Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சூரியன் அதன் விநோதமான இயல்புகள்

சூரியன் அதன் விநோதமான இயல்புகள்

சூரியன் அதன் விநோதமான இயல்புகள்

நீங்கள் இந்த கட்டுரையை வாசிக்கும் இச்சமயத்தில், சூரியன் பளிச்சென்று முகம் காட்டி சிரித்துக் கொண்டிருப்பான் அல்லது இன்னும் சற்று நேரத்தில் உறக்கத்திலிருந்து எழுந்துவிடுவான். சூரியன் நமக்கு அவ்வளவு முக்கியமா? ஆம், ஏனென்றால் சூரிய ஒளி இல்லையெனில், நாம் மட்டுமின்றி, இவ்வுலகிலுள்ள கோடிக்கணக்கான உயிரினங்களும் உயிர்வாழ முடியாது. இன்று இவ்வுலகிலுள்ள லட்சக்கணக்கான உயிர் வகைகள்​—⁠ஓரணு உயிரியிலிருந்து இராட்சத திமிங்கலம் வரை​—⁠எதுவுமே இருக்காது.

சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றலில் மிகக் குறைந்தளவே அதாவது, சுமார் 200 கோடியில் ஒரு பங்கு மாத்திரமே பூமியை வந்தடைகிறது. ஆனாலும் அந்த பெரும் “சூளையிலிருந்து” வெளிப்படும் சிறு “தீப்பொறி” போன்ற ஆற்றல் பூமியில் உயிர்வாழ்வதற்கும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் உதவுகிறது. அதுமட்டுமல்ல, இந்த சிறுதுளி ஆற்றலை சரிவர பயன்படுத்தினால், இன்றைய சமுதாயத்திற்கு தேவைப்படும் ஆற்றலின் அளவிற்கும் அதிகமாக அது கிடைப்பது தெரியவரும்.

ஆனால், அநேக வானவியல் புத்தகங்கள் சூரியனை சாதாரண ஒரு நட்சத்திரம் அல்லது “அற்பமான வான்கோள்” என்றே வகைப்படுத்துகின்றன. ஆனால் உண்மையில் சூரியன் “சாதாரண வான்கோள்”தானா? இல்லை என்கிறார் சீயட்டிலிலுள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வான் ஆராய்ச்சியாளரான கீல்யர்மோ கொன்ஸாலஸ். சூரியன் மற்ற கோள்களிலிருந்து வினோதமானது என்கிறார் அவர். மற்ற கிரகங்களில் உயிர் இருக்கிறதா என்று தேடுவதற்கும் இதற்கும் சம்பந்தம் ஏதும் இருக்கிறதா? இதற்கு அவர் தரும் பதிலை கவனியுங்கள். “அநேகர் நினைப்பதுபோல் அல்லாமல், புத்திக்கூர்மையுள்ள உயிர்கள் வாழ்வதற்கு உதவும் நட்சத்திரம் வேறு எதுவுமே இல்லை. வான் ஆராய்ச்சியாளர்கள், சூரியனைப் போன்ற தனிச்சிறப்புமிக்க நட்சத்திரத்திடம் தங்கள் கவனத்தைத் திருப்பினாலொழிய அவர்களால் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியாது. அவர்கள் வெறுமனே நேரத்தை வீணாக்குகிறார்கள்” என்கிறார் அவர்.

பூமியில் உயிர் வாழ்வதற்கு உதவும் சூரியனின் சில முக்கிய அம்சங்கள் யாவை? இந்த அம்சங்களை சிந்திக்கும்போது, பிரபஞ்சத்தின் அமைப்பைப் பற்றிய விஞ்ஞானிகளின் கருத்துக்கள் அனைத்துமே கோட்பாடுகள்தான் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

மனங்கவரும் இயல்புகள்

ஒற்றை நட்சத்திரம்: சூரியனுக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவற்றில் 85 சதவீத நட்சத்திரங்கள் கூட்டம் கூட்டமாக இருக்கின்றன என கணக்கிடுகின்றனர் வான் ஆராய்ச்சியாளர்கள். இக்கூட்டத்தில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் இருக்கும்; இவை புவியீர்ப்பு சக்தியால் இணைக்கப்பட்டு ஒன்றையொன்று சுற்றி வருகின்றன.

ஆனால், சூரியனோ ஒரேயொரு தனி நட்சத்திரம். “சூரியன் ஒற்றை நட்சத்திரமாக இருப்பது, வினோதமானது” என கைடு டு த சன் என்ற புத்தகத்தில், வான் ஆராய்ச்சியாளரான கென்னெத் ஜே. ஹெச். ஃபிலிப்ஸ் எழுதினார். இவ்வாறு சூரியன் தனித்திருப்பதால், பூமிக்கு நிலையான கோளப்பாதை அமைந்திருக்கிறது. இது பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைமைகளை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார் கொன்ஸாலஸ்.

