Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

புத்தகங்கள் சூடிய புகழ் மாலை

ஒரே நபரை பற்றி அநேக புத்தகங்கள் எழுதப்பட்டிருந்தால் அவரே புகழ்பெற்றவர்! இதை வைத்து பார்த்தால், இந்த நவீன காலத்தில் இயேசு கிறிஸ்துவே அதிக புகழ்பெற்றவர் என பிரிட்டனின் செய்தித்தாள் த கார்டியன் கூறுகிறது. வாஷிங்டன் டி.சி.-யிலுள்ள காங்கிரஸ் நூலகத்தில் செய்யப்பட்ட ஓர் ஆராய்ச்சி இதை வெளிப்படுத்தியது. அங்கே இயேசுவைப் பற்றி எழுதப்பட்ட 17,239 புத்தகங்கள் உள்ளன. இது, இரண்டாவது இடத்தைப் பெற்ற வில்லியம் ஷேக்ஸ்பியர் பற்றி எழுதப்பட்ட 9,801 புத்தகங்களைவிட ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகமாகும். 4,492 புத்தகங்களுடன் விலாடிமெர் லெனின் மூன்றாவது இடத்தையும், 4,378 புத்தகங்களுடன் ஆப்ரகாம் லிங்கன் நான்காவது இடத்தையும் பெறுகின்றனர்; அவருக்கு பிறகு 4,007 புத்தகங்களுடன் வருபவர் முதலாம் நெப்போலியன். இயேசுவின் தாயான மரியாள் 3,595 புத்தகங்களுடன் ஏழாவது இடத்தில் நிற்கிறார். முதல் 30 நபர்களில் உள்ள ஒரே பெண் இவர் மட்டுமே. அவருக்கு பின் வரும் அடுத்த பெண்ணான ஜோன் ஆஃப் ஆர்க் பற்றி 545 புத்தகங்களே உள்ளன. இசையமைப்பாளர்களின் வரிசையில் முதலில் நிற்பது ரிக்கார்ட் வேக்னர், அவருக்கு பிறகு மோஸார்ட், பீத்தோவென், பாக் வருகின்றனர். ஓவியர்களின் வரிசையிலோ பிக்காஸோ முன்னணியில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து லியோனார்டோ டா வின்ஸியும் மைக்கேலான்ஜலோவும் வருகின்றனர். ஆனால், விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்களின் வரிசையில் லியோனார்டோவே முதலில் வருகிறார். சார்ல்ஸ் டார்வின், ஐன்ஸ்டீன், கலிலியோ கலிலீ போன்ற பெரும் புள்ளிகள்கூட அவருக்கு பிறகுதான் வருகின்றனர். “முதல் 30 பேரில், இன்று உயிரோடிருக்கும் ஒருவர்கூட இல்லை” என்று த கார்டியன் கூறுகிறது.

பரதீஸைக் காணவில்லை!

ஐக்கிய நாட்டு சங்க பொதுச்சபையின் விசேஷித்த ஒரு கூட்டத்தில், சுற்றுச்சூழல் சீர்கெடுவதைப் பற்றி தீவுகளாக இருக்கும் 43 தேசங்கள் கவலை தெரிவித்தன என்று பிரெஞ்சு தினசரி லா மாண்ட் அறிக்கை செய்கிறது. இந்தத் தீவுகள் பரதீஸ்போல இருப்பதற்கு பெயர் பெற்றவை. ஆனால் சூறாவளி, புயல், வெள்ளம், தண்ணீர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளால் இவற்றில் அநேகம் பெருமளவு பாதிக்கப்படுகின்றன. மிட்ச் சூறாவளியின் விளைவாக கரிபியன் தீவுகளில் சுமார் 11,000 பேர் உயிரிழந்திருப்பதாக ஐநா வெளியீடு ஒன்று அறிவிக்கிறது. மறுபட்சத்தில் ஸேசேல்ஸ் மற்றும் மாரிஷியஸ், கடந்த இரண்டு வருடங்களில் பயங்கரமான வறட்சியால் பாதிக்கப்பட்டன. அதிக வெப்பத்தினாலும் தூய்மைக்கேட்டினாலும் பவழப்பாறைகள் மடிந்து போகின்றன, அதோடு உயிரின வகைகளும் குறைகின்றன. பூமி உஷ்ணமாவதால் கடல்மட்டம் உயரலாம் என்றும் இத்தீவுகளில் வசிப்பவர்கள் பயப்படுகின்றனர். அப்படி கடல்மட்டம் உயர்ந்தால், மால்தீவ்ஸில் உள்ள வட்டப்பவழத் தீவுகளில் 80 சதவிகிதம் கடலில் மூழ்கிவிடலாம் என்று சொல்லப்படுகிறது.

