Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இரசாயன அலர்ஜி தாக்கும்போது

இரசாயன அலர்ஜி தாக்கும்போது

இரசாயன அலர்ஜி தாக்கும்போது

இந்த MCS வியாதியே மர்மமான ஒன்றாக இருந்துவருகிறது. மருத்துவத்துறையில் உள்ளவர்கள் இந்த வியாதியைக் குறித்து தொடர்ந்து விவாதித்து வருகின்றனர். உதாரணமாக, உடல் கோளாறுகளால்தான் MCS வருகிறது என சில மருத்துவர் சொல்ல, மற்றவர்கள் இல்லை மனரீதியான கோளாறுகளால்தான் வருகிறது என்கின்றனர். வேறு சிலர் இவ்விரண்டுமே இந்த வியாதிக்கு காரணம் என்கின்றனர். இன்னும் சில மருத்துவர்கள், இந்த MCS மற்ற அநேக நோய்களை உட்படுத்தும் ஒரு வியாதி என சொல்கின்றனர். a

நச்சு கலந்த பொருட்களை முக்கியமாக பூச்சிக்கொல்லி போன்ற பொருட்களை அதிகம் பயன்படுத்தியதால்தான் இந்த வியாதி வந்தது என அநேகர் சொல்கின்றனர். வேறு சிலர், குறைந்தளவு நச்சுப் பொருளை அடிக்கடி பயன்படுத்தியதால்தான் இந்த நோய் வந்தது என்கின்றனர். ஒருவருக்கு MCS வந்துவிட்டால், அவருக்கு அநேக உடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உதாரணமாக, முன்பு அந்த நபர் சென்டையோ, சுத்தம் செய்யும் பொருளையோ அடிக்கடி பயன்படுத்தியிருப்பார், அவற்றால் அவருக்கு எந்த தொந்தரவும் இருந்திருக்காது, ஆனால் இப்போதோ அவை அலர்ஜியாகிவிடுகின்றன. இதே நிலை ஜோய்ஸ் என்ற பெண்ணுக்கு ஏற்பட்டது.

ஜோய்ஸ் சிறுமியாக பள்ளியில் படித்துவந்தபோது அவருடைய தலையில் பேன் தொல்லை அதிகரித்தது. அந்தப் பேன்களை ஒழிக்க சில மருந்துகளை பயன்படுத்தினார். அதன் விளைவு, அவர் உடல்நிலை மோசமாகியது. அவரை கொஞ்சமும் பாதிக்காத இரசாயனங்கள்கூட அலர்ஜியாகின. சுத்தம் செய்யும் பொருட்கள், ரூம் நறுமணப் பொருட்கள், சென்ட், ஷாம்பூ, பெட்ரோல் போன்றவைகூட அவருக்கு அலர்ஜியாயின. “என் கண்கள் வீங்கி மூடிக்கொண்டன என்னால் பார்க்கக்கூட முடியவில்லை, சைனஸ் பிரச்சினைகள் வந்தன, இதனால் தலைவலி, குமட்டல் அடிக்கடி வரும். பல நாட்கள் படுத்த படுக்கையானேன். . . . ஏதோ அழையா விருந்தாளியாக நிமோனியா அநேக தடவை வந்துபோனது. இதனால் 40 வருடங்களாக புகைபிடிக்கும் ஒருவருடைய நுரையீரல் எவ்வளவு பலவீனமாக இருக்குமோ, அதுபோன்று என் நுரையீரலும் பலவீனமடைந்தது. ஆனால் இதுவரை நான் புகைபிடித்ததே இல்லை” என்கிறார் ஜோய்ஸ்.

சிறிதளவு நச்சுகலந்த இரசாயனமானாலும் அடிக்கடி பயன்படுத்தும்போது MCS வருகிறது என சிலர் சொன்னதாக மேலே சொல்லப்பட்டது. இவ்வகை இரசாயனங்களை வீட்டிற்கு உள்ளே பயன்படுத்தும்போதுதான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் சமீப ஆண்டுகளில் நோய்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருக்கிறது. இவ்வகை நோய் “சிக்-பில்டிங் சின்ட்ரோம்” [SBS] என அழைக்கப்படுகிறது.

