Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

சிறு பிள்ளைகளும் அதிர்ச்சி தரும் பாடல்களும்

ஏழெட்டு வயதே ஆன பிள்ளைகள், அசிங்கமானதும் செக்ஸை அப்பட்டமாக விவரிப்பதும் வன்முறை சம்பந்தப்பட்டதுமான பாடல்களை கேட்கிறார்கள் என சிகாகோ ட்ரிப்யூன் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. “முன்பெல்லாம் நர்சரிக்குச் செல்லும் பிள்ளைகள் முதல் நடுநிலைப் பள்ளி செல்லும் பிள்ளைகள் வரை, சிறுவர்கள் கேட்டு ரசித்தது ‘குட்டிப் பிள்ளைகளுக்கான பாடல்கள்’ மட்டுமே”; ஆனால் “இன்றோ, தொடக்கப் பள்ளி செல்லும் பிள்ளைகளும்கூட, தங்கள் பெற்றோர் அல்லது டீனேஜிலுள்ள அக்காமார் அண்ணன்மார் கேட்கும் அதே அலைவரிசைக்குத் திருப்பி பாடல்களை கேட்டு ரசிப்பதாக தெரிகிறது.” இவர்கள் கைகளுக்கு கிடைக்கக்கூடாது என்பதற்காகவே வன்முறைமிக்க அல்லது ஆபாசமான வரிகளை உடைய காம்பாக்ட் டிஸ்க்குகளில் எச்சரிக்கை லேபல்களை ஒட்டும்படி ஐக்கிய மாகாணங்களிலுள்ள ரிக்கார்டிங் கம்பெனிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன; அப்படியிருந்தும், மியூஸிக் ஸ்டோர்களில் ரிக்கார்டுகளைப் போட்டுக் கேட்கும் பகுதிகளில் தங்குதடையின்றி வெகு எளிதாக இவர்கள் பாடல்களைக் கேட்டு ரசிக்கிறார்கள். பாஸ்டனிலுள்ள வீலாக் கல்லூரியில் தகவல் கலாச்சாரம் மற்றும் சிறுவர்கள் துறையில் நிபுணராக பணிபுரிபவரான டையண் லெவ்வின் எச்சரிப்பதாவது: “கலாச்சாரம் மிஞ்சிப் போகும்போது நாமும் மரத்துப் போய்விடுகிறோம்.” (g01 6/8)

சிசுக்களின் ஞாபகசக்தி

“கருப்பையில் இருக்கும் குழந்தைகள் கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், அவற்றை நினைவிலும் வைக்கின்றன; அவற்றுக்கு 10 நிமிட குறுகிய நினைவாற்றலும், 24 மணிநேர நீண்ட நினைவாற்றலும் இருக்கிறது” என ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை அறிக்கை செய்கிறது. மாஸ்டிரிக்ட்டிலுள்ள பல்கலைக்கழக ஆஸ்பத்திரியின் டச்சு ஆய்வாளர்கள், “கர்ப்பத்திலுள்ள 37 வாரத்திற்கும் 40 வாரத்திற்கும் இடைப்பட்ட 25 சிசுக்களை” தூண்டிப் பார்க்க அதிர்வுகளையும் ஒலிகளையும் பயன்படுத்தினார்கள்; பிறகு “அல்ட்ரா சவுண்டு ஸ்கேனர் உதவியுடன் அவற்றின் பிரதிபலிப்பை குறித்துக் கொண்டார்கள்.” இந்த முதற்கட்ட ஆய்வுகளைச் செய்த பிறகு, 10 நிமிட இடைவேளையிலும் 24 மணிநேர இடைவேளையிலும் மறுபடியும் அவ்வாறே ஆய்வு நடத்தினர். “தூண்டிய ஒரு வினாடிக்குள் அந்த சிசு கையையோ காலையோ அசைத்தபோது, அது புரிந்துகொண்டதாக கருதப்பட்டது”; இவ்வாறு “அடுத்தடுத்து நான்கு முறை தூண்டிய பிறகு அந்த சிசு அசையாமல் இருந்தபோதோ, அந்தத் தூண்டுதலை அது அடையாளம் கண்டுகொண்டது என்பதைக் குறிப்பிட்டுக் காட்டியது” என ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. இந்த ஆய்வுகளை திரும்பத் திரும்ப செய்து பார்த்தபோது, அவை சிசுக்களுக்குப் பழகிவிட்டதால், உடனே அசையவில்லை எனவும், அந்தத் தூண்டுதலை அவை நினைவில் வைத்துக்கொண்டதையே இது சுட்டிக்காட்டியது எனவும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். (g01 6/8)