தூங்கிவழியும் டிரைவர்கள் = குடிகார டிரைவர்கள்

நன்றாக தூங்க தவறுவதால் ஏற்படும் விளைவுகளும் அதிகம் குடிப்பதால் ஏற்படும் விளைவுகளும் ஒன்றுபோலவே உள்ளன என்று த நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது. இதைப் பற்றி ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஓர் ஆராய்ச்சி செய்தது. அதில், சரியாக தூங்காத பழக்கமுடைய ஓட்டுனர்கள் 113 பேர் (இவர்கள் இரவுநேரத்தில் சரியாக தூங்க முடியாததால் பகல் நேரத்தில் தூங்கிவழிகின்றனர்) ஒரு செயலுக்கு பிரதிபலிக்க எவ்வளவு நேரம் எடுக்கிறார்கள் என்பதும் மற்றொரு தொகுதியான 80 பேர் அதே செயலுக்கு பிரதிபலிக்க எவ்வளவு நேரம் எடுக்கிறார்கள் என்பதும் கணக்கிடப்பட்டது. இவ்வாறு, ஒரு செயலுக்கு பிரதிபலிக்க ஆகும் குறைந்தபட்ச நேரம் கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு அந்த 80 பேருக்கும் வீரியம்மிக்க மது கொடுக்கப்பட்டது. அதற்கு பிறகு அவர்கள் பிரதிபலிக்கும் நேரம் மறுபடியும் சோதிக்கப்பட்டது. இவ்வாறு செய்யப்பட்ட ஏழு சோதனைகளில் மூன்றில், இரத்தத்தில் அதிகளவு மது இருந்தவர்களைவிட சரியாக தூங்காத பழக்கமுடையவர்கள் நீண்ட நேரம் கழித்தே பிரதிபலித்தார்கள். ஆகவே, இவர்கள் ஐக்கிய மாகாணங்களின் 16 மாகாணங்களில் சட்டப்படி வாகனம் ஓட்ட தகுதியற்ற குடிகார ஓட்டுனர்களுக்கு சமமாக ஆகின்றனர் என்றும் டைம்ஸ் அறிக்கை செய்தது. தூக்கக் கலக்கத்தில் வண்டி ஓட்டுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்தக் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன என்று இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய டாக்டர் நெல்சன் பீ. போவெல் வலியுறுத்திக் கூறினார்.

காசநோய் வேகமாக பரவுகிறது

பூமியின் ஜனத்தொகையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு, அதாவது 186 கோடி மக்கள் 1997-ல் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று 40-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 86 சுகாதார வல்லுனர்கள் கொண்ட ஒரு குழு கூறியது. இந்தக் குழுவை உலக சுகாதார நிறுவனம் நியமித்திருந்தது. அந்த வருடம், காசநோய் காரணமாக 18.7 லட்சம் பேர் மரித்தனர் என்றும் 79.6 லட்சம் பேருக்கு புதிதாக நோய் தாக்கியது என்றும் அதே குழு கணித்தது. இந்தப் புள்ளிவிவரம், த ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் என்ற பிரசுரத்தில் வெளியிடப்பட்டது. “இதுவரை காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுள் 80 சதவிகிதத்தினர் 22 நாடுகளில் வசிப்பவர்கள், அதிலும் பாதிக்கும் அதிகமானோர் 5 தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழ்பவர்கள்” என்று அது கூறியது. மிகவும் அதிகமாக நோய் ஏற்படும் 10 நாடுகளில் 9, ஆப்பிரிக்காவில் உள்ளன என்றும் அந்த ஆராய்ச்சி கூறியது. ஹெச்ஐவி அதிகமாக உள்ள சில நாடுகளில் காசநோயால் மரிப்பவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகமாக இருந்தது. இந்த நாடுகளில் காசநோயை “சரியாக கட்டுப்படுத்தாததே” அது அதிகமாக பரவுவதற்கு காரணம். இந்த வருடம் 84 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுவர் என்று இந்தக் குழு கணிக்கிறது. நோய் கிருமிகள் தொற்றிக்கொள்ளும் பெரும்பாலானோருக்கு உடனடியாக நோய் வருவது கிடையாது. ஆனால், அந்த நபரின் ஊட்டச்சத்து அல்லது எதிர்ப்பு சக்தி குறையும்போது உறக்கத்தில் இருக்கும் பாக்டீரியா விழித்துக்கொண்டு ‘வேலையை’ காட்ட ஆரம்பித்துவிடுகிறது என்று அதே பிரசுரம் கூறுகிறது.

