Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

அனுபவித்து கொட்டாவி விடுவீர்!

தாயின் வயிற்றில் உருவாகும் கரு 11 வாரத்திலிருந்தே கொட்டாவி விட ஆரம்பிக்கிறது என ஸ்பானிய வாராந்தர பத்திரிகையான சாலூட் விளக்குகிறது. பெரும்பாலான பாலூட்டிகளும் சில வகையான பறவைகளும் ஊர்வனவும்கூட இயல்பாகவே இவ்வாறு கொட்டாவி விடுகின்றன. நாம் ஏன் கொட்டாவி விடுகிறோம் என்பதற்கான சரியான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், நெட்டிமுறிப்பது போன்ற செயல்களோடு அது பொதுவாக சம்பந்தப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டிருக்கிறார்கள். இந்த அசைவுகள் “தசைகளையும் மூட்டுகளையும் ரிலாக்ஸ் செய்வதோடு, இரத்த அழுத்தத்தையும் இதயத்துடிப்பையும் அதிகரிப்பதாக” அவர்கள் சொல்கிறார்கள். நாம் வேண்டுமென்றே தாடையை இறுக்கிக்கொண்டு கொட்டாவியை அடக்கும்போது, அதன் பயன்களை தவறவிடுகிறோம். இவ்வாறு, கொட்டாவி விடும்போது, சூழ்நிலை இடங்கொடுத்தால் “நம் தாடைகளையும் முக தசைகளையும் இயல்பாய் விரிக்க” வேண்டும். யாருக்குத் தெரியும், நன்றாக கொட்டாவி விடுவதால் நாள் முழுதும் உங்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கலாம்! (g02 11/08)

தூங்கும் ஸ்விப்ட் பறவைகள் எல்லை தாண்டாதிருக்கும் விதம்

ஸ்விப்ட் பறவைகள் பறக்கும்போது தூங்குகின்றன; அதுமட்டுமல்ல, காற்றால் அடித்துச் செல்லப்படாமல் தங்கள் எல்லைக்குள்ளேயே பறந்து திரிகின்றன. இது எப்படி என்பதைக் கண்டுபிடிக்க, ஸ்வீடனின் லன்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பறவையியல் நிபுணர்களான யூஹான் பாக்மானும் டூமாஸ் அலெர்ஸ்டாமும் முயன்றனர்; ஸ்விப்ட் பறவைகளின் இரவுநேர இயக்கங்களை கண்காணிக்க ராடார் கருவியை பயன்படுத்தினர். இப்பறவைகள் குறிப்பிட்ட விதமாக பறப்பதால் தங்கள் எல்லையைத் தாண்டாமல் இருக்க முடிவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இதை ஜெர்மன் நாட்டு அறிவியல் பத்திரிகையான பில்ட் டேர் விஸன்ஷாப்ட் அறிவித்தது. இப்பறவைகள் கிட்டத்தட்ட 3,000 மீட்டர் உயரம் வரை மேலே சென்று, பின்பு காற்றின் திசைக்கு குறுக்கே பறக்கின்றன; சில நிமிடங்களுக்கு ஒருமுறை சீராக திசைமாறிக்கொண்டே இருக்கின்றன. இப்படி ஒரே சீராக பறப்பதால் அவற்றால் தங்கள் எல்லைக்குள்ளாகவே இங்குமங்கும் பறந்து திரிய முடிகிறது. ஆனால் காற்றின் வேகம் குறைவாக இருக்கும்போது அவை வட்டமிட்ட வண்ணமே தூங்குவது கண்டறியப்பட்டது. (g02 11/22)

மாரடைப்பு மூளையை பாதிக்காதிருக்க

“மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளின் உடல் உஷ்ணத்தை ஒருசில டிகிரிகள் குறைப்பதால், மூளைச் சேதமும் மரணமும் ஏற்படும் ஆபத்து பெருமளவு குறைவதாக இரண்டு புதிய கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன” என கனடாவின் டோரன்டோ ஸ்டார் செய்தித்தாளில் வெளிவந்த ஒரு அறிக்கை குறிப்பிடுகிறது. ஐந்து ஐரோப்பிய நாடுகளிலும் மற்றொரு ஆஸ்திரேலிய நாட்டிலும் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி, உடல் உஷ்ணத்தை சிறிது குறைப்பதால் நோயாளிகளின் நரம்புமண்டல இயக்கமும் அறிவாற்றலும் சீக்கிரம் சீரடைவதைக் காட்டியது. மாரடைப்பு ஏற்பட்டு கோமா நிலையில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்ட நோயாளிகளின் உடல் உஷ்ணம் 12-24 மணிநேரத்துக்கு 33 டிகிரி செல்சியஸுக்கு குறைக்கப்பட்டது; குளிர் காற்றும் ஐஸ் பாக்குகளும் இதற்காக பயன்படுத்தப்பட்டன. பெத் ஏப்ராம்சன் என்ற இதய நிபுணரின்படி செலவுபிடிக்காத இந்த எளிய சிகிச்சைமுறை, ‘மூளையின் ஆக்ஸிஜன் தேவையை குறைத்து, அதன் செல்களை கொல்லும் ரசாயன மாற்றங்களை கட்டுப்படுத்துகிறது’ என ஸ்டார் சொல்கிறது. “உடலுக்கு குளிர்ச்சியூட்டும் இந்த உத்தி அருமையான பலன் தருவதாக தெரிவதால் ஆஸ்பத்திரிக்கு அழைத்துவரப்படும் மாரடைப்பு நோயாளிகள் அனைவருக்கும் தவறாமல் இந்த சிகிச்சையை அளிக்க வேண்டுமென கனடா, ஐக்கிய மாகாணங்கள், ஆஸ்திரேலியா, ஐரோப்பா ஆகிய இடங்களிலுள்ள டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.” (g02 11/08)

