Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சிகிச்சை என்ற சவால்

சிகிச்சை என்ற சவால்

சிகிச்சை என்ற சவால்

“ஆபத்தில்லாத சர்க்கரை வியாதி என்று எதுவுமே இல்லை. எல்லா வகையான சர்க்கரை வியாதியுமே ஆபத்தானவைதான்.”​—ஆன் டேலி, அமெரிக்கன் டையபெட்டிஸ் அசோசியேஷன்.

“உங்களுடைய ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட் நார்மலாக இல்லை. உங்களுக்கு உடனடியாக ட்ரீட்மன்ட் ஆரம்பிக்கனும்” என்றார் டாக்டர். தலையில் ஒரு பேரிடி விழுந்தது போல் இருந்தது டெப்ராவிற்கு. “லாப் டெஸ்டில்தான் ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும் என்று அந்த ராத்திரி முழுவதும் நினைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு வியாதி என்பதை என்னால் நம்பவே முடியவில்லை” என்கிறாள் அவள்.

அநேகர் நினைப்பது போலவே டெப்ராவும், தான் ஓரளவு ஆரோக்கியமாக இருந்ததாக நினைத்தாள். ஆகவே தொல்லை தந்த அறிகுறிகளை அசட்டை செய்தாள். அலர்ஜிக்கான ஆன்ட்டிஹிஸ்டமைன் மாத்திரைகள் சாப்பிடுவதால்தான் ரொம்பவே தாகம் எடுத்ததாக ஊகித்தாள். நிறைய தண்ணீர் குடித்ததால்தான் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்ததென நினைத்தாள். சோர்வைப் பொறுத்தவரை, வேலை பார்க்கும் தாய்மார்களில் யாருக்குத்தான் சோர்வில்லை என்றும் நியாயப்படுத்தினாள்.

ஆனால் இரத்தப் பரிசோதனைக்குப் பிறகுதான் தெரிந்தது, எல்லாவற்றிற்கும் காரணம் சர்க்கரை வியாதி என்று. டெப்ராவால் அந்தக் கசப்பான உண்மையை ஜீரணிக்கவே முடியவில்லை. “என் வியாதியைப் பற்றி யாரிடமும் வாயே திறக்கவில்லை. ராத்திரி எல்லாரும் தூங்கிய பிறகு நான் மட்டும் இருட்டிலே கண்ணீரோடு உட்கார்ந்திருப்பேன்” என்கிறாள் அவள். சர்க்கரை வியாதி இருப்பதை அறிய வருகையில், டெப்ராவைப் போலவே சிலர் உணர்ச்சிக் குமுறலுக்கு ஆளாகிறார்கள்;

மனச்சோர்வும் கோபமும்கூட அவர்களுக்கு ஏற்படலாம். “நிஜத்தை ஏற்றுக்கொள்ளும் சக்தி இல்லாமல் அழுது தீர்த்தேன்” என்கிறாள் காரன்.

அநியாயமாக ஒரு பேரிடி தலையில் விழுந்துவிட்டதாக நினைத்து இப்படியெல்லாம் நடந்துகொள்வது மனித இயல்புதான். ஆனால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மற்றவர்களின் உதவியோடு சமாளிக்க முடியும். “உண்மையை ஜீரணிக்க என் நர்ஸ் எனக்கு உதவினார்கள். அழுவது சகஜம்தான் என்று சொல்லி ஆறுதல்படுத்தினார்கள். இப்படி உணர்ச்சிகளுக்கு வடிகால் இருந்ததால் என்னால் சமாளிக்க முடிந்தது.”

