Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் தாய்மையை பாதுகாத்திடுவீர்!

உங்கள் தாய்மையை பாதுகாத்திடுவீர்!

உங்கள் தாய்மையை பாதுகாத்திடுவீர்!

மெக்சிகோவிலுள்ள விழித்தெழு! எழுத்தாளர்

ஒவ்வொரு வருடமும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் கருவுறுதல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை செயற்பாட்டு நிதி அமைப்பு குறிப்பிடுகிறது. அதுமட்டுமல்ல, கருவுறுதலால் வருடாவருடம் ஆறு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயங்கரமான உடல்நல பிரச்சினைகளுக்கு ஆளாவதாகவும் அவர்களில் ஏறக்குறைய மூன்றிலொரு பகுதியினர் ஆயுசு பூராவும் பல பாதிப்புகளால் அல்லது தொற்றுகளால் அவஸ்தைப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளின் பன்னாட்டு குழந்தைகள் அவசர நலநிதி அமைப்பு (UNICEF) குறிப்பிடுகிறது. வளரும் நாடுகளில் அநேக பெண்கள் அடிக்கடி கர்ப்பமாகி பிள்ளை பெறும் கஷ்டமான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கிறார்கள்; தங்களை ஒழுங்காக கவனித்துக்கொள்ளாமல் அசட்டையாக இருந்துவிடுவதால் உடல் பலவீனமடைந்து வியாதிப்படுகிறார்கள். ஆம், தாய்மை அடைவது தீங்கு விளைவிப்பதாய் இருக்கலாம், ஆபத்தையும் ஏற்படுத்தலாம். ஒரு பெண் தன் தாய்மையை பாதுகாத்திட ஏதேனும் வழி இருக்கிறதா?

உடல்நல பராமரிப்பு​—⁠கர்ப்பமாகுமுன்

திட்டமிடுதல். தங்களுக்கு எத்தனை குழந்தைகள் வேண்டும் என்பதை கணவனும் மனைவியும் சேர்ந்து பேசி திட்டமிடலாம். ஒரு கைக்குழந்தையை இடுப்பிலும் அடுத்ததை வயிற்றிலும் சுமக்கும் பெண்களை வளரும் நாடுகளில் காண்பது சகஜம். கவனமாக திட்டமிட்டு, சிந்தித்து அடுத்த குழந்தையை பெற்றெடுப்பதை சற்றே தள்ளிப்போட்டால் தாய்க்கு கொஞ்ச காலத்திற்காவது ஓய்வு கிடைக்கும், இதனால் பிரசவத்திற்குப் பின் ஏற்படும் உடல் பலவீனத்திலிருந்து மீளவும் முடியும்.

ஊட்டச்சத்து. கருவுறுதலில் வெற்றிகாண உதவும் கூட்டுறவு அமைப்புகளின் கருத்துப்படி, ஒரு பெண் கர்ப்பமாவதற்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்களுக்கு முன்பே தீங்கிழைக்கும் பொருட்களை விலக்கிவிட்டு, சத்தான ஆகாரத்தை சாப்பிடுவது அவசியம். உதாரணமாக, ஒரு கர்ப்பிணி ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவை அதிகமாக சேர்த்துக்கொள்கையில், நரம்பு குழாய் சரியாக மூடாததால் சிசுவுக்கு ஸ்பைனா பிஃபடா எனும் முதுகெலும்பு பிளவு ஏற்படும் அபாயம் பெருமளவில் குறைகிறது. கர்ப்பமாகி 24-⁠ம் நாளிலிருந்து 28-⁠ம் நாளுக்குள், அதாவது கர்ப்பமாகியிருப்பதை அநேக பெண்கள் அறிவதற்கு முன்பே கருவின் நரம்பு குழாய் மூடிவிடுவதால் குழந்தை உண்டாவதற்கு திட்டமிடும் சிலர் ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை உட்கொள்கிறார்கள்.