மருந்துகளும் முதியோரும்

“60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இள வயது நோயாளிகளைவிட சராசரியாக மூன்று வித்தியாசமான மருந்துகளை மூன்று மடங்கு அதிகமாக சாப்பிடுகிறார்கள்” என ஜெர்மனியின் டேர் ஷ்பீகல் என்ற செய்திப் பத்திரிகை சொல்கிறது. “இருந்தாலும் அவர்கள் மருந்துகளை எந்தளவு அதிகமாக சாப்பிடுகிறார்களோ அந்தளவு [அவற்றின்] பாதிப்புகளாலும் பக்க விளைவுகளாலும் அவதிப்படும் ஆபத்து அதிகரிக்கிறது.” “குடும்ப டாக்டர்கள், . . . முதிர் வயதில் சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும் உண்மையை பெரும்பாலும் மறந்துவிடுவது” நிலைமையை சிக்கலாக்கும் மற்றொரு காரணமாக இருக்கிறது. சிறுநீரகத்தின் செயல்பாடு குறைவதால் மருந்துகள் உடலிலேயே தங்கிவிடலாம். ஆகவே “40 வயது நிரம்பிய ஒருவருக்கு சரியான அளவாக இருக்கும் மருந்து 70 வயதுக்காரருக்கோ நஞ்சாகிவிடலாம்” என டேர் ஷ்பீகல் விளக்குகிறது. “முதியோரில் அநேகர் போதிய தண்ணீர் குடிக்காமல் நிலைமையை இன்னும் மோசமாக்குகிறார்கள்.” நீரிழப்பு மட்டுமே, வலிநிவாரணிகள், தூக்க மருந்துகள், ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான மருந்துகள் போன்றவை ஏற்படுத்தும் பக்க விளைவுகளுக்கு சமமான விளைவுகளை உண்டாக்கலாம் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. குழப்பம், பிதற்றல், தலைச்சுற்றல் போன்றவை இதற்கான அறிகுறிகள்; ஆனால் வயதானாலே இதெல்லாம் சகஜம் என்று அநேகர் இந்த அறிகுறிகளை அசட்டை செய்துவிடுகிறார்கள். (g02 11/08)

வீட்டு வேலைகள் நல்ல உடற்பயிற்சி

வாக்யூம் செய்வதும், ஜன்னல்களை கழுவுவதும், பாப்பாக்களை ப்ராமில் தள்ளிக்கொண்டு போவதும் நல்ல உடற்பயிற்சி என சொல்லலாமா? ஆம், சொல்லலாம் என்கிறது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவு. ஆஸ்திரேலியாவிலுள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. த கான்பெரா டைம்ஸ் செய்தித்தாளில் வெளிவந்த அறிக்கை விளக்குகிறபடி, ஐந்து வயதைத் தாண்டாத குழந்தைகளை உடைய தாய்மார் ஏழு பேரின் உடலில் வாயு பகுப்பாய்வுக் கருவிகளை (gas analyzers) ஆராய்ச்சியாளர்கள் கட்டி விட்டார்கள். அன்றாட வேலைகளை செய்கையில் அவர்களது உடல் எவ்வளவு ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்கிறது என்பதை கண்டறியவே இந்த சோதனை. “சில வீட்டு வேலைகள் உடல் ஆரோக்கியத்திற்கு கைகொடுக்கும் விதத்தில் போதிய வேகத்தில் செய்யப்படுவதாக கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன” என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். “வேகமாக நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது போன்ற மிதமான பயிற்சிகளுக்கு கிட்டத்தட்ட சமமாக பெண்களின் வீட்டு வேலைகள் இருந்தன” என பேராசிரியர் வென்டி ப்ரௌன் கண்டுபிடித்ததாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. “இது முதல் கட்ட ஆராய்ச்சிதான், ஆனாலும் நாள் முழுக்க வீட்டில் பம்பரமாக பணியாற்றும் பெண்களை மந்தமானவர்களென நிச்சயம் கருத முடியாது” என்றார் ப்ரௌன். (g02 11/08)

