Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆழ வேரூன்றிய காரணிகள், பயங்கர பாதிப்புகள்

ஆழ வேரூன்றிய காரணிகள், பயங்கர பாதிப்புகள்

ஆழ வேரூன்றிய காரணிகள், பயங்கர பாதிப்புகள்

“நான் பசியில் துடித்தேன், நீங்களோ என் பசியை ஆராய குழு ஒன்றை அமைத்தீர்கள். நான் வீடின்றி தவித்தேன், நீங்களோ என் கஷ்டத்தை அறிக்கை செய்தீர்கள். நான் வியாதியால் அவதியுற்றேன், நீங்களோ வறியோருடைய நிலைமையைக் குறித்து கருத்தரங்கு நடத்தினீர்கள். என் கஷ்டத்திற்குரிய எல்லா அம்சங்களையும் அலசி ஆராய்ந்தீர்கள், ஆனால் இன்னும் நான் பசியாலும் நோயாலும் வாடுகிறேன், வீடின்றி தவிக்கிறேன்.”​—அறியப்படாத ஆசிரியர்.

ஊட்டக்குறைவைத் தடுப்பதற்கு உலக ஏஜென்ஸிகள் எண்ணற்ற முயற்சிகள் எடுத்திருக்கின்றன, ஆனால் அந்த முயற்சிகளோ எதிர்பார்த்த பலன் தரவில்லை. உதாரணமாக, 1996-⁠ல் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் (FAO) உலக உணவு உச்சி மாநாடு, உலகில் ஊட்டக்குறைவினால் பாதிக்கப்படுவோருடைய எண்ணிக்கையை 2015-⁠ம் ஆண்டுக்குள் பாதியாக குறைப்பதற்கு​—⁠சுமார் 40 கோடியாக்குவதற்கு​—⁠இலக்கு வைத்தது. a

ஓரளவு முன்னேற்றம் செய்திருப்பதற்காக சபாஷ் போடலாம். ஆனால், 2001-⁠ம் உலகில் உணவு பாதுகாப்பின்மை நிலை என்ற FAO-வின் அறிக்கை இவ்வாறு ஒத்துக்கொள்கிறது: “உலகில் ஊட்டக்குறைவினால் பாதிக்கப்படுவோரை குறைப்பதில் மந்த நிலை ஏற்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது.” ஆகவே இந்த உச்சி மாநாட்டின் இலட்சியக் கனி இன்னும் எட்டாக் கனியாகவே தோன்றுகிறது. சொல்லப்போனால், “வளரும் நாடுகள் பெரும்பான்மையானவற்றில் ஊட்டக்குறைவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது” என அந்த அறிக்கை ஒத்துக்கொள்கிறது.

இந்த விரோதியை தோற்கடிப்பது ஏன் அவ்வளவு கடினமாக இருக்கிறது? இதற்குரிய பதிலை கண்டுபிடிப்பதற்கு, முதலில் நாம் ஊட்டக்குறைவை வரையறுக்க வேண்டும், பிற்பாடு அது எந்தளவு பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் ஆழ வேரூன்றிய காரணிகளையும் ஆராய வேண்டும்.

ஊட்டக்குறைவுக்கு காரணங்கள் யாவை?

உடலிலுள்ள செல்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவுபடுவதால் ஊட்டக்குறைவு உண்டாகிறது. இது பொதுவாக இரண்டு காரணிகளால் ஏற்படுகிறது: (1புரதச்சத்து, கலோரி, வைட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்களை போதியளவு உட்கொள்ளாமை, (2அடிக்கடி தொற்றுகள் ஏற்படுதல்.