SBS-ன் தோற்றம்

காற்றோட்ட வசதியுடைய வீடுகள், பள்ளிகள், அலுவலகங்கள் எல்லாம் 1970-களில் ஓல்ட் ஃபேஷனாகிவிட்டன. அவை காற்றே புகாத, ஏசி பொருத்தப்பட்ட கட்டிடங்களாக மாறின. இவற்றில், இன்ஸ்யூலேஷன், பதப்படுத்தப்பட்ட மரம், காற்றில் கரையும் பசை, சின்தடிக் இழைகள், கார்ப்பெட் போன்ற எண்ணற்ற சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன. அவையே இந்நோய் அதிகமாக பரவ காரணமாயின.

வீடுகளில் பயன்படுத்தப்படும் இவ்வகை பொருட்கள் புதிதாக இருக்கும்போது, நச்சுக்கலந்த ஃபார்மல்டிஹைட் போன்ற வாயுக்களை வெளியேற்றுகின்றன. இந்த வாயுக்கள் காற்றில் பரவும்போது சுவாசிப்பவருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றன. இரசாயனங்களுக்கு பெருமளவில் உதவிசெய்யும் மற்றொரு சாதனம் கார்ப்பெட். பொதுவாக கார்ப்பெட் இவ்வகை நச்சுகலந்த இரசாயனங்களை உறிஞ்சிக்கொள்கிறது. பிறகு அந்த நச்சை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றிக்கொண்டே இருக்கிறது. இதனாலும் அலர்ஜி ஏற்படுகிறது. “வீட்டிற்குள் காற்று அசுத்தமாவதற்கான முக்கிய காரணம், கரைமங்களிலிருந்து வெளிவரும் வாயுக்கள்தான் . . . அதுமட்டுமல்ல அநேகரை இப்படிப்பட்ட வாயுக்கள்தான் அதிகமாக பாதித்திருக்கின்றன” என கொஞ்சம் இரசாயனம்—அதிக ஆபத்து (ஆங்கிலம்) என்ற புத்தகம் சொல்கிறது. ஆனால் வருத்தகரமாக “இவ்வகை அலர்ஜியால் அவதிப்படுபவர்களால் இந்த கரைமங்களை தவிர்க்க மடிவதில்லை” என்கிறது அந்த புத்தகம்.

காற்றே புகாத கட்டிடங்களாக இருந்தாலும், அநேகருக்கு எதுவுமே ஆவதில்லை, சிலரோ மோசமாக பாதிக்கப்படுகின்றனர். ஆஸ்துமா, சுவாசக் கோளாறு, தலைவலி, சோர்வு போன்ற அநேக பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவர்கள் அவ்விடத்தைவிட்டு வெளியே சென்றவுடனோ பெரும்பாலான இப்படிப்பட்ட பிரச்சினைகள் காணாமல் போய்விடுகின்றன. ஆனால் இவை தொடரும்போது “அவர்களுக்கு MCS ஏற்படலாம்” என்கிறது த லான்செட் என்ற பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிகை. இப்போது கேள்வி என்னவென்றால், அநேகரை பாதிக்காத இந்த இரசாயனங்கள் ஏன் சிலரை மோசமாக பாதிக்கின்றன? இந்த கேள்விக்கான விடையை அனைவரும் அறிந்துகொள்வது மிக முக்கியம். ஏனென்றால் வியாதிப்பட்டவருடைய நிலையையும் பிரச்சினைகளையும் அப்போதுதான் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

ஒவ்வொருவரும் தனி ரகம்

நம் உடல் ஆரோக்கியத்தைப் பொருத்தவரை ஒவ்வொருவரும் மற்றவர்களில் இருந்து வித்தியாசப்படுகிறோம். இரசாயனமோ, கிருமியோ, வைரஸோ அது எதுவாக இருந்தாலும், நம்மை பாதிக்கும்போது நம் ஒவ்வொருவரின் உடலும் வித்தியாசமாக செயல்படுகிறது. ஒருவருடைய மரபு வழிப் பண்பியல், வயது, பாலினம், உடல் நிலை, அப்போது உட்கொள்ளும் மருந்து, ஏற்கெனவே இருந்துவரும் நோய், வாழ்க்கை முறை, உதாரணமாக குடிப்பழக்கம், போதை மருந்து போன்றவற்றை பொருத்து அவை வேறுபடுகின்றன.

