Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களையும் உங்கள் அன்பானவர்களையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்

உங்களையும் உங்கள் அன்பானவர்களையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்

உங்களையும் உங்கள் அன்பானவர்களையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்

இன்டர்நெட் ஒரு பயனுள்ள கருவியாக இருக்கலாம். ஆனால் மற்ற கருவிகளைப் போலவே அதை தவறாகவும் பயன்படுத்த முடியும். தவறான பயன்பாட்டுக்கு சைபர்போர்ன்—ஆன்லைனில் ஆபாசம்—ஒரு உதாரணமாகும்.

ஒரு காட்சிக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை அறிந்திருப்பதால், ஆட்சேபணைக்குரிய இன்டர்நெட் சைட்டுகளை பிள்ளைகள் வலம் வராதபடி பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்ஃபர்மேஷன் ஹைவேயில் பருவ வயதினர் பாதுகாப்பு புத்தகம் (ஆங்கிலம்) இந்த விஷயத்தின்பேரில் பயனுள்ள தகவலை அளிக்கிறது. அது இவ்வாறு சொல்கிறது: “புரோகிராம்களுக்கு ஏற்ப வெப்-சைட்டுகளை தரம் பிரிக்கும் அமைப்புகள் இப்போது இயங்கிக்கொண்டிருக்கின்றன. புரோகிராம்களையும் புரோவுசர்களையும் பிரித்தெடுத்து பெற்றோர் தகுதியற்றதாக கருதும் வெப்-சைட்டுகளில் பிள்ளைகள் நுழைய முடியாதவாறு அவர்களால் தடைசெய்ய முடியும். இந்த புரோகிராம்கள் வித்தியாசமான விதங்களில் வேலை செய்கின்றன. சில புரோகிராம்கள் ஆட்சேபணைக்குரிய விஷயங்கள் அடங்கிய வெப்-சைட்டுகளுக்குள் நுழைய முடியாதபடி தடை செய்துவிடுகின்றன. சில புரோகிராம்கள் அவர்களுடைய பெயர், முகவரி போன்ற தகவல்களை டைப் செய்ய முடியாதபடி தடை செய்துவிடுகின்றன. மற்ற புரோகிராம்கள் பிள்ளைகளை அரட்டை அரங்கத்திற்குள் செல்ல அனுமதிப்பதில்லை அல்லது ஈ-மெயில் அனுப்புவதை அல்லது வாசிப்பதை கட்டுப்படுத்துகின்றன. பெற்றோர் ஆட்சேபணைக்குரியதாக கருதும் சைட்டுகளை மாத்திரமே தடை செய்வதற்கு ஏற்ப இந்த புரோகிராம்களை பொதுவாக அவர்கள் வைக்கமுடியும்.”—“ஆபாசத்திலிருந்து பிள்ளைகளை பாதுகாத்தல்” பெட்டியையும் காண்க.

விரும்பத்தகாத சைட்டுகளில் பிள்ளைகள் வலம் வருவதைத் தடைசெய்யும் விஷயத்தில், ஓரளவு மாத்திரம்தான் பெற்றோரால் கட்டுப்படுத்த முடியும் என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். ஒவ்வொரு நிமிடமும் தங்கள் பிள்ளைகளை கவனித்துக்கொண்டே இருக்க முடியாது. ஆபாசத்தை வீட்டில் பார்க்காதபடி உங்கள் பிள்ளையை பாதுகாக்கலாம். ஆனால் அவனுக்கு பள்ளியில் அல்லது சகமாணவனின் வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டரில் தாராளமாக அதைப் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆகவே, பிள்ளைகள் ஆபாசத்தைப் பார்க்க முடியாதபடி தடைசெய்ய பெற்றோர் தங்களால் இயன்றதை செய்வதோடுகூட, எவரும் சொல்லாமலே ஆபாசத்தை வெறுக்கிற மனச்சாட்சியை வளர்த்துக்கொள்வதற்கும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

ஆபாசத்தைப் பிள்ளைகள்தான் பார்க்கக்கூடாது, வயதுவந்தவர்கள் பார்த்தால் பரவாயில்லை என்ற முடிவுக்கு வருவது மிகவும் தவறாகும். முந்தைய கட்டுரையில் நாம் பார்த்த விதமாகவே ஆபாசம் யாருக்குமே நல்லதில்லை!