உதாரணமாக, வயிற்றுப்போக்கு, தட்டம்மை, மலேரியா, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஆகியவை உடலை மிகவும் பலவீனமாக்கி ஊட்டச்சத்துக்களை இழக்கும்படி செய்கின்றன. அவை பசியையும் உணவு உட்கொள்வதையும் குறைப்பதால் ஊட்டக்குறைவை உண்டுபண்ணுகின்றன. மறுபட்சத்தில், ஊட்டக்குறைவினால் பாதிக்கப்பட்ட குழந்தை தொற்று வியாதிகளுக்கு எளிதில் பலியாகிறது. இவ்வாறு ஒரு பயங்கரமான சுழற்சி ஏற்பட்டு, புரதச்சத்து-கலோரி ஊட்டக்குறைவினால் (PEM) இறப்பு விகிதங்கள் அதிகமாகின்றன.

ஊட்டக்குறைவினால் அவதியுறும் அபாயம் ஏன் குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கிறது? அவர்கள் வேகமாக வளரும் பிராயத்தில் இருக்கிறார்கள், இதனால் கலோரிகளும் புரதச்சத்துக்களும் அதிகம் தேவைப்படுகின்றன. இது போன்ற காரணங்களால் கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும் ஊட்டக்குறைவுக்குப் பலியாகிறார்கள்.

பெரும்பாலும் அந்தக் குழந்தையின் பிரச்சினை அது பிறப்பதற்கு முன்பே ஆரம்பித்துவிடுகிறது. கருத்தரிப்பதற்கு முன்பும் பேறுகாலத்திலும் ஒரு தாய் ஊட்டக்குறைவினால் பாதிக்கப்பட்டால், பிறக்கும் குழந்தை எடை குறைவாக இருக்கும். இதைத் தவிர, கொஞ்சக் காலத்திலேயே தாய்ப்பாலை நிறுத்திவிடுதல், தவறான உணவுப் பழக்கங்கள், சுகாதாரம் இல்லாமை ஆகியவையும் ஊட்டக்குறைவை உண்டாக்கலாம்.

தேவையான போஷாக்கின்மையால் குழந்தையின் வளர்ச்சி தடைபட்டு குன்றிவிடுகிறது. அடிக்கடி அழுகிறது, எளிதில் நோயும் கண்டுவிடுகிறது. நிலைமை மோசமாகும்போது, எடை குறைவது தெளிவாக தெரிகிறது, கண்களிலும் உச்சியிலும் (தலையின் மேலுள்ள மென்மையான பகுதி) குழி விழுந்துவிடுகின்றன, தோலும் திசுக்களும் மீட்சித்தன்மையை இழந்துவிடுகின்றன, உடலின் வெப்பநிலையை காத்துக்கொள்ளும் திறனும் குறைவுபடுகிறது.

ஊட்டக்குறைவு வேறு வழிகளிலும் வெளிப்படலாம். இவையும் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகளாய் இருக்கலாம். உதாரணமாக, தாதுப்பொருட்களையும், முக்கியமாக இரும்பு, அயோடின், துத்தநாகம் போன்றவற்றையும், வைட்டமின்களையும், முக்கியமாக வைட்டமின் ஏ-வையும் சரிவர உட்கொள்ளவில்லையென்றால் இப்படிப்பட்ட பாதிப்பு ஏற்படலாம். உலகிலுள்ள சுமார் பத்து கோடி பிள்ளைகளுக்கு வைட்டமின் ஏ குறைவாக இருக்கிறது. அதனால் அவர்களுடைய பார்வை பறிபோய்விடுகிறது என ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல நிதி நிறுவனம் (யுனிசெஃப்) குறிப்பிடுகிறது. இது நோய்த் தடுப்பு மண்டலத்தையும் பாதித்து, அந்தப் பிள்ளையின் தொற்றுகளை தடுக்கும் திறனை குறைக்கிறது.

பயங்கர பாதிப்புகள்

உடலில்​—⁠முக்கியமாக ஒரு சிறுபிள்ளையின் உடலில்⁠—​ஊட்டக்குறைவு நாசம் விளைவிக்கிறது. இருதயம், சிறுநீரகம், வயிறு, குடல்கள், நுரையீரல்கள், மூளை உட்பட ஒவ்வொரு உறுப்பும் மண்டலமும் பாதிக்கப்படலாம்.