உதாரணமாக மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட மருந்து “உங்கள் உடலுக்கு ஒத்துக்கொள்ளுமா இல்லை ஏதாவது பின்விளைவுகளை ஏற்படுத்துமா” என்பதை முன்னதாகவே சொல்ல முடியாது என்கிறது நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை. ஒருவேளை அந்த மருந்து உங்கள் உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அதனால் ஏற்படும் பின்விளைவு பயங்கரமாக இருக்கலாம், உங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். பொதுவாக, நாம் சாப்பிடும் மருந்துகள் வாயிலாக அல்லது இரசாயனங்களை பயன்படுத்தி வேலை செய்யும்போது அவற்றை சுவாசிப்பதன் வாயிலாக இவை நம் உடலுக்குள் சென்றுவிடுகின்றன. அவ்வாறு செல்லும் இரசாயனங்களில் நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளாதவற்றை வெளியேற்றுவதுதான் என்ஸைம் என அழைக்கப்படும் ஒருவகை புரோட்டீனின் வேலை. ஆனால் ஒருவேளை இந்த “காவற்கார” என்ஸைம், பரம்பரையாக வந்த குறைபாடுகளின் காரணமாகவோ, நச்சுக்கலந்த பொருட்களாலோ, சரியான ஊட்டச்சத்தின்மையாலோ பாதிக்கப்பட்டு சேதமடைந்திருந்தால், இப்படிப்பட்ட அன்னிய இரசாயனங்கள் உடலில் அதிகளவில் தங்கி பயங்கரமான ஆபத்துகளை ஏற்படுத்தலாம். b

MCS வியாதி, போர்ஃபிரியாஸ் என அழைக்கப்படும் மற்றொரு வியாதியுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. இது என்ஸைம் சம்பந்தப்பட்ட இரத்த சீர்குலைவு வியாதியாகும். கார், பஸ் போன்றவற்றிலிருந்து வரும் புகை, சென்ட் போன்றவற்றை சுவாசிக்கும்போது போர்ஃபிரியாஸ் வியாதியால் பாதிக்கப்பட்டவர் அலர்ஜியால் அவஸ்தைப்படுவார். பெரும்பாலும், இதே பிரச்சினைகளை MCS-ல் பாதிக்கப்பட்டவரும் எதிர்ப்படுகிறார்.

மனதும் பாதிக்கப்படுகிறது

குறிப்பிட்ட சில இரசாயனங்கள் எனக்கு அலர்ஜியாக இருக்கின்றன, அவற்றை பயன்படுத்தும்போது போதை ஏறியது போல இருக்கும் என MCS-ஆல் பாதிக்கப்பட்ட ஒரு பெண் விழித்தெழு! நிருபரிடம் சொன்னார். “சில சமயம் நான் நானாகவே இருக்க மாட்டேன்—சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படுவேன், ஒருவித கலக்கம் ஏற்படும், சீக்கிரமே சோர்வு ஏற்படும். . . . இவை கொஞ்ச நேரத்திற்கும் இருக்கும் பல நாட்களுக்கும் நீடிக்கும்” என்றார் அவர். இது மட்டுமா? ஒருவர் அதிகமாக குடித்ததால், எவ்வாறு அடுத்தநாள் தலைவலி சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படுமோ அதேபோன்ற பிரச்சினைகளால் அவர் அவதிப்பட்டார். அத்துடன் அவர் கடுமையான மனஉளைச்சலாலும் அவதிப்படுவார்.

MCS உள்ளவர்களில் அநேகர் இப்படிப்பட்ட பிரச்சினைகளை எதிர்ப்படுகின்றனர். “பூச்சிக்கொல்லி அல்லது SBS உடன் சம்பந்தப்பட்ட இரசாயனங்களால் அநேகர் மனரீதியிலான பிரச்சினைகளை எதிர்ப்படுவதாக அநேக நாடுகள் அறிக்கை செய்கின்றன. . . . முக்கியமாக கரைமங்களை உபயோகிக்கும் தொழிலாளிகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஒருவிதமான பயம் ஏற்படுகிறது, மனச்சோர்வடைகின்றனர். . . . உடல் உறுப்புகளிலேயே இரசாயனங்களால் எளிதில் பாதிக்கப்படும் உறுப்பு மூளைதான்” என்கிறார் டாக்டர் க்லாடியா மில்லர்.

