Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

நகரங்களில் தூய்மை காக்கும் மரங்கள்

“பல வகை மரங்கள் எவ்வாறு தூய்மைக் கேட்டை குறைக்கின்றன என்று முதல் முறையாக ஆராய்ச்சியாளர்களால் கணக்கிட முடிந்திருப்பதாக” லண்டனின் செய்தித்தாளான த சன்டே டைம்ஸ் கூறுகிறது. இங்கிலாந்திலிருந்தும் ஸ்காட்லாந்திலிருந்தும் வந்த விஞ்ஞானிகள், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் மூன்று வருடங்களாக சுமார் 32,000 மரங்களின் அருகிலுள்ள மண்ணை பரிசோதனை செய்தனர்; அவற்றில் எந்த வகை மரம், காற்றிலுள்ள நச்சுத் தன்மையுள்ள துகள்களை அதிகமாக உறிஞ்சுகிறது என்று ஆராய்ந்தனர். வளிமண்டலத்தில் உள்ள துகள்களையும் ஓசோன் அளவுகளையும் அவர்கள் கண்டறிந்தனர். அசோகா, கற்பூர தைல மரம் மற்றும் ஸ்காட்ஸ் பைன் மரங்கள் இத்துகள்களை அதிகமாக உறிஞ்சுகின்றன; கருவாலி வகை, காற்றாடி வகை மற்றும் நெட்டிலிங்க வகை மரங்கள் மிகவும் குறைவாக உறிஞ்சுகின்றன. “வளிமண்டலத்திலிருக்கும் தூய்மைக் கேட்டை துப்புரவாக்குவதில் புல்வெளிகளைவிட மரங்கள் மூன்று மடங்கு அதிக திறம்பட்டவை” என இந்த ஆராய்ச்சி காட்டியது. வெஸ்ட் மிட்லாண்ட்ஸின் திறந்த வெளியில் பாதிப் பகுதியில் மரங்களை நட்டாலே போதும், காற்றில் மிதக்கும் துகள்களால் ஏற்படும் தூய்மைக் கேட்டை 20 சதவீதம் குறைக்க முடியும் என்பதாக கம்ப்யூட்டர் ப்ரொஜெக்‍ஷன் ஒன்று காட்டுகிறது. (g03 3/22)

இரத்தமேற்றுதல் நுரையீரலை பாதிக்கலாம்

“இரத்தப் பொருட்களை, குறிப்பாக பிளாஸ்மா கலந்த பொருட்களை ஏற்றிக் கொள்பவர்கள், இரத்தமேற்றுதலோடு சம்பந்தப்பட்ட கடுமையான நுரையீரல் சேத நோய்க்கு ஆளாகும் வாய்ப்புள்ளது” என ஐ.மா. உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் பத்திரிகையான எஃப்டிஏ கன்ஸ்யூமரில் வந்த அறிக்கை கூறுகிறது. இதை சரியான சமயத்தில் கண்டுபிடித்து தகுந்த சிகிச்சை அளிக்கவில்லை என்றால் மரணத்திலிருந்து தப்பமுடியாது. “இரத்ததானம் செய்பவரின் இரத்தத்தில் உள்ள வெள்ளையணு நோய் எதிர்ப்பொருட்கள், இரத்தத்தை ஏற்றிக்கொள்பவரின் வெள்ளையணுக்களோடு சண்டையிடுவதால் இந்த நுரையீரல் சேத நோய் ஏற்படலாம்; இதனால் நுரையீரல் திசுவில் ஏற்படும் மாற்றம் காரணமாக திரவங்கள் உள்ளே சென்றுவிடுகின்றன. இரண்டுக்கும் அதிக பிள்ளைகளை பெற்ற பெண்கள் அல்லது பல முறை இரத்தத்தை ஏற்றிக்கொண்டவர்கள் தானம் செய்த இரத்தத்தை பயன்படுத்தும்போதுதான் பெரும்பாலும் இந்த நோய் பாதித்துள்ளது.” இந்த நோய்க்கான அறிகுறிகள் “காய்ச்சல், மூச்சுத் திணறல் மற்றும் இரத்த அழுத்தம் குறைதல்” போன்றவையாகும். மேலுமாக, “இரத்தத்தை ஏற்றிக்கொள்பவரின் நுரையீரல் முழுவதும் வெள்ளையாய் இருப்பதாக எக்ஸ்ரே படங்கள் பெரும்பாலும் காட்டுகின்றன.” (g03 3/8)