மன வளர்ச்சி குன்றுவது, புலமையிலும் அறிவுத் திறனிலும் பாதிப்பு ஏற்படுவது ஆகிய இவ்விரண்டும் பிள்ளையின் வளர்ச்சியின்மையோடு சம்பந்தப்பட்டிருப்பதாக பல்வேறு ஆராய்ச்சிகள் காண்பித்திருக்கின்றன. இவை ஊட்டக்குறைவினால் உண்டாகும் மிகப் பயங்கரமான நெடுங்கால விளைவுகள் என ஐக்கிய நாடுகளிலிருந்து வரும் ஓர் அறிக்கை அழைக்கிறது.

ஊட்டக்குறைவிலிருந்து உயிர் பிழைக்கும் பிள்ளைகள் பெரியவர்களாகும் போதும் இதன் பின்விளைவுகளை அனுபவிப்பார்கள். அதனால்தான் யுனிசெஃப் இவ்வாறு புலம்பியது: “ஏறக்குறைய முற்றிலும் தடுக்கக்கூடிய ஒன்றாக இது இருந்தபோதிலும், இத்தனை அநேக மனிதருடைய அறிவு வீணாவது ஊதாரித்தனமாக இருக்கிறது, ஒழுக்க ரீதியிலும் தவறானது.” ஆகவே ஊட்டக்குறைவால் உண்டாகும் நெடுங்கால பாதிப்புகள் மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும். இருதய நோய், நீரழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற தீரா வியாதிகளுக்கு குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட ஊட்டக்குறைவே காரணம் என்பதை சமீப ஆராய்ச்சி காட்டுகிறது.

என்றாலும், கடுமையான ஊட்டக்குறைவு மிகவும் பரவலான பிரச்சினை அல்ல, ஏனென்றால் யுனிசெஃப் இவ்வாறு ஒத்துக்கொள்கிறது: “ஊட்டக்குறைவால் பாதிக்கப்பட்ட முக்கால் பாகத்தினருக்கும் அதிகமானோர் கடுமையான ஊட்டக்குறைவினால் அல்ல ஆனால் சுமாரான மற்றும் மிதமான ஊட்டக்குறைவினால் மரித்திருக்கிறார்கள்.” (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) சுமாரான அல்லது மிதமான ஊட்டக்குறைவினால் அவதியுறும் பிள்ளைகள் நீண்டகால உடல் நலப் பிரச்சினைகளை எதிர்ப்படலாம். ஆகவே ஊட்டக்குறைவினால் பிள்ளைகளுக்கு உண்டாகும் அறிகுறிகளை கவனிப்பது அத்தியாவசியம், அப்போதுதான் தகுந்த சிகிச்சை அளிக்க முடியும்.​—⁠பக்கம் 7-⁠ல் உள்ள பெட்டியைக் காண்க.

ஆழ வேரூன்றிய காரணிகள்

முன்பு குறிப்பிட்டபடி, போதிய உணவின்மையே ஊட்டக்குறைவிற்கு நேரடி காரணம். ஆனால் மிக மோசமான சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளும் இருக்கின்றன. இவற்றில் மிக முக்கியமான காரணி வறுமை, இது குறிப்பாக வளரும் நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கானோரை பாதிக்கிறது. என்றாலும், வறுமை ஒரு காரணமாக இருப்பதோடு அது ஊட்டக்குறைவின் விளைவாக ஏற்படும் ஒன்றாகவும் இருக்கிறது. எப்படியெனில், ஊட்டக்குறைவு மக்களுடைய திறமைகளை பலவீனப்படுத்துகிறது, அதனால் வறுமையை இன்னும் அதிக மோசமாக்குகிறது.

