Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எய்ட்ஸை அடக்க முடியுமா? எப்படி?

எய்ட்ஸை அடக்க முடியுமா? எப்படி?

எய்ட்ஸை அடக்க முடியுமா? எப்படி?

அநேக ஆப்பிரிக்க நாடுகளில் கொஞ்ச காலத்திற்கு எய்ட்ஸ் கொள்ளை நோயைப் பற்றிய விஷயம் எடுபடாமலேயே இருந்தது. சிலர் இந்த விஷயத்தைப் பற்றி பேசவே விரும்பவில்லை. என்றாலும், சமீப ஆண்டுகளில், குறிப்பாக இளைஞருக்கு இந்த விஷயத்தின் பேரில் கல்வி புகட்டுவதற்கும் அதைப் பற்றி வெளிப்படையாக பேசும்படி ஊக்குவிப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முயற்சிகளால் குறைந்தளவு வெற்றியே கிடைத்துள்ளது. மக்களின் வாழ்க்கைப் பாணிகளும் பழக்கவழக்கங்களும் ஆழமாக வேரூன்றியிருப்பதால் அவற்றை மாற்ற முயல்வது சாமானியமல்ல.

மருத்துவ முன்னேற்றம்

மருத்துவ துறையில் விஞ்ஞானிகள் எச்ஐவியைப் பற்றி அதிகம் கற்றறிந்து, அநேகருடைய ஆயுசை நீடிக்கச் செய்திருக்கும் மருந்துகளை உருவாக்கியுள்ளனர். குறைந்தபட்சம் மூன்று ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகளின் ஒரு கலவையான அதி வீரிய ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை திறம்பட பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இம்மருந்துகளால் நோய் முற்றிலும் குணமடையாவிட்டாலும், குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகளில் எச்ஐவியால் அவதிப்படுவோரின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. வளர்ந்துவரும் நாடுகளுக்கு இந்த மருந்துகளை வழங்குவதன் அவசியத்தை அநேகர் வலியுறுத்துகிறார்கள். என்றாலும், இந்த மருந்துகளின் விலையோ அதிகம்; அந்த நாடுகளிலுள்ள பெரும்பாலான மக்களின் வருவாய்க்கு அது கட்டுப்படியாகாது.

இது, ‘உயிர் பெரியதா அல்லது பொருளாதார லாபம் பெரியதா?’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது. பிரேசில் எச்ஐவி/எய்ட்ஸ் திட்டத்தின் இயக்குநரான பாவுலூ டேஷேரா இந்த சூழ்நிலையை ஒப்புக்கொண்டு, “சாதாரணமாக கிடைப்பதைவிட அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, ஆயிரக்கணக்கான மக்கள் உயிர்பிழைப்பதற்கான மருந்தே இல்லாமல் திண்டாடும்படி அவர்களை விட்டுவிட முடியாது” என்று கூறினார். “என்னுடைய கவலையெல்லாம் வியாபார நாட்டங்களை தார்மீக மற்றும் மனித தேவைகளுக்கு மேலாக வைக்கக்கூடாது என்பதே” எனவும் அவர் கூறினார்.

சில நாடுகள், பெரிய மருந்து கம்பெனிகளின் தனியுரிமைகள் சிலவற்றை புறக்கணித்து லேபிள் இல்லாத சில மருந்துகளை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய அல்லது இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளன. a ஓர் ஆய்வின்படி “[லேபிள் இல்லாத மருந்துகளின்] குறைந்தபட்ச விலை ஐமா-வின் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட 82% குறைவாக இருந்தது” என சௌத் ஆஃப்ரிக்கன் மெடிக்கல் ஜர்னல் அறிவிக்கிறது.

சிகிச்சைக்கு இடையூறுகள்

நாளடைவில், பெரிய பெரிய மருந்து கம்பெனிகள் வளர்ந்துவரும் நாடுகளுக்கு எய்ட்ஸ் மருந்துகளை மிகவும் குறைந்த விலைக்கு விற்க ஆரம்பித்தன. இப்படியாவது அதிகமானோர் மருந்துகளை நன்கு பயன்படுத்திக்கொள்வார்கள் என நம்பப்பட்டது. என்றபோதிலும், வளர்ந்துவரும் நாடுகளில் உள்ளவர்களுக்கு அந்த மருந்துகளை உடனடியாக கிடைக்கச் செய்வதில் மிக முக்கியமான இடையூறுகளை சமாளிக்க வேண்டியுள்ளது. அவற்றுள் ஒன்றுதான் அதற்காகும் செலவு. மருந்துகளின் விலை பெருமளவில் குறைக்கப்பட்ட போதிலும், தேவையிலுள்ள பெரும்பாலானோருக்கு அவை மிகவும் விலை உயர்ந்தவையாகவே இருக்கின்றன.