“தவிர்க்க முடிந்த நோய்”

“ஆஸ்டியோபோரோஸிஸ் நம்மால் தவிர்க்க முடிந்த நோய்” என ஆஸ்திரேலியாவின் த சன்-ஹெரால்ட் குறிப்பிடுகிறது. “அதை பெருமளவில் தடுக்கலாம். இருந்தாலும் 2020-ஆம் ஆண்டிற்குள், ஆஸ்பத்திரிகளிலுள்ள படுக்கைகளில் மூன்றில் ஒன்று எலும்பு முறிவு ஏற்பட்ட பெண்களின் படுக்கையாகிவிட்டிருக்கும் என கணிக்கப்படுகிறது. ஆஸ்டியோபோரோஸிஸ் ஆஸ்திரேலியா என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, எலும்புகளை பொற பொறப்பாக்கி எளிதில் முறியத்தக்கதாக்கும் இந்த நோய் “கொலஸ்ட்ரால் மிகுதி, அலர்ஜிகள், சளி போன்றவற்றைவிட அதிக சகஜமாகிவிட்டது. சர்க்கரை வியாதியையோ ஆஸ்துமாவையோவிட அதிக செலவு பிடித்தது. இடுப்பெலும்பு முறிவால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை, எல்லாவித புற்றுநோய்களாலும் இறக்கும் பெண்களின் மொத்த எண்ணிக்கையைவிட அதிகம்.” ஆஸ்திரேலியாவில் பெண்களில் பாதி பேருக்கும் ஆண்களில் மூன்றில் ஒருவருக்கும் தங்கள் வாழ்நாட்காலத்தில் எலும்பு மெலிதல் நோயினால் எலும்பு முறிவு ஏற்படும் என கணக்கிடப்படுவதாக பேராசிரியர் பிலிப் சாம்ப்ரூக் சொல்கிறார். “வருமுன் காப்பதற்கான சிறந்த வழி, வாழ்நாளின் முதல் முப்பது ஆண்டுகளில் உடற்பயிற்சி மூலமாகவும் போதிய கால்சியம் உட்கொள்வதன் மூலமாகவும் எலும்புகளை முடிந்தளவு ஸ்திரப்படுத்துவதாகும்.” புகைப்பதையும் மதுபானத்தையோ கஃபினையோ மிதமிஞ்சி உட்கொள்வதையும் தவிர்த்தால் எலும்பு மெலிதல் நோயிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பு மிக அதிகம். தவறாமல் உடற்பயிற்சி செய்வது, கால்சியம் மற்றும் வைட்டமின் D சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது போன்றவை பின்பற்ற வேண்டிய சில நல்ல பழக்கங்கள். (g02 11/22)

முடிச்சுகளை அவிழ்க்கும் “புனிதர்”

“நடக்காத காரியங்களையும் நடத்திக் கொடுக்கும் புனிதர் ஜூட் தாடியஸ்; மனம் முறிந்தோரை காப்பாற்றும் புனிதர் ரீட்டா; கடனாளிகளைக் காக்கும் புனிதர் ஹேட்விக்; ஆபத்சகாயரான புனிதர் எக்ஸ்பெடிடஸ் போன்ற எல்லா புனிதரும் சமீப ஆண்டுகளில் பிரபலமாக இருந்து வந்திருக்கின்றனர்” என வாஸா செய்தித்தாள் குறிப்பிடுகிறது. இப்போது பிரேசிலிலுள்ள கத்தோலிக்கர்கள் மத்தியில் புதிதாக பிரபலமாகியிருக்கும் ‘புனிதரின்’ பெயர், “முடிச்சுகளை அவிழ்க்கும் கன்னி” ஆகும். இந்த விசித்திர பெயர், ஜெர்மனியிலுள்ள ஆக்ஸ்பர்க் சர்ச்சில் மாட்டப்பட்டிருக்கும் ஓவியத்தின் அடிப்படையில் சூட்டப்பட்டது; கன்னி மரியாள் ஒரு ரிப்பனின் முடிச்சுகளை அவிழ்ப்பதாக அந்த ஓவியம் சித்தரிக்கிறது. மீடியா நட்சத்திரங்கள் இந்தப் புனிதரை விளம்பரப்படுத்தவே, உடல்நலம், மணவாழ்வு, பணப் பிரச்சினைகள் போன்ற சிக்கலான முடிச்சுகளை அவிழ்க்க உதவி கேட்டு திரண்டு வருகிறார்கள் பக்தர்கள்; அதேசமயத்தில் இவர்களால் பதக்கங்களும், ஜெபமாலைகளும், உருவங்களும், கார் ஸ்டிக்கர்களும் அமோகமாக விற்பனையாகின்றன. “‘அவிழ்க்கும்’ புனிதர் மீதுள்ள பித்து தீங்கானதல்ல, ஆனால் வெகு காலம் நீடிக்காது” என டார்ஸி நிக்கோலி சொல்கிறார். இவர், பிரேசிலின் மிகப் பெரிய கத்தோலிக்க சர்ச்சின் நிர்வாகி. (g02 11/22)