ஏன் ஆபத்தானது

சர்க்கரை வியாதி, “உயிர்நாடியிலேயே ஏற்படும் ஒரு கோளாறு” என்று அழைக்கப்பட்டிருக்கிறது; அதற்கு தகுந்த காரணம் உண்டு. உடல் க்ளூகோஸை வளர்சிதை மாற்றம் செய்ய முடியாதபோது, முக்கிய செயல்பாடுகள் அநேகம் நின்றுவிடும். இதனால் உயிருக்கே ஆபத்தான விளைவுகள்கூட சிலசமயம் ஏற்படலாம். “ஜனங்கள் சர்க்கரை வியாதி வந்து சாவதில்லை, ஆனால் அது ஏற்படுத்தும் சிக்கல்களினாலேயே சாகிறார்கள். சிக்கல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதில் நாங்கள் கெட்டிக்காரர்கள், ஆனால் அவை ஏற்பட்ட பிறகு சிகிச்சை அளிப்பதில் இன்னும் தேற வேண்டியிருக்கிறது” என்கிறார் டாக்டர் ஹார்வி காட்செஃப். a

சர்க்கரை வியாதியால் அவதிப்படுவோருக்கு ஏதேனும் நம்பிக்கை இருக்கிறதா? இருக்கிறது, ஆனால் இந்த வியாதி எந்தளவு ஆபத்தானது என்பதை புரிந்து, முறையாக சிகிச்சை பெறும் பட்சத்திலேயே நம்பிக்கை இருக்கிறது. b

உணவும் உடற்பயிற்சியும்

வகை-1 சர்க்கரை வியாதி வருவதை தடுக்க முடியாது என்றாலும், அதற்குரிய மரபியல் காரணிகளை அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்; உடலின் தற்காப்பு அமைப்புடைய தாக்குதலைத் தடுப்பதற்கான வழிகளைக் கண்டறியவும் முயலுகிறார்கள். (பக்கம் 8-⁠ல் உள்ள, “க்ளூகோஸின் பங்கு” என்ற பெட்டியைக் காண்க.) “வகை-2 சர்க்கரை வியாதியைப் பொருத்ததிலோ நம்பிக்கை ஒளி இன்னுமதிகமாக வீசுகிறது. மரபியல் ரீதியில் இவ்வியாதியைப் பெற வாய்ப்புள்ளவர்கள், சமச்சீரான உணவை சாப்பிட்டு தவறாமல் உடற்பயிற்சி செய்து வந்தாலே போதும். அப்போது இவ்வியாதியின் எந்த அறிகுறியும் இல்லாமல் நல்ல ஆரோக்கியத்தோடும் நார்மலான எடையோடும் இருக்கிறார்கள்” என்று சொல்கிறது சர்க்கரை வியாதி​—⁠உங்கள் உணர்ச்சிகளையும் உடல்நலத்தையும் காப்பது என்ற ஆங்கில புத்தகம். c

பெண்களிடையே பெரியளவில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியைப் பற்றி த ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் அறிக்கை செய்தது; அதில் உடற்பயிற்சியின் மதிப்பு வலியுறுத்திக் காட்டப்பட்டது. “ஒருமுறை கொஞ்ச நேரத்திற்கு உடற்பயிற்சி செய்தாலே, இன்சுலினின் தூண்டுதலால் [உடலின் செல்கள்] க்ளூகோஸை உறிஞ்சுவது 24 மணிநேரத்திற்கும் மேல் நீடிக்கிறது” என அந்த ஆராய்ச்சி கண்டறிந்தது. ஆகவே, “நடப்பதும் சுறுசுறுப்பாக ஓடியாடித் திரிவதும், வகை-2 சர்க்கரை வியாதி வரும் வாய்ப்பை பெண்களில் பெருமளவு குறைக்கும்” என அது முடிவாக சொன்னது. வாரத்தின் எல்லா நாட்களிலும் முடியாவிட்டால்கூட பெரும்பாலான நாட்கள் குறைந்தது 30 நிமிடம் மிதமான உடற்பயிற்சி செய்வது நல்லதென ஆராய்ச்சியாளர்கள் சிபாரிசு செய்கிறார்கள். வாக்கிங் போவதைப் போன்ற மிக எளிய உடற்பயிற்சி செய்தால்கூட போதும்; “சொல்லப்போனால் இதுதான் மிகச் சிறந்த, பாதுகாப்பான, செலவில்லாத உடற்பயிற்சி” என அமெரிக்கன் டையபெட்டிஸ் அசோசியேஷன் கம்ப்ளீட் கைட் டு டையபெட்டிஸ் புத்தகம் சொல்கிறது.