மிகப் பெரிய நட்சத்திரம்: சூரியனின் மற்றொரு வினோத இயல்பைப் பற்றி கொன்ஸாலஸ் குறிப்பிட்டார். “அதைச் சுற்றியுள்ள நட்சத்திரங்களில் 10 சதவீதம், மெகா சைஸ் நட்சத்திரங்களாக இருக்கின்றன. அவற்றுள் சூரியனும் ஒன்று” என அறிக்கை செய்கிறது நியூ சைன்டிஸ்ட் பத்திரிகை. “நம் சூரிய மண்டலத்தின் நிறையில் 99.87 சதவீதம் சூரியனுடையது. எனவே இது சூரிய மண்டலத்திலுள்ள மற்ற எல்லாவற்றையும் புவியீர்ப்பு சக்தியால் கட்டுப்படுத்துகிறது” என்கிறார் ஃபிலிப்ஸ்.

இந்த அம்சமே, பூமி சூரியனிலிருந்து வெகு தூரத்தில் அதாவது 15 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருந்தும், அதன் பாதையிலிருந்து பின்னோக்கி சென்றுவிடாமல் பார்த்துக் கொள்கிறது. அத்துடன், அது இவ்வளவு தொலைவில் இருப்பது பூமியில் ஜீவராசிகள் வாழ்வதற்கு உதவுகிறது; ஏனெனில் சூரியன் மட்டும் கொஞ்சம் அருகிலிருந்திருந்தால் அவ்வளவுதான், அதிலிருந்து வரும் ஒளிக்கதிர் இந்த பூமியை பொசுக்கி சாம்பலாக்கியிருக்கும்.

கன தனிமங்கள்: சூரியனுக்கு ஒத்த மெகா நட்சத்திரங்களில் இருக்கும் கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், மெக்னீஷியம், சிலிக்கான், இரும்பு போன்ற கன தனிமங்களைவிட சூரியனில் 50 சதவீதம் அதிகம் உள்ளதாக கொன்ஸாலஸ் குறிப்பிடுகிறார். இந்த விதத்தில், சூரியன் தன் அண்டை நட்சத்திரங்களைவிட தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. “சூரியனைப் பொருத்தவரை கன தனிமங்களின் திரள்கள் அதில் குறைவாகவே உள்ளன; ஆனால் மற்ற நட்சத்திரங்களில் . . . அவை இன்னும் குறைவாகவே உள்ளன” என்கிறார் ஃபிலிப்ஸ். சூரியனைப் போல கன தனிமங்கள் அதிகமுள்ள நட்சத்திரங்கள், ‘பாப்புலேஷன் ஒன்’ நட்சத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன.

இதற்கும் பூமியில் உயிர்கள் வாழ்வதற்கும் என்ன சம்பந்தம்? உயிர்களை ஆதரிக்க இந்த கன தனிமங்கள் அவசியம். ஆனால் இவை அவ்வளவு எளிதாக கிடைப்பவை அல்ல, இந்த பிரபஞ்சம் முழுவதிலும் இவை 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. ஆனால் நம் பூமி எங்கும் இந்த கன தனிமங்கள் இருக்கின்றன. ஏன்? பூமி வினோத இயல்புடைய நட்சத்திரமான சூரியனை சுற்றி வருவதே அதற்குக் காரணம் என்று வான் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

குறை நீள்வட்ட பாதை: பாப்புலேஷன் ஒன் நட்சத்திர மண்டலத்தில் சூரியன் அங்கம் வகிப்பதால் மற்றொரு நன்மையும் இருக்கிறது. “பொதுவாக பாப்புலேஷன் ஒன் நட்சத்திரங்கள், பால்வீதிமண்டலத்தின் மையத்தை அவற்றின் வட்டச் சுற்றுப்பாதையில்தான் வலம் வருகின்றன” என்கிறது கைடு டு த சன் புத்தகம். ஆனால் வித்தியாசம் என்னவென்றால், சூரியனைப் போன்ற மற்ற நட்சத்திரங்களின் சுற்றுப்பாதையைவிட சூரியனின் பாதை குறை நீள்வட்ட வடிவானது. இது பூமியில் உயிர்வாழ எவ்வாறு உதவுகிறது? சூரியனின் நீள்வட்ட பாதை பால்வீதிமண்டலத்தின் மையத்திற்குள் சூரியன் இழுக்கப்பட்டுவிடாதபடி காக்கிறது. ஏனென்றால் அந்த மையப்பகுதியில் அவ்வப்போது நட்சத்திரங்கள் வெடிக்கின்றன.

