Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

பழுப்புநிற ஐரோப்பிய கரடிகள் மறைந்துவிடுமா?

உவார்ல்ட் வைட் ஃபண்டு ஃபார் நேச்சரின்படி (WWF), மேற்கு ஐரோப்பாவில் பழுப்புநிற கரடிகள் அழிந்துவிடும் ஆபத்திலிருக்கின்றன. அங்கே வெறும் ஆறு இடங்களில் மட்டுமே கரடிகள் உள்ளன. “பிரான்ஸ், ஸ்பெய்ன், இத்தாலி ஆகிய இடங்களில் இந்தப் பழுப்புநிற கரடிகள் அழிந்துவிடும் ஆபத்து அதிகமாக இருக்கிறது. மற்ற இடங்களிலிருந்து கரடிகளை இங்கே கொண்டுவந்தாலொழிய இவை மறைந்தே போய்விடும் என்று கான்சர்வேஷனிஸ்டுகள் எச்சரிப்பதாக” லண்டனில் வெளியாகும் த டெய்லி டெலிகிராஃப் கூறுகிறது. “இத்தாலியில் தெற்கு ஆல்ப்ஸில் நான்கு கரடிகள் மாத்திரமே உள்ளன” என்று செய்தித்தாள் கூறுகிறது. கிரீஸில் ஆடுகளையும் தேன்கூடுகளையும் இந்தக் கரடிகள் நாசப்படுத்திவிடுவதால், எரிச்சலடையும் விவசாயிகளும் தேனீ வளர்ப்போரும் திருட்டுத்தனமாக இவற்றை வேட்டையாடுவது கவலைக்குரிய பிரச்சினையாக இருந்துவருகிறது. இதற்கு நேர் எதிர்மாறாக கிழக்கு ஐரோப்பாவில் சில பகுதிகளில் கரடிகள் ஏராளமாக உள்ளன. இவற்றை பாதுகாக்க ரோமானியாவில் எடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளினால் இவை பெருகிக் கொண்டே இருக்கின்றன. கரடிகள் பாதுகாக்கப்படுவதால் ரஷ்யாவில் சுமார் 36,000 கரடிகள் உள்ளன. “மேற்கு ஐரோப்பாவில் கடைசியாக எஞ்சியிருக்கும் கரடிகளை பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று WWF-⁠ன் கேம்ப்பேயின் ஃபார் யூரோப்ஸ் கார்னிவோர்ஸ்-ஐ சேர்ந்த காலெம் ரான்கின் கூறுகிறார். “உடனே தலையிடாவிட்டால் இந்தக் கரடிகள் மறைந்தேவிடும்.”

உதவியே உபத்திரவமானால்

நெருக்கடியான நிலைமைகளில் இலவசமாக கொடுக்கப்படும் மருந்துகளால் லட்சக்கணக்கான ஆட்கள் பயனடைந்திருக்கிறார்கள். ஆனால் இலவசமாக பெறப்படும் இந்த மருந்துகளை சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடிவதில்லை. இவற்றை அதிக நாட்கள் வைத்து பயன்படுத்தவும் முடிவதில்லை என்பதை சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் (WHO) நடத்திய ஒரு சுற்றாய்வு காட்டியது. நல்ல எண்ணத்தோடு அனுப்பி வைக்கப்பட்டாலும் பெரும்பாலான மருந்துகளை “அவசர தேவைகளுக்கு பயன்படுத்த முடிவதில்லை; ஒரு நாட்டில் அவை வந்திறங்கியபின் விநியோகிக்கப்படுவதற்கான அமைப்புகளுக்கு அனுப்பப்படுகிறது; அவர்கள் ஏற்கெனவே மருந்துகளை விநியோகிக்க முடியாமல் திணருவதால் இவற்றையும் விநியோகிப்பது கடினமாகிவிடுகிறது” என்பதாக WHO அதிகாரி டாக்டர் ஜோனத்தான் குவிக் கூறுகிறார். போஸ்னியாவுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்பட்ட மருந்துகளில் பாதிக்கும் மேல் பயன்படுத்த முடியாத மருந்துகள்தான். உபயோகிக்க முடியாத மருந்துகளை எரித்துவிடுவதற்கு ஆர்மீனியா, மோஸ்டர், போஸ்னியா, ஹெர்ட்ஸகோவினா ஆகிய இடங்களுக்கு விசேஷமான எரி உலைகளை அனுப்பி வைக்க வேண்டியதாயிற்று. குரோஷியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட உபயோகிக்க முடியாத 1,000 டன் மருந்துகளை எரிப்பதற்கு 20 லட்சம் டாலரிலிருந்து 40 லட்சம் டாலர் வரையாக செலவு ஆனது.

