Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மாற்று மருத்துவங்கள் ஒரு மின்னல் பார்வை

மாற்று மருத்துவங்கள் ஒரு மின்னல் பார்வை

மாற்று மருத்துவங்கள் ஒரு மின்னல் பார்வை

“மாற்று மருத்துவத்தை நாடுகிற நோயாளிகளின் நலனை கருதி, ஆங்கில மருத்துவர்களும், மாற்று மருத்துவர்களும் கலந்து பேசுவது மிக மிக அவசியம்.”

மேற்சொன்ன கூற்று த ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் (JAMA) என்ற பத்திரிகையின் 1998, நவம்பர் 11-⁠ம் தேதி இதழில் வெளிவந்தது. அந்தக் கட்டுரையில் வெளிவந்த செய்தி: “ஹெல்த் இன்ஷுரன்ஸில் இப்போது மாற்று மருத்துவத்தையும் சேர்த்திருப்பதால் இனி மாற்று மருத்துவத்தைப் பற்றி ஆங்கில மருத்துவர்களும் அதிகமாக பேசுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.”

நிறைய நோயாளிகள் ஆங்கில சிகிச்சையை பார்த்துக்கொண்டே மாற்று சிகிச்சையையும் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இதை சிலர் தங்கள் டாக்டர்களிடம் சொல்லாமல் மறைத்துவிடுகிறார்கள். ஆகவேதான் ஏப்ரல் 2000, டப்பெட்ஸ் யுனிவர்சிட்டி ஹெல்த் & நியூட்ரிஷியன் லெட்டர் இவ்வாறு அறிவுறுத்தியது: “நீங்கள் வேறு மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தால் அதை மறைக்காமல் உங்கள் டாக்டரிடம் கூறுவது உங்களுக்குத்தான் நல்லது. இவ்வாறு அவருக்கு ஒத்துழைப்பு தாருங்கள். ஒருவேளை அவர் மாற்று மருத்துவத்தை அனுமதிப்பார் அல்லது மறுத்துவிடுவார். ஆனாலும் உண்மையை சொல்வதால் உங்களுக்கு நஷ்டம் ஏதும் ஏற்படப் போவதில்லை.”

சிலநேரங்களில் சில மூலிகை மருந்துகளோடு ஆங்கில மருந்துகள் ஒத்துப்போகாமல் உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம். அதை தவிர்க்கவே டாக்டரிடம் உண்மையை கூறவேண்டும். அதேபோல் இன்று நிறைய மருத்துவர்கள் மாற்று மருந்து பக்கமே தலைவைத்து படுக்கக்கூடாது என்று நோயாளிகளுக்கு கட்டளையிடுவதில்லை. நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, மாற்று மருத்துவத்தைப் பற்றிய தங்களது கருத்தை விட்டுக்கொடுக்கிறார்கள்.

இப்போது பல நாடுகளில் பிரபலமாக இருக்கும் சில மாற்று மருந்துகளைப் பற்றி எமது வாசகர்களுக்கு சுருக்கமாக விளக்கியுள்ளோம். ஆனால், எந்த மாற்று மருத்துவத்தையும் விழித்தெழு! பரிந்துரை செய்வதில்லை என்பதையும் உறுதிப்பட கூறுகிறோம்.

மூலிகை மகத்துவம்

மாற்று மருத்துவத்தில் மூலிகை மருத்துவம் மிகவும் பிரபலம். பல நூற்றாண்டுகளாகவே மூலிகைகள் மருந்தாக பயன்பட்டுள்ள போதிலும், சொற்ப மூலிகைகளையே விஞ்ஞானிகள் கவனமாக ஆராய்ந்திருக்கிறார்கள். அதிலும் ஒருசிலவற்றை முழுமையாக ஆராய்ந்திருப்பதால் எந்தளவுக்கு பாதுகாப்பானவை, எத்தகைய மருத்துவ குணங்கள் உடையவை போன்ற விஷயங்கள் நமக்கு தெரிய வந்துள்ளன. காலம் காலமாக மூலிகைகள் செய்திருக்கும் மகத்துவங்களிலிருந்தும் நாம் அவற்றைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளலாம்.