இருந்தாலும் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் டாக்டர்களின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஏனென்றால், சர்க்கரை வியாதி இரத்த நாள அமைப்பையும் நரம்புகளையும் சேதப்படுத்தி இரத்த ஓட்டத்தையும் தொடுதல் உணர்வையும் பாதிக்கலாம். ஆகவே பாதத்தில் ஒரு சின்ன கீறல் ஏற்பட்டு கவனியாமல் போனால்கூட, அது இன்ஃபெக்‍ஷன் ஆகி, புண் ஏற்படலாம்; இது ரொம்ப ஆபத்தானது, ஏனென்றால் உடனடியாக கவனிக்காவிட்டால் பாதிக்கப்பட்ட உறுப்பையே வெட்டியெடுக்க நேரிடும். d

இருந்தாலும், உடற்பயிற்சி திட்டத்தால் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்த முடியும். “தவறாமல் உடற்பயிற்சி செய்வதைக் குறித்து ஆராய ஆராய அதிகமதிகமாக நன்மைகளையே ஆராய்ச்சியாளர்கள் கண்டறிகிறார்கள்” என ஏடிஏ கம்ப்ளீட் கைடு சொல்கிறது.

இன்சுலின் மருத்துவம்

சர்க்கரை வியாதியுள்ள அநேகர், உணவுக்கும் உடற்பயிற்சிக்கும் கவனம் செலுத்துவதோடு, தினமும் தங்கள் க்ளூகோஸ் அளவை பரிசோதித்துப் பார்க்க வேண்டும்; அதோடு தினமும் பலமுறை இன்சுலின் ஊசியும் போட்டுக்கொள்ள வேண்டும். வகை-2 நோயாளிகள் சிலர், உணவுக் கட்டுப்பாட்டினாலும் தவறாமல் செய்யும் உடற்பயிற்சியினாலும் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள்; இதனால் கொஞ்ச காலத்திற்காவது இன்சுலின் எடுப்பதை நிறுத்த முடிந்திருக்கிறது. e உடற்பயிற்சி செய்வதால் இன்சுலின் ஊசி மருந்து இன்னும் திறம்பட வேலை செய்வதாக வகை-1 சர்க்கரை வியாதியுள்ள காரன் சொல்கிறாள். அதனால் தினமும் எடுத்துக்கொள்ளும் இன்சுலினின் அளவை 20 சதவீதம் குறைக்க முடிந்திருக்கிறது.

ஆனால் இன்சுலினை எடுத்துக்கொள்ளும் அவசியம் ஏற்படும்போது நோயாளி மனமுடைந்து போக அவசியமில்லை. “இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டியது உங்கள் பங்கில் ஏதோ குறை இருப்பதைக் குறிப்பதில்லை. உங்களுக்கு எந்த வகையான சர்க்கரை வியாதியிருந்தாலும், உங்கள் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கவனமாக கட்டுப்படுத்தினால், பிற்பாடு மற்ற உடல்நலப் பிரச்சினைகளைக் குறைக்கலாம்” என மெரி ஆன் சொல்கிறார்; இவர் சர்க்கரை வியாதியுள்ள பலரை பராமரிக்கும் நர்ஸ். சொல்லப்போனால், இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை கறாராக கட்டுப்படுத்திய வகை-1 நோயாளிகளுக்கு “சர்க்கரை வியாதியால் ஏற்படும் கண், சிறுநீரக, நரம்பு கோளாறுகள் பெருமளவு குறைந்ததாக” சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று காட்டியது. உதாரணத்திற்கு ரெட்டினோபதி என்ற கண் நோய் 76 சதவீதம் குறைந்தது! இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை கறாராக கட்டுப்படுத்தும் வகை-2 நோயாளிகளும் இதே நன்மைகளைப் பெறுகிறார்கள்.