கவர்ந்திழுக்க ஒலி

மகரந்த சேர்க்கைக்காக கவர்ந்திழுக்க பெரும்பாலான தாவரங்கள் பயன்படுத்துவது வர்ணத்தை அல்லது வாசனையைத்தான். ஆனால் வெப்பமண்டலத்தில் வளரும் மியுகுனா ஹால்டோனி, ஒலியை பிரதிபலித்து இதை சாதித்துக்கொள்கிறது என்பதாக ஜெர்மன் நாட்டு பத்திரிகை தாஸ் டயர் அறிவிக்கிறது. கொடியாக படரும் இந்தச் செடியிடம் வெளவால்கள் வருகின்றன. வெளவால்கள் தங்களைச் சுற்றியிருக்கும் பகுதிகளை மனத்திரையில் புரிந்துகொள்ள மனிதனால் கேட்க முடியாத ஒலியலை சிக்னல்களை அனுப்புகின்றன. இந்தச் செடியில் உள்ள தேன், இப்படிப்பட்ட ஒலியலை சிக்னல்களை வெளவால்களிடமே திருப்பி அனுப்புகிறது; பூனையின் கண் ஒளியை பிரதிபலிப்பதுபோல் இது ஓசையை பிரதிபலிக்கிறது. எனவே “சப்தம் உண்டுபண்ணும் பூனையின் கண்” போல் செயல்படுகிறது என்று எரியான்ஜன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். “இப்படியாக வெளவால்கள் பூக்களை உடனடியாக கண்டுபிடிப்பதற்கு இந்தச் செடி உதவுகிறது” என்று பத்திரிகை சொல்கிறது.

காளான்களால் ஆபத்து

“கிழக்கு ஐரோப்பாவிலும் வடக்கு இத்தாலியிலும் காளான்களைப் பறித்து சமைத்து உண்ணும் பழக்கத்தால் ஒவ்வொரு வருடமும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஆட்கள் உயிரிழந்துவிடுகின்றனர். பலருக்கு விஷமாகிவிடுகிறது” என்பதாக லண்டனில் வெளியாகும் த டைம்ஸ் அறிவிப்பு செய்கிறது. காட்டு காளான்களை சமைத்து உண்பது இப்போது பேஷனாகிவிட்டது. எனவே பிரிட்டனின் நாட்டுப்புற பகுதிகளில் வளரும் சுமார் 250 விஷ காளான்களில் ஒன்றை சாப்பிடும் ஆபத்து இருக்கிறது என்று வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். டெத் கேப், டிஸ்ட்ராயிங் ஏன்ஜல் ஆகிய இரண்டையும் உட்கொண்டால் சாவு நிச்சயம். காளான்களைப் பறிக்கச் செல்வோர் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, விஷமில்லாத காளான்களை சரியாக அடையாளம் காட்டும் நிபுணருடன் செல்ல வேண்டும். “ஒரு காளான் ஆபத்தானதா இல்லையா என்பதை அறிய எளிய வழி எதுவுமில்லை. ஆகவே தெரிந்தவர்கள் துணை இல்லாமல் தனியே சென்று இவற்றை பறித்து உண்பது முட்டாள்தனம்” என்பதாக பிரிட்டிஷ் மைக்கோலாஜிக்கல் சொஸைட்டியின் சீனியர் உறுப்பினர் எச்சரிக்கிறார்.