ஒருவேளை கொஞ்ச நாட்களாக நீங்கள் ஆபாசத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இது கடவுளுக்கு பிரியமில்லாதது, ஆகவே இதை விட்டுவிட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். உங்களால் முடியுமா? ஆம், முடியும். ஆட்கள் ஒவ்வொரு நாளும் கெட்ட பழக்கங்களை விட்டொழித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆபாசத்தைப் பார்க்கும் இந்தக் கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட உங்களுக்கு உண்மையிலேயே மனமிருந்தால், உங்களால் முடியும்.

நீங்கள் விடுபட விரும்பினால்

முதல் காரியமாக உடனடியாக ஆபாசத்தைப் பார்ப்பதை நிறுத்திவிடுங்கள்! அதை விடுவதை தள்ளிப்போட போட அது கடினமாகிக் கொண்டேவரும். ஆனால் சொல்வதென்னவோ சுலபம்தான், செய்வதுதான் கஷ்டம். பாவம் செய்வது தற்காலிகமாக சந்தோஷத்தைத் தரும் என்று பைபிள் மிகவும் எதார்த்தமாகவே குறிப்பிடுகிறது. (எபிரெயர் 11:25) ஆனால் பாவம் மரணத்துக்கும்கூட வழிநடத்தும். (ரோமர் 6:23) ஆரம்பத்தில், இன்னும் ஒருமுறை பார்ப்பதற்காக நீங்கள் எல்லா சாக்குப்போக்குகளையும் சொல்லலாம். அதற்கு இடம் கொடுக்காதீர்கள். தொடர்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசைக்கு இடம்கொடுக்காதீர்கள்.

இந்தத் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி, ஆபாசத்தைப் பார்ப்பது உங்கள் வாழ்க்கையின் தரத்தை மிக மோசமாக பாதிக்கக்கூடும். இந்தப் பழக்கத்தினால் உங்கள் குடும்பத்தோடும் நண்பர்களோடும் என்ன விதத்தில் உங்கள் உறவு பாதிக்கப்படுகிறது என்பதை உங்களையே ஏமாற்றிக்கொள்ளாமல் யோசித்துப்பாருங்கள். நீங்கள் ஒரு கணவனாகவும் தந்தையாகவும் இருக்கிறீர்களா? உங்கள் மனைவியும் பிள்ளைகளும் உங்கள் நடத்தையில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை கவனித்திருக்கலாம். ஆபாசத்தை நீங்கள் பார்க்க ஆரம்பித்ததிலிருந்து உங்களை அறியாமலே நீங்கள் சிடுசிடுப்பாக, கடுகடுப்பாக, மனம்விட்டு பேசாதவராக, அல்லது ஒதுங்கிவிடுகிறவராக மாறிவிட்டிருக்கலாம். சில சமயங்களில் குடும்பத்தினர்மீது காரணமில்லாமல் எரிந்துவிழலாம். ஆபாசத்தைப் பார்த்துக்கொண்டிருந்தால், நீங்கள் நடந்துகொள்ளும் விதத்தை அது கட்டாயம் பாதிக்கும். நண்பர்களும் குடும்பத்தினரும் உங்களுக்கு ஏதோ சரியில்லை என்பதை கண்டுகொள்வார்கள், ஆனால் அது என்ன என்பது தெரியாமல் விழித்துக்கொண்டிருப்பார்கள்!

ஆபாசத்தை பார்ப்பதற்கு மறுபடியும் மறுபடியும் நீங்கள் இழுக்கப்படுவதாக உணர்ந்தால், நீங்கள் தனியாக நின்று இதை போராடி வென்றுவிட முயல வேண்டாம். உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். அனுபவமுள்ள ஒரு நண்பரிடம் மனம்திறந்து பேசுங்கள். உங்கள் பிரச்சினையை ஒப்புக்கொண்டு அதை ஒருவரிடம் பேசுவதற்கு தைரியம் தேவைதான், ஆனால் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் முன்முயற்சி எடுப்பதைப் பார்த்து முதிர்ச்சியுள்ள நண்பர் வியந்துபோய் உங்களை மெச்சுவார்.