பெண்களும் இருதய நோயும்

“ஆண்டுதோறும் சரிசம எண்ணிக்கையிலான ஆண்களும் பெண்களும் இருதய நோயால் இறந்தாலும், அது ஆண்களின் நோய் என்பதாகத்தான் இதுவரை கருதப்பட்டு வந்திருக்கிறது” என த டோரன்டோ ஸ்டார் செய்தித்தாள் தெரிவிக்கிறது. பெண்களுக்கு வரும் இருதய நோய் பொதுவாக காலங்கடந்தே கண்டுபிடிக்கப்படுகிறது என்பதாக அந்த செய்தித்தாள் குறிப்பிடுகிறது. வட அமெரிக்காவில் இறப்புக்கு முக்கிய காரணமான இருதய நோயின் அறிகுறிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் வேறுபடுகின்றன. “ஆண்களுக்கு கடும் நெஞ்சுவலி ஏற்படுகிறது; அது அப்படியே கழுத்து, முதுகு, தோள்கள்வரை பரவுகிறது. பெண்களுக்கோ பெரும்பாலும் தாடையில் வலி ஏற்படுகிறது, நன்றாக மூச்சை இழுத்து விட முடியாமல் போகிறது, குமட்டல் எடுக்கிறது” என ஸ்டார் செய்தித்தாள் கூறுகிறது. பெரும்பாலும் பெண்களுக்கு எஸ்ட்ரோஜன் அளவு குறைந்துவிடும் வயதான 55 வயதுக்கு மேல்தான் இந்நோய்க்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. “எஸ்ட்ரோஜன் இல்லாமல் போய்விட்டதென்றால், ஆண்களுக்கு இணையாக நாமும் இருதய நோயால் அவதிப்படுவோம்” என டோரன்டோ பொது மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றும் டாக்டர் ஸ்டெஃபனீ பிரிஸ்டர் கூறுகிறார்கள்.(g01 6/8)

ஃப்ரிஜ் இல்லாமலே கெட்டுப்போகாத உணவு

வெளியில் வைத்தால் கெட்டுவிடும் தன்மையுள்ள உணவை மின்சக்தியில் இயங்கும் ஃப்ரிஜ்ஜின்றி குளுகுளுவென்றும் கெட்டுப்போகாதவாறும் வைக்க வேண்டுமென்றால் அது சிரமம்தான். ஆனாலும் ஓரளவு வறண்ட வட நைஜீரியாவில் எளிய, செலவில்லாத கண்டுபிடிப்பு ஒன்று வெற்றி கண்டுள்ளது. அது எப்படியென்றால், ஒரு மண்சட்டிக்குள் இன்னொரு மண்சட்டி வைக்கப்படுகிறது; இரண்டுக்கும் இடையே உள்ள இடைவெளி ஈரமண்ணால் நிரப்பப்படுகிறது. உணவுப் பொருள் சிறிய சட்டிக்குள் வைக்கப்படுகிறது; அந்தச் சட்டி ஈரத்துணியால் மூடப்படுகிறது. “வெளியிலுள்ள அனல் காற்றால் ஈரம் உறிஞ்சப்பட்டு, பெரிய சட்டியின் வெளிப்பரப்பிற்கு கொண்டுவரப்பட்டு, அங்கே ஆவியாகிவிடுகிறது” என்கிறது நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை. “அந்த நீராவி வெப்பத்தை எடுத்துக்கொள்கிறது; இவ்வாறு உலரும் முறையால், மணலும் துணியும் ஈரமாக உள்ளவரை சிறிய சட்டிக்குள் இருக்கும் வெப்பம் தொடர்ந்து வெளியே செல்கிறது.” இந்த முறையைப் பயன்படுத்தி, தக்காளிப் பழங்களையும் மிளகாயையும் சுமார் மூன்று வாரம் வரையிலும், கத்தரிக்காயை கிட்டத்தட்ட ஒரு மாதம் வரையிலும் கெட்டுப்போகாமல் வைத்துக்கொள்ளலாம். இப்போதெல்லாம் விவசாயிகள் தேவைப்படும்போது காய்கறிகளை விற்றுக்கொள்ளலாம்; பொதுவாக உணவுப் பொருட்களை விற்பதற்கென்றே தினமும் வீட்டில் இருக்க வேண்டிய அவர்களது மகள்களோ தாராளமாக பள்ளிக்குச் செல்லலாம் என்பதாக இந்த “சட்டிக்குள் சட்டி” முறையை கண்டுபிடித்த மொஹம்மது பா அப்பா கூறுகிறார்.(g01 6/8)