இலேசான மன இறுக்கம், வயதானால் வரக்கூடிய ஞாபகமறதி, புராஸ்டேட் கிளாண்ட் விரிவடைதல் போன்றவற்றிற்கு கொடுக்கப்பட்ட சில மூலிகைகள் மிகவும் பயனுள்ளவை என்பது பல தடவை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்தபின் சமீபத்தில் தெரியவந்துள்ளது. உதாரணத்திற்கு, பிளாக் ஸ்னேக்ரூட், பக்பேனி, ராட்டல்ரூட் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் பிளாக் கொவொஷ் (black cohosh) என்ற மூலிகை செடியின் மகத்துவத்தை அமெரிக்க இந்தியர்கள் அறிந்திருந்தார்கள். அந்த மூலிகை வேரை வேகவைத்து, பெண்களின் மாதவிடாய் பிரச்சினைகளுக்கு, பிரசவத்தால் ஏற்படுகிற பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தினார்கள். அரசு அங்கீகாரத்துடன் ஜெர்மனியில் விற்கப்படும் கருப்பு கொவொஷ் சாறு “பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படுகிற பிரச்சினைகளுக்கு” சிறந்த மருந்து என்பதாக ஏப்ரல், 2000 தேதியிட்ட ஹார்வர்டு விமன்ஸ் ஹெல்த் வாட்ச் என்ற பத்திரிகை சமீபத்தில் கூறியது.

இரசாயன மருந்துகளைவிட இயற்கையான மூலிகை மருந்துகள் மிகவும் பாதுகாப்பானதால் நிறையப்பேர் மூலிகை மருந்துகளையே நாடுகிறார்கள். ஆனால் மற்ற மருந்துகளோடு சேர்ந்து சில மூலிகைகளை சாப்பிடும்போது பக்கவிளைவுகள் வரக்கூடும். உதாரணத்திற்கு சளியை இளக வைக்கவும், உடல் எடையை குறைக்கவும் பிரபலமான ஒரு மூலிகை கொடுக்கப்படுகிறது. இம்மூலிகை ஒருவேளை இரத்த அழுத்தத்தையும், இருதய துடிப்பையும் அதிகரிக்க செய்யும்.

சில மூலிகைகள் நோயாளிகளின் இரத்தப்போக்கை அதிகரிக்க செய்யும். இந்த மூலிகைகளோடு “இரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கவல்ல” இரசாயன மருந்துகளையும் சேர்த்து சாப்பிட்டால் ஆபத்தாக முடியும். சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் போன்ற தீராத வியாதி உள்ளவர்களும், வேறு மருந்துகளை சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்களும் மூலிகை மருந்து உபயோகிப்பதில் அதிக கவனமாக இருக்க வேண்டும்.​—⁠பெட்டி செய்தியைக் காண்க.

மூலிகை மருந்தின் தரம் எப்போதும் ஒரேமாதிரி இல்லாததும் ஒரு குறையே. மூலிகை மருந்துகளோடு நச்சுத்தன்மை உள்ள உலோகங்களையும், மற்ற பொருட்களையும் கலந்துவிடுவதாக சமீப வருடங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. சில மருந்துகளில் லேபிளில் குறிப்பிட்ட மூலிகைகளே இருப்பதில்லை என்ற வருத்தகரமான விஷயமும் தெரியவந்துள்ளது. ஆகவே, மூலிகை மருந்தாக இருந்தாலும்சரி வேறு மருந்தாக இருந்தாலும்சரி புகழ்பெற்ற, நம்பகமான இடங்களில் மட்டும் வாங்குங்கள்.

