Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அடிமைத்தனம் ஒழிகையில்!

அடிமைத்தனம் ஒழிகையில்!

அடிமைத்தனம் ஒழிகையில்!

விடுதலை! மனிதரின் மனதுக்கு இந்தளவுக்கு மகிழ்ச்சி தரும் வார்த்தைகள் வெகு சொற்பமே. விடுதலைக்காக ஜனங்கள் கஷ்டப்பட்டு போராடியிருக்கிறார்கள், அதற்காகவே வாழ்ந்து அதற்காகவே தங்கள் உயிரை அர்ப்பணித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் இலக்கில் அதிக முன்னேற்றத்தைக் காணாமலே அவ்வாறு செய்திருப்பதுதான் வேதனையிலும் வேதனை. அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறும் நம்பிக்கை​—விரக்திக்கோ ஏமாற்றத்திற்கோ வழி வகுக்காத நம்பிக்கை—​இருக்கிறதா? இருக்கிறது.

அப்போஸ்தலனாகிய பவுல் கடவுளுடைய இந்த வாக்குறுதியை எழுதுவதற்கு ஏவப்பட்டார்: “சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்.” (ரோமர் 8:20) ஆனால், இப்படிப்பட்ட “மகிமையான சுயாதீனத்தை” கடவுள் அளிப்பார் என நாம் எப்படி நிச்சயமாக இருக்கலாம்? அதற்கு ஒரு வழி, கடந்த காலங்களில் மனிதருடன் கடவுளுடைய நடவடிக்கைகளை அலசி ஆராய்வதாகும்.

“கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு” என கூறுகிறது பைபிள். (2 கொரிந்தியர் 3:17) ஆம், கடவுளுடைய ஆவி அல்லது செயல் நடப்பிக்கும் சக்தி மிகுந்த வல்லமையுடையது. விடுதலை அளிப்பதற்காக இதை அவர் வெகு காலமாகவே பல வழிகளில் பயன்படுத்தி வருகிறார். எப்படி? பல வகையான அடிமைத்தனங்கள் இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மிகவும் கொடூரமான ஒன்றைப் பற்றி நாம் ஏற்கெனவே பார்த்தோம். அதாவது, பலம் பொருந்தியவர்கள் பலவீனரை பலவந்தத்தாலும் வன்முறையாலும் அடிமைப்படுத்தியதைப் பற்றி பார்த்தோம். ஆனால் இன்னும் சில வகை அடிமைத்தனத்தைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.

விடுபடுவதற்கு மிகவும் கடினமான பல்வேறு கெட்ட பழக்கங்களுக்கு ஜனங்கள் அடிமையாகலாம். பொய்கள், ஏமாற்றுதல் போன்றவற்றிற்கு அடிமையாகலாம்; வஞ்சனையால் பொய் போதனைகள் எனும் சிறைக்குள் மாட்டிக்கொள்ளலாம். இவை எல்லாவற்றிலும் மிகவும் வஞ்சகமான, நம் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் அடிமைத்தனம் ஒன்று உள்ளது; அதை நாம் அறிந்திருக்கிறோமோ இல்லையோ அதன் பாதிப்புகள் சாவுக்கேதுவானவை. இந்தக் கட்டுரைகளில் பல வகையான அடிமைத்தனங்களையும் ஒரே அணியில் சேர்த்தாலும் அவை அனைத்தையும் நாங்கள் சமப்படுத்துவதில்லை. அவை ஒன்றுக்கொன்று பெரிதும் வித்தியாசப்படுகின்றன. இருந்தாலும் அவற்றிற்கிடையே ஒரு பொதுவான, முக்கிய இழை ஓடுகிறது. விடுதலை அளிப்பவராகிய கடவுள், நாளடைவில் இந்த எல்லா வகையான அடிமைத்தனத்தையும் பூண்டோடு ஒழித்துக்கட்டுவார்.