இறப்பை பற்றி அறியா பிள்ளைகள்

ஜப்பான் பெண்கள் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஹிரோஷி நக்கமுரா, நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 372 பிள்ளைகளிடம் “ஒருவர் இறந்த பிறகு மறுபடியும் அவரை உயிருடன் கொண்டுவர முடியுமா?” என்று கேட்டார். மூன்றில் ஒரு பகுதியினர் முடியும் என்பதாகவும் அதே எண்ணிக்கையான மற்றொரு சாரார் தெரியாது என்பதாகவும் பதிலளித்ததாக டோக்கியோ செய்தித்தாள் சான்கே ஷிம்புன் கூறுகிறது. “இந்தக் கருத்து கம்ப்யூட்டர் கேம்ஸிலிருந்து வந்திருக்கலாம். ஏனென்றால் கம்ப்யூட்டர் கேமில் ஹீரோ இறந்துவிட்டால் ரீசெட் பட்டனை அமுக்கினாலே போதும் அவரை மறுபடியும் ஆரம்ப நிலைக்கே கொண்டுவந்து பார்க்க முடியும்” என அந்த செய்தித்தாள் தொடர்ந்து கூறுகிறது. “நடுநிலைப் பள்ளியில் படிக்கும் அநேக பிள்ளைகளுக்குக்கூட இறப்பு என்றால் உண்மையில் என்னவென்று சரியாக தெரியவில்லை” என்பதை அந்த சர்வே காட்டுவதாக இந்தப் பேராசிரியர் சொல்கிறார். எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு செல்லப் பிராணிகள் மரிப்பதை காட்டியோ அல்லது மரிக்கும் உறவினர்களை காட்டியோ இறப்பு என்றால் என்ன என்பதை புரிய வைக்கலாம் என்று அவர் ஆலோசனை கூறுகிறார். (g03 3/8)

ஜார்ஜியாவில் மதவெறி அதிகரிக்கிறது

“யெகோவாவின் சாட்சிகள் கோடைக்கால நற்செய்தி கூட்டத்தை, மழை நீரினால் ஏற்பட்ட ஒரு சிறிய பள்ளத்திற்கு அருகில் இருந்த இடத்தில் ஏற்பாடு செய்தார்கள். ஆனால் அதற்கு முந்தின இரவே கலகக்கும்பல் அங்கு வந்துவிட்டது” என்பதாக த நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை கூறியது. “ஜார்ஜிய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் சிலுவையை கழுத்தில் அணிந்திருந்த இரண்டு டஜன் ஆண்கள் பஸ்ஸில் வந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த உஷாங்கி புன்டூரியின் வீட்டை கொள்ளையடித்தார்கள். பைபிள்களையும் மத சம்பந்தப்பட்ட துண்டுப் பிரதிகளையும் திரு. புன்டூரிக்கு சொந்தமான பொருட்களையும் சேர்த்து முற்றத்தில் போட்டு எரித்தார்கள் . . . முழுக்காட்டுதலுக்காக ஏற்பாடு செய்திருந்த குளத்தில் டீசலை நிரப்பினார்கள். உள்ளூர் போலீஸ் தலைவர் உட்பட, போலீசாரும் அங்கு சென்றார்கள் . . . ஆனால் ஒருவரும் கைது செய்யப்படவில்லை . . . இந்தச் சம்பவம் ஏற்கெனவே திட்டமிட்டு செய்யப்பட்ட தாக்குதல் போல தோன்றியது.” “ரஷ்யா உட்பட சோவியத் யூனியனின் முன்னாள் குடியரசுகள் பலவற்றிலும்” மத பிரச்சினைகள் இருந்திருக்கின்றன; என்றாலும், “சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான வன்முறையில் ஜார்ஜியா தனித் தீவிரம் காட்டுகிறது. இப்படிப்பட்ட தாக்குதல்களில் அதிகார வர்க்கமும் துணைபோவதாக தெரிவதும் இங்குதான். சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகு ஜார்ஜியா மத சம்பந்தமான சுதந்திரத்தை தருவதாக தன்னுடைய அரசியலமைப்பில் வாக்குறுதியளித்தது. ஆனால் வன்முறை அதிகரித்துக் கொண்டே போகப்போக, ஏராளமான கும்பல் தாக்குதல்களும் தீக்கிரையாக்குதலும் சண்டைகளுமே நடந்திருக்கின்றன” என்பதாக டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது. (g03 3/22)