பொருளாதாரத்தை பாதிக்கும் எய்ட்ஸ்

எய்ட்ஸினால் மக்களின் உடல் ஆரோக்கியம் மட்டுமே பாதிக்கப்படுவதில்லை. அது ஆப்பிரிக்காவில் வேகமாக பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாகி வருகிறது என்பதாக லா மாண்ட் அறிவித்தது. சுமார் 2.3 கோடி மக்கள் எய்ட்ஸ் வைரஸ் உள்ளவர்களாயிருப்பதாலும் 20 லட்சம் பேர் ஆண்டுதோறும் இந்த வைரஸினால் மரிப்பதாலும் “எய்ட்ஸ் கொள்ளை நோய் சீக்கிரத்தில் ஆப்பிரிக்காவின் பொருளாதார, சமுதாய வளர்ச்சியின் நன்மைகள் அனைத்தையும்” பூஜ்யமாக்கிவிடும். ஆப்பிரிக்காவிலுள்ள கம்பெனிகள், எய்ட்ஸ் காரணமாக வேலையாட்கள் வேலைக்கு வராதிருப்பதால் அல்லது மரித்துவிடுவதால் பெரும்பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. ஒரு தேசிய இரயில்பாதை கம்பெனி அதன் பணியாட்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோரை இதனால் இழந்துவிட்டது. மற்றொரு பெரிய நிறுவனத்தில் வேலைசெய்யும் 11,500 பேரில் 3,400 பேருக்கு HIV வைரஸ் உள்ளது. விவசாயிகள் எய்ட்ஸ் காரணமாக ஒரு பக்கம் மரித்துக்கொண்டிருக்க விவசாயம் செய்வதற்கு ஆட்கள் இல்லை. மேலும் கல்வி அறிவு குறைந்தும் எழுத்தறியாமை கூடிக்கொண்டும் வருகிறது. காரணம் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப குடும்பங்களுக்கு பணமுமில்லை, நேரமுமில்லை. எய்ட்ஸ் காரணமாக நூற்றுக்கணக்கில் ஆசிரியர்கள் இங்கே மரிக்கின்றனர்.

வான்கணிப்பாளர் வேண்டுகிற அமைதி

பால்வீதி மண்டலங்கள், நட்சத்திரங்கள் ஆகியவை தோன்றியது எப்போது என்பதை கணிக்க வான்கணிப்பாளர் சிக்னல்களுக்காக கூர்ந்து கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கையில், “நவீன நாகரிக இயந்திர நுணுக்கங்கள்” அவர்களை அதிகமதிகமாக எரிச்சலடையச் செய்கிறது என்பதாக இன்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிப்யூன் அறிவிப்பு செய்கிறது. டெலிவிஷன் நிலையங்கள், ரேடியோ டிரான்ஸ்மிட்டர்கள், செய்தித் தொடர்பு துணைக்கோள்கள், மோபைல் ஃபோன்கள் ஆகிய இவையனைத்தும் விஞ்ஞானிகள் கேட்க ஆவலாயிருக்கும் விண்வெளியிலிருந்துவரும் அந்தச் சப்தத்தை கேட்க முடியாதபடி செய்துவிடுகின்றன. வான்கணிப்பாளர்கள் தங்கள் ஆராய்ச்சியைத் தொடருவதற்காக “எல்லாவகையான ரேடியோ டிரான்ஸ்மிஷனும் தடைசெய்யப்பட்ட” அமைதலான இடத்தை தேடிக்கொண்டிருக்கின்றனர். அங்கே அவர்கள் “இன்று உபயோகத்திலுள்ள எந்தக் கருவியையும்விட 100 மடங்கு அதிக சக்திவாய்ந்த” ரேடியோ டிஷ்களை வரிசையாக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பரப்பி வைக்க திட்டமிட்டிருக்கின்றனர். இவற்றின் மூலம் கிடைக்கும் தகவலை வைத்து காலம், விண்வெளி, பொருள் ஆகியவற்றின் ஆரம்பம் குறித்த கேள்விகளுக்கு விடையளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மெக்ஸிக்கோவில் பறவைகளின் எண்ணிக்கை ‘பறக்கிறது’