கெட்ட பழக்கங்கள் அடிமைப்படுத்துகையில்

அதிர்ஷ்டம் கைகூடாமல் போகையில் என்ற ஆங்கில புத்தகம் சூதாட்ட வெறியை இப்படி விவரிக்கிறது: “இது, சூதாட வேண்டுமென்ற கட்டுக்கடங்காத பலமான தூண்டுதலை உண்டாக்குகிற ஒரு கோளாறு. அந்தத் தூண்டுதல் எப்போதும் இருக்கிறது, மேன்மேலும் தீவிரமடைந்து, அவசரமாக செயல்பட வைக்கிறது . . . முடிவில் ஒருவரை ஆட்கொண்டு, பாழ்ப்படுத்துகிறது; வாழ்க்கையில் மதிப்பு வாய்ந்த அனைத்தையும் அழித்துவிடும் வரை பெரும்பாலும் ஆட்டிப்படைக்கிறது.” சூதாட்டத்திற்கு எத்தனை பேர் அடிமையாகி இருக்கிறார்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது. ஆனாலும் ஐக்கிய மாகாணங்களில் மட்டும் எடுத்துக்கொண்டால், சுமார் 60 லட்சம் அடிமைகள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

மதுபானத்திற்கு அடிமையாவதும்கூட அழிவுக்கேதுவானது என்பதில் சந்தேகமில்லை; பல இடங்களில் இது மிகப் பரவலாக காணப்படுகிறது. பெரிய நாடு ஒன்றில், வயது வந்த ஆண்களில் கிட்டத்தட்ட பாதி பேர் ஓரளவு குடிப்பழக்கத்தால் அவதிப்படுகிறார்கள். 20 வருடங்களுக்கு முன்பு குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரிக்கார்டோ, இவ்வகையான பழக்கத்தை விளக்குகிறார்: “காலையில் எழுந்ததுமே மது அருந்த உங்கள் உடல் துடிக்கிறது​—நரம்புகளை தளர்த்துவதற்கு, பிரச்சினைகளை மறப்பதற்கு, அல்லது வாழ்க்கையை ஓட்டுவதற்குப் போதுமான தன்னம்பிக்கையை பெறுவதற்கு அதை அருந்த துடிக்கிறது. உங்களுக்கு மதுபானப் பித்து பிடித்துவிடுகிறது; ஆனாலும், நீங்கள் எப்போதும் போல சாதாரணமாகத்தான் இருக்கிறீர்கள் என உங்களையும் உங்களை சுற்றிலுமுள்ள மற்றவர்களையும் நம்ப வைக்க முயலுகிறீர்கள்.”

ஜனங்களை அடிமைப்படுத்துவது மதுபானம் மட்டுமே அல்ல. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் சட்ட விரோதமாக போதைப் பொருள் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். அதோடு, 110 கோடி மக்கள் புகையிலையை பயன்படுத்துகிறார்கள்​—போதைப் பொருட்களிலேயே மிகவும் அதிகமாக அடிமைப்படுத்தும் நச்சுப் பொருள் இதில் உள்ளது. அநேகர் அதிலிருந்து விடுபடவே ஏங்குகிறார்கள், ஆனால் அது தங்களை அடிமைப்படுத்தி விட்டதாக உணர்கிறார்கள். இத்தகைய சக்திவாய்ந்த அடிமைத்தனங்களிலிருந்து மக்களை விடுவிப்பதில் யெகோவா திறம்பட்டவராக நிரூபித்திருக்கிறாரா? a