இன்சுலினை ஏற்றிக்கொள்ள இன்சுலின் சிரிஞ்சுகளும் இன்சுலின் பேனாக்களுமே மிக அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. அதிக சுலபமாகவும் வலியில்லாமலும் இன்சுலினை செலுத்த இவற்றில் மிக நுண்ணிய மைக்ரோஃபைன் ஊசிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. “முதன்முதலில் ஊசி குத்தும்போதுதான் உயிரே போய்விடும், ஆனால் போகப் போக நிறைய பேருக்கு உறைப்பதேயில்லை.என்கிறார் மெரி ஆன். ஊசி குத்துவதற்கு மற்ற உபகரணங்களும் உண்டு. அவற்றில் ஒன்று ஆட்டோமாட்டிக் ஊசி; தானாகவே இயங்கும் இது, வலியே தெரியாதபடி உடலில் ஊசியைக் குத்திவிடும். இன்னொன்று, ஜெட் ஊசி; இன்சுலினே ஒரு திரவ ஊசியைப் போல் நேராக உடலுக்குள் ஜெட் வேகத்தில் பீச்சியடிக்கப்படுகிறது. மற்றுமொரு உபகரணம் இன்ஃப்யூசர்; ஊசியுடன் கூடிய ஒரு வடிகுழாய் ஒன்று உடலில் பொருத்தப்பட்டு அப்படியே இரண்டு, மூன்று நாட்களுக்கு விடப்படுகிறது. சமீப ஆண்டுகளில் மிகவும் பிரபலமாகியிருக்கும் உபகரணம் இன்சுலின் பம்ப் ஆகும். இது பாக்கெட்டில் வைக்கும் பேஜரின் அளவுக்கு இருக்கும். புரோகிராம் செய்யப்படும் இந்த உபகரணம், உடலின் தினசரி தேவைக்கு ஏற்ப சீரான வேகத்தில் இன்சுலினை ஒரு குழாய் வழியாக செலுத்துகிறது. இவ்வாறு இன்சுலின் சௌகரியமான விதத்தில் செவ்வனே உடலுக்குள் செல்கிறது.

கற்றுக்கொண்டே இருங்கள்

சர்க்கரை வியாதிக்கு சிறந்த மருத்துவம் இதுதான் என எதையுமே குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. சிகிச்சையைத் தேர்ந்தெடுக்கும்போது, ஒவ்வொருவரும் பல விஷயங்களை அலசிப் பார்த்து சொந்தத் தீர்மானம் எடுக்க வேண்டும். “உங்களுக்கு ஒரு மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வந்தாலும் உண்மையில் நீங்கள்தான் தீர்மானம் செய்ய வேண்டியவர்கள்” என்கிறார் மெரி ஆன். சொல்லப்போனால், “சர்க்கரை வியாதியை சுயமாக கட்டுப்படுத்துவதைப் பற்றி முறைப்படியாக கற்றுக்கொள்ளாமல் சிகிச்சையை பெறுவது, தரம்குறைந்த தவறான பராமரிப்பாக கருதப்படலாம்” என டையபெட்டிஸ் கேர் என்ற பத்திரிகை குறிப்பிடுகிறது.

சர்க்கரை வியாதியுள்ளவர்கள் தங்கள் வியாதியைப் பற்றி எந்தளவுக்கு கற்றுக்கொள்கிறார்களோ அந்தளவுக்கு தங்கள் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ள முடியும்; இன்னும் நீண்ட காலம் மேம்பட்ட ஆரோக்கியத்தோடு வாழும் வாய்ப்பையும் பெற முடியும். ஆனால் சிறந்த விதத்தில் கற்றுக்கொள்வதற்கு பொறுமை அவசியம். சர்க்கரை வியாதி​—⁠உங்கள் உணர்ச்சிகளையும் உடல்நலத்தையும் காப்பது என்ற புத்தகம் இவ்வாறு விளக்குகிறது: “எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் கற்றுக்கொள்ள நீங்கள் முயற்சி செய்தால் பெரும்பாலும் குழம்பிப் போவீர்கள்; கற்ற விஷயங்களை பிரயோஜனமான விதத்தில் கடைப்பிடிக்கவும் முடியாது. அதுமட்டுமல்ல, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்கள் புத்தகங்களிலோ துண்டுப் பிரசுரங்களிலோ பெரும்பாலும் இருப்பதில்லை. உங்களுடைய தினசரி வேலைகளுக்கு ஏற்ப உங்கள் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு எவ்வாறு மாறுகிறது . . . என்பதை அறிவதே அதில் உட்பட்டிருக்கிறது. இதை மெல்ல மெல்லத்தான் சோதனை முறையில் முயற்சி செய்து பார்த்து கற்றுக்கொள்ள முடியும்.”

