Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கண்ணெதிரே தோன்றும் புள்ளிகள்!

கண்ணெதிரே தோன்றும் புள்ளிகள்!

கண்ணெதிரே தோன்றும் புள்ளிகள்!

நீங்கள் எதையாவது பார்த்துக் கொண்டிருக்கையில் உங்கள் கண்ணெதிரே ஓரமாக ஒரு பக்கத்தில் சின்ன சின்ன கரும்புள்ளிகள் மிதந்து வருவதுபோல அல்லது பறந்து வருவது போல பார்த்திருப்பீர்கள். நீங்கள் படித்துக் கொண்டிருக்கும்போதும், வெளிர்நிற சுவரை அல்லது மேகமில்லா தெளிவான வானத்தை பார்க்கும்போதும் ஒருவேளை இதை கவனித்திருப்பீர்கள்.

இந்த புள்ளிகளுள் ஒன்றை உற்று பார்க்க முயற்சித்தால், அது உங்களால் முடியாது. உங்கள் கண்ணின் மிகச் சிறிய அசைவுகூட, அந்த புள்ளிகளை வேகமாக விரட்டிவிடும். அதை நீங்கள் நேரடியாக பார்க்கும் விதத்தில் ஒன்று வந்தாலும், அது என்ன என்று உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது.

இந்த புள்ளிகள்தான் என்ன? இவை உங்கள் கண்விழிக்கு மேலே இருக்கின்றனவா அல்லது உள்ளே இருக்கின்றனவா? இதை தெரிந்துகொள்ள, உங்கள் கண்களை அசைக்காமலேயே இமைத்துப் பாருங்கள். அந்த புள்ளிகள் அசைந்தால் அல்லது மறைந்தால் அவை கண்விழிக்கு மேலே இருக்கின்றன என அர்த்தம். ஆனால் அவற்றைப் பற்றி நாம் இந்த கட்டுரையில் பேசப்போவதில்லை.

அவை அசையவில்லை அப்படித்தான் இருக்கின்றன என்றால், அவை கண்விழிக்கு உள்ளே இருக்கின்றன என அர்த்தம். உங்கள் கண்விழியின் உட்பகுதி முழுவதையும் நிரப்பியுள்ள ஒருவகை திரவமான விட்ரியஸ் திண்நீர்மத்தில் இந்த புள்ளிகளை ஏற்படுத்தும் துகள்கள் உள்ளன. இவை கண்ணிலிருக்கும் லென்ஸுக்கு பின்புறம் இருப்பதால், தெளிவற்று மங்கலாக தெரிகின்றன. விட்ரியஸ் திண்நீர்மம் ஒரு கூழ் போன்றது, அது தண்ணீரை ஒத்திருப்பதால் அதிலுள்ள இந்த துகள்களும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. இவை அங்குமிங்கும் அலைபாய்ந்து ஓடியாடுகின்றன, அதனால்தான் நீங்கள் இவற்றை பார்க்க முயற்சிக்கும்போது வேகமாக நகர்ந்துவிடுகின்றன. இதன் தன்மை இவ்வாறு இருப்பதால், இதற்கு சூட்டப்பட்டுள்ள முஸ்கே வோலிடேன்டெஸ் என்ற அறிவியல் பெயரும் பொருத்தமானதே. இந்தப் பெயரின் அர்த்தம் “பறக்கும் ஈக்கள்.”

இவை எங்கிருந்து வருகின்றன?

இந்த புள்ளிகள் எங்கிருந்து வருகின்றன? நீங்கள் பிறப்பதற்கு முன்பு அநேக செயல்பாடுகள் நடந்திருக்கும், அந்த செயல்பாடுகளினால் வரும் கழிவுப் பொருட்களுள் சிலதான் இவை. பொதுவாக, வளர்ச்சியடைந்து வரும் ஒரு பிறவாத குழந்தையுடைய கண்ணின் உட்பகுதி முழுவதும் நார் திசுக்களால் ஆகியிருக்கும். ஆனால் அந்த குழந்தை பிறப்பதற்குள்ளாக, இந்த நார்களும் மற்ற அணுக்களும் விட்ரியஸ் திண்நீர்மமாக மாறியிருக்கும். இருப்பினும் இந்த செயல்பாட்டின்போது சில செல்கள், நார்கள் எப்படியோ தப்பிவிடுகின்றன. இந்த மீதமான கழிவுகள் மிதக்கும் தன்மை வாய்ந்தவை. பிறவாத குழந்தையுடைய கண்ணிலிருக்கும் லென்ஸிற்கு ஊட்டம் அளிப்பதற்காக ஒரு தமனி செல்கிறது. அந்த தமனியை, பார்வை நரம்பிலிருந்து லென்ஸிற்கு ஒரு குழாய் எடுத்துச் செல்கிறது. ஆனால் அந்த குழந்தை பிறப்பதற்கு முன்பே இந்த தமனி அழிந்து உடலோடு கலந்துவிடுகிறது, இருப்பினும் ஒருவேளை இதனுடைய சில துகள்கள் தப்பிவிடலாம்.