மற்றொரு பிரச்சினையானது, ஒருவருக்கு குறிப்பிட்ட அளவுப்படி மருந்தை கொடுத்துவருவது சுலபமல்ல. அநேக மாத்திரைகள் தினமும் குறிப்பிட்ட வேளைகளில் சாப்பிட வேண்டியவை. அவற்றை முறையாக சாப்பிடவில்லை என்றால், அல்லது குறித்த நேரத்தில் சாப்பிடவில்லையென்றால் அந்த மருந்துகளையே எதிர்க்கக்கூடிய எச்ஐவி வைரஸ்கள் உருவாகலாம். ஆப்பிரிக்க சூழ்நிலைகளில், அங்குள்ள நோயாளிகள் மருந்தை வேளாவேளைக்கு சரியான அளவில் சாப்பிடும்படி பார்த்துக்கொள்வது கடினம்; ஏனெனில் அங்குள்ளவர்களுக்கு வயிராற சாப்பாடு கிடைப்பதில்லை, சுத்தமான குடிநீர் அவ்வளவாக இல்லை, மருத்துவ வசதிகளும் குறைவுதான்.

மேலுமாக, மருந்து சாப்பிடுகிறவர்களின் முன்னேற்றத்தை தொடர்ந்து கவனித்துவர வேண்டும். நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து வருமானால் மருந்துகளின் கலவையை மாற்றி கொடுக்க வேண்டும். இதற்கு அனுபவமுள்ள மருத்துவர்கள் தேவை; அவர்கள் செய்யும் பரிசோதனைகள் பெரும் செலவுபிடிப்பவை. அதுமட்டுமல்ல, அந்த மருந்துகளுக்கு பக்க விளைவுகள் உண்டு; மருந்துகளை எதிர்க்கும் வைரஸ் வகைகளும் உருவாகி வருகின்றன.

ஜூன் 2001-⁠ல் ஐநா பொது சபை எய்ட்ஸின் பேரில் நடத்திய சிறப்பு கூட்டத்தில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவ உலகளவில் உடல்நல நிதி அளிப்பது பற்றி முன்மொழியப்பட்டது. அதற்கு 700 கோடி டாலர் முதல் 1,000 கோடி டாலர் வரை தேவைப்பட்டதாக கணக்கிடப்பட்டது. ஆனால் இதற்கு நன்கொடை அளிப்பதாக வாக்கு கொடுக்கப்பட்ட அந்தத் தொகையை இதுவரை பெற முடியவில்லை.

இந்நோய்க்கு எப்படியும் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விடுவோம் என விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகிறார்கள், பல நாடுகளில் பல்வேறு தடுப்பு மருந்துகள் பரிசோதனை செய்யப்பட்டும் வருகின்றன. அம்முயற்சிகள் வெற்றியடைந்தாலும், அதைக் கண்டுபிடித்து, பரிசோதனை செய்து, நம்பகமாக பயன்படுத்தலாம் என நிரூபணமாவதற்குள் பல வருடங்கள் கடந்துவிடும்.

உகாண்டா, தாய்லாந்து, பிரேசில் போன்ற சில நாடுகள், சிகிச்சை திட்டங்கள் மூலமாக குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டுள்ளன. உள்ளூரில் தயாரிக்கப்படும் மருந்துகளைப் பயன்படுத்தினதால் பிரேசிலில் எய்ட்ஸினால் இறப்பவர்களின் விகிதம் பாதிக்கு பாதி குறைந்துள்ளது. வசதிபடைத்த சிறு நாடான போட்ஸ்வானா, அந்நாட்டில் தேவையிலிருப்போருக்கு ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகளை கொடுப்பதற்கும் தேவையான உடல்நல பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுப்பதற்கும் முயலுகிறது.