உதாரணத்திற்கு, கவனமாக கண்காணிக்கும்போதுதான், அழுத்தம் உங்கள் உடலை எப்படி பாதிக்கிறது என்பதை கண்டறிய முடியும்; அழுத்தம் உங்கள் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்கச் செய்யலாம். “நான் 50 வருடங்களாக சர்க்கரை வியாதி வந்த இந்த உடம்போடு காலம் தள்ளுகிறேன், என் உடம்பின் பாஷையை என்னால் புரிந்துகொள்ள முடியும்!” என்கிறார் கென். உடம்பு ஏதேனும் சொல்லும்போது “செவிகொடுப்பது” பயனுள்ளதாக இருந்திருக்கிறது; கென் இப்போது 70 வயதைத் தாண்டிவிட்ட போதிலும் முழுநேர வேலை செய்து வருகிறாரே!

குடும்பத்தின் ஆதரவு முக்கியம்

சர்க்கரை வியாதிக்கு சிகிச்சை அளிக்கையில் குடும்பத்தாரின் ஆதரவும் தேவை. சொல்லப்போனால், “குடும்பத்தாரிடையே எந்தளவு நெருக்கம் நிலவுகிறது என்பதே,” பிள்ளைகளிலும் இளவயதினரிலும் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்துவதில் “மிக முக்கிய பங்கு வகிப்பதாக சொல்லலாம்” என ஒரு புத்தகம் குறிப்பிடுகிறது.

குடும்பத்தார் சர்க்கரை வியாதியைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு, ஒருவர் மாறி ஒருவர் நோயாளியுடன் ஆஸ்பத்திரிக்கு போவதும் உதவியாக இருக்கும். வியாதியைப் பற்றி தெரிந்திருந்தால் ஆதரவாக இருக்க முடியும், முக்கியமான அறிகுறிகளை கண்டறிய முடியும், என்ன செய்ய வேண்டுமென அறிந்திருக்க முடியும். டெட் என்பவரின் மனைவிக்கு நான்கு வயதிலிருந்தே வகை-1 சர்க்கரை வியாதி இருந்திருக்கிறது. அவர் இப்படி சொல்கிறார்: “பார்பராவின் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு ரொம்பக் குறையும்போது என்னால் அதைக் கண்டுபிடித்துவிட முடியும். பேசிக்கொண்டிருக்க இருக்கவே திடீரென அமைதியாகி விடுவாள். பயங்கரமாக வியர்த்துக் கொட்டும், காரணமே இல்லாமல் எரிந்து விழுவாள். மந்தமாக பிரதிபலிப்பாள்.”

அதேவிதமாக, கென் என்பவர் வெளிறிப்போய் வியர்வையால் நனையும்போதும் திடீரென ‘மூட்’ மாறும்போதும் அவருடைய மனைவி காத்தரின் ஒரு எளிய கணக்கை அவரிடம் கேட்பாள். கென் குழம்பிப் போய் பதில் சொன்னால், இனியும் அவரால் எந்தத் தீர்மானங்களும் செய்ய முடியாது என்றும் உடனடியாக நிலைமையை சரிசெய்ய வேண்டும் என்றும் காத்தரின் புரிந்துகொள்வாள். வியாதியைப் பற்றி நன்கு தெரிந்திருக்கும் மணத்துணை கிடைத்ததற்காக கென், பார்பரா ஆகிய இருவருமே மிகவும் நன்றியோடு இருக்கிறார்கள்; தங்கள் மணத்துணையை நேசிக்கிறார்கள், முழுமையாக நம்புகிறார்கள். f