இரசாயனங்கள் ஒருவருக்கு மனரீதியிலான பிரச்சினைகளை உண்டுபண்ணக்கூடும்; என்றபோதிலும், சில மருத்துவர்கள் இதற்கு எதிர்மாறாக சொல்கின்றனர். மனரீதியான பிரச்சினைகள் ஒருவரை இரசாயன அலர்ஜிக்கு வழிநடத்தும் என சொல்கின்றனர். “விவாகத்துணையின் மரணம் அல்லது விவாகரத்து போன்ற மனதை பாதிக்கும் சம்பவங்கள் ஒருவருடைய உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கலாம், இதனால் சிறிதளவு இரசாயனங்கள்கூட அவர்களுக்கு அலர்ஜியாகிவிடுகிறது. உண்மை என்னவெனில், மனரீதியான பிரச்சினைகளுக்கும் உடல் ரீதியான பிரச்சினைகளுக்கும் இடையில் புரிந்துகொள்ள முடியாத சம்பந்தம் இருக்கிறது” என்று டாக்டர் மில்லரும், டாக்டர் நிக்கோலாஸ் ஆஷ்ஃப்ர்ட்-ம் ஒத்துக்கொள்கின்றனர். ஆனால் இவர்கள் இருவரும் MCS-க்கு உடல் ரீதியான பிரச்சினைகள்தான் காரணம் என உறுதியாக நம்புகிறார்கள். இவ்வாறே நம்பும் மற்றொரு டாக்டரான ஷெர்ரி ரோஜர்ஸ் “மன அழுத்தம், இரசாயன அலர்ஜியை இன்னும் அதிகமாக தூண்டுகிறது” என்கிறார்.

MCS உள்ளவர்கள் தங்கள் நிலையை சமாளிக்க அல்லது இந்த நோய்குறிகளை குறைக்க வழி ஏதாவது இருக்கிறதா?

MCS-ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

இந்த வியாதியை முற்றிலுமாக குணப்படுத்தும் எந்த மருத்துவ முறையும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வருத்தகரமான விஷயம். இருப்பினும் இதனால் பாதிக்கப்பட்ட அநேகர் இதனால் ஏற்படும் பிரச்சினைகளை குறைத்து சாதாரண வாழ்க்கை வாழ்ந்துவருகின்றனர். இவ்வாறு வாழ எது உதவியிருக்கிறது? தங்களுக்கு எந்த இரசாயனம் அலர்ஜியாக இருக்கிறதோ அதை முடிந்தளவுக்கு தவிர்க்கும்படியான மருத்துவரின் ஆலோசனையை சிலர் பின்பற்றியதால் பயனடைந்தனர். c இவ்வாறு இரசாயனங்களை தவிர்ப்பது உண்மையில் நல்ல பலன்களை அளிப்பதாக ஜூடி என்ற பெண் சொல்கிறார். அவர் எப்ஸ்டெய்ன்-பார் வைரஸால் பாதிக்கப்பட்டு அதற்காக மருந்து சாப்பிட்டு வந்தார், அப்போது அவருடைய வீட்டில் ஒருவகை பூச்சிக்கொல்லியை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார், இவ்விரண்டும் சேர்ந்ததால் அவருக்கு MCS வந்தது.

MCS-ஆல் பாதிக்கப்பட்ட மற்றவர்களைப்போலவே, ஜூடியும் வீட்டிலுள்ள இரசாயனங்களால் பாதிக்கப்படுகிறார். அதனால் சுத்தம் செய்வது, துணி துவைப்பது போன்ற வேலைகளுக்கு அவர் சரியான தரமான சோப்பையும் பேக்கிங் சோடாவையும் மட்டுமே பயன்படுத்துகிறார். துணிகளை மென்மையாக வைத்துக்கொள்ள மற்ற இரசாயனங்களைவிட வினிகர் நல்லது என அவர் அதையே பயன்படுத்துகிறார். அவருடைய அலமாரிகளிலும் படுக்கை அறைகளிலும் பருத்தியிலான துணிகளே உள்ளன. அவருடைய கணவன் லான்டரியில் இருந்து வந்த துணிகளை பல வாரங்கள் காற்றோட்டமான இடத்தில் வைத்த பிறகுதான் அலமாரியில் வைக்கிறார்.