வேறு சில காரணிகளும் இருக்கின்றன. அறிவின்மை ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களை உருவாக்குகிறது. நாம் ஏற்கெனவே பார்த்தபடி, தொற்றுகளும் பங்கு வகிக்கின்றன. சமூக மற்றும் கலாச்சார காரணிகள், அதாவது உணவை சரிவிகிதமற்ற முறையில் பங்கிடுதல், பெண்களுக்கு எதிரான பாகுபாடு போன்ற காரணிகளும் இருக்கின்றன. பெண்கள் பெரும்பாலும் “கடைசியில்தான், மிகக் குறைவாகத்தான்” சாப்பிடுகிறார்கள், அதாவது ஆண்களுக்குப் பிறகுதான் சாப்பிடுகிறார்கள், ஆண்களைவிட குறைவாகத்தான் சாப்பிடுகிறார்கள். பிள்ளைகளை சிறந்த முறையில் பராமரிப்பதற்கு உதவும் கல்வியும் பெண்களுக்கு அளிக்கப்படுவதில்லை.

அதோடு, சுற்றுச்சூழல் காரணிகள் உணவு உற்பத்தியின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கின்றன. இயற்கை பேரழிவுகள், போர்கள் ஆகியவை இவற்றில் சில. 2001-⁠ம் உலகில் உணவு பாதுகாப்பின்மை நிலை அறிவிக்கிறபடி, 1999 அக்டோபர் முதல் 2001 ஜூன் வரை மாத்திரமே 22 நாடுகள் வறட்சியாலும், 17 நாடுகள் புயல்கள் அல்லது வெள்ளப் பெருக்குகளாலும், 14 நாடுகள் உள்நாட்டு போர்கள் அல்லது கலவரங்களாலும், 3 நாடுகள் பயங்கர குளிர் காலங்களாலும், 2 நாடுகள் பூமியதிர்ச்சிகளாலும் பாதிக்கப்பட்டன.

சிகிச்சையும் வரும்முன் காப்பதும்

ஊட்டக்குறைவினால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கலாம்? அந்தக் குழந்தை கடுமையான ஊட்டக்குறைவினால் அவதியுற்றால், ஆரம்ப சிகிச்சையளிக்க மருத்துவமனையில் சேர்ப்பதே மிகவும் நல்லது. உலக சுகாதார நிறுவனத்தால் வெளியிடப்பட்ட கையேட்டின்படி, மருத்துவர்கள் அந்தக் குழந்தையின் நிலைமையை மதிப்பிட்டு ஏதாவது தொற்றுகளுக்கு அல்லது நீரிழப்பிற்கு சிகிச்சை அளிப்பார்கள். உணவூட்டுவதை படிப்படியாக ஆரம்பிக்க வேண்டும், பெரும்பாலும் முதலில் ‘டியூப்’ வழியாக கொடுக்க ஆரம்பிக்கலாம். இந்த ஆரம்ப கட்ட சிகிச்சை ஒரு வாரத்திற்குக் கொடுக்கப்படும்.

இதற்கு அடுத்தது மறுவாழ்வு திட்டம். அந்தக் குழந்தைக்கு மீண்டும் தாய்ப்பால் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதோடு, எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு அதிகமாய் சாப்பிடும்படியும் ஊக்கமளிக்கப்படுகிறது. இந்தக் கட்டத்தில், உணர்ச்சி ரீதியிலும் உடல் ரீதியிலும் ஊக்குவிப்பது இன்றியமையாதது. கவனிப்பும் பாசமும் குழந்தையின் வளர்ச்சிக்கு ஆச்சரியப்படத்தக்க விதத்தில் மிகுந்த நன்மை அளிக்கலாம். மறுபடியும் நோய் தாக்காமலிருக்க சரியான உணவையும் சுகாதாரத்தையும் கொடுப்பதன் மூலம் அந்தக் குழந்தையை எவ்வாறு கவனிக்கலாம் என்பதைப் பற்றிய விஷயங்களை தாய்க்கு இந்தச் சமயத்தில் கற்றுக்கொடுக்கலாம். அதன் பின்பு, மருத்துவமனையிலிருந்து அந்தக் குழந்தையை அனுப்பிவிடலாம். ஆனால் பிற்பாடு தொடர்ந்து அந்தக் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று காட்டுவது முக்கியம்.