சிகரெட் புகையில் சிக்கும் சிறுவர்கள்

சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டது. அதைப் பற்றி கூறுகையில், “உலகத்திலுள்ள சிறுவர்களில் ஏறக்குறைய 50 சதவிகிதத்தினர், அதாவது 70 கோடிக்கும் அதிகமான சிறுவர்கள் சிகரெட் புகைக்கும் ஒருவரோடு வாழ்கின்றனர்” என்று யூனிவர்சிட்டி ஆஃப் கலிஃபோர்னியா பெர்க்லே வெல்னஸ் லெட்டர் கூறியது. அடுத்த 20 வருடங்களில் புகைபிடிக்கும் பெரியவர்களின் எண்ணிக்கை 160 கோடியாக அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. அப்படியென்றால், இன்னும் அதிகமான சிறுவர்கள் மற்றவர்கள் வெளிவிடும் சிகரெட் புகையால் பாதிக்கப்படுவார்கள். இந்தப் பிள்ளைகளுக்கு காதில் தொற்றுகள், சுவாசிப்பதில் பிரச்சினைகள் போன்ற உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதற்கு அதிக சாத்தியம் உள்ளது.

விற்பனையோ ஏராளம், வாசகரோ மிகக் குறைவு

‘இந்தப் பூமியிலுள்ள வேறு எந்தப் புத்தகமும் விற்பனையில் அதைப்போன்ற சாதனை படைத்ததில்லை. அது பண்பாட்டின் சின்னம், தார்மீக உரைகல். உலகின் மூன்று பெரும் மதங்களைச் சேர்ந்தவர்கள் அதை மதிக்கின்றனர். கோடானுகோடி மக்கள் அதில் நம்பிக்கை வைக்கின்றனர். அதுவே பரிசுத்த பைபிள்’ என்று டெக்ஸஸில் உள்ள ஃபோர்ட் வொர்த்தின் செய்தித்தாள் ஸ்டார்-டெலிகிராம் கூறுகிறது. “இவ்வளவு பரவலான விநியோகிப்பு இருந்தும் சொற்ப எண்ணிக்கையானோரே அதை வாசிக்கின்றனர் என்ற இந்த உண்மை ஞானியாகிய சாலொமோன் ராஜாவைக்கூட குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.” என்றபோதிலும் பைபிள், விற்பனையில் சாதனைக்கு மேல் சாதனை படைத்துக்கொண்டே போகிறது. 90 சதவிகிதத்திற்கும் அதிகமான அமெரிக்கர்கள் தங்கள் வீடுகளில் சராசரியாக மூன்று பைபிள் மொழிபெயர்ப்புகளை வைத்திருக்கின்றனர் என ஓர் ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்தது. அப்படியிருந்தும், மூன்றில் இரண்டு பேர் பைபிளை ஒழுங்காக வாசிப்பதில்லை என மற்றொரு ஆராய்ச்சி வெளிப்படுத்தியது. பைபிளிலுள்ள நான்கு சுவிசேஷங்களின் பெயர்களை அல்லது பத்து கற்பனைகளில் ஐந்தைக்கூட அநேகரால் சொல்ல முடியவில்லை என்பது கொடுமையிலும் கொடுமை. பைபிள் நம் காலத்திற்கு பொருத்தமற்றது என பெரும்பாலானோர் நினைப்பதாகவும் அந்தச் செய்தித்தாள் கூறுகிறது.