ஆபாசத்தை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் முக்கியமான காரணம் கடவுளைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற பலமான ஆசையே. ஒழுக்கமுள்ள பாதையில் நாம் நடந்தால் கடவுளுடைய இருதயத்தை நாம் மகிழ்விக்கிறோம். (நீதிமொழிகள் 27:11) ஆனால் நாம் தவறான பாதையில் சென்றால் ‘அவர் இருதயத்தை விசனப்படுத்துகிறோம்.’ (ஆதியாகமம் 6:6, NW) நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தால், கடவுளை நீங்கள் எவ்வாறு உணரச் செய்கிறீர்கள் என்பதைக் குறித்து உங்களுக்கு அக்கறை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் மனதையும் இருதயத்தையும் நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைக் குறித்தும் நீங்கள் அக்கறையுள்ளவராக இருக்க வேண்டும், இவற்றை கடவுளுக்கு நீங்கள் ஒப்புக்கொடுத்திருக்கிறீர்கள், அவரை சேவிப்பதற்காக இவற்றை சுத்தமாக வைக்க வேண்டும். (எசேக்கியேல் 44:23) “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தும்படி” பைபிள் உற்சாகப்படுத்துகிறது. (2 கொரிந்தியர் 7:1) எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிற கடவுளை பிரியப்படுத்தாமல் போய்விடுவோமோ என்ற ஆரோக்கியமான பயம் ஆபாசத்திலிருந்து விடுபடுவதற்கு நம்மை தூண்டும் சக்தியாக இருக்கும்.

இதிலிருந்து விடுபட நீங்கள் போராடிக்கொண்டிருக்கும் சமயத்தில் ஆபாசம் இருக்கும் அந்த வெப்-சைட்டுக்குள் தற்செயலாக நுழைந்துவிட்டதாக வைத்துக்கொள்வோம். உடனடியாக அதிலிருந்து வெளியே வந்துவிடுங்கள்! தேவைப்பட்டால் இன்டர்நெட் புரோவுசரையே மூடிவிடுங்கள்! மறுபடியும் உள்ளே நுழைய உங்கள் மனம் துடித்தால் கடவுளை நோக்கி ஊக்கமாக ஜெபம்செய்து சோதனையை எதிர்ப்பதற்கு உங்களுக்கு உதவும்படி அவரிடம் மன்றாடுங்கள். ‘எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்’ என்று பைபிள் சொல்கிறது. தவறான எண்ணங்கள் வந்து உங்களை அலைக்கழித்தால் அதிலிருந்து விடுபடும் வரை ஜெபித்துக்கொண்டிருங்கள். அப்போது, ‘எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் காத்துக்கொள்ளும்.’ (பிலிப்பியர் 4:6, 7) தவறான சிந்தனைகளுக்குப் பதிலாக, ‘உண்மை, ஒழுக்கம், நீதி, கற்பு, அன்பு, நற்கீர்த்தி, புண்ணியம், புகழ்’ ஆகிய சிந்தைகளை வைப்பது அவசியம்.—பிலிப்பியர் 4:8.

பின்வரும் பைபிள் வசனங்களை மனப்பாடம் செய்து அவற்றை தியானம் செய்வது பயனுள்ளதாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.

“கர்த்தரில் [யெகோவாவில்] அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்.”—சங்கீதம் 97:10.

“மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.”—1 கொரிந்தியர் 9:27.

“விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.”—கொலோசெயர் 3:5.

“மோக இச்சைக்குட்படாமல், உங்களில் அவனவன் தன்தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறி”யவேண்டும்.—1 தெசலோனிக்கேயர் 4:4, 5.

“ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.”—மத்தேயு 5:28.

“புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும். தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.”—எபேசியர் 5:28.

ஆபாசத்தைத் தவிர்ப்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. உங்கள் வாழ்க்கையின் தரம் கவலைக்கிடமாக ஆகிவிடலாம். நீங்கள் நிதானம் இழந்துவிடலாம். மற்றவர்களோடு உங்களுக்கிருக்கும் உறவு பாதிக்கப்படலாம், அதிக முக்கியமாக, கடவுளோடு உங்களுக்கிருக்கும் உறவு நாசமடையலாம். ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கம் உங்களுக்கு இல்லாவிட்டால், அதை துவங்க வேண்டாம். அந்தப் பழக்கம் உங்களுக்கு இருந்தால் உடனடியாக அதை நிறுத்திவிடுங்கள்! புத்தகத்தில் இருந்தாலும் பத்திரிகையில் இருந்தாலும் ஆன்லைனில் இருந்தாலும் சரி, ஆபாசம் கிறிஸ்தவர்களுக்கு ஏற்றதல்ல. அதனால் என்ன ஆனாலும் சரி, அதை தவிர்த்துவிடுங்கள்!