எய்ட்ஸை முறியடித்தல்

பிற கொள்ளைநோய்களுக்கும் எய்ட்ஸுக்கும் இடையேயுள்ள முக்கிய அம்சமானது, இது தடுக்கமுடிகிற வியாதி. ஒவ்வொருவரும் பைபிளின் அடிப்படை நியமங்களைப் பின்பற்றினால், இந்நோய் தொற்றுவதை பெரும்பாலும் தவிர்க்க முடியும்.

பைபிளின் ஒழுக்க தராதரங்கள் மிகத் தெளிவாக உள்ளன. மணமாகாதவர்கள் உடலுறவு கொள்வதை தவிர்க்க வேண்டும். (1 கொரிந்தியர் 6:18) மணமானவர்கள் தங்கள் துணைக்கு விசுவாசமாக நடந்துகொள்ள வேண்டும், விபச்சாரத்தில் ஈடுபடக் கூடாது. (எபிரெயர் 13:4) இரத்தத்திற்கு விலகியிருக்கும்படி பைபிள் கொடுக்கும் ஆலோசனைக்கு செவிசாய்ப்பதும்கூட ஒருவரை பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது.​—அப்போஸ்தலர் 15:28, 29.

இந்நோயினால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள், கடவுள் வாக்குறுதியளித்துள்ள வெகு சீக்கிரத்தில் வரப்போகும் நோயில்லா உலகத்தைப் பற்றி கற்று மிகுந்த மகிழ்ச்சியையும் ஆறுதலையும் கண்டடையலாம், கடவுள் எதிர்பார்ப்பவற்றிற்கு இசைவாகவும் நடக்க ஆரம்பிக்கலாம்.

நோய் உட்பட மனிதனுடைய கஷ்டங்கள் யாவும் வெகு சீக்கிரத்தில் முடிவுக்கு வரும் என பைபிள் உறுதியளிக்கிறது. இந்த வாக்குறுதி வெளிப்படுத்துதல் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது: “பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”​—வெளிப்படுத்துதல் 21:3, 4.

இந்த வாக்குறுதி அதிக விலைகொடுத்து மருந்து வாங்கி சாப்பிட வசதியுள்ளவர்களுக்கு மட்டுமானதல்ல. வெளிப்படுத்துதல் 21-⁠ல் கொடுக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசன வாக்குறுதியை ஏசாயா 33:24 இவ்வாறு உறுதிப்படுத்துகிறது: “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் [“எவரும்,” NW] சொல்வதில்லை.” அப்போது பூமியில் வாழ்பவர்கள் அனைவரும் கடவுளுடைய சட்டங்களை பின்பற்றுவார்கள், பரிபூரண ஆரோக்கியத்தையும் அனுபவித்து மகிழ்வார்கள். இவ்வாறு எய்ட்ஸ் உட்பட எல்லா வியாதிகளின் மரண அணிவகுப்பும் என்றென்றைக்குமாக தடுத்து நிறுத்தப்படும். (g02 11/8)

[அடிக்குறிப்பு]

a லேபிள் இல்லாத மருந்துகள் தனியுரிமை பெற்ற மருந்து கம்பெனிகள் தயாரிப்பவற்றை ஒத்திருக்கும் மருந்துகளே. நெருக்கடியான சூழ்நிலைகளில் உலக வர்த்தக அமைப்பின் அங்க நாடுகள் மருந்துகளுக்கான தனியுரிமைகளை சட்டப்பூர்வமாக புறக்கணிக்கலாம்.

[பக்கம் 910-ன் பெட்டி/படங்கள்]

இதுதான் நான் தேடிக்கொண்டிருந்த உண்மையான நிவாரணி

நான் ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் வாழ்ந்துவரும் 23 வயது பெண். எனக்கு எச்ஐவி பாஸிட்டிவ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட அந்த நாள் இன்னும் என் நினைவில் இருக்கிறது.

