியும்.

^ பாரா. 13 கடவுளுடைய பெயர் யெகோவா என்று பைபிள் சொல்கிறது.