ரிக்கார்டோவின் உதாரணத்தை சிந்தித்துப் பாருங்கள். “சுமார் பத்து வருடங்களுக்கு முன்புதான் மதுபானம் என் வாழ்க்கையை கட்டுப்படுத்துவதை உணர்ந்தேன். அது என் மண வாழ்க்கையையும் வேலையையும் என் குடும்பத்தையும் சீரழித்து வந்தது. அதன் பிடியிலிருந்து விடுபடாத வரையில் என் பிரச்சினைகளை ஒருபோதும் தீர்க்க முடியாது என்பதை அறிந்தேன். மிதமிஞ்சி குடிப்பவரை சொல்லர்த்தமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் வறுமை தொற்றிக்கொள்ளும் என்பதை பைபிள் படிப்பிலிருந்து கற்றுக் கொண்டேன். (நீதிமொழிகள் 23:20, 21) நான் கடவுளுடன் நெருங்கிய உறவு வைத்துக்கொள்ள விரும்பினேன். கடவுளிடம் உதவி கேட்டு உள்ளப்பூர்வமாக ஜெபம் செய்தது, எனக்கு நானே நேர்மையாக நடந்து கொள்வதற்கு உதவியாக இருந்தது. பைபிள் படிப்பதற்கு எனக்கு ஒருவர் உதவினார், அவர் என்னுடைய மிகச் சிறந்த நண்பரானார். நான் மறுபடியும் குடிக்க ஆரம்பித்த போதும் அவர் என் மேலுள்ள நம்பிக்கையை இழந்துவிடவில்லை. ஆனால், உண்மை கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டிய வழியைப் பற்றி கடவுள் சொல்பவற்றை அவர் பொறுமையாகவும் உறுதியாகவும் எடுத்துக் காட்டினார்” என சொல்கிறார் ரிக்கார்டோ.

முந்தின வாழ்க்கையோடு ஒப்பிடுகையில் இன்று ரிக்கார்டோ ஓரளவுக்கு தன்னுடைய பழைய அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டிருப்பதாக உணர்கிறார். ஆரம்பத்தில் அவர் அவ்வப்போது பின்வாங்கியதை உடனே ஒப்புக்கொள்கிறார். “ஆனால், அப்படிப்பட்ட தடங்கல்கள் வந்தபோதும் என் மனைவியும் மற்ற கிறிஸ்தவர்களும் கொடுத்த ஆதரவும் யெகோவாவை உண்மையோடு சேவிக்க வேண்டும் என்ற என் ஆசையும் சேர்ந்து அந்த சூழ்நிலையைக் கட்டுப்படுத்த எனக்கு உதவின. கடவுள் வாக்குறுதி அளித்துள்ளபடி, ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று ஒருவரும் சொல்லாத’ அந்த சமயம் வருவதற்கு நான் காத்திருக்கிறேன்; அப்போது குடிப்பழக்கம் கடந்த கால காரியமாயிருக்கும். அது வரையில் என் சரீரத்தை ‘பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக’ ஒப்புக்கொடுக்க நான் தினம் தினம் தொடர்ந்து போராடுவேன்” என அவர் கூறுகிறார்.​—ஏசாயா 33:24; ரோமர் 12:1.

உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கானோர் பற்பல கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபட முயன்றபோது கடவுளுடைய உதவியை நேரடியாக பெற்றிருக்கிறார்கள். ஒருவேளை அடிமைத்தனத்திற்கு அவர்களே முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்; ஏனெனில் அவர்கள் பலவித அழுத்தங்களுக்கோ ஆசைகளுக்கோ இடமளித்திருக்கலாம். இருந்தாலும், யெகோவா மிக பொறுமையோடு விடுதலை அளிப்பவர் என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். தம்மை உண்மையில் சேவிக்க விரும்புகிறவர்களுக்கு அவர் உதவியும் செய்து பலமும் தர மனமுள்ளவராய் இருக்கிறார்.

“சத்தியம் உங்களை விடுதலையாக்கும்”

பொய்கள், ஏமாற்றுதல் போன்றவற்றிற்கு அடிமைப்பட்டிருப்பதைப் பற்றி என்ன சொல்லலாம்? இவற்றிலிருந்தும் விடுதலை பெறுவது சாத்தியமே என இயேசு கிறிஸ்து நமக்கு உறுதியளிக்கிறார். “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என அவர் சொன்னார். (யோவான் 8:31, 32) அவர் பேசிய சமயத்தில் அதைக் கேட்டுக் கொண்டிருந்த அநேகர், பரிசேயர்களின் பாரம்பரியங்கள் நிறைந்த கெடுபிடியான சட்டத்தொகுப்புக்கு அடிமைப்பட்டிருந்தனர். சொல்லப்போனால், “சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்” என இயேசு தம்முடைய நாளிலிருந்த மதத் தலைவர்களைக் குறித்து கூறினார். (மத்தேயு 23:4) இயேசுவின் போதனைகள் அப்படிப்பட்ட அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவித்தன. அவர் மதத்தின் பொய்களை அம்பலப்படுத்தி அவற்றின் மூலக் காரணரையும் அடையாளம் காட்டினார். (யோவான் 8:44) அவர் பொய்களுக்குப் பதிலாக சத்தியத்தை கூறி, மனிதரிடமிருந்து கடவுள் எதிர்பார்க்கும் நியாயமான காரியங்களை வெளிப்படுத்தினார்.​—மத்தேயு 11:28-30.