நான் அம்மாவுடன் கன்ஸல்டிங் ரூமில் இருந்த சமயத்தில்தான் டாக்டர் இந்த விஷயத்தை போட்டு உடைத்தார். என்னுடைய வாழ்க்கையில் இப்படி ஒரு சோகச் செய்தியை கேட்டதே இல்லை. நான் குழம்பிப் போய்விட்டேன். என்னால் அதை நம்பவே முடியவில்லை. லபாரட்டரியில் அவர்கள் தவறாக பரிசோதனை செய்திருக்கலாமோ என நினைத்தேன். என்ன சொல்வது என்ன செய்வது என்று ஒன்றும் தெரியவில்லை. எனக்கு அழவேண்டும் போல் இருந்தது, ஆனால் கண்ணீர் வரவில்லை. அம்மாவிடம் ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகளையும் மற்ற காரியங்களையும் பற்றி டாக்டர் பேச ஆரம்பித்தார், நானோ அவர் பேசுவது ஒன்றும் தலையில் ஏறாமல் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருந்தேன்.

நான் படித்துக்கொண்டிருக்கும் கல்லூரியிலுள்ள ஒருவனிடமிருந்துதான் இது எனக்கு தொற்றியிருக்கும் என்பதை புரிந்துகொண்டேன். என்னுடைய நிலையை புரிந்துகொள்கிற ஒருவரிடம் பேச ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனால் அப்படி யாரும் இருப்பதாக என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. எதற்குமே லாயக்கற்றவள் என்ற உணர்வும் தோல்வி உணர்வும் என்னை வாட்டி வதைத்தது. குடும்பத்தார் எனக்கு ஆதரவாக இருந்தாலும் நான் நம்பிக்கையற்றவளாக உணர்ந்தேன், பயம் என்னை கவ்வியது. மற்ற இளைஞரைப் போலவே எனக்கும் பல மனக்கோட்டைகள் இருந்தன. விஞ்ஞானத்துறையில் பட்டப் படிப்பை முடிப்பதற்கு இன்னும் இரண்டு வருடங்களே பாக்கி இருந்தன, ஆனால் அந்த மனக்கோட்டை தகர்ந்து விட்டது.

எனக்கு கொடுக்கப்பட்ட ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகளை சாப்பிட ஆரம்பித்தேன், எய்ட்ஸ் ஆலோசகர்களையும் சென்று சந்தித்தேன்; ஆனாலும் மனச்சோர்வில்தான் முடங்கிக் கிடந்தேன். நான் சாவதற்கு முன் எது உண்மையான கிறிஸ்தவ மதம் என்பதை எனக்கு காட்டும்படி கடவுளிடம் ஜெபித்தேன். நான் ஒரு பெந்தெகொஸ்தே சர்ச்சை சேர்ந்தவள், ஆனால் அந்த சர்ச்சிலிருந்து யாருமே என்னை வந்து சந்திக்கவில்லை. நான் இறந்த பின்பு எங்கு செல்வேன் என்பதை அறிய விரும்பினேன்.

1999 ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்தில் ஒருநாள் காலை யெகோவாவின் சாட்சிகள் இருவர் என் வீட்டின் கதவைத் தட்டினார்கள். அன்று எனக்கு ரொம்ப முடியாமல் இருந்தது, என்றாலும் ஹாலில் அவர்களுக்கு முன்பாக என்னால் உட்கார முடிந்தது. அந்த இரண்டு பெண்மணிகளும் தங்களை அறிமுகப்படுத்திய பின்பு, பைபிளைப் படிக்க ஜனங்களுக்கு உதவுவதாக சொன்னார்கள். என்னுடைய ஜெபத்திற்கு பதில் கிடைத்ததை அறிந்ததும் எனக்கு சொல்லமுடியாத அளவுக்கு ஆசுவாசமாக இருந்தது. ஆனால், நான் ரொம்பவும் பலவீனமாகி, அதிக நேரத்திற்கு வாசிக்கவோ கவனம் செலுத்தவோ முடியாத நிலையில் இருந்தேன்.