வைட்டமின்களும் தாதுக்களும்

நாம் உண்ணும் உணவோடு, வைட்டமின்களையும், தாதுக்களையும் சேர்த்து உட்கொண்டால் நிறைய வியாதிகளை தவிர்த்துவிடலாம் என்று அறிக்கைகள் சொல்கின்றன. இவற்றால் இரத்த சோகை, எலும்பு மெலிதல் நோய், பிறவி குறைபாடுகளைக்கூட போக்கிவிடலாம் என்கிறார்கள். ஆகவே தினமும், அரசாங்கம் பரிந்துரை செய்துள்ள அளவில் வைட்டமின்களையும் தாதுக்களையும் எடுத்துக்கொள்வது ஓரளவுக்கு பாதுகாப்பானது, பயனுள்ளது.

ஆனால், சில நோய்களுக்கு அளவுக்கு அதிகமாக வைட்டமின்களையும் தாதுக்களையும் கொடுப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். வைட்டமின்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது, உணவிலிருந்து சத்துக்களை உறிஞ்சுவதில் நம் உடலுக்கு இடையூறு ஏற்படலாம் அல்லது அவை மற்ற ஊட்டச் சத்துக்களோடு சேரும்போது பயங்கரமான பக்கவிளைவுகளை உண்டாக்கலாம். மேலும், அதிக அளவில் வைட்டமின் மருந்துகளை உபயோகிக்கலாம் என்பதற்கு போதுமான ஆதாரம் இன்னும் கிடைக்கவில்லை என்பது நினைவிருக்கட்டும்.

ஹோமியோபதி

1700-களில் பிரபலமாக இருந்த வீரியம் மிக்க மருந்துகளைவிட மிதமான, மென்மையான மருந்துகளை தயாரிக்க முனைந்ததால் தோன்றியதுதான் இந்த ஹோமியோபதி. “முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்” என்ற அடிப்படையில் தோன்றியது இந்த ஹோமியோபதி. அதாவது, “ஒரு மருந்தால் ஒரு நோயைக் குணப்படுத்த முடியும் என்றால் அதே மருந்தால் அந்த நோயை உண்டாக்கவும் முடியும்” என்பதுதான் ஹோமியோபதியின் அடிப்படை. மருந்து மூலப்பொருளின் சக்தியை குறைத்து (diluting) ஹோமியோ மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. அதனால் சில நேரங்களில் மூலப்பொருளின் தன்மையை இழந்துவிடுகிறது, அதாவது அதன் ஒரு மூலக்கூறுகூட இல்லாமல் போய்விடுகிறது.

ஆனால் ஏதோ மனத்திருப்திக்காக அலோப்பதியில் கொடுக்கும் மருந்துகளைவிட ஹோமியோ எவ்வளவோ மேல். ஆஸ்துமா, அலர்ஜிகள், குழந்தைப் பருவத்தில் வரக்கூடிய பேதிகள் போன்ற சில நோய்களுக்கு ஹோமியோபதியில் சிறந்த மருந்துகள் உள்ளன. அதேநேரத்தில் மூலப்பொருளின் வீரியத்தை பன்மடங்கு குறைத்து ஹோமியோ மருந்து தயாரிக்கப்படுவதால் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. மார்ச் 4, 1998, JAMA பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரை இவ்வாறு கூறியது: “நோய் என்ன என்று கண்டுபிடிக்க முடியாமல் நெடுநாள் அவதிப்படுகிற நோயாளிகளுக்கு ஹோமியோபதியே மிகவும் பயனுள்ள, முக்கிய மருத்துவமாக இருக்கலாம். ஹோமியோபதியை அதன் வரம்புக்குள் உபயோகித்தால் அது நவீன மருத்துவத்திற்கு கிடைத்திருக்கும், ‘மற்றொரு வரப்பிரசாதம்’ என்று கூறலாம்.” ஆனால் உயிருக்கு ஆபத்து நேரிடுகிற அவசரத்தில் அலோப்பதி மருத்துவத்தை நாடுவதே புத்திசாலித்தனம்.