மெக்ஸிக்கோ நகரில் பறவைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை. ரிஃபார்மா என்ற செய்தித்தாள் சுமார் 13,35,000 புறாக்கள் தலைநகரில் இருப்பதாக அறிவிக்கிறது. நினைவு மண்டபங்களும் உருவச் சிலைகளுமே இளைப்பாறுவதற்கு அவற்றிற்கு பிடித்தமான இடங்கள். பறவை கட்டுப்பாட்டு வல்லுநர்களின்படி, “நகர்புற வாழ்க்கைக்கு ஏற்ப தங்களை அமைத்துக்கொண்டிருக்கும் பறவைகள் தங்களின் அன்றாட பிரயாணங்களை மூன்று கட்டங்களாக பிரித்துக் கொண்டிருக்கின்றன” என்கிறது செய்தித்தாள். “இரவைக் கழிப்பதற்கு ஓரிடம், உணவை தேட மற்றொரு இடம், ஓய்வெடுக்க மற்றொரு இடம். ஒவ்வொரு இடத்திலும் தங்களின் எச்சத்தை இவை விட்டுச் செல்கின்றன.” அலர்ஜியிலிருந்து பாக்டீரியா, காளான், வைரஸ் ஆகியவற்றால் உண்டாகும் நோய்களையும் அவை பரப்புகின்றன. தி இன்டர்நேஷனல் அசோஸியேஷன் ஃபார் தி ஈக்கலாஜிக்கல் புரோட்டெக்க்ஷன் அண்டு பீஸ்ஃபுல் ரீலோக்கேஷன் ஆஃப் அர்பன் டவ்ஸ், “பொதுவிடங்களில் பறவைகளுக்கு தீனிபோடுவதைத் தடைசெய்யும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.” ஆனால் அவற்றைக் “கட்டுப்படுத்தும் எண்ணத்தோடு பறவைகளை கொல்லும் எவரையும் தண்டிக்க வேண்டும்” என்றும் அது கூறுகிறது.

“கட்டி அணைத்தே கொல்கிறார்கள்”

“உலகிலேயே மிகப் பழமையான, மிகப் பெரிய மரங்களில் ஒன்று கட்டி அணைத்தே கொல்லப்பட்டு வருகிறது” என்கிறது தி ஆஸ்டிரேலியன். நியூ ஜீலாந்தில் ஆக்லாந்துக்கு வடக்கே இருக்கும் இந்த ஊசியிலை மரத்தைப் பார்க்க ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் ஒரு சடங்காக அதன் பெரிய நடுப்பகுதியை கைகளால் கட்டி அணைக்கின்றனர்; இதனால் அதன் அடிபாகம் மிதிக்கப்பட்டு நாசமாகிவருகிறது. “இந்த மரம் 160 அடிக்கும் அதிக உயரமுள்ளது. இது ஒன்றும் உலகிலேயே உயரமான மரமும் இல்லை” என்று செய்தித்தாள் கூறுகிறது. “ஆனால் மரத்தின் கன அளவை எடுத்துக்கொண்டால் இது மிகப் பெரிய மரங்களில் ஒன்று.” “காட்டின் கிழவன்” என்று பெயர்பெற்ற இம்மரம் 2,000 ஆண்டு பழமையானது என்று சொல்லப்பட்டாலும், அதைவிட இரண்டு மடங்கு அதிகமாகவே இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இயற்கை நாசங்களையும் பூச்சிகளின் தொல்லைகளையும் வெட்டப்படும் ஆபத்துக்களையும் கடந்து வந்திருக்கும் இம்மரம் இன்று கட்டி அணைப்பதாலே கொல்லப்படும் ஆபத்திலிருக்கிறது. “இது செத்துக்கொண்டிருப்பது போல தெரிகிறது. ஆனால் திரும்ப அது உயிர்பெறுமா என்று எங்களால் சொல்ல முடியாது” என்கிறார் பாதுகாப்பு அதிகாரி.