மற்றொரு முக்கியமான ஊட்டச் சத்து இரும்புச் சத்து ஆகும். கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு இரும்புச் சத்து இருமடங்கு தேவைப்படுகிறது. அவளுக்கு ஏற்கெனவே இரும்புச் சத்து குறைவாக இருந்தால் இரத்தச் சோகை ஏற்படலாம்; வளரும் நாடுகளிலுள்ள அநேக பெண்களுக்கு இரும்புச் சத்து குறைவாகவே உள்ளது. அடுத்தடுத்து குழந்தை உண்டாகும் பெண்களின் நிலைமையைப் பற்றி கேட்கவே வேண்டாம்; ஏனெனில் இரும்புச் சத்தை பெருக்கிக்கொள்ள அவர்களுக்கு கால இடைவெளியே இல்லாமல் போய்விடுகிறது. a

வயது. இறந்துபோகும் அபாயம் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட கர்ப்பிணிகளைவிட 16 வயதுக்கு உட்பட்ட கர்ப்பிணிகளுக்குதான் 60 சதவீதம் அதிகம். மறுபட்சத்தில், 35 வயதை தாண்டியவர்களுக்கு டவுண்ஸ் சின்ட்ரோம் போன்ற இயல்புக்கு மாறான பிறவிக் கோளாறுகளுடன் குழந்தைகள் பிறப்பதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது. மிகவும் இளவயது தாய்மாருக்கு அல்லது குழந்தை பெறும் வயதைத் தாண்டும் நிலையிலுள்ள தாய்மாருக்கு ப்ரீஎக்லாம்ப்ஸியா எனும் ஜன்னி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்தப் பிரச்சினை ஏற்படுகையில், கர்ப்பந்தரித்து 20 வாரங்களுக்குப் பின்பு உயர் இரத்த அழுத்தம் உண்டாகிறது, உடல் முழுவதிலும் வீக்கமும் சிறுநீரில் அளவுக்கதிகமாக புரதமும் வெளியேறுகிறது. இந்த நிலையில் தாய்க்கும் சேய்க்கும் மரணம் ஏற்படும் ஆபத்து அதிகமாகிறது.

தொற்றுகள். சிறுநீரக மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் தொற்றுகளும் வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட தொற்றுகளும் கர்ப்ப காலத்தில் அதிகமாகலாம். இதனால் குறைமாத பிரசவமும் ஜன்னியும் நேரிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகலாம். எந்த நோயாக இருந்தாலும் கர்ப்பந்தரிப்பதற்கு முன்பு சிகிச்சை பெற்றுக்கொள்வதே சிறந்தது.

உடல்நல பராமரிப்பு​—கர்ப்ப காலத்தில்

பிரசவ முன் பராமரிப்பு. கர்ப்ப காலத்தில் தவறாமல் மருத்துவரை சந்திப்பது தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை குறைக்கிறது. க்ளினிக்குகளோ, மருத்துவமனைகளோ அதிகமாக இல்லாத நாடுகளிலும்கூட நன்கு பயிற்சிபெற்ற மருத்துவச்சிகள் இருப்பார்கள்.

பிரசவ முன் பராமரிப்பின் போது நடத்தப்படும் மருத்துவச் சோதனைகள், ஒருவேளை விசேஷித்த பராமரிப்பு அளிக்க வேண்டிய சூழ்நிலைகளை தேர்ச்சிபெற்ற மருத்துவ பணியாளர்களின் கவனத்திற்கு முன்கூட்டியே கொண்டுவரலாம். ஒன்றுக்கு மேற்பட்ட சிசுக்கள் உள்ளனவா, உயர் இரத்த அழுத்தம், இதய மற்றும் சிறுநீரக பிரச்சினைகள், சர்க்கரை நோய் உள்ளனவா போன்ற சோதனைகள் அவற்றில் அடங்கும். சில நாடுகளில், பிறந்த குழந்தைக்கு டெட்டனஸ் நோய் வராமல் தடுக்க தாய் கர்ப்பமாக இருக்கையில் டெட்டனஸ் நோய் தடுப்பு ஊசி போடப்படுகிறது. கரு வளர்ந்த 26-⁠ம் வாரம் முதல் 28-⁠ம் வாரத்திற்குள் தாய்க்கு குரூப் ‘பி’ ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நோய்க்கான பரிசோதனையும் செய்யப்படுகிறது. இந்த பாக்டீரியா குடலின் அடிப்பகுதியில் காணப்பட்டால் பிரசவத்தின் போது குழந்தைக்கும் தொற்றிவிடும்.