வர்ம மருத்துவ முறை

உடல் பாகங்களுக்கு தூண்டுதல் அளிக்கும் பல சிகிச்சைகள் மாற்று மருத்துவத்தில் உள்ளன. இதில் வர்மசிகிச்சை மிகவும் பிரபலம். குறிப்பாக அமெரிக்க நாடுகளில் இது பிரபலமடைந்துள்ளது. முதுகுத்தண்டில் உள்ள வர்ம புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுத்து, எங்காவது இரத்த ஓட்டம் தடைப்பட்டிருந்தால் அதை நீக்கி, நோயைப் போக்குவதே வர்மக்கலையாகும். அதனால்தான் நோயாளியின் முதுகுத்தண்டின் எந்தப் பகுதியில் எந்த வர்ம புள்ளிக்கு தூண்டுதல் அளித்தால் அவர் பிரதிபலிப்பார் என்பதில் வர்மக்கலை நிபுணர்கள் தேர்ச்சிப் பெற்றிருக்கிறார்கள்.

அலோப்பதி மருத்துவத்தில் முதுகு வலி பிரச்சினைகளை முற்றிலும் நீக்க முடிவதில்லை. ஆனால் வர்மக்கலை சிகிச்சையில் முதுகு வலிக்கு நல்ல நிவாரணம் கிடைப்பதாக சில நோயாளிகள் திருப்தி தெரிவிக்கிறார்கள். வர்மக்கலை சிகிச்சை பெரும்பாலும் வலியை போக்கவே பயன்படுத்தப்படுகிறது. மற்ற நோய்களை நீக்குவதில் இதன் பங்கு குறைவே.

வர்மக்கலையில் கைதேர்ந்த நிபுணர்கள் சிகிச்சை அளிக்கும்போது பக்கவிளைவுகள் அவ்வளவாக இருந்ததில்லை. ஆனால், கழுத்துப் பகுதிக்கு சிகிச்சை அளிக்கும் போது நோயாளிக்கு பக்கவாதம் போன்ற பெரும் ஆபத்துக்கள் ஏற்படலாம் என்பதை அறிந்திருப்பது அவசியம். இதுபோன்ற ஆபத்துக்களை தவிர்த்து, பாதுகாப்பாக வர்ம சிகிச்சை அளிக்க முடியுமா என்பதை அறிய, சில வர்மக்கலை நிபுணர்கள் நோயாளியிடம் முழுமையாக பரிசோதனை செய்யும்படி பரிந்துரை செய்கிறார்கள்.

மசாஜ்

அந்தக் காலத்திலிருந்தே மசாஜ்ஜின் மகத்துவங்களை கிட்டத்தட்ட எல்லா நாட்டினரும் அறிந்திருக்கிறார்கள். மசாஜ் பற்றிய குறிப்பு பைபிளிலும் உள்ளது. (எஸ்தர் 2:12, NW) “பண்டைய இந்திய, சீன மருத்துவத்தில் மசாஜ் முறைகள் முக்கிய இடம் வகித்தன. 19-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பார் ஹென்ரிக் லிங் என்பவரே ஐரோப்பாவில் மசாஜ்ஜை முறைப்படுத்தினார். இவரே ஸ்வீடன் மசாஜ்ஜையும் தோற்றுவித்தார்” என்று கூறியது நவம்பர் 6, 1999, பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் (BMJ).

மசாஜ் செய்வதால், தசை பிடிப்புகள் நீங்கி, உடலுக்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைக்கிறது. அதோடு திசுக்களில் அடைபட்டிருக்கும் நச்சுக்கள் அகற்றப்படுகின்றன. இப்போது, முதுகு வலி, தலைவலி, ஜீரண கோளாறு போன்ற நோய்களுக்கு டாக்டர்கள் மசாஜ் செய்யும்படி பரிந்துரை செய்கிறார்கள். மசாஜ் செய்துகொண்ட பலர் ‘என்னே புத்துணர்ச்சி!’ என்கிறார்கள். “மசாஜ் டென்ஷனை குறைப்பதால், 80 சதவிகித டென்ஷன் நோய்கள் பறந்துவிடுகின்றன” என்கிறார் டாக்டர் சான்ரா மெக்லானாஹான்.