ஒளியில் மாற்றம்: இது, சூரியனின் மற்றொரு அதிசயம். ஒளியில் மாற்றம், மற்ற நட்சத்திரங்களைவிட சூரியனில் குறைவாகவே நிகழ்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், இதன் வெளிச்சம் நிலையானது.

இப்படிப்பட்ட நிலையான ஒளி பூமியில் உயிர்வாழ்வுக்கு மிக அவசியம். “நம்முடைய நிலையான சுற்றுச்சூழல் அம்சங்களில் சூரியனின் ஒளி அமைப்பும் ஒன்று என்பதற்கு நாம் இந்த கிரகத்தில் உயிர் வாழ்வதே அத்தாட்சி அளிக்கிறது” என்கிறார் விஞ்ஞான சரித்திராசிரியர் கார்ல் ஹூஃப்பௌவர்.

சுற்றுப்பாதையின் சாய்வு: சூரியனின் கோளப்பாதை, பால்வீதி மண்டலத்தின் சமதளத்திலிருந்து சற்றே சாய்ந்து இருக்கிறது. அதாவது, சூரியனின் சுற்றுப்பாதையின் தளத்திற்கும் பால்வீதி மண்டலத்தின் தளத்திற்கும் இடையேயுள்ள சாய்வு கொஞ்சமே. இது பூமியில் உயிர் வாழ்வதற்கு எவ்வாறு உதவுகிறது?

நம் சூரிய மண்டலத்திலிருந்து வெகு தொலைவில் நம்மைச் சுற்றி, ஓர்ட் மேகம் என்று அழைக்கப்படும் வால் நட்சத்திர தொகுதி ஒன்று வட்ட வடிவில் இருக்கிறது. a சூரியனின் சுற்றுப்பாதை பால்வீதி மண்டலத்தின் தளத்திலிருந்து அதிகமாகவே சாய்ந்திருந்தால் என்ன நடக்கும்? அப்போது சூரியன் பால்வீதி மண்டலத்தின் தளத்தை திடீரென கடக்கும்போது ஓர்ட் மேகம் அசைக்கப்படும்; அதன் விளைவாக, அங்குள்ள வால் நட்சத்திரங்கள் எல்லாம் பூமி மீது விழுந்து அதை சுக்குநூறாக்கிவிடும் என்கின்றனர் வான் ஆராய்ச்சியாளர்கள்.

சூரிய கிரகணங்கள் சொல்லும் பாடம்

நம் சூரிய மண்டலத்தில் குறைந்தபட்சம் 60 சந்திரன்கள் இருக்கின்றன. நம் மண்டலத்திலுள்ள நவகிரகங்களில் ஏழு கிரகங்களை இவை சுற்றிவருகின்றன. ஆனாலும், சூரிய மண்டலத்திலேயே பூமிக்கு மட்டும்தான் முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. எப்படி அவ்வாறு நிகழ்கிறது?

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போதுதான் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. முழு சூரிய கிரகணம் ஏற்படுவதற்கு நம் கண்களுக்குத் தெரிந்தவரை சூரியனும் நிலாவும் ஒரே அளவில் இருக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் நிலாவால் சூரியனை முழுமையாக மறைக்க முடியும். ஆம், இதுவே நிகழ்கிறது! அளவில் சூரியன் நிலாவைவிட 400 மடங்கு பெரியதாக இருந்தாலும், பூமியிலிருந்து நிலா எவ்வளவு தூரம் இருக்கிறதோ அதைவிட சுமார் 400 மடங்கு தொலைவில் சூரியன் இருக்கிறது.

ஆனால் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இருக்கும் தூரமும், நம் கண்களுக்குத் தெரியும் சூரியனின் அளவும் முழு கிரகணம் ஏற்படுவதற்கான அம்சமாக மட்டுமல்லாமல், பூமியில் உயிர் வாழ்வதற்கு மிக முக்கியமான காரணமாகவும் இருக்கிறது. “பூமி, இப்போது இருப்பதைவிட சூரியனிலிருந்து கொஞ்சம் தூரத்தில் அல்லது அருகில் இருந்தால், அது உறைந்துவிடும் அளவுக்கு அதிக குளிராகவோ சுட்டுப் பொசுக்கும் அளவுக்கு அதிக சூடாகவோ இருக்கும். அங்கே உயிர் என்ற பேச்சுக்கே இடமிருக்காது” என்கிறார் அவர்.