இயேசுவின் சீஷர்களைப் போன்று, இன்றும் ஆயிரக்கணக்கானோர் கடவுளுடைய உதவியால், தங்களை அடிமைப்படுத்தியிருக்கும் மதத்தின் பொய்களிலிருந்தும் தவறான பாரம்பரியங்களிலிருந்தும் விடுதலை பெற முடியும் என்பதைக் காண்கிறார்கள். பைபிளிலுள்ள புத்துணர்ச்சி அளிக்கும் சத்தியங்களை கற்ற பின்பு, மரித்தோரைப் பற்றிய கொடிய பயத்திலிருந்து விடுதலை பெறுகிறார்கள்; நரக அக்கனியில் நித்தியமாக வாதிக்கப்படுவதைப் பற்றிய பயத்திலிருந்து விடுதலை பெறுகிறார்கள்; கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, கிறிஸ்துவின் பிரதிநிதியென​—“இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்” என்று சொன்ன கிறிஸ்துவின் பிரதிநிதியென—​உரிமைபாராட்டும் மதக் குருக்களின் சேவைக்காக கொடுக்கும்படி வற்புறுத்தப்படுவதிலிருந்து விடுதலை பெறுகிறார்கள். (மத்தேயு 10:8) அதோடுகூட, இந்த எல்லாவற்றைக் காட்டிலும் மகத்தான விடுதலை மிக சமீபம்.

மிக வஞ்சகமான அடிமைத்தனம்

முன்னால் குறிப்பிட்ட, வஞ்சக உருவிலான அடிமைத்தனத்தைப் பற்றி இயேசு எப்படி விவரித்தார் என்பதை கவனியுங்கள்; இது ஆண், பெண், பிள்ளைகள் என பூமியிலுள்ள அனைவரையும் பாதிக்கிறது: “பாவஞ் செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (யோவான் 8:34) பாவம் செய்யவில்லை என யார்தான் சொல்ல முடியும்? அப்போஸ்தலனாகிய பவுலும்கூட, “நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்” என ஒப்புக்கொண்டார். (ரோமர் 7:19) பாவத்தின் கட்டுகளிலிருந்து ஒருவராலும் தன்னையே விடுவித்துக்கொள்ள முடியாத போதிலும் நமது சூழ்நிலை நம்பிக்கையற்றதாக இல்லை.

“குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” என இயேசு தம் சீஷர்களுக்கு உறுதியளித்தார். (யோவான் 8:36) இந்த வாக்குறுதியின் நிறைவேற்றம், எல்லா வகையான அடிமைத்தனத்தைவிட மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒன்றிலிருந்து மெய்யான விடுதலையை அளிக்கும். இதிலிருந்து எப்படி விடுபடலாம் என்பதை அறிந்துகொள்வதற்கு முதலாவதாக நாம் எப்படி இந்த அடிமைத்தனத்திற்கு உள்ளானோம் என்பதை காண வேண்டும்.