ஆனால் இன்றைய இரசாயன உலகில், MCS-ஆல் அவதிப்படுவோர் தங்களுக்கு அலர்ஜியாக இருக்கும் எல்லா இரசாயனங்களையும் முற்றிலுமாக தவிர்ப்பது அவ்வளவு எளிதல்ல. “MCS-ஆல் பாதிக்கப்பட்டவர்கள் செய்யும் ஒரு பெரிய தவறு என்னவென்றால், அவர்களுக்கு எந்த இரசாயனம் ஒத்துக்கொள்வதில்லையோ அதை முற்றிலுமாக தவிர்க்க முயற்சிக்கின்றனர்” என்கிறது அமெரிக்க குடும்ப மருத்துவர் (ஆங்கிலம்) பத்திரிகை. அதற்கு மாறாக நோயாளிகள் தங்களுக்கு எந்த இரசாயனத்தால் அலர்ஜி ஏற்படுகிறதோ அதை கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்தி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறது அதிலுள்ள கட்டுரை. ஆனால், அப்போது மருத்துவர்களின் கண்காணிப்பு அவர்களுக்கு தேவை. அதே சமயத்தில், திடீர் பயம், வேகமான ஒழுங்கற்ற இதயத்துடிப்பு போன்றவை ஏற்படும்போது ரிலாக்ஸ் செய்வதற்கும் மூச்சுத்திணறலை கட்டுப்படுத்துவதற்கும் சில டெக்னிக்குகளை கற்றுக்கொள்ள வேண்டும். வியாதிப்பட்டவர் அந்த குறிப்பிட்ட இரசாயனத்தை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிடுவதைவிட கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்தி அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாத அளவிற்கு செய்வதே இதன் நோக்கம்.

இதற்கு மற்றொரு சிறந்த வைத்தியம் நல்ல உறக்கம். டேவிட் என்பவருக்கு MCS இருக்கிறது. இவரைப் பார்த்தால் இவருக்கு MCS இருக்கிறது என்று யாராலும் சொல்ல முடியாது. அவர் எப்படி பிரச்சினையை மேற்கொண்டார்? காற்றோட்டம் உள்ள தன் படுக்கை அறையில் அதிக நேரம் நன்றாக தூங்குவது தனக்கு உதவியதாக குறிப்பிட்டார். எர்னஸ்ட் மற்றும் அவருடைய மனைவி இதே போன்று MCS-ஆல் பாதிக்கப்பட்டனர். “பகல் நேரத்தின்போது அநேக இரசாயனங்களை எதிர்ப்பட வேண்டியிருக்கிறது, எனவே இரவு நேரங்களில் நன்கு உறங்குவதன் மூலம் அதனால் வரும் தொந்தரவுகளை” தவிர்க்க முடிவதாக சொல்கின்றனர்.

உடல் ஆரோக்கியமாக இருக்கவும் அந்த ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளவும் நல்ல உணவுத் திட்டம் தேவை. “உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருக்க மிக முக்கியமான அம்சம்” நல்ல உணவுத் திட்டம் என சொல்லப்படுகிறது. ஆகவே, நம் உடல் அதன் ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவதற்கு அதன் அமைப்பு நன்கு வேலை செய்ய வேண்டும். இதற்கு உணவுத்திட்டம் பெரும் உதவியாக இருக்கும்.

நல்ல ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சியும் முக்கியம். வியர்வை உங்கள் உடலிலுள்ள சில நச்சுகளை வெளியேற்றுகின்றன. அதனால் உடற்பயிற்சி செய்யும்போது வியர்ப்பது நல்லது. அத்துடன் நல்ல மனநிலையும், நகைச்சுவை உணர்வும் மிக முக்கியம்; நீங்கள் நேசிக்கப்படுவது மட்டுமல்லாமல் மற்றவர்களை நீங்கள் நேசிக்க வேண்டும். “அன்பும் சிரிப்பும்” தான் வியாதிக்கு மிகச் சிறந்த மருந்து என ஒரு பிரபல மருத்துவர் சொல்கிறார். ஆம், “மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து; வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும்.”—நீதிமொழிகள் 17:22, பொது மொழிபெயர்ப்பு.