தாயாகப் போகிறவர் தன் உடல்நல பின்னணி உட்பட எல்லா தகவல்களையும் சுகாதார பணியாளர்களிடம் தெரிவிக்க தயாராக இருக்க வேண்டும். சந்தேகங்களை மனந்திறந்து கேட்கவும் வேண்டும். பிறப்பு உறுப்பில் ஏற்படும் ரத்தப்போக்கு, முகத்தில் ஏற்படும் திடீர் வீக்கம், கடுமையான அல்லது தொடர்ச்சியான தலைவலி அல்லது விரல்களில் வலி, திடீரென பார்வை கெடுதல் அல்லது மங்குதல், அடிவயிற்றில் தாங்க முடியாத வலி, இடைவிடாத வாந்தி, குளிர் காய்ச்சல் அல்லது ஜுரம், சிசுவின் அசைவில் மாற்றங்கள், பிறப்புறுப்பு வழியாக நீர் கசிதல், சிறுநீர் கழிக்கையில் வலி ஏற்படுதல் அல்லது இயல்புக்கு மாறாக குறைவாக சிறுநீர் கழிதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

மதுவும் போதைப் பொருட்களும். ஒரு தாய் மது அருந்தினாலோ (புகையிலை உட்பட) போதைப் பொருட்களை பயன்படுத்தினாலோ, குழந்தையின் மனவளர்ச்சி குன்றுவது, உடல் ஊனம், நடத்தை சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஆகியவை ஏற்படும் ஆபத்து அதிகமாகிறது. போதைப் பொருட்களுக்கு அடிமையான தாய்மார் அவற்றை நிறுத்தும்போது ஏற்படும் பின்விளைவுகள் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளையும்கூட பாதிப்பதாக சொல்லப்படுகிறது. எப்போதாவது ஒரு கிளாஸ் ஒயின் குடிப்பதில் கெடுதி இல்லையென சிலர் நம்பினாலும் கர்ப்ப காலத்தில் மதுபானங்களை அறவே தவிர்க்கும்படிதான் பொதுவாக நிபுணர்கள் சிபாரிசு செய்கிறார்கள். கர்ப்பிணிகள் புகைப்பிடிப்பவர் மத்தியில் இருப்பதை தவிர்ப்பதும் அவசியம்.

மருந்துகள். கர்ப்பமாக இருப்பதையும் வரக்கூடிய ஆபத்துக்களையும் நன்கு தெரிந்திருக்கும் ஒரு மருத்துவர் எழுதிக்கொடுத்தால் ஒழிய எந்த மருந்தையும் சாப்பிடக் கூடாது. சில வைட்டமின் மருந்துகளும்கூட கெடுதல் விளைவிக்கலாம். உதாரணமாக, வைட்டமின் ‘ஏ’ அதிகமாக சேர்த்துக்கொள்வது சிசுவில் ஊனங்களை ஏற்படுத்தலாம்.

எடை கூடுதல். ஒரு கர்ப்பிணியின் எடை அளவுக்கு அதிகமாக கூடவும் கூடாது, குறையவும் கூடாது. க்ராவுஸஸ் ஃபூட், நியூட்ரிஷன் அன்ட் டயட் தெரபி என்ற நூலின்படி, சராசரி எடையுடன் பிறக்கும் குழந்தையைவிட மிகக் குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தை இறக்கும் ஆபத்து 40 மடங்கு அதிகம். மறுபட்சத்தில், இருவருக்கும் சேர்த்து சாப்பிடுவதால் உடல் பருமன்தான் கூடும். பேறுகாலத்தின் இரண்டாவது கட்டத்தில்தான் எடை சரியான அளவுக்கு கூடியிருப்பதை காணமுடியும். இது, அந்தக் கர்ப்பிணி தன் அதிகப்படியான தேவைகளுக்கு ஏற்ப சரியான அளவில் உணவு உட்கொள்வதைக் காட்டுகிறது. b