பாசமான குடும்பத்தார் பக்கபலமாக, அன்பாக, பொறுமையாக நடந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்; இக்குணங்கள், வாழ்க்கையின் சவால்களை சமாளிக்க நோயாளிக்கு உதவும். அதோடு, அவரது உடல்நிலை தேறுவதற்கும் உதவும். கேரனுக்கு சர்க்கரை வியாதி வந்த பிறகும் அவளது கணவர் அன்பு மழை பொழிந்தார்; அது ஒன்றே, வியாதி பறந்துவிட்டதைப் போன்ற உணர்வை அவளுக்குக் கொடுத்தது. “‘உயிர் வாழ்வதற்கு எல்லாருக்குமே சாப்பாடும் தண்ணீரும் தேவை, உனக்கும் அப்படித்தான், கூடவே கொஞ்சம் இன்சுலின் தேவை, அவ்வளவுதானே’ என்று என் கணவர் நைஜல் சொன்னார். இந்த கனிவான, அதேசமயம் எதார்த்தமான வார்த்தைகள்தான் அப்போது எனக்குத் தேவைப்பட்ட டானிக்” என்கிறார் காரன்.

இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு கூடி குறையும்போது ஒருவரின் ‘மூட்’ மாறும் என்பதைக்கூட குடும்பத்தாரும் நண்பர்களும் புரிந்துகொள்ள வேண்டும். “சர்க்கரையின் அளவினால் எனக்கு மனச்சோர்வு ஏற்படும்போது ரொம்ப அமைதியாகிவிடுவேன், சிடுசிடுவென இருப்பேன், எதற்கெடுத்தாலும் கோபப்படுவேன், விரக்தியோடு நடந்துகொள்வேன். அதன்பிறகு, இப்படி குழந்தைத்தனமாக நடந்துகொண்டேனே என்று எனக்கே ச்சீ ச்சீ என்றாகிவிடும். ஆனால் நான் அடக்க முயலும் உணர்ச்சிகளுக்கான காரணத்தை மற்றவர்கள் புரிந்துகொள்கிறார்கள் என்பதை அறிவது ஆறுதலாக இருக்கிறது” என்கிறாள் ஒரு பெண்.

ஆக, சர்க்கரை வியாதியை வெற்றிகரமாக சமாளிக்க முடியும், முக்கியமாக நண்பர்களும் குடும்பத்தினரும் ஒத்துழைக்கும்போது. அதேசமயத்தில் பைபிள் நியமங்கள்கூட உதவும். எப்படி? (g03 5/08)

[அடிக்குறிப்புகள்]

a இதய நோய், ஸ்ட்ரோக், சிறுநீரக செயல்பாட்டில் குறைபாடு, கடைக்கோடி இரத்தக்குழாய் நோய் (peripheral arterial disease), நரம்பு சேதம் போன்ற சிக்கல்கள் சர்க்கரை வியாதியால் ஏற்படலாம். பாதத்திற்கு போதுமான இரத்த ஓட்டம் இல்லாதபோது புண்கள் வரலாம்; அவை முற்றிப்போகும் போது பாதிக்கப்பட்ட உறுப்பை பெரும்பாலும் வெட்டியெடுக்க நேரிடலாம். பெரியவர்கள் கண் பார்வையை இழப்பதற்கு பெரும்பாலும் காரணமாக இருப்பதும் சர்க்கரை வியாதிதான்.

b எந்த குறிப்பிட்ட சிகிச்சை முறையையும் விழித்தெழு! சிபாரிசு செய்வதில்லை. சர்க்கரை வியாதி இருப்பதாக சந்தேகிப்பவர்கள், இவ்வியாதியை தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் அனுபவம் பெற்ற டாக்டரை சந்திக்க வேண்டும்.