வாரத்திற்கு இரண்டாக உலகிலிருந்து மறையும் இனங்கள்

பண்ணை விலங்குகளில் இரண்டு இனங்கள் ஒவ்வொரு வாரமும் உலகை விட்டு மறைந்துவிடுவதாகவும், 1,350 இனங்கள் அடியோடு அழிந்துவிடும் அச்சுறுத்தலை எதிர்ப்படுவதாகவும் இத்தாலியின் கோரீயிரே டேல்லா ஸேரா செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. வீட்டில் வளர்க்கப்படும் 6,500 பாலூட்டிகளையும் பறவைகளையும் 170 நாடுகளில் ஆய்வு செய்வதற்கு ஐநா உணவு வேளாண் அமைப்பை (FAO) சேர்ந்த ஆய்வாளர்கள் பத்து ஆண்டுகள் செலவிட்டனர். “திட்டவட்டமான நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், இனவிருத்தி செய்யும் இனங்களில் மூன்றில் ஒரு பகுதி அடுத்த 20 ஆண்டுகளில் மறைந்துவிடும்” என இந்த அமைப்பைச் சேர்ந்த விலங்கு மரபியல் குழுவின் மூத்த அதிகாரியான டாக்டர் கீத் ஹேம்மண்ட் கூறுகிறார். வளர்ந்த நாடுகள் விலங்குகளை ஏற்றுமதி செய்வதுதான் இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணம் என்பதாக ரோமிலிருந்து ராய்ட்டர்ஸ் செய்தி அறிக்கையொன்று விளக்குகிறது. இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகள் உள்ளூர் விலங்குகளுடன் இணை சேர்கையில், உள்ளூர் இனங்கள் மறைவதற்குக் காரணமாகலாம். “என்றாலும், தங்கள் நாட்டு சூழ்நிலைக்கே பழக்கப்பட்ட இந்த விலங்குகள், அவை இறக்குமதி செய்யப்பட்ட வளரும் நாடுகளின் மோசமான சுற்றுச்சூழலை சமாளிக்க சிரமப்படுவதுதான் பிரச்சினை” என்பதாக டாக்டர் ஹேம்மண்ட் குறிப்பிடுகிறார். (g01 6/8)