சுயமாக தெரிவு செய்யும் திறமையுடன், பாவம் செய்யும் மனச்சாய்வின்றி மனிதனை கடவுள் படைத்தார் என பைபிள் காட்டுகிறது. ஆனால் சுயநலம் கொண்ட, கடவுளுடைய காணக்கூடாத ஆவி குமாரன் ஒருவன் மனிதகுலத்தின்மீது தன் அதிகாரத்தை செலுத்த விரும்பினான்; அதனால் அவர்களுக்கு வரவிருந்த பெரும் துன்பத்தை அவன் பொருட்படுத்தவே இல்லை. பிசாசாகிய சாத்தான் என பிற்பாடு அழைக்கப்பட்ட இந்த கலகக்கார தூதன் தன் இலட்சியத்தை அடைவதற்காக நம் முதல் மனித பெற்றோராகிய ஆதாமையும் ஏவாளையும் கடவுளிடமிருந்து விலக்கி விட்டான். கடவுள் கொடுத்த திட்டவட்டமான அறிவுரைகளை ஆதாம் வேண்டுமென்றே மீறிய பின்பு, அவன் ஒரு பாவியாக மாறியதோடு அபூரணத்தையும் மரணத்தையும் தன் சந்ததியாருக்கும் கடத்தினான். (ரோமர் 5:12) முடிவில், சாத்தான் “இந்த உலகத்தின் அதிபதி” ஆனான்; அதோடு, ‘பாவம் மரணத்தால் மனிதகுலத்தின் மீது அரசாண்டிருக்கிறது.’​—யோவான் 12:31; ரோமர் 5:21, தி.மொ.; வெளிப்படுத்துதல் 12:9.

இதிலிருந்து நாம் எப்படி விடுதலை பெறலாம்? இயேசுவின் சீஷர்களாவதன் மூலம் கிறிஸ்துவின் தியாக மரணத்திலிருந்து நாம் நன்மை அடையலாம்; ‘மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனை . . . அழிப்பதற்கும்’ ‘ஜீவகாலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணுவதற்கும்’ அவருடைய மரணத்திற்கு வல்லமை உண்டு. (எபிரெயர் 2:14, 15) சற்று கற்பனை செய்து பாருங்கள்​—பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்தும் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலை! இப்படிப்பட்ட விடுதலையைப் பற்றி சிந்திப்பதே எவ்வளவாய் மகிழ்ச்சி தருகிறது!

அப்படியானால் ஆரம்பத்தில் கலந்தாலோசித்த அடிமைத்தனத்தைப் பற்றி என்ன சொல்லலாம்? ஜனங்களை அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக பலவந்தமாக அடிமைப்படுத்துவது என்றாவது ஒழியுமா?

நம்பிக்கைக்கு உறுதியான அடிப்படை

வெறுப்பூட்டும் இத்தகைய அடிமைத்தனம் நிச்சயமாக துடைத்தழிக்கப்படும் என்பதில் நாம் திடநம்பிக்கையோடு இருக்கலாம். ஏன்? இதைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள்: சரித்திரத்தில் மனிதர்களுக்கு கிடைத்த விடுதலைகளிலேயே மாபெரும் விடுதலைக்கு நேரடியான காரணமாக இருந்தவர் யெகோவாவே. அந்த சரித்திர சம்பவத்தைப் பற்றி நீங்களும் அறிந்திருக்கலாம்.

எகிப்து இஸ்ரவேலரை அடிமைகளாக்கி அவர்களை கடுமையாக வேலை வாங்கியது, கொடுமையாக நடத்தியது. அவர்கள் உதவிக்காக கடவுளிடம் கூக்குரலிட்டார்கள், மகா இரக்கம் படைத்த கடவுள் அவர்களுடைய கூக்குரலைக் கேட்டு, நடவடிக்கை எடுத்தார். மோசேயையும் ஆரோனையும் தம் சார்பாக பேசுவதற்கு யெகோவா பயன்படுத்தி, இஸ்ரவேலரை போகவிடும்படி எகிப்தின் பார்வோனுக்கு கட்டளை பிறப்பித்தார். வீராப்புமிக்க அரசனோ, தேசத்தின் மீது யெகோவா ஒன்றன்பின் ஒன்றாக கொடிய வாதைகளை கொண்டுவந்த பின்பும் விடாப்பிடியாக அதற்கு மறுப்பு தெரிவித்தான். முடிவில் கடவுள் அவனை அடிபணிய வைத்தார். கடைசியில் இஸ்ரவேலர் விடுதலை செய்யப்பட்டார்கள்!​—யாத்திராகமம் 12:29-32.