c இடுப்புப் பகுதியில் ஊளைச்சதை இருப்பதைவிட இடுப்புக்கு மேல் ஊளைச்சதை இருப்பது அதிக ஆபத்தானது.

d புகைபிடிப்பவர்களின் நிலைமை இன்னும் ஆபத்தானது. ஏனென்றால் புகைபிடிப்பது இதயத்தையும் இரத்த ஓட்ட மண்டலத்தையும் சேதப்படுத்தி இரத்தக் குழாய்களை சுருங்கச் செய்கிறது. சர்க்கரை வியாதியால் உடல் உறுப்புகளை இழந்தவர்களில் 95 சதவீதத்தினர் புகைபிடிக்கும் பழக்கமுள்ளவர்கள் என ஒரு புத்தகம் சொல்கிறது.

e மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது இவர்களில் சிலருக்கு உதவியாக இருந்திருக்கிறது. சில மருந்து மாத்திரைகள், இன்சுலினை சுரக்கும்படி கணையத்தைத் தூண்டுகின்றன, மற்றவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகின்றன, இன்னும் சில, இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கின்றன. (பொதுவாக வகை-1 நோயாளிகளுக்கு சாப்பிடுவதற்காக எந்த மருந்து மாத்திரைகளும் பரிந்துரைக்கப்படுவதில்லை.) தற்போது, இன்சுலினை மாத்திரை வடிவில் சாப்பிட முடியாது; ஏனென்றால் செரிமானத்தின் போது இந்தப் புரதம் இரத்தத்தில் கலப்பதற்குள் சிதைந்துவிடுகிறது. இன்சுலின் மருத்துவமானாலும்சரி மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதானாலும்சரி, சரியான உணவுக்கும் உடற்பயிற்சிக்குமான தேவையை அவை ஈடுசெய்வதில்லை.

f சர்க்கரை வியாதியுள்ளவர்கள் எப்போதுமே ஒரு அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அடையாள செயின் அல்லது ப்ரேஸ்லட் அணிய வேண்டும் என்றும் மருத்துவ அதிகாரிகள் பரிந்துரைக்கிறார்கள். திடீரென ஆபத்தான நிலைமை ஏற்பட்டால் இவை உயிரையே காப்பாற்றலாம். உதாரணமாக ஒருவருக்கு இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு திடீரென குறைந்துவிடும்போது, அவருக்கு வேறு ஏதோ கோளாறு ஏற்பட்டுவிட்டதாக அல்லது அவர் குடித்து வெறித்திருப்பதாகக்கூட மற்றவர்கள் தவறாக நினைத்துக்கொள்ளலாம்.

[பக்கம் 6-ன் பெட்டி/படம்]

இளைஞருக்கு வரும் வியாதியா?

சர்க்கரை வியாதி “இளைஞரின் வியாதியாக மாறிவருகிறது” என சொல்கிறார் டாக்டர் ஆர்த்தர் ரூபன்ஸ்ட்டைன். இவர், நியு யார்க்கிலுள்ள மௌன்ட் சைனை மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும் நாளமில்லாச் சுரப்பி முதன்மை மருத்துவராகவும் பணியாற்றுகிறார். உண்மையில் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுவோரின் சராசரி வயது குறைந்துகொண்டே வருகிறது. “பத்து வருடங்களுக்கு முன்பு, 40 வயதைத் தாண்டாதவர்களுக்கு இவ்வியாதி வராது என மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தோம், இப்போதோ 10 வயதைக்கூட எட்டாத பிள்ளைகளுக்கும் இவ்வியாதி வருகிறது” என்கிறார் சர்க்கரை வியாதி நிபுணரான டாக்டர் ராபின் எஸ். கோலன்ட். வகை-2 சர்க்கரை வியாதியைப் பற்றியே அவர் அப்படி சொல்கிறார்.