சுத்தமும் கவனிக்க வேண்டிய பிற விஷயங்களும். வழக்கம்போல குளிக்கலாம், ஆனால் பிறப்புறுப்பை கழுவ பயன்படும் சாதனங்களை உபயோகிக்கக் கூடாது. ஜெர்மன் மணல்வாரி அம்மை எனவும் அழைக்கப்படும் ரூபெல்லா போன்ற வைரஸ் தொற்று நோய் உள்ளவர்களோடு ஒரு கர்ப்பிணி தொடர்பு வைத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலுமாக, டாக்சோபிளாஸ்மாசிஸ் என்ற வியாதி வராமல் தடுக்க, நன்கு வேகவைக்காத இறைச்சியை சாப்பிடுவதையும், பூனையின் கழிவுகளை எடுத்துப் போடுவதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கைகளையும் சமைக்கப்படாத உணவு வகைகளையும் கழுவுவது போன்ற அடிப்படை சுகாதார முறைகளைக் கடைப்பிடிப்பது அத்தியாவசியம். உடலுறவு கொள்வது பெரும்பாலும் எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தாதபோதிலும் கர்ப்ப காலத்தின் இறுதி வாரங்களிலோ அல்லது ரத்தப்போக்கு, தசைப்பிடிப்புகள் இருக்கும் சமயத்திலோ அல்லது முன்பு கருச்சிதைவு ஏற்பட்டிருந்தாலோ உடலுறவு கொள்ளக்கூடாது.

சுகப் பிரசவம்

கர்ப்ப காலத்தில் சிரத்தை எடுத்துக்கொள்ளும் ஒரு பெண்ணுக்கு பிரசவத்தின் போது சிக்கல்கள் ஏற்படுவது மிகக் குறைவே. சாதாரணமாக பிரசவத்தை வீட்டில் வைத்துக்கொள்வதா மருத்துவமனையில் வைத்துக்கொள்வதா என்பதை அவளே தீர்மானித்திருப்பாள். பிரசவத்தின்போது என்னென்ன காரியங்கள் நிகழலாம், திறமையுள்ள மருத்துவச்சியுடன் அல்லது டாக்டருடன் எப்படி ஒத்துழைக்கலாம் என்பதையும் போதுமான அளவுக்கு அறிந்திருப்பாள். அதுபோல் அந்த மருத்துவச்சியோ டாக்டரோகூட, பிரசவத்தின் போது தனக்கு என்னென்ன செய்ய வேண்டுமென கர்ப்பிணி விரும்பி கேட்டிருந்தாளோ அவற்றையெல்லாம் அறிந்திருப்பார். பிரசவத்தின்போது என்ன நிலையில் கிடத்துவது, பிறப்புவாயை கிழிப்பது, ஆயுதம் பயன்படுத்துவது, வலி நிவாரணிகளை உபயோகிப்பது, பிறக்கும் தறுவாயில் மின்னணுவியல் கண்காணிப்பு முறைகளை (electronic fetal monitoring) பயன்படுத்துவது போன்றவை அவற்றில் அடங்கும். இன்னும் பிற பிரச்சினைகளைப் பற்றியும் பேசியிருக்க வேண்டும். அதாவது, வீட்டில் பிரசவம் நடத்துவது சிரமமாகையில் எந்த மருத்துவமனைக்கு அல்லது க்ளினிக்குக்கு கொண்டு செல்ல வேண்டும்? அதிகமாக ரத்தப்போக்கு ஏற்படுகையில் என்ன செய்ய வேண்டும்? தாய்மார் பலரின் இறப்புக்கு ரத்தப்போக்கு காரணமாக இருப்பதால், இரத்தம் ஏற்றிக்கொள்ளாதவர்களுக்கு அதற்கு பதிலான மாற்று மருந்துகளை தயாராக வைத்திருக்க வேண்டும். சிசேரியன் தேவைப்பட்டால் என்ன செய்வது என்பதையும் முன்கூட்டியே ஆலோசிக்க வேண்டும்.

