Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாலைவனத்தில் ஒரு பவளம்

பாலைவனத்தில் ஒரு பவளம்

பாலைவனத்தில் ஒரு பவளம்

குறைவான மழையை பெறும் வறண்டுபோன ஆப்பிரிக்க பாலைவனங்களில், பாலைவன ரோஜா என்ற ஒரு செடி வளருகிறது. நேர்த்தியாக பின்னப்பட்ட ஜடையைப் போன்று முறுக்கிய கொப்புகளைக்கொண்ட இந்தச் செடி ரொம்ப மெதுவாக வளர்ந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழ்வதாக சொல்லப்படுகிறது. உப்பிய அடிப்பகுதியும் அதன் வேர்களும் நீர்தேக்கமாக செயல்படுவதால் வறண்ட தரிசான அந்த இடத்திலும் அது செழிப்பாக வளருகிறது.

சாறுள்ள இந்தத் தாவரத்தின் பால், வேர், விதை ஆகியவை விஷமுள்ளவை. விதைகளிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் அந்த விஷச்சாறு அம்புகளின் நுனியில் பயன்படுத்தப்படுகிறது. அதன் கிளைகளை தண்ணீரில் போட்டு ஆட்டினால் மீன்கள் மயங்கிவிடும், மீனவர் மீன்களை எளிதாக பிடித்துவிடலாம். மந்தை மேய்ப்பவர்கள் தங்கள் ஒட்டகங்களிலும் ஆடுமாடுகளிலும் காணப்படும் உண்ணியையும் பேனையும் கொல்லுவதற்கு இந்தச் செடியிலிருந்து ஒரு விஷ மருந்தைத் தயாரிக்கின்றனர். ஆச்சரியம் என்னவென்றால், இம்மரம் உயிரைப் போக்கும் விஷத்தன்மையுள்ளதாக இருந்தபோதிலும் காட்டு மிருகங்கள் இதன் இலைகளைச் சாப்பிடுகின்றன, அவற்றிற்கு எந்தத் தீங்கும் ஏற்படுவது கிடையாது.

ஆனால் விஷத்தன்மையுள்ள இந்தப் பாலைவன ரோஜாவை எப்படி பவளம் என்று அழைப்பது? அழகான பூக்கள் கொத்து கொத்தாக அதை மூடிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் நாம் அசந்துவிடுவோம். பிரகாசமான இளஞ்சிவப்பு நிறத்திலிருந்து கருஞ் சிவப்பு நிறம் வரையாக என்னே கண்கவர் வண்ணங்களில் அவை பூக்கின்றன! நிலம் வறட்சியாக வண்ணமே இல்லாமல் இருக்கும்போது இந்த அழகிய காட்டு ரோஜா தாராளமாக பூத்து குலுங்கி சூரிய ஒளியில் ஜொலிக்கவே செய்கிறது.

பாலைவனத்தில் காணப்படும் இந்த வியப்பூட்டும் அழகு “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்க”ப்போகும் அந்தக் காலத்தை நமக்கு நினைப்பூட்டுகிறது. (ஏசாயா 35:1) வரப்போகும் கடவுளுடைய ராஜ்ய ஆட்சியில், மகிழ்ச்சிதரும் இந்த வாக்குறுதி நிச்சயமாக நிறைவேறும். அந்தச் சமயத்தில் முழு பூமியும் ‘மகிழும்.’ அது அழகிய பரதீஸாக மாறப்போவது மட்டுமல்ல, மனிதகுலம் முழுவதும் அமைதியாக தாபரிக்கும் இடமாகவும் மாறும்.​—சங்கீதம் 37:11, 29; ஏசாயா 35:5, 6.

[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]

© Mary Ann McDonald