ஆயிரத்தாண்டின் பாடல்கள்

பிரிட்டனில் சர்ச்சுக்கு போகிறவர்கள் புதிய ஆயிரத்தாண்டிற்கு பாடல்கள் என்ற புதிய ஆங்கில பாட்டு புத்தகத்தை உபயோகித்தால் ஆலய ஆராதனையின்போது கால்பந்தாட்ட பாடல்களையே பாடுவார்கள் என லண்டனின் த டைம்ஸ் பத்திரிகை அறிக்கை செய்கிறது. இந்தப் பாட்டு புத்தகத்தை சர்ச் ஆஃப் இங்லண்டும் மெத்தடிஸ்ட் சர்ச்சும் சேர்ந்து வெளியிட்டுள்ளன. அதில் ‘அன்புள்ள தாயாகிய கடவுளுக்கு’ அர்ப்பணிக்கப்பட்ட சில பாடல்களும் உள்ளன. ஒரு பாடலில் அவள் தன் ‘தாய் பாசத்தை’ காட்டும்படியும் அந்தப் பாடல் முழுவதும் கடவுளை ஒரு பெண்ணாக வருணித்தும் கூறப்பட்டுள்ளது. மற்றொரு பாடலில் இயேசு ஒரு கால்பந்தாட்ட குழுவின் மேனேஜராகவும் விளையாட்டு வீரனாகவும் வருணிக்கப்படுகிறார். அந்தப் பாடலின் பல்லவியும் புகழ்பெற்ற ஒரு கால்பந்தாட்ட பாடல் ஆகும். இந்தப் பாடல்களில் சிலவற்றை குழந்தைகள் எழுதியுள்ளனர், அதில் எய்ட்ஸ் காரணமாக தங்கள் பெற்றோரை இழந்த அநாதை குழந்தைகளின் ஒரு தொகுதியும் அடங்கும். “இது அனைத்து பாரம்பரியங்களையும் இணைக்கும் ஒரு பாட்டு புத்தகம். எங்களுடைய கவிஞர்கள், வாழ்க்கையின் பிரச்சினைகளை விசுவாசக் கண்களோடு நோக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்” என இத்திட்டத்தை முன்னேற்றுவித்தவர்களில் ஒருவரான டேவ் ஹார்ட்மேன் கூறினார்.

மம்மிகளின் தொல்லை?

எகிப்தின் பிரச்சினையே அலாதி. அங்கே புராதன நினைவுச் சின்னங்கள் ஏராளம் குவிந்துகிடப்பதால் புதிதாக அநேக பொருட்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. சக்குவாராவில் உள்ள தூத்தன்காமென்னுடைய தாதியின் அழகிய கல்லறை, தாஷூரில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமிட்டின் கூரை, ஏக்மீமில் உள்ள ஒரு பெரிய கோவில் வளாகம், லக்‍ஷரில் கண்டுபிடிக்கப்பட்ட 200-க்கும் அதிகமான அறைகள் கொண்ட நிலத்தடி கல்லறை, அலெக்ஸாந்திரியாவிற்கு அருகில் கடலில் மூழ்கிப்போன துறைமுகம் மற்றும் மாளிகைகளிலிருந்து கிடைக்கும் சிலைகளும் கலைப்பொருட்களும் அவற்றுள் சில மட்டுமே. கெய்ரோவிலுள்ள எகிப்திய மியூசியத்தில் 1,20,000-த்திற்கும் அதிகமான புராதன பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன, அதற்கும் அதிகமானவை கிடங்கில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. “ஒவ்வொரு வாரமும் புதிதாக ஏதாவது கண்டுபிடிக்கப்படுவதால் ஏற்கெனவே நிரம்பிவழியும் கிடங்குகளில் வைக்கவே இடமில்லாமல் போகிறது. அதோடு, அவற்றை ஆராய்ந்து பார்த்து, வகைப்படுத்தி, புதுப்பிக்கும் ஆட்களின் தலைவலியையும் அதிகரிக்கிறது” என்று தி எக்கனாமிஸ்ட் கூறுகிறது. ஏறக்குறைய 10,000 பிணங்கள் உள்ள ஒரு பெரிய கல்லறைத்தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. பாலைவனத்திலுள்ள இதைக் கண்டுபிடித்த பிறகு ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர், ‘ஐயையோ, இனி மம்மிகளே வேண்டாம்’ என்று கூறினார். தனிச்சிறப்பு வாய்ந்த சிலவற்றை மட்டுமே காட்சிக்கு வைப்பார்கள், மற்றவற்றை மறுபடியும் புதைத்துவிடுவார்கள்.