அதுமட்டுமல்ல, பூமியை சுற்றிவரும் வினோதமான பெரிய சந்திரன் பூமியில் உயிர்வாழ்வதற்கு பெரிதும் உதவுகிறது. அதன் புவியீர்ப்பு சக்தி, பூமி அங்கும் இங்கும் கட்டுப்பாடின்றி சுழலாதபடி கட்டுப்படுத்துகிறது. ஒருவேளை அவ்வாறு கட்டுப்பாடின்றி சுழன்றால் சீதோஷண நிலையில் திடீர் திடீர் என பயங்கர மாற்றம் ஏற்படும். ஆகவே, பூமியில் ஜீவராசிகள் வாழ வேண்டுமானால், சூரியனின் மற்றநேக வினோத இயல்புகளுடன், சரியான அளவுள்ள சந்திரன், சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள சரியான தூரம் அவசியம். இவை எல்லாம் ஏதோ தற்செயல் நிகழ்வு என நாம் சொல்ல முடியுமா?

தற்செயல் நிகழ்வா?

உங்கள் காரில் ஏதோ சிறிய கோளாறு ஏற்பட்டிருக்கிறது. அதை சரி செய்ய நல்ல பயிற்சியும் திறமையும் மிக்க ஒரு கார் மெக்கானிக்கின் உதவியை நாடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர் கஷ்டப்பட்டு அதை ஒருவழியாக சரிசெய்துவிடுகிறார். இப்போது எல்லாம் சரியாக இயங்குவதை நீங்களே பார்க்கிறீர்கள். ஆனால் அந்தக் கோளாறு துல்லியமாக சரி செய்யப்பட்டது, தற்செயலாக நிகழ்ந்ததாகவோ அசம்பாவிதமாக சரியாகிவிட்டதாகவோ அவரிடம் சொல்வீர்களேயானால் அந்த மெக்கானிக் என்ன நினைப்பார்?

இதே கேள்வி, வினோத இயல்புகளைக் கொண்ட சூரியனின் விஷயத்திலும் பொருந்தும். சூரியனின் அமைப்பு, அது சுற்றிவரும் பாதை, பூமிக்கும் அதற்கும் இடையே உள்ள தூரம், அதன் மற்ற அம்சங்கள், இவையெல்லாம் தற்செயலாக வந்தவை என்று அநேக விஞ்ஞானிகள் சொல்கின்றனர். ஒருவேளை நீங்களும் அதை நம்பலாம். ஆனால் இவ்வாறு சொல்வது சரிதானா? இந்த முடிவு சரிதான் என நீங்கள் நினைக்கிறீர்களா?

காரின் கோளாறை திறமையாக சரி செய்தது அந்த மெக்கானிக்கின் பயிற்சியையும் திறமையையும் தெளிவாகவே காட்டுகிறது. அதேபோல, வானிலுள்ள மற்ற கோளங்களைக் காட்டிலும் சூரியன் ஒரு முக்கிய விஷயத்தை தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. அது, பூமியில் உயிர் வாழ்வதற்கு உதவியாக இருக்கும் சூரியனின் வினோத இயல்புகளே. சொல்லப்போனால், இந்த நட்சத்திரம், புத்திக்கூர்மையுள்ள, சக்திவாய்ந்த அதன் வடிவமைப்பாளரின், படைப்பாளரின் கைவண்ணத்தில் உருவானது என்பதே அந்த விஷயம். அப்போஸ்தலன் பவுல் இதை இவ்வாறு சொல்கிறார்: “கண்ணுக்குப் புலப்படா அவருடைய பண்புகள்​—⁠அதாவது, என்றும் நிலைக்கும் அவரது வல்லமையும் கடவுள் தன்மையும்​—⁠உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில் மனக் கண்களுக்கு தெளிவாய்த் தெரிகின்றன.”​—ரோமர் 1:20, பொ.மொ.

(g01 3/22)

[அடிக்குறிப்பு]

a ஓர்ட் மேகத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விழித்தெழு! ஜூலை 22, 1999, பக்கம் 26-ஐ பார்க்கவும்.

[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]

சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றலில் சுமார் 200 கோடியில் ஒரு பங்கு மாத்திரமே பூமியை வந்தடைகிறது

[பக்கம் 20-ன் படங்கள்]

சூரியனில் ஏற்படும் இதுபோன்ற கொந்தளிப்பு பூமியில் உயிரை பாதிப்பதில்லை

[படத்திற்கான நன்றி]

பக்கங்கள் 2, 19, 20: NASA photo

[பக்கம் 21-ன் படங்கள்]

நமக்குத் தெரியும் சூரியன் சந்திரனின் பொருத்தமான உருவங்களால் அற்புதமான சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இது தற்செயல் நிகழ்வா?

[பக்கம் 22-ன் படங்கள்]

சூரியன் சுற்றிவரும் பாதை சற்று வேறுபட்டிருந்தால், வால் நட்சத்திரங்கள் எல்லாம் பூமி மீது விழுந்து பூமியை சுக்குநூறாக்கிவிடும்