இருப்பினும் MCS-ஆல் அவதிப்படுபவர்கள், சாதாரணமாக பயன்படுத்தப்படும் சென்ட், சுத்தம் செய்யும் பொருட்கள், டியோடரைஸர் போன்ற இரசாயனம் சம்பந்தப்பட்ட பொருட்களால் பாதிக்கப்படுவதால் மற்றவர்களுடன் அன்பான சந்தோஷமான தோழமையை அனுபவிப்பது மிகவும் கஷ்டம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை MCS-ஆல் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு சமாளிக்கின்றனர்? அதேபோன்று மற்றவர்களும் அவர்களுக்கு எவ்வாறு உதவி செய்யலாம்? இதைக் குறித்து அடுத்த கட்டுரை சிந்திக்கும்.

[அடிக்குறிப்புகள்]

a விழித்தெழு! மருத்துவப் பத்திரிகை அல்ல, MCS-ஐப் பற்றிய இந்த கட்டுரைகள் எந்த மருத்துவக் குறிப்பையும் ஆதரிப்பதில்லை. இவை வெறுமனே சமீபத்திய கண்டுபிடிப்புகளைப் பற்றியும், இந்த வியாதிகளை சமாளிக்க மருத்துவர்களும் நோயாளிகளும் என்ன முறைகளை பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதைப் பற்றியும் அறிவிக்கின்றன. ஆனால், MCS வருவதற்கான காரணம், அது எப்படிப்பட்ட வியாதி, அதற்குரிய சிகிச்சை முறைகள் போன்ற விஷயங்களில் உலகத்திலுள்ள எல்லா மருத்துவர்கள் மத்தியிலும் ஒன்றுபட்ட கருத்து இல்லை என்பது உண்மை.

b என்ஸைம் குறைபாட்டிற்கு ஒரு சிறந்த உதாரணம், லாக்டேஸ் குறைபாடு. லாக்டேஸ் குறைபாடுள்ளவர்களால் பாலில் உள்ள லாக்டோஸை ஜீரணிக்க முடியாது, இதனால் பால் குடிக்கும்போதெல்லாம் அவர்களுக்கு அலர்ஜி ஏற்படுகிறது. மற்றொரு உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள், சீஸ் போன்ற உணவுப் பொருட்களில் டைரமைன் என்ற ஒருவகை இரசாயனம் உள்ளது. ஆனால் சிலருக்கு இந்த இரசாயனத்தை ஜீரணிக்கும் என்ஸைம் குறைவுபடுகிறது. இதனால், இவ்வகை உணவுகளை சாப்பிடும்போது, கடுமையான ஒற்றைத்தலைவலி ஏற்படுகிறது.

c தங்களுக்கு MCS இருக்கிறது என நினைப்பவர்கள், அனுபவம் வாய்ந்த மருத்துவரின் உதவியை நாட வேண்டும். உங்கள் உடலை முழுவதுமாக பரிசோதிப்பதற்கு முன்பு நீங்களாகவே நடவடிக்கைகள் எடுப்பது நல்லதல்ல. இது அதிக செலவை உட்படுத்துவது மட்டுமல்லாமல் தேவையற்றதும்கூட. ஒருவேளை அந்த பரிசோதனைகள், உங்கள் உணவு திட்டத்தில் அல்லது உங்கள் வாழ்க்கை முறையில் கொஞ்சம் மாற்றம் செய்தாலே போதும் உங்கள் நிலையை சமாளிக்கலாம் என தெரிவிக்கக்கூடும்.

[பக்கம் 7-ன் பெட்டி/படங்கள்]

இவ்வளவு இரசாயனங்கள் தேவையா?

நச்சுக்கலந்த இரசாயனங்களை நாம் முடிந்தளவுக்கு தவிர்த்துவிடுவது நல்லது. வீட்டிலுள்ள இரசாயனங்களைக் குறித்தும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். “வீட்டிற்குள் இருக்கும் காற்றை மாசுபடுத்தும் இரசாயனப் பொருட்கள்தான் இரசாயன அலர்ஜி ஏற்படுவதற்கான முக்கிய காரணம். ஆவியாகக்கூடிய நூற்றுக்கணக்கான நச்சுத்தன்மையுடைய இரசாயனக் கலவைகள் வீடுகளில்தான் உள்ளன” என்கிறது கெமிக்கல் எக்ஸ்போஷர் புத்தகம். d