விண்வெளியில் சுவிசேஷம்

விண்வெளியில் உயிர் இருக்குமா என விஞ்ஞானிகள் இன்னும் விவாதித்து வருகையில், வாட்டிகன் ஆய்வுக்கூடத்திலுள்ள பாதிரிகளோ “இந்த சர்வலோகத்தில் பூமியில் மட்டுமே கடவுள் உயிர்களை படைக்கவில்லை, அவர் வேறு கிரகங்களிலும் உயிர்களை படைத்தார்” என்ற முடிவுக்கு வந்திருப்பதாக பெர்லினர் மார்கன்போஸ்ட் செய்தித்தாள் சொல்கிறது. “நாம் மட்டுமே வாழ்வதற்கு இந்த சர்வலோகம் மிக மிக பெரிது” என அந்த ஆய்வுக்கூடத்தின் இயக்குநரான ஜார்ஜ் காயின் விளக்கினார். வேற்று கிரகத்தினருக்கு சுவிசேஷத்தை அறிவிக்க, அநேக துறவிமடங்கள் புதிய ஏற்பாட்டை குறியீடுகளின் வடிவில் விண்வெளிக்கு அனுப்பி வைத்திருக்கின்றன. அடுத்ததாக வாடிகன் அறிய விரும்புவது, “இயேசு கிறிஸ்து மற்ற கிரகங்களிலும் தம்மை வெளிப்படுத்தியிருக்கிறாரா என்பதையும், அந்தக் கிரகத்தினரையும் இரட்சித்திருக்கிறாரா என்பதையுமே” என காயின் சொன்னதாக செய்தித்தாள் அறிவித்தது. (g02 11/22)

ஐநா சபையில் சேர சுவிட்சர்லாந்து தீர்மானிக்கிறது

“பல பத்தாண்டுகளாக நடுநிலைமை வகித்துவந்த சுவிட்சர்லாந்து, நாடெங்கும் நடத்தப்பட்ட ஒரு வாக்கெடுப்பில் சற்றே அதிகமான வாக்குகள் பெற்று, . . . இனியும் ஒதுங்கியிருக்காமல் ஐக்கிய நாடுகளில் சேர தீர்மானித்தது” என த நியு யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. அந்த அமைப்பின் 190-வது உறுப்பு நாடாவதற்கு சுவிட்சர்லாந்து ஐநா பொதுப் பேரவையில் முறைப்படி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். உறுப்பு நாடாவதைக் குறித்து கடைசியாக 1986-⁠ல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், “தேசத்தின் பாரம்பரிய நடுநிலைமையை விட்டுக்கொடுக்க வேண்டி வருமோ என்ற பயத்தில்” இந்தத் தீர்மானம் ஒரேயடியாக நிராகரிக்கப்பட்டது. பிறகு எப்படி தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டது? “இந்நாடு, ஐக்கிய நாடுகளின் ஐரோப்பிய தலைமையகத்திற்கு ஜெனிவாவில் இடமளித்திருக்கிறபோதும், அதன் பல ஏஜென்ஸிகளில் மும்முரமாக பங்காற்றுகிறபோதிலும், ஐநா-வில் அங்கம் வகிக்க தொடர்ந்து மறுத்தால் அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பலவீனமாகிவிட நேரிடுமோ என அரசாங்கம் பயந்தது, அதோடு தூரதேசங்களின் சண்டைகள் சம்பந்தமாக அது எடுக்கும் சமரச முயற்சிகள் வலுவிழந்து போகுமோ என பயந்தது” என டைம்ஸ் சொல்கிறது. அதுமட்டுமல்ல, நாசி படுகொலைக்கு பலியானவர்களின் சேமிப்புகளை ஸ்விஸ் வங்கிகள் பதுக்கிவிட்டன என்றும் நாசி ஜெர்மனியிலிருந்து தப்பிக்க முயன்ற அநேக அகதிகளை சுவிட்சர்லாந்து தன் எல்லைக்குள் அனுமதிக்கவில்லை என்றும் சமீபத்தில் வெளியான செய்திகளால் தான் இழந்த நற்பெயரை மீண்டும் பெறவும் நினைத்திருக்கலாம். (g02 11/22)