செல் ஃபோனால் விபத்துக்கள்

செல் ஃபோனை பயன்படுத்துவதால் சாலைகளில் மட்டுமே விபத்து ஏற்படுவதில்லை. ரயிலுக்காக பிளாட்பார்மில் காத்திருக்கும் பயணிகள் செல் ஃபோனில் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு அதிலேயே மூழ்கிவிடுவதால் தாங்கள் எங்கு இருக்கிறோம் என்பதையே மறந்துவிடுகிறார்கள் என்பதாக ஜப்பானிலுள்ள ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆஸாஹீ ஈவ்னிங் நியூஸ் செய்தித்தாள் அறிக்கையிட்டிருந்த சமீபத்திய விபத்துக்களில் ஒன்று, செல் ஃபோனால் ஓர் இளைஞனுக்கு நேர்ந்த விபத்தாகும்; அவன் ஃபோனில் பேசியவாறே பிளாட்பார்ம் விளிம்பில் சாய்ந்துகொண்டிருந்தான். அப்போது அறியாமல் தன் தலையை சாய்த்தபோது, வந்துகொண்டிருந்த ரயில் அவனுடைய தலையை உரசி சென்றது. “வலது கண்ணுக்கு சற்று மேலே ஒரு வெட்டுடன்” அவன் தப்பியது சந்தோஷகரமான விஷயம். என்றாலும் மற்றொரு விபத்தில், “ஒரு மேல்நிலைப் பள்ளி மாணவன் செல் ஃபோனில் பேசியவாறே பிளாட்பார்ம் விளிம்பில் சாய்ந்துகொண்டிருந்தான்; சரக்கு ரயில் ஒன்று அவனை தட்டிவிட்டு கொன்றுவிட்டது.” மக்கள் சிலசமயங்களில் தங்கள் டெலிபோன்களை டிராக்குகளில் நழுவவிடுகிறார்கள் என ரயில்நிலைய அதிகாரிகள் அறிக்கை செய்கிறார்கள். கீழே விழுந்துவிட்ட தன் டெலிபோனை எடுப்பதற்காக குதித்த 26 வயதுக்காரர் ரயிலில் “உடல் நசுங்கி செத்தார்.” “ரயில்வே பிளாட்பார்ம்கள் மிகவும் ஆபத்தான பகுதிகள் என்பதை நினைவில் வைக்க வேண்டும்” என ரயில்வே அதிகாரிகள் மக்களை கேட்டுக்கொள்கிறார்கள்.(g01 6/22)

மனோபாவங்களும் விமான விபத்துக்களும்

விமான விபத்துக்களுக்கான பல காரணங்களில் ஒன்று, விமானங்களில் விமானியின் அறையில் ஒருவருக்கொருவர் நடந்துகொள்ளும் அல்லது தொடர்புகொள்ளும் விதங்கள் என்பதாக த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் என்ற சிங்கப்பூர் செய்தித்தாளில் வெளிவந்த ஒரு கட்டுரை குறிப்பிடுகிறது. “ஆசியாவைப் பொருத்த வரை, அந்தஸ்து பிரச்சினையே விமானியின் அறையிலுள்ள விமானிக்கும் துணை விமானிக்கும் இடையே நிலவுகிறது; யாரும் எதுவும் எதிர்த்து கேட்க முடியாதளவுக்கு சகலமும் தன் கையில் என்ற நிலையில் விமானி உள்ளார்; ஆகவே கோளாறு எதையாவது துணை விமானி கண்டாலும் அதை சுட்டிக் காட்டுவதற்கு தயங்கலாம்; விமானியின் அதிகாரத்தையே கேள்விகேட்பது போல ஆகிவிடுமோ என்ற பயம்தான் அதற்குக் காரணம்” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அந்த செய்தித்தாள் கூறுவதன்படி, மக்கள் ஆபத்து எதையாவது முன்னதாகவே கண்டுணர்ந்தாலும் அதை சுட்டிக்காட்ட தயங்குகின்றனர்; ஏனெனில் “அவ்வாறு செய்கையில் பிறரது வெறுப்பை சம்பாதிக்க நேர்ந்துவிடலாம்.” அல்லது, “தங்கள் அந்தஸ்தின்” காரணமாக, தாங்கள் சொல்வதை நம்புவார்களோ மாட்டார்களோ என்றும் நினைக்கலாம். ஒரு விமானத்தில் விமானியின் அறையில் துணை விமானி மனம்விட்டுப் பேச விருப்பமில்லாமல் இருப்பதே விபத்துக்கான சாத்தியத்தை அதிகரிக்கலாம்.(g01 6/22)