இருந்தாலும், வரும்முன் காப்பதே மிகச் சிறந்த நிவாரணி. அதனால்தான் அநேக நாடுகளில், அரசாங்கமும் தனியார் நிறுவனங்களும் நிறைவான உணவை வழங்கும் திட்டங்களை அல்லது உணவில் சக்தியூட்டும் பொருட்களை சேர்க்கும் திட்டங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. சமுதாயங்களும் ஊட்டக்குறைவை தடுப்பதற்கு பல வழிகளில் பங்காற்றுகின்றன. உதாரணமாக, போஷாக்கான உணவு பற்றிய கல்வித் திட்டங்கள், குடிநீரை பாதுகாத்தல், கழிப்பிடங்களை கட்டுதல், சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், தடுப்பூசி திட்டங்கள், பிள்ளைகளின் வளர்ச்சியை கவனித்தல் போன்றவற்றை செய்வதன் மூலம் பங்காற்றுகின்றன.

ஆனால் ஊட்டக்குறைவை தடுப்பதற்கு தனிப்பட்ட முறையில் என்ன செய்யலாம்? பக்கம் 8-⁠ல் உள்ள பெட்டியில் சில பயனுள்ள தகவல்கள் உள்ளன. இவற்றைத் தவிர, தாய் தன் குழந்தையைப் பெற்றெடுத்த ஏழு நாட்கள் கழித்தும், குழந்தைக்கு ஒரு மாதமாகும்போதும், அதற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து மருத்துவமனைக்கு வரும்படி குழந்தைகள் ஊட்டச்சத்து நிபுணர் கியோர்கீனா டூசாயீன்ட் பரிந்துரை செய்கிறார். குழந்தைக்கு நீரிழப்பு, கடுமையான வயிற்றுப்போக்கு, அல்லது காய்ச்சல் போன்றவற்றிற்குரிய அறிகுறிகள் தென்படும்போதும் நல்ல உடல் பராமரிப்பை பெற மருத்துவரை நாட வேண்டும்.

இவையெல்லாம் பிள்ளைகளின் உணவுப் பழக்கங்களை முன்னேற்றுவிக்க உதவுமென்றாலும், ஊட்டக்குறைவு என்பது ஒரு பெரும் பிரச்சினை​—⁠மனித முயற்சிகளால் தீர்க்க முடியாத அளவுக்கு பெரும் பிரச்சினை​—⁠என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு ஒத்துக்கொள்கிறது: “என்றாலும், அனைவருக்கும் போதிய உணவு வழங்குதல், போஷாக்கான உணவு பற்றிய கல்வி ஆகியவை இன்னும் சிக்கலான பிரச்சினையாகவே இருக்கின்றன.” ஆகவே, இந்த “மெளன அபாயம்” முடிவுக்கு வரும் என்பதற்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா? (g03 2/22)

[அடிக்குறிப்பு]

a உலக உணவு உச்சி மாநாடு பற்றிய கூடுதலான தகவலுக்கு, ஆகஸ்ட் 8, 1997 விழித்தெழு! இதழில் பக்கங்கள் 12-14-ஐ காண்க.

[பக்கம் 7-ன் பெட்டி]

உங்கள் குழந்தைக்கு ஊட்டக்குறைவா?

ஒரு குழந்தைக்குப் போதிய ஊட்டச்சத்து இருக்கிறதா என்பதை மருத்துவர்கள் எப்படி மதிப்பிடுகிறார்கள்? அவர்கள் பல்வேறு அறிகுறிகளை ஆராய்ந்து பார்க்கலாம், உணவுப் பழக்கங்களைப் பற்றி கேள்விகள் கேட்கலாம், ஆய்வக பரிசோதனைகள் செய்யும்படி சொல்லலாம். ஆனால் பொதுவாக அவர்களை நேரடியாக பரிசோதித்தே கண்டுபிடிக்கிறார்கள். குழந்தையின் உடல் அளவுகளைப் பார்த்து சராசரியாக இருக்க வேண்டிய அளவுகளுடன் ஒப்பிடுகிறார்கள். எந்த வகையான ஊட்டக்குறைவு, நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை தீர்மானிக்க இது உதவுகிறது.