ஆனால் இதைத்தவிற மற்ற காரணங்களும் இருக்கின்றன. ஒரு பெரியவரின் விட்ரியஸ் திண்நீர்மம் முழுவதும் கூழ்போல் இருப்பதில்லை. இது ஹைலாய்ட் படலத்தால் மூடப்பட்டுள்ளது. இது விழித்திரையை ஒட்டியுள்ளது. ஒளி உணர்வுகளை ஏற்படுத்தும் திசுக்களாலான இந்த திரை கண்ணின் பெரும்பாலான உட்பகுதியை ஆக்கிரமிக்கிறது, அத்துடன் இதுதான் நீங்கள் எல்லாவற்றையும் பார்ப்பதற்கு உதவுகிறது. இந்த ஹைலாய்ட் படலம் அதன் முன்பகுதியில் விழித்திரையுடன் இணைந்துள்ளது. இந்த இணைப்பிலிருந்து விட்ரியஸ் திண்நீர்மத்தில் சிறிய மயிற்போன்ற நார்கள் தெரிகின்றன.

நமக்கு வயதாக ஆக, இந்த தசைநார்கள் சுருங்க ஆரம்பிக்கின்றன. இதனால் அவற்றுள் சில உடைந்துவிடுகின்றன. அந்த சமயத்தில் விட்ரியஸ் திண்நீர்மம் இன்னும் அதிகமாக தண்ணீரைப் போல ஆகிவிடுவதால், அந்த உடைந்துபோன நார்களால் எளிதாகவே மிதக்க முடியும். அத்துடன் இந்த விட்ரியஸ் திண்நீர்மமும் மெதுமெதுவாக குறைகிறது, விழித்திறையிலிருந்து விலகிவிடுகிறது. அதன் விளைவாக சிதைந்துபோன உயிரணுக்கள் அந்த இடங்களில் இருக்கின்றன. ஆக, உங்களுக்கு வயது கூடுகையில் இந்த “பறக்கும் ஈக்களின்” எண்ணிக்கையும் கூடுகிறது, அவை உங்கள் திரையில் அங்கும் இங்கும் அலைபாய்ந்து சந்தோஷமாக விளையாடுகின்றன.

உங்கள் பார்வைத் திரையில் இந்த சின்ன சின்ன நீச்சல்காரர்கள் புகுந்து விளையாட வருவதற்கான மற்றொரு காரணம், விழித்திரையிலுள்ள இரத்த நாளங்களாக இருக்கலாம். தலையில் பலமாக அடிபட்டாலோ கண்விழியில் அதிகமான அழுத்தம் ஏற்பட்டாலோ அதிலுள்ள ஒரு சிறிய இரத்த நாளம் கொஞ்சம் சிவப்பு இரத்த அணுக்களை வெளியேற்றுகிறது. சிவப்பணுக்கள் சாதாரணமாக பிசுபிசுப்பு தன்மையுடையவை, அதனால் ஒரு கொத்தாக அல்லது சங்கிலிபோல ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்கின்றன. ஒரு தனி அணுவாக இருந்தாலும்சரி, கொத்தான அணுக்களாக இருந்தாலும்சரி, இவை விட்ரியஸ் திண்நீர்மத்திற்குள் நுழைந்துவிடுகின்றன. விழித்திரைக்கு அருகில் இவை ஒருவேளை இருக்குமானால் இவ்வாறு தென்படுகின்றன. ஆனால் இந்த சிவப்பணுக்களை நம் உடல் மீண்டும் உறிஞ்சிக்கொள்ளுவதால் அவை விரைவிலேயே மறைந்துவிடுகின்றன. அதனால், இவை முஸ்கே வோலிடேன்டெஸ் அல்ல, ஏதாவது சிறிய காயம் ஏற்பட்டதால் வந்த விளைவு.