பவளத்தின் பாடு திண்டாட்டம்

தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வரை, இந்தியப் பெருங்கடலிலுள்ள பவளப் பாறைகள் படுமோசமான நிலையில் இருப்பதாக தி இக்கானமிஸ்ட் பத்திரிகை தெரிவிக்கிறது. “இந்தப் பெருங்கடலிலுள்ள பவளப் பாறைகளில் 50-95% கடந்த இரண்டு ஆண்டுகளில் மடிந்துவிட்டது” என்ற வருந்தத்தக்க உண்மையை கடல் உயிரியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்தனர். சில வாரங்களாகவே கடல் வெப்பநிலை சுமார் 1 முதல் 2 டிகிரி சென்டிகிரேட்டுக்கும் அதிகமாக உயர்ந்திருப்பதை பவளப் பாறைகளால் தாக்குப் பிடிக்க முடியாததுதான் இதற்குக் காரணம். “1998-⁠ல் ஸேசேல்ஸ் பகுதி முழுவதும் பல வாரங்களுக்கு வெப்பநிலை, வழக்கத்தைவிட 3 டிகிரி சென்டிகிரேட்டு உயர்ந்திருந்தது” என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இதுவே “பூமி வெப்பமடைந்து வருவதற்கு அப்பட்டமான அத்தாட்சி” என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். பவளப் பாறைகளின் மடிவால் மாலத்தீவுகளில் 1998/99-⁠ல் 290 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. கண்ணைக் கவரும் வண்ண வண்ண பவளப் பாறைகளை கண்டுகளிக்கும் ஆசையோடு வரும் சுற்றுலா பயணிகள், “காண சகிக்காத சாம்பல் கற்குவியலை கண்டு ஏமாற்றத்தோடு திரும்புகின்றனர்” என தி இக்கானமிஸ்ட் பத்திரிகை குறிப்பிடுகிறது. “இக்கோளத்திலுள்ள பல்வேறு வகைப்பட்ட சூழலமைப்பின் பெரும்பகுதி சீர்குலைந்துவிட்டது” என்பதாக அவ்வறிக்கையின் துணையாசிரியர் ஓலோஃப் லிண்டன் குறிப்பிட்டார். கடல்வாழ் உயிரிகளுக்கு பவளப் பாறைகள் இன்றியமையாத வளர்ப்பகங்களாக இருப்பதால் மீன்பிடிக்கும் தொழிலை நம்பி வாழும் கடலோர மக்களுக்கும் இப்பேரழிவு தீமைக்கு அறிகுறியாகவே இருக்கிறது. (g01 6/22)

பயனுள்ள வைட்டமின்

கம்ப்யூட்டரில் நாம் வேலை செய்யும்பொழுது, திரையில் காணப்படும் வெவ்வேறு ஒளியளவுள்ள புள்ளிகளை பார்க்கையில் அதற்கேற்றவாறு நம் கண்களும் பார்க்கும் கோணத்தை மாற்றிக்கொள்கின்றன என்பதாக ஸட்ரவீய் என்ற போலந்து நாட்டு உடல்நல பத்திரிகை குறிப்பிடுகிறது. இந்த சிக்னல்கள் அதிகளவில் வெளிப்படுகையில் நாம் காண்பதற்கு உதவும் ரோடாப்சன் என்ற ஒளி உணர் நிறமி அதிகளவில் நம் கண்களுக்குத் தேவைப்படும். இந்த ரோடாப்சனை உற்பத்தி செய்வதற்கு வைட்டமின் ஏ சத்து அவசியம். ஈரல் மற்றும் காட் லிவர் ஆயிலில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது என்பதாக ஸட்ரவீய் கூறுகிறது. தங்கள் உடலிலுள்ள கொழுப்புச் சத்தையும் கொலஸ்ட்ராலின் அளவையும் கட்டுப்படுத்த வேண்டியவர்கள் பீட்டா கரோட்டின் உள்ள உணவு வகைகளை உட்கொள்ளலாம்; இவற்றை சூரிய ஒளியின் உதவியுடன் வைட்டமின் ஏ-யாக உடல் மாற்றுகிறது. மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, பச்சை நிறங்களிலுள்ள காய்கறிகளிலும், ஆப்ரிகாட்டு, பீச், உலர்ந்த பிளம், மெலன், மா போன்ற பழங்களிலும் பீட்டா கரோட்டின் உள்ளது. (g01 6/22)