எடை, உயரம், புஜத்தின் சுற்றளவு ஆகியவையே மிக முக்கியமான அளவுகள். எடையையும் வயதையும் ஒப்பிடுவது ஊட்டக்குறைவின் அளவை காட்டுகிறது; அது மிக மோசமாக இருந்தால், அந்தக் குழந்தை மெலிந்து எலும்புக்கூடு போல காணப்படும். குழந்தையின் எடை சராசரி எடையைவிட 40 சதவீதத்திற்கும் மேல் குறைந்திருந்தால் வியாதி மிக மோசமாகவும், 25 முதல் 40 சதவீதம் குறைந்திருந்தால் சுமாராகவும், 10 முதல் 25 சதவீதம் குறைந்திருந்தால் மிதமாகவும் இருப்பதாக கருதப்படுகிறது. வயதிற்கேற்ற உயரமின்றி மிகவும் குட்டையாக இருந்தால் தீராத ஊட்டக்குறைவு, குழந்தையின் வளர்ச்சி தடைபட்டிருப்பதைக் காட்டுகிறது.

புரதச்சத்து-கலோரி குறைவால் (PEM) ஏற்படும் மிக மோசமான வியாதிகள் மராஸ்மஸ் (marasmus), குவாஷியோர்கோர் (kwashiorkor) மற்றும் இவை இரண்டும் சேர்ந்தவை. 6 முதல் 18 மாதங்களுக்கு இடைப்பட்ட வயதுடைய பச்சிளம் குழந்தைகளுக்கு மராஸ்மஸ் (படிப்படியாக மெலிதல்) வருகிறது. கலோரிகள் மற்றும் புரதச்சத்துக்கள் தொடர்ந்து குறைவுபடுவதால் இது படிப்படியாக ஏற்படுகிறது; போதுமானளவு தாய்ப்பால் கொடுக்காததால் அல்லது தாய்ப்பாலுக்குப் பதிலாக அதிக தண்ணீர் கலந்த வேறு பாலை கொடுப்பதால் இது இன்னும் மோசமாகிறது. அதனால் குழந்தை மிகவும் எடை குறைந்து, தசைகளே இல்லாமல் வெறும் எலும்பும் தோலுமாக மாறிவிடுகிறது, கடைசியில் வளர்ச்சியே நின்றுவிடுகிறது. அந்தக் குழந்தையின் முகம் “வயதானவருடைய முகத்தைப்” போல ஆகிவிடுகிறது, எப்போது பார்த்தாலும் சிணுங்குகிறது, நச்சுநச்சு என்று அழுதுகொண்டே இருக்கிறது.

குவாஷியோர்கோர் என்ற வார்த்தை ஆப்பிரிக்க வட்டார வழக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது; அதன் அர்த்தம் “தள்ளப்பட்ட குழந்தை.” இது, தாயின் மார்பிலிருந்த ஒரு குழந்தையின் இடத்தை புதிதாக பிறந்த குழந்தை பிடித்துவிடுவதைக் குறிக்கிறது. பால்மறந்த பின் இந்த நிலைமை வருகிறது; இது கலோரி பற்றாக்குறைவை உட்படுத்துகிறபோதிலும், புரதச்சத்து மிகவும் குறைவுபடுவதன் காரணமாகவே ஏற்படுகிறது. நீர்மங்களை உடல் தக்கவைத்துக் கொள்கிறது, அதனால் அந்தக் குழந்தையின் கை அல்லது கால்கள் வீங்கியும் வயிறு புடைத்துக்கொண்டும் காணப்படுகிறது. சில சமயங்களில் இது முகத்தையும் பாதிக்கிறது, அதனால் அது பந்துபோல வட்ட வடிவமாக காட்சியளிக்கிறது. தோல் வியாதிகள் ஏற்படுகின்றன, தோலின் நிறமும் முடியின் நிறமும் மாறிவிடுகின்றன. இந்த நிலைமையில் இருக்கும் பிள்ளைகளின் நுரையீரல் வீங்கிவிடுகிறது, அதனால் பிள்ளைகள் உணர்ச்சியின்றி சோர்வாக காணப்படுகின்றன. முன்பு குறிப்பிடப்பட்ட எரிக்கிற்கு இதுவே நேரிட்டது, அவனுடைய வாழ்க்கையில் முதல் ஒரு மாதம்தான் அவனுடைய தாய் அவனுக்கு தாய்ப்பால் ஊட்டினாள், அதன் பிறகு அதிக தண்ணீர் கலந்த பசும்பால்தான் கொடுத்தாள். மூன்று மாதங்களில் அவனுக்கு காய்கறி சூப்பும் சர்க்கரை நீரும் கொடுக்கப்பட்டது, பிறகு அயலார் ஒருவரிடம் அவன் விடப்பட்டான்.