முஸ்கே வோலிடேன்டெஸ் இருப்பது, பெரிய கோளாறுக்கு அறிகுறியா? பொதுவாக அவ்வாறு இல்லை. கண்கள் நன்றாக இருக்கும் ஆட்கள்கூட, ஏன் இளைஞர்களும்கூட இவற்றை பார்க்கின்றனர். நாளாக நாளாக அதை அந்தளவுக்கு அவர்கள் கண்டு கொள்வதில்லை. ஆனால் ஒருசில நிலைமைகள் ஆபத்திற்கு அறிகுறியாக இருக்கலாம்.

ஆபத்தான நிலை

ஒருவேளை எப்போதையும்விட திடீரென அதிகமான புள்ளிகள் தோன்றுகிறது என்றால் அப்போது ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். முக்கியமாக உங்கள் கண்களுக்குள் ஏதோ மினுக் மினுக்கென ஒளி எழும்புவதை கவனித்தால் அப்போது உண்மையாகவே பிரச்சினை இருக்கிறது. ஒளியை நரம்பு உணர்வுகளாக மாற்றும் விழித்திரையிலிருந்து இவை உருவாகின்றன. இப்படிப்பட்ட அதிகளவான புள்ளிகளும் ஒளிகளும் ஏற்படுவதற்கான காரணம் விழித்திரையில் விலகல் ஏற்படுவதே. இது எவ்வாறு நடக்கிறது?

டிஷ்யூ பேப்பர் ஈரமாக இருக்கும்போது எவ்வளவு மெல்லியதாக, எளிதில் கிழிந்துவிடும் நிலையில் இருக்குமோ அதுபோலத்தான் இந்த விழித்திரையும். அது அவ்வளவு மெல்லியது. விழித்திரையின் ஒளி உணர்த்தும் அடுக்கு அதன் பின்புறத்திலுள்ள அடுக்கோடு இணைக்கப்பட்டு, அதற்கு முன் பகுதியில் விட்ரியஸ் திண்நீர்மத்தோடும், பார்வை நரம்போடும் ஒட்டிக்கொண்டுள்ளது. அத்துடன் விழித்திரையின் பார்வைப்புள்ளியுடன் லேசாக ஒட்டியிருக்கிறது. விழித்திரை அதன் சரியான நிலையில் இருக்க இந்த விட்ரியஸ் திண்நீர்மம் உதவுகிறது. இவ்வாறு நம் கண் வலிமை வாய்ந்ததாக இருப்பதால், பொதுவாக ஏதாவது அடிபட்டாலும் விழித்திரை அதன் சரியான இடத்திலிருந்து விலகிவிடுவதில்லை.

இருப்பினும், ஒரு அடி, விழித்திரையின் சில பகுதியை வலுவிழக்கச் செய்யலாம், லேசாக கிழித்துவிடலாம் அல்லது அதில் ஓட்டை விழச் செய்யலாம். இந்த விழித்திரையும் விட்ரியஸ் திண்நீர்மமும் பலமாக ஒட்டியிருக்கும்போது ஒருவேளை இவ்வாறு கிழிய வாய்ப்புகள் இருக்கின்றன. திடீர் அசைவு ஏற்படும்போதோ, அடிபடும்போதோ இந்த விட்ரியஸ் திண்நீர்மம் விழித்திரையை இழுக்கிறது, இதனால் விழித்திரை கிழிகிறது. இதனால் விட்ரியஸ் பகுதியில் இருக்கும் அந்த திரவம் விழித்திரைக்கு பின்புறத்தில் கசிய ஆரம்பிக்கிறது, இதனால் விழித்திரை அதன் சரியான இடத்திலிருந்து மேலே எழும்புகிறது. இது ஒளி உணர்வு நரம்பு அணுக்களில் ஒருவித தூண்டுதலை ஏற்படுத்துகிறது, இவை தீப்பொறிகளாக தென்படுகின்றன.