‘கேளிக்கை சர்ச்சை’ ஆதரிக்கும் இளைஞர் கூட்டம்

ஜெர்மனியில் வெளிவரும் நாசாயுஷ நாய ப்ரெஸெ என்ற செய்தித்தாள் “‘கேளிக்கை சர்ச்சை’ ஆதரித்த இளைஞர்கள்” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டது. சர்ச் இளைஞர் தின கொண்டாட்டத்தை நேசாவ் மற்றும் ஹெஸ்ஸியில் உள்ள புராட்டஸ்டன்ட் சர்ச் முதன்முதலாக ஏற்பாடு செய்ததைப் பற்றி அது அறிக்கை செய்தது. அந்த ஐந்து நாள் கொண்டாட்டத்திற்கு சுமார் 4,400 பேர் ஆஜராயினர். அந்நிகழ்ச்சியில் கருத்தரங்கம், கலந்துரையாடல், மெழுகுவர்த்தி ஒளியில் பாடல்களுடன் இரவு நேர ஆராதனைகள் போன்றவை இடம்பெற்றன. அநேக விளையாட்டு நிகழ்ச்சிகளும் பார்ட்டிகளும் இசை நிகழ்ச்சிகளும்கூட இருந்தன. “இவ்விதமாக நடத்தப்பட்ட 220-⁠க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில், பாரம்பரியமாக செய்துவந்த பைபிள் படிப்புகளோ வழக்கமாக செய்யப்பட்ட சர்ச்சின் ஆராதனைகளோ இடம்பெறவே இல்லை” என்பதாக அந்த செய்தித்தாள் கூறியது. “பைபிள் படிப்பு என்றால் ரொம்ப போர் அடிக்கும் என்று சொல்லும் இந்த காலத்தில் சில இளைஞர்கள் பைபிள் படிப்புகளை குறிப்பாக கேட்டார்கள்” என்பதாக இளம் பாதிரியார் ஒருவர் ஆச்சரியத்துடன் சொன்னார். “அந்த நிகழ்ச்சிக்கும் சர்ச்சுக்கும் அதிக சம்பந்தமே இல்லை, ஆனாலும் அந்த சூழ்நிலை எங்களுக்கு பெருமகிழ்ச்சி தந்தது” என்று ஒரு டீனேஜர் கூறினார். (g03 3/22)

மதமும் போரும்

“இன்று நடக்கும் இரத்தம் சிந்துதலிலும் மிக கொடூரமான சண்டைகளிலும் . . . மதங்களின் தலையீடு உள்ளது” என்பதாக யுஎஸ்ஏ டுடே செய்தித்தாள் கூறுகிறது. இவற்றை தீர்த்து வைப்பதும்கூட மிகவும் கடினம். “சண்டையிடுபவர்கள் கடவுள் தங்கள் பக்கம் இருப்பதாக நினைக்கும்போது, விட்டுக்கொடுக்க மனமுள்ளவர்களாய் இருப்பது, பழைய பூசல்களை மன்னிப்பது போன்ற சமரசம் செய்வதற்கான பாரம்பரிய முறைகளை கடைப்பிடிப்பது கடினமாகிறது” என்பதாக இந்த செய்தித்தாள் தொடர்ந்து கூறியது. “ஒரு சண்டைக்கு மதம் அடிப்படை காரணமாக இல்லாமல் சாதாரண விஷயங்களான நிலம் அல்லது பதவி சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். அதை ஆதரிக்க மதம் வெறும் ஒரு கருவியாக பயன்பட்டாலும் இதுவே உண்மையாகும்.” மத வேற்றுமைகள் காரணமாக தற்காலிகமான சமாதானத்தைக்கூட ஏற்படுத்த முடிவதில்லை. சமீபத்தில் காசாவாவில் நடந்த போர் இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும். ஈஸ்டர் சமயத்திலாவது சமாதானமாக இருக்க வேண்டும் என்று முயன்றபோதிலும் ஈஸ்டர் கொண்டாட்டத்திற்கான தேதிகள் கத்தோலிக்கருக்கும் ஆர்த்தடாக்ஸ் பிரிவினருக்கும் வித்தியாசப்படவே இந்த முயற்சியும் தோல்வியை தழுவியது. “முடிவில் தற்காலிகமான சமாதானமும் இல்லை” என்பதாக யுஎஸ்ஏ டுடே செய்தித்தாள் கூறியது. (g03 3/22)