மூன்றாம் வகை PEM என்பது மராஸ்மஸ், குவாஷியோர்கோர் ஆகிய இரண்டு அம்சங்களும் கொண்டது. சரியான சமயத்தில் சிகிச்சை அளிக்கவில்லையென்றால் இத்தகைய ஊட்டக்குறைவு மரணத்திற்கு வழிநடத்தலாம்.

[பக்கம் 8-ன் பெட்டி/படம்]

ஊட்டக்குறைவிலிருந்து உங்கள் குழந்தையை காத்திடுவீர்!

◼ சத்துள்ள உணவை தாய் உண்பது முக்கியம். கருத்தரித்த பெண்களும் குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும், கலோரிகளையும் புரோட்டீன்களையும் அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். முக்கியமாக புரோட்டீன்கள் தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் உதவி புரிகின்றன. ஆகவே உணவு கொஞ்சம் மட்டுமே இருக்கும்போது, பிள்ளைத்தாய்ச்சிகளுக்கும் சிறுபிள்ளைகளுக்கும் முதலுரிமை கொடுங்கள்.

◼ கிட்டத்தட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலே மிகச் சிறந்த உணவு. முக்கியமாக குழந்தை பிறந்து சில நாட்களுக்கு இது மிக மிக அவசியம், ஏனென்றால் குழந்தைக்கு நோய் தொற்றாமல் பாதுகாக்கும் நோய் எதிர்ப்பு பொருட்கள் தாய்ப்பாலில் இருக்கின்றன. முதல் நான்கு அல்லது ஐந்து மாதங்களின்போது, ஒரு குழந்தைக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களையும் தாய்ப்பால் தருகிறது; இது குழந்தை ஆரோக்கியமாய் வளர உதவுகிறது.

◼ தொடர்ந்து தாய்ப்பாலே முக்கிய உணவாக இருந்தாலும், நாலாம் மாதத்திற்கும் ஆறாம் மாதத்திற்கும் இடையில் மற்ற உணவுகளையும் சாப்பிடுவதற்கு அந்தக் குழந்தை தயாராகிறது. படிப்படியாக, பழங்களையும் காய்கறிகளையும் நன்றாக மசித்துக் கொடுக்க ஆரம்பியுங்கள். ஒரு தடவைக்கு ஒரேவொரு புதிய உணவை மட்டுமே குழந்தைக்கு ஊட்டுங்கள். இந்த உணவை பழக்கப்படுத்திய பிற்பாடு, இரண்டு மூன்று நாட்களுக்குப்பின் மற்றொரு உணவை சுவைத்துப் பார்க்கட்டும். ஆனால் அந்தக் குழந்தைக்கு ஒரு புதிய உணவு பழக்கமாவதற்கு பொறுமையும் அநேக தடவை முயற்சியும் அவசியம். இப்படிப்பட்ட உணவை சமைக்கும்போது, இதை நினைவில் கொள்ளுங்கள்: சுத்தம்! சுத்தம்!! படுசுத்தம்!!! உணவுப் பொருட்களையும் பாத்திரங்களையும் நன்றாக கழுவுங்கள்!