இப்படிப்பட்ட சில சமயங்களில், சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ இரத்தக் கசிவு ஏற்படுகிறது. ஏனென்றால் விழித்திரையின் உட்பகுதியில், இரத்த நாளங்கள் நுட்பமான வலைப்பின்னலாக பின்னியிருக்கின்றன. இதன் வழியாக சில இரத்த அணுக்கள் விட்ரியஸ் திண்நீர்மத்திற்குள் நுழைந்துவிடுகின்றன, இதனால்தான் திடீரென அநேக நீச்சல்காரர்கள் நீந்துவதுபோல தெரிகிறது. இதன் பிறகு விழித்திரை விலகியபிறகு, உங்கள் பார்வை மங்கலாகிறது அல்லது பார்வைக்கு ஆபத்து ஏற்படுகிறது.

அதனால் இந்த புள்ளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தால் முக்கியமாக உங்கள் கண்ணில் தீப்பொறி போன்ற ஒளி மின்னல்கள் ஏற்பட்டால் உடனடியாக கண் மருத்துவரை சந்தியுங்கள் அல்லது மருத்துவமனைக்கு உடனடியாக விரையுங்கள்! அது ஒருவேளை விழித்திரை விலகலாக இருக்கலாம். விழித்திரை அதிகம் விலகிவிட்டால், பிறகு அதை சரிசெய்வது கூடாத காரியம்.

இப்படிப்பட்ட தீப்பொறிகள் ஏதுமில்லாமல் புள்ளிகள் மட்டும் உங்கள் கண்களில் அநேக ஆண்டுகளாக இருக்கின்றனவா? நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஏறக்குறைய எல்லோருமே இந்த புள்ளிகளை பார்க்கின்றனர். நீங்கள் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாலும் அவை மறைந்துவிடாது என்பது உண்மைதான், ஆனால் நீங்கள்பாட்டுக்கு எப்போதும்போல உங்கள் வேலையை செய்துவந்தால் உங்கள் மூளை இந்த புள்ளிகளை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு கற்றுக்கொள்கிறது. இவை உங்கள் பார்வைக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் அதுபாட்டுக்கு இருக்கும் என்ற உண்மை, கண்ணின் அருமையான வடிவமைப்பிற்கும் நம் மூளையின் மாற்றியமைத்துக்கொள்ளும் திறனுக்கும் சிறந்த சாட்சியாக இருக்கிறது.

இருப்பினும், இப்படிப்பட்ட புள்ளிகள் இருக்கும் ஆட்கள் எல்லோருமே, பிரச்சினை ஏதாவது இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக கண் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

[பக்கம் 25-ன் பெட்டி/படம்]

நவீன மூக்குக் கண்ணாடியின் துவக்கம்

நீங்கள் டாக்டர் எழுதிக்கொடுத்த கண்ணாடியை அல்லது காண்டாக்ட் லென்ஸை அணிந்து பயனடைகிறீர்கள் என்றால் இந்த நன்மைக்கு காரணமே முஸ்கே வோலிடேன்டெஸ்தான். இதைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமே 19-வது நூற்றாண்டின் டென்மார்க் நாட்டு பிரபல மருத்துவரான ஃப்ரான்ஸ் கொர்னேலிஸ் டோன்டெர்ஸை ஆராய்ச்சி செய்ய தூண்டியது. அவர் கண்ணைப் பற்றியும் கண்நோய்களைப் பற்றியும் ஆய்வு செய்ய ஆரம்பித்தார். அதன் மூலம் அவர் முஸ்கே வோலிடேன்டெஸ் வருவதற்கான சில காரணங்களை கண்டுபிடித்ததோடு, கண்விழி சிறுத்துவிடுவதாலேயே தூரத்துப் பார்வை ஏற்படுகிறது என்றும் கருவிழியும் லென்ஸும் சமமாக இல்லாததால் சிதறல் பார்வை ஏற்படுகிறது என்பதையும் கண்டுபிடித்தார். அவருடைய ஆய்வே நவீன மூக்குக் கண்ணாடிகள் தோன்றுவதற்கு வழிவகுத்தது.

[படம்]

டோன்டர்கள்

[படத்திற்கான நன்றி]

நன்றி: National Library of Medicine

[பக்கம் 24-ன் படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

விலகிய விழித்திரை

சிவப்பணுக்கள்

விழித்திரையில் கிழிவு

ஹைலாய்ட் படலம்

லென்ஸ்

கண்மணி

ஐரிஸ்

சிலியரி தசை

விட்ரியஸ் திண்நீர்மம்

இரத்த நாளங்கள்

மூளைக்கு செல்லும் பார்வை நரம்பு