தாய்ப்பாலூட்டுவது எடையை கட்டுப்படுத்துகிறது

தாய்ப்பாலூட்டுவதில் மற்றொரு நன்மையிருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். பிற்காலத்தில் குழந்தை தேவைக்கு அதிகமாக பருமனாவதைத் தவிர்க்க இது உதவிசெய்யலாம். ஜெர்மன் நாட்டு செய்திப் பத்திரிகை, ஃபோக்கஸ் மியூனிச் பல்கலைக்கழக ஆய்வுக்குழு செய்த ஆராய்ச்சியை வெளியிட்டது. ஐந்து முதல் ஆறு வயதுவரை இருந்த 9,357 பிள்ளைகளின் எடையைக் கண்டுபிடித்து, குழந்தையாக இருந்தபோது அவர்கள் ஒவ்வொருவருக்கும் என்ன உணவு கொடுக்கப்பட்டது என்பதை ஆய்வு செய்தது. மூன்று மாதங்களிலிருந்து ஐந்து மாதங்கள் வரை தாய்ப்பால் பருகிய குழந்தைகள், தாய்ப்பாலே குடிக்காத குழந்தைகளைவிட பள்ளிக்குச் செல்லும் வயதில் அளவுக்கு அதிகமான எடை இருக்கும் வாய்ப்பு 35 சதம் குறைவாகவே இருந்தது. எவ்வளவு காலம் குழந்தை தாய்ப்பால் குடிக்கிறதோ அவ்வளவுக்கு, அதிகமான எடை இருக்கும் வாய்ப்பும் குறைகிறது. வளர்ச்சிதை மாற்றத்துக்கு உதவிசெய்யும் ஒரு பொருள் தாய்ப்பாலில் காணப்படுகிறது, அதனால்தான் இந்தப் பயன் கிடைக்கிறது என்கிறார் ஒரு ஆராய்ச்சியாளர்.

பிள்ளைகளுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை?

ஒன்றுக்கும் நான்குக்கும் இடைப்பட்ட வயதிலுள்ள பிள்ளைகள் மிகக் குறைவாக தண்ணீர் குடிப்பார்கள். ஜெர்மனி, டார்ட்மண்டில் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் ஃபார் சைல்டு நியூட்ரிஷன் செய்த ஆய்வு இதை வெளிப்படுத்தியது. இது நுகர்வோர் பத்திரிகை டெஸ்ட்-⁠ல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஒன்றிலிருந்து நான்கு வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு உடலிலுள்ள தண்ணீர் வெளியேறுவதற்கு வாய்ப்பு அதிகமிருப்பதால் சாப்பாட்டோடு குடிக்கும் தண்ணீரைத் தவிர நாளொன்றுக்கு சுமார் ஒரு லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். சராசரியாக இதைவிட மூன்றில் ஒரு பகுதி குறைவாகவே இவர்கள் குடிப்பார்கள். அவர்களே விரும்பி அவ்வாறு குடிப்பதில்லை. ஐந்தில் ஒரு பிள்ளை எதையாவது குடிக்க கேட்டபோது பெற்றோரே அதைக் கொடுக்க மறுப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். மிகச் சிறந்த பானம் எது? சுத்தமான வெறும் தண்ணீர்தான் மிகச் சிறந்த பானம் என்கிறது டெஸ்ட்.