பல்வேறு மசாஜ் முறைகள் உள்ளன. “பெரும்பாலானவற்றில் பயங்கர பக்கவிளைவுகள் வரும் என்று அஞ்ச தேவையில்லை. மேலும் எங்கே மசாஜ் செய்யவேண்டும் என்பதற்கு சாதாரண அறிவை உபயோகித்தாலே போதும் (உதாரணத்திற்கு, தீப்புண்கள் அல்லது கைகால் நரம்பில் எங்காவது இரத்த உறைவு இருந்தால் அவ்விடங்களை தவிர்க்க வேண்டும்) . . . புற்று நோயாளிக்கு மசாஜ் செய்தால், புற்று மற்ற இடங்களுக்கும் பரவலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்கிறது BMJ.

“இன்று மசாஜ்ஜுக்கு கிராக்கி கூடிவிட்டதால், மசாஜ் செய்வோர் பயிற்சி பெற்றவரா போலியா என்ற சந்தேகம் வாடிக்கையாளர்களுக்கு எழுந்துள்ளது. இத்தகைய சந்தேகம் கண்டிப்பாக இருக்க வேண்டும்” என்று கூறுகிறார் அமெரிக்க மசாஜ் சிகிச்சை அமைப்பின் முன்னாள் தலைவர் E. ஹாஸ்டன் லாபார்ன். மசாஜ் பயிற்சி பெறாதவரிடம் சென்று மாட்டிக்கொள்வதை தவிர்க்க, “மசாஜ் செய்வோர், அவர்களுக்காக சட்டப்படி நியமிக்கப்பட்ட குழுவில் பதிவு செய்திருக்கிறார்களா என்பதை நோயாளிகள் தெரிந்துகொள்ள வேண்டும்” என்ற அறிவுரையை BMJ அளிக்கிறது. அமெரிக்காவில் 28 மாகாணங்களில் லைசன்ஸ் பெற்ற மசாஜ் நிபுணர்கள் இருப்பதாக கடந்த ஆண்டு ஓர் அறிக்கை வெளி வந்தது.

அகுபங்சர்

உலகம் முழுவதும் அகுபங்சர் மருத்துவம் பிரபலம் அடைந்துள்ளது. பல்வேறு வகை “அகுபங்சர்” உண்டு. பொதுவாக, மெல்லிய ஊசிகள் மூலம் அகுபங்சர் புள்ளிகளைத் தூண்டிவிட்டு நோய்தீர்க்கப்படுகிறது. அகுபங்சர் சிகிச்சை பெறும்போது நரம்புகளில் தூண்டுதல் ஏற்படுவதால் சிலருக்கு என்டோர்பைன்ஸ் என்ற இரசாயனம் சுரக்கிறது. இது வலியையும், வீக்கத்தையும், அழற்சியையும் குறைக்கிறது. இவ்வுண்மையை பல பத்தாண்டுகளாக ஆராய்ச்சி செய்து கண்டறிந்துள்ளனர்.