◼ ஐந்தாம் மாதத்திற்கும் ஒன்பதாம் மாதத்திற்கும் இடையில், பாலில் இருப்பதைவிட அதிக கலோரிகளும் புரோட்டீன்களும் குழந்தைகளுக்குப் பொதுவாக தேவை. விடாமல் தொடர்ந்து மற்ற உணவுகளை அறிமுகப்படுத்துங்கள். குழந்தைகளுக்கான சீரியல், காய்கறி போன்றவற்றை முதலிலும், இறைச்சி மற்றும் பால் பொருட்களை பிற்பாடும் அளியுங்கள். ஆரம்பத்தில் உணவு கொடுக்கும்போது அவற்றை நன்றாக மசித்து கொடுக்க வேண்டும், ஆனால், ஆறு மாதத்திற்குப்பின் அவற்றை பொடிப்பொடியாக்கி கொடுக்கலாம். உப்பும் சர்க்கரையும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை, பரிந்துரை செய்யப்படுவதுமில்லை.

◼ எட்டு மாதங்களுக்குப் பிறகு, குழந்தையின் உணவுக்குத் தாய்ப்பால் அடிப்படை உணவல்ல, அது கூடுதலாக கொடுக்கப்படும் ஓர் உணவே. வீட்டார் சாப்பிடும் உணவை குழந்தையும் சாப்பிட ஆரம்பிக்கிறது. அந்த உணவு நன்கு சுத்தப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும், நன்றாய் மசிய வைக்க வேண்டும், அப்போதுதான் மெல்லுவதற்கு எளிதாக இருக்கும். பழங்கள், காய்கறிகள், சீரியல்ஸ், பயறு வகைகள், இறைச்சி, பால் பொருட்கள் ஆகியவை சிறந்த உணவுகள். b முக்கியமாக, குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ அதிகமுள்ள உணவுப் பொருட்கள் அவசியம். இதற்கு சில உதாரணங்கள்: தாய்ப்பால், பச்சை இலைகள் உள்ள காய்கறிகள், ஆரஞ்சு அல்லது மஞ்சள் பழங்கள், மாங்காய், கேரட்டுகள், பப்பாளி போன்றவை. மூன்று வயதுக்குட்பட்ட பிள்ளைகள் ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு தடவை சாப்பிட வேண்டும்.

◼ முடிந்தளவுக்கு பல்வகை உணவுகளை வித்தியாசமான முறைகளில் கலந்து கொடுத்தால் உங்களது குழந்தையைப் பாதுகாக்கும் ஊட்டச்சத்து கிடைக்கும். பிள்ளைக்கு நல்ல தரமான உணவை கொடுப்பதற்கு தாய் கவனம் செலுத்த வேண்டும். பிள்ளை நன்றாக சாப்பிட்ட பிறகு இன்னும் அதிகம் சாப்பிட வற்புறுத்தவும் கூடாது, இன்னும் அதிகம் கேட்கும்போது சாப்பாடு தராமலும் இருந்துவிடக் கூடாது.

[அடிக்குறிப்பு]

b ஜூன் 8, 2002 விழித்தெழு! இதழில், “ஊட்டச்சத்துமிகு உணவுகள் கைக்கு எட்டும் தூரத்தில்” என்ற கட்டுரையில் கூடுதலான தகவல்களை காணலாம்.

[படம்]

பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பாலே மிகச் சிறந்த உணவு என்பதை வல்லுநர்கள் எப்போதுமே ஒத்துக்கொள்கின்றனர்

[படத்திற்கான நன்றி]

© Caroline Penn/Panos Pictures

[பக்கம் 7-ன் படம்]

பூட்டானில் ஒரு பள்ளியில் பிள்ளைகள் கோதுமை உப்புமாவையும் காய்கறிகளையும் சாப்பிடுகிறார்கள்

[படத்திற்கான நன்றி]

FAO photo/WFP Photo: F. Mattioli

[பக்கம் 9-ன் படம்]

உங்கள் பிள்ளையின் உணவுப் பழக்கங்களை முன்னேற்றுவிக்க உங்களால் நடவடிக்கைகள் எடுக்க முடியும்

[படத்திற்கான நன்றி]

FAO photo