நீங்கள் இப்போது ஒரு முக்கியமான கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும். ‘நான் இப்போது பயன்படுத்திவரும் இரசாயனங்கள், முக்கியமாக பூச்சிக்கொல்லிகள் மற்றும் காற்றில் பரவும் கரைமங்கள் எல்லாம் உண்மையிலேயே அவசியம்தானா?’ நச்சு கலக்கப்படாத மற்ற இரசாயனங்களை நீங்கள் பயன்படுத்தி பார்த்திருக்கிறீர்களா? ஆபத்தான இரசாயனங்களை அவசியம் நீங்கள் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், தேவையான எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சரியாக செய்ய மறந்துவிடாதீர்கள். அத்துடன், அப்படிப்பட்ட இரசாயனங்களை பிள்ளைகளால் எடுக்க முடியாத, அதேசமயத்தில் அதிலிருந்து வெளிவரும் இரசாயன ஆவி உங்களை பாதிக்காத இடத்தில் பத்திரமாக வையுங்கள். இரசாயனங்கள், டப்பாக்களில் நன்றாக மூடப்பட்டிருந்தாலும் அதிலிருந்து இரசாயன ஆவி வெளிவரும் என்பதை மறக்க வேண்டாம்.

அத்துடன், நம் தோலில் என்ன இரசாயனத்தை தடவுகிறோம் அல்லது தெரியாமல் நம் மீது கொட்டிக்கொள்கிறோம் என்பதைக் குறித்தும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நறுமணப் பொருட்கள் உட்பட அநேக இரசாயனங்கள், தோலிலிருந்து இரத்தத்திற்குள் உறிஞ்சிக்கொள்ளப்படுகின்றன. இப்போதெல்லாம் தோலின் மீது மருந்து கலந்த பட்டையை ஒட்டுவதன் மூலம் அந்த மருந்தை ரத்தத்தில் கலக்க வைக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். ஆகவே, நச்சுத்தன்மையுடைய மருந்து உங்கள் கையிலோ, தோலின் மீதோ விழுந்துவிட்டது என்றால், “உடனடியாக தண்ணீரால் அந்த இரசாயனத்தை நன்கு கழுவி அகற்றிவிட வேண்டும்” என்கிறது களைப்பா நச்சா (ஆங்கிலம்) என்ற புத்தகம்.

MCS-ஆல் பாதிக்கப்பட்ட அநேகருக்கு நறுமணப் பொருட்கள் ஒத்துக்கொள்வதில்லை. நறுமணப் பொருட்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களில் 95 சதவீதம், பெட்ரோலிலிருந்து எடுக்கப்படும் சின்தடிக் பொருள்களால் ஆனவை. இவற்றில் அசிட்டோன், கற்பூரம், பென்சால்டிஹைட், எத்தெனால், டெர்பென்டைன் போன்ற இரசாயனங்களும் அடங்கும். அப்படிப்பட்ட பொருட்களால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளைப் பற்றி ஐக்கிய மாகாணங்களில் அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன; ஒரு உதாரணம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கைகள். அதேபோன்று வீட்டு நறுமணப் பொருட்களிலும் இந்த இரசாயனங்கள் உள்ளன. இந்த வீட்டு நறுமணப் பொருட்களைப் பற்றி சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் ஆராயும்போது, அவற்றை “வீட்டிற்குள் காற்றை தூய்மைப்படுத்தும் பொருட்களாக அல்ல ஆனால் மாசுபடுத்துபவையாக கருதுகிறார்கள்” என்கிறது கலிபோர்னியா பல்கலைக்கழக பெர்க்லி வெல்னஸ் லெட்டர் (ஆங்கிலம்). வீட்டு நறுமணப் பொருட்கள் வீட்டிலுள்ள துர்நாற்றத்தை ஒழித்துவிடுவதில்லை ஆனால் அவற்றை மறைத்துவிடுகின்றன.

“நச்சுப்பொருட்கள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முக்கியமான அம்சம் என்னவெனில், எல்லா இரசாயனங்களுமே ஏதாவது ஒரு நிலையில் நச்சுத்தன்மை உடையவை” என்கிறது கேல்க்யூலேட்டட் ரிஸ்க் என்ற புத்தகம்.

[அடிக்குறிப்பு]

d ஆபத்தான சில நச்சுகளிலிருந்து நம்மையும் நம் வீட்டையும் எவ்வாறு பாதுகாப்பது என்ற விஷயங்கள் விழித்தெழு! டிசம்பர் 22, 1998-ல் கலந்தாலோசிக்கப்பட்டது.