எண்ணற்ற வியாதிகளுக்கு அகுபங்சர் சிகிச்சையால் நல்ல பலன் கிடைக்கும் என்றும், வலிமறக்க கொடுக்கப்படும் மயக்க மருந்துகளைவிட இது பாதுகாப்பானது என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 104 வகை வியாதிகளுக்கு அகுபங்சர் சிகிச்சை அளிக்கப்படுவதை உலக சுகாதார அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆப்ரேஷனுக்குப் பின் வரக்கூடிய வலி, தசை வலி, பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் வரும் வலி ஆகியவற்றை குறைக்க அகுபங்சர் உதவுகிறது. மருந்து உட்கொள்ளும்போதும், கர்ப்ப காலத்திலும் வரக்கூடிய மயக்கம், வாந்தி ஆகியவற்றை போக்கவும் அகுபங்சர் சிறந்தது என்பதற்கு பல சான்றுகளை அமெரிக்க நாடுகள் தேர்ந்தெடுத்த தேசிய ஆரோக்கிய கழகங்களின் ஒரு குழு அளித்தது.

அகுபங்சர் மருத்துவத்தில் பயங்கரமான பக்கவிளைவு வருமோ என்கிற பயம் இல்லை. ஆனால் ஊசியால் குத்தும்போது சிலருக்கு ஒருவேளை வலி எடுக்கும், மரத்துப்போனதுபோல் இருக்கும் அல்லது கூசும். கிருமிகள் அழிந்துபோகும் அளவுக்கு கொதிக்கும் தண்ணீரில் சுத்தம் செய்யப்பட்ட ஊசிகளை பயன்படுத்தும்போது நோய் தொற்றும் அபாயம் குறைவு. அல்லது ஊசியை ஒருமுறை மாத்திரம் உபயோகித்துவிட்டு தூக்கியெறிந்துவிட வேண்டும். வியாதியை சரியாக கண்டுபிடிக்கும் திறமை அகுபங்சர் நிபுணர்கள் பலருக்கு இல்லாதது பெரும் குறை என்றே கூறவேண்டும். அல்லது நோயாளிக்கு வேறு சிறப்பான மருத்துவத்தை பரிந்துரை செய்ய அவர்கள் தவறிவிடுகிறார்கள். நோயை சரியாக கண்டுபிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அகுபங்சர் சிகிச்சையே போதும் என்றும் இருந்துவிட முடியாது, அதிலும் குறிப்பாக தீராத நோய் அறிகுறிகள் இருக்கும்போது அகுபங்சரே கதியென்று இருக்க முடியாது.

எதுவேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்

இன்றைய மாற்று மருத்துவங்களிலிருந்து சிலவற்றை சாம்பிளுக்காக கொடுத்தோம். சில இடங்களில் இம்மருத்துவ முறைகள் மாற்று மருத்துவம் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. இவற்றில் சிலவும், இங்கே குறிப்பிடாத மற்ற மருத்துவ முறைகளும் ஆங்கில அல்லது விஞ்ஞான மருத்துவமாக கருதப்படும் காலம் தூரத்தில் இல்லை. இப்போதே உலகில் பல்வேறு பகுதிகளில் இது நடந்தேறி விட்டது. அதேசமயத்தில் இவற்றில் பல உபயோகமின்றியும் போகலாம், அல்லது புகழ் இன்றியும் போகலாம்.

வலியும், வியாதியும் மனிதனோடே ஒட்டியிருப்பது வேதனையான விஷயம். இதை பைபிள் அப்படியே படம்பிடித்து காட்டுகிறது: “இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கிறது என்பதை நாம் அறிவோம்.” (ரோமர் [உரோமையர்] 8:22, பொது மொழிபெயர்ப்பு) ஆகவே வேதனையின்றி இருக்கவே மனிதன் விரும்புகிறான். ஆனால் எங்கே செல்ல? அடுத்த கட்டுரையை பாருங்கள். அதில் கொடுத்திருக்கும் சில ஆலோசனைகள் உங்களுக்கு விருப்பமான மருத்துவத்தை எடுத்துக்கொள்ள உதவலாம்.

[பக்கம் 8-ன் பெட்டி/படம்]

ஆங்கில மருந்தையும் மூலிகை மருந்தையும் ஒருசேர சாப்பிட்டால் ஆபத்தா?

