Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கண் மலர்ந்த “பிணம்”

கண் மலர்ந்த “பிணம்”

கண் மலர்ந்த “பிணம்”

இந்தோனேஷியாவில் விழித்தெழு! நிருபர்

இது இந்தோனேஷியாவில், ஜூலை 17, 1997, மாலை தேசிய செய்தியில் வந்த வினோத அறிவிப்பு. மிகப் பெரிய ராட்சத மலர் பூத்திருந்த செய்தி ஒளி ஒலியாக மக்களை சென்று எட்டியது. போயும்போய் பூ பூத்ததையா மாலை செய்தியில் சொல்வார்கள்? இது ஒன்றும் சாதாரண பூ அல்ல. இந்தப் பூச்செடி 40 வருஷம் உயிர் வாழும். ஆனால் மூன்று அல்லது நான்கு தடவை மட்டுமே இதில் பூ பூக்கும். பூக்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களே இருக்கும். அதனால்தான் இந்த அறிவிப்பு. இந்த அறிவிப்புக்குப்பின், இப்பூச்செடி இருந்த போகோர் தாவர பூங்காவிற்கு வருவோரின் எண்ணிக்கை தடாலென்று இருமடங்கு ஆனது. இந்தப் பூவை பார்க்க ஒரே நாளில் 20,000 பேருக்கு மேல் வந்தார்கள்!

அமர்போஃபாளஸ் டைட்டனம் என்பது இதன் தாவரவியல் பெயர். சிலர் இதை சுருக்கமாக டைட்டன் அரம் என்றும் அழைக்கின்றனர். ஆனால் இந்தோனேஷிய மக்கள் இதை பிண மலர் என்றே அழைக்கிறார்கள். இப்பூ மலரும்போது அழுகிப்போன மீனின் அல்லது செத்துப்போன எலியின் வாடை வீசுவதால் “பிணம்” என்ற பட்டப்பெயர். “பிண” மலர் கண் விழிக்க, நாற்றம் தேனீக்களுக்கு தூதுவிட, இனிதே நடைபெறும் அயல் மகரந்த சேர்க்கை.

டைட்டன் அரமின் நாற்றம் மட்டும் அல்ல அதன் அபார அளவும் விசேஷமே. நன்கு வளர்ந்த செடி உயர்ந்தோங்கி நிற்கும். ஆனால் அதன் பக்கத்தில் உலகிலேயே உயரமான மனிதனை கொண்டு போய் நிறுத்தினால் செடி குட்டையே. போகோர் தாவர பூங்காவில் உள்ள ஒரு செடியின் உயரம் 2.5 மீட்டர்! மெகா சைஸ் செம்பருத்தி போன்ற பூவிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பாளையின் விட்டமோ 2.6 மீட்டர்! இந்த ராட்சத பூச்செடியின் கிழங்கோ 100 கிலோ!

உலகிலேயே பெரிய மலர் என்ற பட்டத்தை டைட்டன் அரம் மயிரிழையில் இழந்துவிட்டது. ஏனென்றால் இது ஒற்றை ராட்சத மலர் அல்ல. எண்ணற்ற சிறு சிறு மலர்கள் சேர்வதால் இந்த ராட்சத உருவம்.

‘என் கடவுளாகிய யெகோவாவே, நீர் செய்த அதிசயங்கள் . . . அநேகம்; உமக்கு நிகரானது என்றுமில்லை’ என்ற சங்கீதக்காரனின் கூற்றை உண்மை என இந்த டைட்டன் அரமும் நிரூபிக்கிறது!—சங்கீதம் 40:5.