பிள்ளைகள் கடவுளிடமிருந்து வரும் பரிசு, ஒரு “சுதந்தரம்” என பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 127:4) கர்ப்ப காலத்தைப் பற்றி ஒரு பெண் எந்தளவுக்கு அறிந்திருக்கிறாளோ அந்தளவுக்கு எல்லாமே நல்லபடியாக நடக்கும். கர்ப்பமாவதற்கு முன்பும் கர்ப்ப காலத்திலும் தன்னை நன்கு கவனித்துக்கொள்வதன் மூலமும் பிரசவத்தைப் பற்றிய பல்வேறு அம்சங்களை முன்கூட்டியே ஆலோசிப்பதன் மூலமும் ஒரு பெண் தன் தாய்மையை பாதுகாத்திட தன்னாலான அனைத்தையும் செய்பவளாக இருப்பாள். (g03 1/8)

[அடிக்குறிப்புகள்]

a ஈரல், பயிறு வகைகள், பசுமையான பச்சை காய்கறிகள், கொட்டை பருப்புகள், ஊட்டச்சத்து பொருட்கள் சேர்க்கப்பட்ட சீரியல்கள் போன்றவற்றில் ஃபோலிக் அமிலமும் இரும்புச் சத்தும் உள்ளன. இரும்புச் சத்துமிக்க உணவுகளை உடல் ஏற்றுக்கொள்வதற்கு வைட்டமின் ‘சி’ உள்ள ஃப்ரெஷ்ஷான பழங்களையும் அவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

b கர்ப்ப கால ஆரம்பத்தில் போதுமான எடை உடையவர்களுக்கு கர்ப்ப காலத்தின் இறுதியில் 9 முதல் 12 கிலோ வரை எடை கூடலாம் என சிபாரிசு செய்யப்படுகிறது. இருந்தாலும், பருவ வயது பெண்களுக்கு அல்லது சரிவர ஊட்டச் சத்து இல்லாத பெண்களுக்கு 12 முதல் 15 கிலோ வரை எடை கூட வேண்டும். அதே சமயத்தில் அதிக பருமனாக இருப்பவர்களுக்கு 7 முதல் 9 கிலோ வரை மட்டுமே எடை கூட வேண்டும்.

[பக்கம் 22-ன் பெட்டி]

கர்ப்பிணிக்கு ஆலோசனைகள்

● பொதுவாக ஒரு கர்ப்பிணி தன் அன்றாட உணவில் பழங்களையும், காய்கறிகளையும் (முக்கியமாக கரும் பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறமானவை), பயறு வகைகளையும் (பீன்ஸ், சோயா பீன்ஸ், லென்டில்கள், சிக்-பீஸ்), சீரியல்களையும் (கோதுமை, சோளம், ஓட்ஸ், பார்லி முதலியவை; இவை முழுத்தானியமாக அல்லது ஊட்டச் சத்து பொருட்கள் சேர்க்கப்பட்ட சீரியல்களாக இருப்பது நல்லது), மாமிச உணவையும் (மீன், கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, முட்டை, பாலடைக்கட்டி, பால், கொழுப்பு நீக்கப்பட்ட பால் நல்லது) சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்துகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, உப்பு ஆகியவற்றை மிதமாக சேர்த்துக்கொள்வது சிறந்தது. நிறைய தண்ணீர் குடியுங்கள். கேஃபின் கலந்த பானங்களையும், பதப்படுத்தும் பொருட்கள் கலந்த உணவுகளையும், செயற்கை நிறமும் சுவையூட்டும் பொருட்களும் சேர்க்கப்பட்டவற்றையும் தவிருங்கள். மாவுப்பொருள், மண் போன்ற சாப்பிடுவதற்கு ஏற்றதல்லாத பிற பொருட்கள் ஊட்டக்குறைவையும், நச்சுத்தன்மையையும் விளைவிக்கலாம்.

● எக்ஸ்ரேக்கள், கெடுதலான ரசாயனங்கள் போன்ற கருவைப் பாதிக்கும் சுற்றுச்சூழலைக் குறித்ததில் எச்சரிக்கையாக இருங்கள். ஸ்ப்ரே போன்ற வீட்டு உபயோகத்திற்கான மற்ற பொருட்களை அதிகமாக பயன்படுத்தாதீர்கள். அதிக நேரம் வெயிலில் இருப்பதாலோ அதிகமாக உடற்பயிற்சி செய்வதாலோ உடல் அதிகமாக உஷ்ணம் அடைவதை தவிருங்கள். நீண்ட நேரத்திற்கு நிற்பதையும் சோர்ந்துவிடும் அளவுக்கு வேலை செய்வதையும் தவிருங்கள். ‘சீட் பெல்ட்’ மாட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பது போல் நேராக உட்காருங்கள்.