ஒருசில ஆங்கில மருந்துக்களை மதுபானங்களோடு சேர்த்து சாப்பிடக்கூடாது என்ற எச்சரிக்கை பொது மக்களுக்கு அடிக்கடி தரப்படுகிறது. இதைப்போல் ஆங்கில மருந்தோடு சில மூலிகைகளை சாப்பிடுவது ஆபத்தானதா? இத்தகைய பழக்கம் பரவலாக உள்ளதா?

“ஆங்கில மருந்தையும் மூலிகை மருந்தையும் ஒருசேர சாப்பிடுவதை” பற்றி த ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷனில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதிலிருந்து குறிப்பு: “பெரியவர்களில் 44% பேர் ஆங்கில மருந்தை தொடர்ந்து சாப்பிடுவதாக சொல்லப்படுகிறது. இவர்களில் கிட்டத்தட்ட ஐந்து பேரில் ஒருவர் (18.4%) ஆங்கில மருந்தோடு ஒரு மூலிகை மருந்தையோ, நிறைய விட்டமின் மாத்திரைகளையோ அல்லது இரண்டையுமோ உட்கொள்கிறார்.” இவ்வாறு இருவகை மருந்துகளையும் சேர்த்து சாப்பிடுவதால் வருகிற ஆபத்தை அறிந்திருப்பது அவசியம்.

குறிப்பாக மூலிகை மருந்தை சாப்பிடுகிறவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டியிருந்தால் கவனம் தேவை. இதற்கான விளக்கத்தை அமெரிக்க மயக்க மருந்தியல் நிபுணர்கள் சங்கத்தின் பிரஸிடென்டாக இருக்கும் டாக்டர் ஜான் நீல்டு தந்தார்: “ஜின்செங், செயின்ட் ஜான்ஸ் ஓர்ட் போன்ற பிரபலமான மூலிகைகள்கூட சிலருக்கு இரத்த அழுத்தத்தை பெருமளவு அதிகரிக்கவோ குறைக்கவோ செய்திருக்கின்றன. இது நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கையில் பெரும் ஆபத்தாக முடியலாம்.”

டாக்டர் மேலும் கூறியது: “ஜிங்கோ பில்லோபா, இஞ்ஜி, ஃபீவர்ஃப்யூ (feverfew) போன்ற மூலிகைகளும், இன்னும் சில மூலிகைகளும் இரத்தம் உறைதலை தடுக்கலாம். குறிப்பாக முதுகுத்தண்டு வழியே மயக்க மருந்து கொடுக்கையில், முதுகுத்தண்டிற்கு அருகில் இரத்தக் கசிவு ஏற்பட்டால், அந்த நபருக்கு கைகால் விளங்காமல் போகலாம். தூக்க மருந்தின் அல்லது மயக்க மருந்தின் பாதிப்பை செயின்ட் ஜான்ஸ் ஓர்ட் என்ற மூலிகை மேலும் அதிகரிக்கலாம்.”

ஆகவே, அலோப்பதி மருந்தோடு சில மூலிகைகளை எடுக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவ்வாறு இருவகை மருந்துகளை சேர்த்து சாப்பிடுவதில் கர்ப்பிணி பெண்களும், பாலூட்டுகிற தாய்மார்களும் அதிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இது குழந்தையை பாதிக்கலாம். ஆகவே நோயாளிகள் மருத்துவர்களிடமே கேட்டுவிட்டு, தேவைக்கு ஏற்ப ஆங்கில மருத்துவமோ, மாற்று மருத்துவமோ எடுத்துக்கொள்வது நல்லது.

[பக்கம் 7-ன் படம்]

நோய்தீர்க்கும் முத்தான மூலிகைகள்

பிளாக் கொவொஷ்

செயின்ட் ஜான்ஸ் ஓர்ட்

[படத்திற்கான நன்றி]

© Bill Johnson/Visuals Unlimited

[பக்கம் 7-ன் படம்]

நோயாளியும் மருத்துவரும் கூடிப்பேசினால் கோடி நன்மை