[பக்கம் 9-ன் படம்/தேசப்படம்]

ஆபாசத்திலிருந்து பிள்ளைகளை பாதுகாக்க

இன்டர்நெட் ஆபாசத்திலிருந்து உங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க இந்த ஆலோசனைகள் உங்களுக்கு உதவலாம்.

•உங்பிள்ளையின் அறையில் கம்ப்யூட்டரை வைக்க வேண்டாம். இன்டர்நெட் இணைப்புள்ள எந்தக் கம்ப்யூட்டரையும் குடும்ப அங்கத்தினர் அனைவரும் எளிதில் போய்வரக்கூடிய அறையில் வைக்கவும்.

•உங்கள் பிள்ளை எப்படிப்பட்ட இன்டர்நெட் புரோகிராம்களை பயன்படுத்துகிறான் என்பதை தெரிந்துவைத்துக் கொள்ளவும்.

•உங்களுக்குத் தெரியாமல் உங்கள் பிள்ளை தன்னுடைய சொந்த வெப்-சைட்டை உருவாக்கி வைத்திருக்கிறானா என பார்க்கவும். முழு இன்டர்நெட்டையும் தேடும் ஸர்ச் எஞ்சினை பயன்படுத்தி அவனுடைய பெயரை தேடிப்பாருங்கள். சரியான வெப்-சைட்டில் நுழைவதற்கு அவனுடைய முழு பெயரை மேற்கோள் கொடுத்து டைப் செய்யவும்.

•உங்களுக்கு தெரியாத மற்றொரு கம்ப்யூட்டர் யூசரோடு நேர்முக சந்திப்பை ஏற்படுத்திக்கொள்ள உங்கள் பிள்ளையை அனுமதிக்க வேண்டாம்.—“வெறும் அரட்டை அரங்கம் இல்லை” பெட்டியைக் காண்க.

•ஒழுக்கமற்றதாக, ஆபாசமாக, தகராறு செய்வது போல அல்லது மிரட்டலாக வரும் செய்திகளுக்கு அல்லது புல்லட்டின் குறிப்புகளுக்கு ஒருபோதும் பதிலளிக்காதீர்கள்.

•இன்டர்நெட்டில் நுழைந்து ஆட்சேபணைக்குரிய விஷயங்களைப் பார்வையிடுவதைக் குறித்து உங்கள் பிள்ளைகளை எச்சரித்து வைக்கவும். நீங்கள் பக்கத்தில் இல்லாவிட்டாலும் அவர்களே சென்சார் செய்துகொள்ள அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும். பள்ளியில் அல்லது ஒரு நண்பரின் வீட்டிலுள்ள கம்ப்யூட்டரில் ஆபாசம் நுழைய முடியாதென்று ஒருபோதும் நினைத்துவிடாதீர்கள்.

[படத்திற்கான நன்றி]

இன்ஃபர்மேஷன் ஹைவேயில் குழந்தை பாதுகாப்பு என்ற சிற்றேட்டிலும் 1999 ஜூலை 5, தேதியிட்ட லாஸ் ஏன்ஜலஸ் டைம்ஸ்-ல் வெளியான கட்டுரையிலும் காணப்படும் குறிப்புகளின் அடிப்படையிலானது.

[பக்கம் 10-ன் படம்/தேசப்படம்]

வெறும் அரட்டை அரங்கம் அல்ல

கம்ப்யூட்டரில் அரட்டை அரங்கத்திற்குள் நுழையும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அரட்டை அரங்கம் என்பது இன்டர்நெட்டை பயன்படுத்துகிறவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வதை அனுமதிக்கும் ஒரு வசதி. ஆம், நிறைய பேர் நெருக்கமான நண்பர்களோடு ஈ-மெயில் வாயிலாக பேசிக்கொள்கிறார்கள். குடும்பத்திலிருந்து பிரிந்து வெகு தொலைவில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களால் இம்முறையில் தவறாமல் தொடர்பு வைத்துக்கொள்ள முடிகிறது. ஆனால் உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கு ஈ-மெயில் அனுப்புவதற்கும் தெரியாத ஒருவரை போய் பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு. தற்செயலாக ஏதோ ஒரு தொலைபேசி எண்ணைச் சுழற்றி அடுத்த முனையில் யார் பேசினாலும் அவரை நான் நண்பராக்கிக்கொள்வேன் என்று நீங்கள் நினைப்பீர்களா? நிச்சயமாக மாட்டீர்கள். அப்படியென்றால் ஆன்லைனில் முன்பின் தெரியாத ஒருவரோடு ஏன் ஒரு நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்?