கண்ணி வெடிகள் என்ற கண்ணி

உலகிலேயே ஏராளமான கண்ணி வெடிகள் உள்ள நாடுகளுள் அங்கோலாவும் ஒன்று. ஆனால், அங்குள்ள கண்ணி வெடிகளை நீக்குபவர்கள் புதிய ஒரு பிரச்சினையை எதிர்ப்படுகின்றனர். அவர்களை தாக்குவதற்காகவே குறிவைக்கப்பட்ட விசேஷித்த கண்ணி வெடிகளே அவை. லண்டனின் த சன்டே டைம்ஸ் அறிக்கை செய்வதாவது: ‘கண்ணி வெடிகளோடு இணைக்கப்பட்ட இரண்டு வகையான ஸ்விட்சுகளை கண்டுபிடித்துள்ளனர். அதில் ஒன்று, வெளிச்சம் பட்டவுடன் கண்ணி வெடியை வெடிக்கச் செய்கிறது; 12 மாதம் வரை தாக்குப்பிடிக்கும் பேட்டரிகள் அவற்றிற்கு தேவையான சக்தியை அளிக்கின்றன. மற்றொன்றில் காந்த வளையம் ஒன்று உள்ளது. அது, 20 மீட்டருக்கும் அதிக தொலைவிலுள்ள கண்ணி வெடி நீக்கும் கருவியை உணர்ந்தவுடனே வெடிக்கும்படி தயாரிக்கப்பட்டுள்ளது.’ “வேறு வார்த்தைகளில் சொன்னால், இது கண்ணி வெடிகளை நீக்குபவர்களுக்காகவே தயாரிக்கப்பட்ட ஒரு கண்ணி வெடி. கண்ணி வெடிகளை நீக்கி பொதுமக்களுக்கு உதவ விரும்பும் வாலண்டியர்களைக் கொல்வதற்காகவே இவை விசேஷமாக தயாரிக்கப்படுகின்றன” என்று கண்ணி வெடிகள் தகவல் குழுவைச் சேர்ந்த டிம் கார்ஸ்டார்ஸ் கூறுகிறார். இப்போது அங்கோலாவில், கண்ணி வெடிகள் காரணமாக கை அல்லது காலை இழந்த 70,000 பேர் உள்ளனர்; இதுவே உலகிலேயே மிகவும் அதிகமாகும். அதுபோதாது என்பதைப்போல, ஒவ்வொரு மாதமும் டாக்டர்கள் சராசரியாக 35 பேருக்கு கையை அல்லது காலை நீக்குகிறார்கள். இதற்கிடையில், அங்கோலாவின் உள்நாட்டு போரில் சண்டையிடும் பிரிவினர்கள் தொடர்ந்து புதிய கண்ணி வெடிகளை புதைத்துக்கொண்டே இருக்கின்றனர். அவற்றிற்கு பயந்த விவசாயிகள் தங்கள் நிலத்தை தரிசாக போட்டுவிடுவதால் மக்களுக்கு தேவையான உணவு கிடைக்காமல் போகிறது. அதன் காரணமாக, “அங்கோலா நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயங்கரமான ஊட்டச்சத்து குறைவு, வியாதி, மரணம் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்” என ஐநா பொதுச்செயலர் கோஃபி அன்னான் எச்சரித்தார்.