இது மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு பதிவு அல்லவா? ஆனாலும் இதுபோன்ற ஒன்றை கடவுள் ஏன் இந்தக் காலத்தில் செய்யவில்லை என நீங்கள் நினைக்கலாம். மனித விவகாரங்களில் தலையிட்டு அடிமைத்தனத்தை ஏன் அவர் முடிவுக்குக் கொண்டுவரவில்லை? “இந்த உலகத்தின் அதிபதி” யெகோவா அல்ல, சாத்தானே என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏதேனில் எழுப்பப்பட்ட சவால்களின் காரணமாக சிறிது காலத்திற்கு ஆட்சி செய்யும்படி இந்தப் பொல்லாத எதிராளியை யெகோவா அனுமதித்திருக்கிறார். அடிமைத்தனம், ஒடுக்குதல், கொடுமை ஆகியவை சாத்தானுடைய ஆட்சியின் விசேஷித்த அம்சங்களாகும். இப்படிப்பட்டவனின் செல்வாக்கில் மனித ஆட்சி, சரித்திரத்தில் வருந்தத்தக்க பதிவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சரித்திர பதிவை பைபிள் இவ்வாறு சில வார்த்தைகளில் தொகுத்துரைக்கிறது: ‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆட்சி செய்திருக்கிறான்.’​—பிரசங்கி 8:9.

ஆனால் எவ்வளவு காலத்திற்கு? நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோம் என பைபிள் சொல்கிறது; சுயநலமும் பேராசையும் தலைவிரித்தாடும் சமயம் இது. (2 தீமோத்தேயு 3:1, 2) கடவுளுடைய ராஜ்யத்திற்காக ஜெபம் செய்யும்படி இயேசு கற்றுக்கொடுத்தார்; அந்த ராஜ்யம் விரைவில் நீதியுள்ள மனித சமுதாயத்தை நிலைநாட்டி அடிமைத்தனத்தை அடியோடு ஒழிக்கும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. (மத்தேயு 6:9, 10) கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவாகிய இயேசு கிறிஸ்து, அடிமைத்தனத்தின் எல்லா தடயங்களையும் அழித்து, கடைசி சத்துருவாகிய மரணத்தையும்கூட ஒழிக்க நடவடிக்கை எடுப்பார்.​—1 கொரிந்தியர் 15:25, 26.

முடிவாக அந்த நாள் வருகையில், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து கடவுளுடைய ஜனங்கள் விடுவிக்கப்பட்டது இந்த மகத்தான விடுதலைக்கு ஒரு சிறிய முற்காட்சியே என்பதை உண்மையுள்ள மனிதகுலம் அறிந்துகொள்ளும். நாளடைவில், “சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்”படும். முடிவில், அனைவரும் “தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தை” முழுமையாக அனுபவித்து மகிழ்வர்.​—ரோமர் 8:20. (g02 6/22)

[அடிக்குறிப்பு]

a முதல் நூற்றாண்டில் ரோமர்களின் பெரிய விருந்துகளில் அபரிமிதமாக உண்பது பழக்கமாக இருந்தது. ஆகவே, கிறிஸ்தவர்கள் உணவுக்கோ அதுபோன்ற வேறு எதற்கோ அடிமையாவதைக் குறித்து எச்சரிக்கப்பட்டனர்.​—ரோமர் 6:16; 1 கொரிந்தியர் 6:12, 13; தீத்து 2:3.

[பக்கம் 7-ன் படம்]

ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே 60 லட்சம் பேர் சூதாட்டத்திற்கு அடிமை

[பக்கம் 7-ன் படங்கள்]

கோடிக்கணக்கானோர் போதைப் பொருட்களுக்கும் மதுபானத்திற்கும் புகையிலைக்கும் அடிமை

[பக்கம் 8, 9-ன் படங்கள்]

ரிக்கார்டோவைப் போல ஆயிரக்கணக்கானோர் கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபட கடவுளுடைய உதவியை பெற்றிருக்கிறார்கள்

[பக்கம் 10-ன் படங்கள்]

இஸ்ரவேலர் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றதைப் போல கடவுளுடைய மெய் வணக்கத்தார் விரைவில் மகத்தான விடுதலையை அனுபவிப்பர்