முன்பின் தெரியாதவரோடு பேசுவதில் ஒரு பிரச்சினை என்னவென்றால், நாம் நினைப்பது போன்ற நபராக அவர் இருக்கமாட்டார். உதாரணமாக, அந்த நபர் அப்பாவியான ஒரு பிள்ளையை அல்லது இளைஞனை ஏமாற்றி பாலுறவுகொள்ளும் காமுகனாக இருக்கலாம்.

இது எவ்வாறு நடக்கலாம் என்பதை இன்டர்நெட்டை உட்படுத்தும் வழக்குகளில் நிபுணராக இருக்கும் பேரி ஆஃப்தாப் என்ற வழக்கறிஞர் கூறுகிறார்: “பிள்ளைகள் பொதுவாக அரட்டை அறைக்குள் நுழைவார்கள். இதை கவனித்துக்கொண்டிருக்கும் ஒரு காமுகன் உரையாடலை கொஞ்ச நேரம் கவனித்துவிட்டு பின்னர் தனிமையில் இருக்கும் பிள்ளைகளை குறித்து வைத்துக் கொள்வான். ஒரு பிள்ளை இதுபோன்ற ஒரு செய்தியை அனுப்பலாம்: ‘என்னோட அம்மாவும் அப்பாவும் விவாகரத்து பண்ணிக்க போறாங்க . . . எனக்கு அம்மாவை பாத்தாலே வெறுப்பா இருக்கு, நான் கேக்கிற கம்ப்யூட்டர் விளையாட்டை வாங்கியே தரமாட்டேங்கிறாங்க.’ . . . காமுகன் ஆன்லைனில் வந்து ‘என்னோட அம்மாவும் அப்பாவும் விவாகரத்து பண்ண போறாங்க . . . எனக்கு அம்மாவை பாத்தாலே வெறுப்பா இருக்கு . . . நான் கேக்கிற விளையாட்டை டிம்மி மாமா எனக்கு வாங்கித் தந்தாங்க. . . . உனக்கு அந்த கேம்ஸ் வேணும்னா நீ அந்த கடைக்குப்போய் டிம்மி மாமாவைப் பாத்து பேசு.’ ‘டிம்மி மாமா’ என்பவர் வேறு யாருமில்லை, உண்மையில் யாராவது கிடைப்பார்களா என்று தேடிக்கொண்டிருக்கும் அந்தக் காமுகன்தான்.

இதன் காரணமாகவே பெற்றோர் தங்கள் பிள்ளைகளோடு அன்பான பாச பிணைப்பை எப்போதும் காத்துக்கொள்ள வேண்டும். அவர்களோடு மனம்விட்டு தாராளமாக பேசவேண்டும். அப்போதுதான் உணர்ச்சிப்பூர்வமான அரவணைப்பைத் தேடி அவர்கள் தவறான இடங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.

தனிமையில் வாழும் பெரியவர்களும் திருமணத்தில் மகிழ்ச்சி இல்லாதவர்களும் உணர்ச்சிப்பூர்வமான அரவணைப்புக்காக கம்ப்யூட்டர் அரட்டை அறைகளுக்குள் நுழையக் கூடாது. முன்பின் அறியாதவர்களிடம் பேசுவது ஆபத்து. வயதுவந்த ஒரு சிலர் தங்கள் கரம்பற்றிய துணைவர்களை உதறிதள்ளிவிட்டு ஆன்லைனில் “சந்தித்த” ஒருவரோடு ஓடிப்போய்விட்டிருக்கிறார்கள். a

[அடிக்குறிப்பு]

a கம்ப்யூட்டர் அரட்டை அரங்கங்களைப் பற்றி கூடுதலான தகவலுக்கு “இளைஞர் கேட்கின்றனர் . . . இன்டர்நெட் அபாயத்தை நான் எவ்வாறு தவிர்ப்பது?” கட்டுரையை விழித்தெழு! ஜனவரி 22, 2000 இதழில் காண்க.

[பக்கம் 8-ன் படம்]

சோதனையை எதிர்க்க ஜெபம் உதவும்