ஆனாலும், நான் பைபிள் படிக்க விரும்புவதாக அவர்களிடம் சொன்னேன்; அதனால் அவர்கள் அடுத்ததாக எப்போது என்னை வந்து சந்திக்கலாம் என்பதைக் கேட்டு தெரிந்துகொண்டார்கள். எதிர்பாராத விதமாக அந்த நாள் வருவதற்குள், நான் மனநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன்​—மன உளைச்சல் காரணமாக. மூன்று வாரங்களுக்குப் பின் என்னை டிஸ்சார்ஜ் செய்தார்கள்; யெகோவாவின் சாட்சிகள் என்னை மறந்துவிடவில்லை என்பதை அறிந்து சந்தோஷப்பட்டேன். அவர்களில் ஒருவர், நான் எப்படி இருக்கிறேன் என்பதை தெரிந்துகொள்ள எப்போதும் என்னோடு தொடர்புகொண்டது எனக்கு ஞாபகமிருக்கிறது. உடல்நிலை கொஞ்சம் தேறியது; அந்த வருடத்தின் கடைசியில் நான் பைபிளை படிக்க ஆரம்பித்தேன். என்றாலும், என்னுடைய நிலை ஒரே சீராக இல்லாமல் இருந்ததால் பைபிள் படிப்பது கஷ்டமாக இருந்தது. ஆனால், எனக்கு படிப்பு நடத்தியவர் என்னை புரிந்துகொண்டு பொறுமையாக இருந்தார்.

யெகோவாவையும் அவருடைய பண்புகளையும் அதோடு அவரை அறிந்து நித்திய ஜீவனை எதிர்நோக்குவது உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது என்பதையும் பற்றி பைபிளிலிருந்து படித்தபோது அது என்னை மிகவும் கவர்ந்தது. மனிதர் படும் கஷ்டங்களுக்கு காரணத்தையும் முதன் முதலாக அறிந்துகொண்டேன். சீக்கிரத்தில் மனித அரசாங்கங்களை மாற்றீடு செய்யப்போகும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி அறிந்தது எனக்கு அதிக சந்தோஷத்தை தந்தது. இது என் வாழ்க்கைப் போக்கை முற்றிலும் மாற்றுவதற்கு தூண்டியது.

இதுதான் நான் தேடிக்கொண்டிருந்த உண்மையான நிவாரணி. யெகோவா இன்னமும் என்னை நேசித்து, அக்கறையோடு கவனிக்கிறார் என்பதை அறிந்தது எவ்வளவாய் ஆறுதலளித்தது! முன்பெல்லாம், கடவுளுக்கு என்னை பிடிக்காது, அதனால்தான் எனக்கு இந்த நோய் வந்தது என்று நினைத்தேன். ஆனால், இயேசு கிறிஸ்துவின் கிரய பலியின் அடிப்படையில் பாவத்திலிருந்து மன்னிப்பைப் பெற யெகோவா அன்புடன் ஏற்பாடு செய்திருப்பதை நான் கற்றறிந்தேன். 1 பேதுரு 5:7-⁠ல் (NW) “அவர் உங்களை அக்கறையோடு கவனிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் போட்டு விடுங்கள்” என்பதைப் படித்து, கடவுள் என்னை அக்கறையோடு கவனிக்கிறார் என்று அறிந்துகொண்டேன்.

பைபிளை தினந்தோறும் வாசித்து, ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களில் கலந்துகொள்வதன் மூலம் என்னால் முடிந்தவரை யெகோவாவிடம் நெருங்கிவர உண்மையில் பிரயாசப்படுகிறேன். அது எப்போதுமே சுலபமாக இல்லாவிட்டாலும், நான் என் கவலைகளை எல்லாம் யெகோவாவிடம் ஜெபத்தில் சொல்லி என்னை பலப்படுத்தி ஆறுதலளிக்கும்படி கேட்கிறேன். அதுமட்டுமல்ல, சபையாரும் எனக்கு உதவுகிறார்கள், அதனால் நான் சந்தோஷமாக இருக்கிறேன்.

உள்ளூர் சபையாரோடு சேர்ந்து தவறாமல் பிரசங்க வேலைக்கு செல்கிறேன். நான் மற்றவர்களுக்கு ஆவிக்குரிய விதத்தில் உதவ, முக்கியமாக என்னைப் போன்ற சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு உதவ விரும்புகிறேன். டிசம்பர் 2001-⁠ல் நான் முழுக்காட்டுதல் பெற்றேன்.

[படம்]

கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி அறிந்தது எனக்கு அதிக சந்தோஷத்தை தந்தது

[பக்கம் 8-ன் படம்]

போட்ஸ்வானாவில் எய்ட்ஸ் ஆலோசனை குழு

[பக்கம் 10-ன் படம்]

பரதீஸ் பூமியில் அனைவரும் பரிபூரண ஆரோக்கியத்தை அனுபவித்து மகிழ்வார்கள்