Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

புகையின் தூண்டிலில் உலகம்

புகையின் தூண்டிலில் உலகம்

புகையின் தூண்டிலில் உலகம்

பில் அன்பானவர், அறிவானவர், பலமானவர். குடும்பத்தார் மீது பாசமழை பொழிந்தார். ஆனால் சின்ன வயதிலேயே சிகரெட்டை புகைக்க ஆரம்பித்தார். காலங்கள் கரையக் கரைய சிகரெட் மோகம் வெறுப்பாக மாறியது. தான் சிகரெட்டை ஊதித் தள்ளினாலும், செல்ல மகன்களை அக்கறையோடு எச்சரித்தார். புகைபிடிப்பது எவ்வளவு மடத்தனம் என்று சொல்வார். சிலசமயங்களில் சிகரெட் பாக்கெட்டை கசக்கி வெளியே வீசிவிடுவார். இதுவே கடைசி என்று சத்தியம் செய்வார். ஆனால் விரைவிலேயே மறுபடியும் புகைபிடிக்க ஆரம்பித்துவிடுவார்—முதலில் ஆள் அரவம் இல்லாத இடத்தில், பின்பு ஆட்கள் ஆரவாரம் செய்யும் இடத்தில்.

15 வருடங்களுக்கு முன்பு பில் புற்றுநோய்க்கு பலியானார்—பயங்கர வேதனையை மாதக்கணக்காக அனுபவித்த பிறகு. அவர் புகைக்காதிருந்தால், ஒருவேளை இன்றும் உயிருடன் இருந்திருப்பார். அவருடைய அன்பு மனைவிக்கும் கணவன் இருந்திருப்பார்; ஆசை மகன்களுக்கும் அப்பா இருந்திருப்பார்.

பில் மரணம் அவருடைய குடும்பத்தை மீளாத் துயரில் ஆழ்த்தியபோதிலும், அது ஏதோ அபூர்வமான ஒன்றல்ல. புகையிலை சம்பந்தப்பட்ட வியாதிகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 லட்சம் ஆட்களை கொல்லுகிறது என உலக சுகாதார நிறுவனம் (WHO) சொல்கிறது. அதாவது எட்டு வினாடிக்கு ஒருவர் என்ற வீதத்தில்! உலகம் முழுவதிலும் உள்ள வியாதிக்கான காரணங்களில் பெரும்பாலும் தடுக்கக்கூடிய ஒன்று, புகையிலையை பயன்படுத்துவது. இதே நிலைமை தொடர்ந்தால், இன்னும் இருபது ஆண்டுகளில், மரணத்திற்கும் ஊனத்திற்கும் முதல் காரணம் புகைப்பதாகவே இருக்கும். எய்ட்ஸ், காசநோய், கர்ப்பம் சம்பந்தப்பட்ட பெண்களின் சாவு, வாகன விபத்துகள், தற்கொலை, கொலை இவற்றால் இறப்போரைவிட புகைபிடித்தல் அதிகமானோரை கல்லறைக்கு அனுப்பி வைக்கிறது.

சிகரெட்டுகள் மனிதனை பிணமாக்குகின்றன. என்றாலும், அவற்றை பற்றவைப்பவர்கள் பாரெங்கும் பரவலாக இருக்கிறார்கள். உலகில் குறைந்தபட்சம் 110 கோடி மக்கள் இதை பயன்படுத்துகிறார்கள் என்று WHO சொல்கிறது. அதாவது, கூட்டிக்கழித்துப் பார்த்தால், உலகிலுள்ள வயதுவந்தோரில் மூன்றில் ஒரு பாகத்தினர் என தெரிகிறது.

புகையிலை கம்பெனிகள் தங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளுக்கு கோடிக்கணக்கான டாலரை கொட்டுகிறபோதிலும், அவை ஈட்டும் மல்டி பில்லியன் டாலர் லாபத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இவையெல்லாம் மிகவும் சிறிய தொகையே. ஐக்கிய மாகாணங்களில் மாத்திரமே, ஒவ்வொரு நாளும் 150 கோடி சிகரெட்களை புகையிலை கம்பெனிகள் உற்பத்தி செய்கின்றன. உலகம் முழுவதும் புகையிலை கம்பெனிகளும் அரசாங்க உரிமை பெற்ற தொழிற்சாலைகளும் ஒவ்வொரு ஆண்டும் 5,00,000,00,00,000 சிகரெட்டுகளை விற்பனை செய்கின்றன!

உயிரைப் பறித்துவிடும் இந்தப் பழக்கத்திற்கு ஏன் இவ்வளவு அநேகர் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள்? நீங்கள் புகைபிடிப்பவராக இருந்தால் அதை எப்படி நிறுத்தலாம்? இந்தக் கேள்விகள் பின்வரும் கட்டுரைகளில் பதிலளிக்கப்படும்.