வயிறே பாதுகாப்பு கவசம்!
வயிறே பாதுகாப்பு கவசம்!
அதுவால் வேகமாக நகர முடியாது. அதற்கும் அழகுக்கும் வெகு தூரம் என்பது பலரது கணிப்பு. அட, அதன் வயிற்றைப் பாருங்கள். எப்படி வினோதமாக இருக்கிறது! ஆமாம், எதைப் பற்றி இந்த விலாவாரியான வர்ணனை? முட்கள் நிறைந்த பஃபர் மீனைப் பற்றித்தான் பேச்சு. இதற்கு பலூன் மீன், நீண்ட முட்களுடைய முள்ளம்பன்றி மீன் என்றெல்லாம் பெயருண்டு. ஆபத்தைக் கண்ட மாத்திரத்தில் இந்த மீனின் “தோற்றத்தில் வியத்தகு மாற்றம் நிகழ்கிறது” என நேச்சுரல் ஹிஸ்டரி பத்திரிகை சொல்கிறது. சுமார் 50 சென்டிமீட்டர் நீளம் வளர்கிற அந்த மீனின் உடல், “அதன் சாதாரண அளவைவிட மூன்று மடங்கு பெரிதாகும் வரை” உப்பிவிடுகிறது; “இப்போது விறைப்பாக, கிட்டத்தட்ட கோள வடிவில் உருண்டு கொள்கிறது, சுற்றிலும் முட்கள் நிறைந்திருப்பது அதற்கு பாதுகாப்பு கவசம்போல் அமைகிறது. இந்த வடிவம், நீந்துவதற்கு தோதாக அமையாவிட்டாலும் எதிரிகளை அண்டவிடாமல் செய்துவிடுகிறது.”
இந்த மீன் தண்ணீரை மடக் மடக்கென விழுங்குகையில் வயிறு சாதாரண கொள்ளளவைவிட கிட்டத்தட்ட 100 மடங்கு உப்பிவிடுகிறது! இந்த அற்புத செயலை நடப்பிக்க அதற்கு கைகொடுப்பது எளிய, ஜோரான அதன் மடிப்புகள்தான்.
சொல்லப்போனால், இந்த பஃபர் மீனின் வயிற்றுப் பகுதியில், மடிப்புகளும் அந்த மடிப்புகளுக்குள் மடிப்புகளும் உள்ளன என நேச்சுரல் ஹிஸ்டரி விளக்கமளிக்கிறது. பெரிய மடிப்புகள் சுமார் மூன்று மில்லிமீட்டர் அகலமுள்ளவை, “ஒவ்வொரு மடிப்புக்கு உள்ளேயும் அதைவிடவும் சிறிய மடிப்பு என அடுக்கடுக்காக பல மடிப்புகள் உள்ளன; கடைசியிலுள்ள மடிப்புகள், ரொம்பவே குட்டியாக இருப்பதால் அவற்றை நுண்ணோக்கியில்தான் பார்க்க முடியும்” என அந்தக் கட்டுரை சொல்கிறது.
வயிறு உப்பிவிடுகையில் பஃபர் மீனின் தோலும் விரிவடையும். அதன் தோலில் இரண்டு அடுக்குகள் இருப்பதால் இரண்டும் இரண்டு விதங்களில் விரிவடைகிறது. வயிற்றைப் போலவே தோலின் உள் அடுக்கிலும் மடிப்புகள் உள்ளன, ஆனால் வெளி அடுக்கோ எலாஸ்டிக் போல் நெகிழும் தன்மை படைத்தது. இந்த நெகிழும் தன்மை தோலை சுருங்காமல் பார்த்துக்கொள்கிறது; இவ்வாறு, பஃபர் மீன் பழைய நிலைக்கு திரும்புகையில் முன்புபோலவே சுறுசுறுப்பாகவும் விரைவாகவும் நீந்துவதற்கு தடை ஏற்படாமல் காக்கிறது.
ஆனால் தன் உயிருக்கு உலை வைக்க வரும் பகைவனை எதிர்க்க பஃபர் மீன் உப்பிவிடுவதோடு நிறுத்திக் கொள்வதில்லை. அதன் தோல் விரிவடைய விரிவடைய, முட்களால் ஆன அதன் பாதுகாப்பு கவசத்திலுள்ள முட்கள் உடனடியாக நீட்டிக்கொள்கின்றன. எனவே நீங்கள் நீரடியில் நீச்சலடிக்க போகையில் பஃபர் மீனைப் பார்த்தால் ஜாக்கிரதை, தொடாதீர்கள்! அதன் வாய் பக்கமும் போகாதீர்கள்; அதன் கடி எலும்புவரை எட்டும்!
கடவுள் தம்முடைய படைப்புகளைப் பற்றி யோபுவிடம் கேள்விக் கணைகளைத் தொடுத்தபோது, அவர் இவ்வாறு பதிலளித்தார்: “தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.” (யோபு 42:2) ஆம், உருண்டு திரண்ட சின்னஞ்சிறிய பஃபர் மீன் நீச்சல் போட்டியிலோ அழகுப் போட்டியிலோ வெற்றி பெறாது; ஆனால் அதுவும்கூட கடவுளின் படைப்பாற்றலுக்கும் ஞானத்திற்கும் ஏராளமான அத்தாட்சி அளிக்கிறது.—ரோமர் 1:20. (g03 3/22)
[பக்கம் 24-ன் படங்களுக்கான நன்றி]
மேலே: Photo by John E. Randall; கீழே: © Jeff Rotman