“எல்லை மீறிய” எச்ஐவி/எய்ட்ஸ் கொள்ளை நோய்

“உலகமுழுவதிலும் ஒவ்வொரு வருடமும் நான்கு கோடி மக்கள் எச்ஐவியால் பாதிக்கப்படுகின்றனர். இரண்டு கோடி பேர் எய்ட்ஸால் மரிக்கின்றனர். 7,50,000 குழந்தைகள் எச்ஐவி தொற்று நோயுடனே பிறக்கின்றனர்” என்பதாக பிரிட்டனின் மருத்துவ பத்திரிகையான த லான்செட் அறிவிக்கிறது. 2001-⁠ல் மட்டும் 50 லட்சம் மக்களை இந்த நோய் புதிதாக தொற்றியது, 30 லட்சம் மக்கள் எய்ட்ஸால் மரித்தார்கள். இந்தக் கொள்ளை நோய் “எல்லை மீறிவிட்டது” ஆனாலும் இன்னும் “இது ஆரம்ப நிலையிலேயே” இருக்கிறது என்பதாக இணை ஐக்கிய நாட்டு எச்ஐவி/எய்ட்ஸ் திட்டத்தின் செயல் இயக்குநர் பேட்டா பியா கூறினார். அடுத்த 20 வருடங்களில் இன்னும் ஏழு கோடி மக்கள் எய்ட்ஸால் மரிப்பார்கள் என்பதாகவும் அவர் கணிக்கிறார். சஹாராவிற்கு தெற்கே அமைந்த நாடுகளில் உள்ள சில நகரங்களின் ஜனத்தொகையில் 30 முதல் 50 சதவிகிதத்தினர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எய்ட்ஸால் அநேக நடுத்தர வயதினர் மரிப்பதால் 2020-⁠க்குள் 25 சதவீதத்துக்கும் அதிகமான உழைப்பாளிகளை இழந்துவிடுவோம் என்ற கவலை எழுகிறது. “பிள்ளைகள் மீதான இதன் பாதிப்பு எதிர்காலத்தில் பொருளாதாரம் முன்னேறுவதோடு பெரிதும் சம்பந்தப்பட்டுள்ளது” என்பதாக த லான்செட் கூறுகிறது. ஜிம்பாப்வேயில், “ஐந்து பிள்ளைகளில் ஒருவர் தன்னுடைய பருவ வயதை அடைவதற்கு முன்பாக தங்கள் பெற்றோரில் ஒருவரையாவது இழக்க நேரிடலாம்.” (g03 3/22)

தாய்ப்பாலின் மகத்துவம்

தாய்ப்பாலைவிட “சிறந்த ஆகாரம் பிறந்த குழந்தைக்கு வேறொன்றுமில்லை” என்பதாக டைம் பத்திரிகையில் நரம்பியல் அறுவை மருத்துவர் சஞ்சே குப்தா கூறினார். “காது கோளாறு, வயிற்றுப் போக்கு, தோலில் தடிப்புகள், ஒவ்வாமை நோய், இன்னும் பிற மருத்துவ பிரச்சினைகளுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படும் குழந்தைகளில் புட்டிப் பால் பருகும் பொடிசுகளைவிட தாய்ப்பால் பருகும் பிஞ்சுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவே.” தாய்ப்பால் கொடுப்பது சுவாச நோயிலிருந்தும் பிள்ளைகளை பாதுகாப்பதாக அறிவிக்கப்படுகிறது. “குழந்தையாக இருந்தபோது இரண்டு அல்லது அதற்கும் குறைவான வாரங்களே தாய்ப்பால் குடித்தவர்களைவிட ஏழு முதல் ஒன்பது மாதம் வரை தாய்ப்பால் குடித்தவர்களின் அறிவாற்றல் (IQ) மிகவும் அதிகம்” என டென்மார்க்கில் செய்யப்பட்ட ஓர் ஆராய்ச்சி காண்பித்தது. ஒரு குழந்தைக்கு குறைந்தது ஆறு மாதம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்; முடிந்தால் ஒரு வருடமோ அல்லது அதற்கும் அதிகமாகவோ கொடுக்கலாம் என்பதாக அமெரிக்காவின் குழந்தைகள் மருத்துவ கழகம் சிபாரிசு செய்கிறது. “உண்மையில் தாய்ப்பால் ஊட்டுவதால் குழந்தைகள் மட்டுமே பயனடையவில்லை” என்று யூ.எஸ்.நியூஸ் அண்ட் உவர்ல்டு ரிப்போர்ட் கூறியது. 30 நாடுகளில் 1,50,000 பெண்களிடம் நடத்திய ஆய்வில், “தாய்ப்பால் கொடுக்கும் ஒவ்வொரு வருடமும் ஒரு பெண் மார்பு புற்றுநோய் வரும் ஆபத்தை 4.3 சதவிகிதம் குறைக்க முடியும்” என்பது தெரிய வந்தது. இருந்தபோதிலும் “அமெரிக்க தாய்மார்களில் பாதிப் பேர் மட்டுமே சராசரியாக இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கிறார்கள்.” (g03 3/22)