சர்க்கரை வியாதி ஏன் இப்போதெல்லாம் சிறுபிள்ளைகளை அதிகமாக பாதிக்கிறது? சிலசமயம் மரபியல் காரணமாக இருக்கலாம். ஆனால் எடையும் சூழலும்கூட காரணமாகலாம். பருமனாக இருக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை கடந்த 20 வருடங்களில் இரட்டிப்பாகி இருக்கிறது. இதற்குக் காரணம்? “கடந்த 20 ஆண்டுகளில், உணவு பழக்கங்களிலும் உடலை வளைத்து வேலை செய்யும் பழக்கங்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன” என்கிறார் டாக்டர் வில்லியம் டிட்ஸ். இவர் ஐ.மா. நோய்க் கட்டுப்பாட்டிற்கும் தடுப்பிற்குமான மையங்களைச் சேர்ந்தவர். “ஹோட்டலில் சாப்பிடுவது; காலை உணவை சாப்பிடாமல் இருப்பது; கூல் டிரிங்ஸ் குடிப்பது; ஃபாஸ்ட் ஃபுட் ஐட்டங்களை சாப்பிடுவது ஆகியவையெல்லாம் ரொம்பவே அதிகரித்திருக்கின்றன; அதோடு, பள்ளிகளில் [உடற்பயிற்சி] குறைந்துவிட்டது, இடைவேளை நேரங்களும் இப்போது இல்லை.”

சர்க்கரை வியாதி வந்தால் வந்ததுதான், போவதற்கு வாய்ப்பில்லை. ஆகவே இவ்வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு டீனேஜ் பையனின் அறிவுரையை பின்பற்றுவது புத்திசாலித்தனமானது; “கண்ட நொறுக்குத்தீனியையும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, ஆரோக்கியமாக இருங்கள்” என்கிறான் அவன்.

[பக்கம் 89-ன் பெட்டி/படம்]

க்ளூகோஸின் பங்கு

உடலிலுள்ள கோடானுகோடி செல்களுக்கு சக்தி அளிக்கிறது க்ளூகோஸ். ஆனால் செல்களுக்குள் நுழைய அதற்கு ஒரு “சாவி” தேவை. அதுதான் இன்சுலின்; கணையத்தில் (pancreas) சுரக்கும் ஒருவித ரசாயனமே இன்சுலின். வகை-1 சர்க்கரை வியாதியுள்ளவர்களின் உடல் இன்சுலினை சுரப்பதே இல்லை. வகை-2 நோயாளிகளின் உடலோ இன்சுலினை சுரக்கிறது என்றாலும் போதியளவு சுரப்பதில்லை. g அதுமட்டுமின்றி, இன்சுலினை உள்ளே அனுமதிக்க செல்கள் தயங்குகின்றன; இந்நிலைமை, இன்சுலின் எதிர்ப்பு என அழைக்கப்படுகிறது. இந்த இரு வகை சர்க்கரை வியாதிகளினாலும் ஏற்படும் பாதிப்பு ஒன்றுதான்: செல்கள் பசியால் தவிக்கின்றன, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ஆபத்தான நிலைக்கு உயருகிறது.

வகை-1 நோயாளிகளின் உடலிலுள்ள தற்காப்பு அமைப்பு, கணையத்தில் இன்சுலினை தயாரிக்கும் பீட்டா செல்களை தாக்குகிறது. ஆகவே வகை-1 சர்க்கரை வியாதி, தன்தடுப்பாற்றல் வியாதியாக (autoimmune disease) இருக்கிறது. சிலசமயம் இது தடுப்பாற்றலால் தூண்டப்பட்ட சர்க்கரை வியாதி (immune-​mediated diabetes) என்று அழைக்கப்படுகிறது. வைரஸ்கள், நச்சு ரசாயனங்கள், சில மருந்துகள் போன்றவை தற்காப்பு அமைப்பின் தாக்குதலைத் தூண்டலாம். மரபியலுக்கும் இதில் பங்கிருக்கலாம்; ஏனென்றால் வகை-1 சர்க்கரை வியாதி பெரும்பாலும் பரம்பரை வியாதி. அது வெள்ளை இனத்தவரிடையே மிக அதிகமாக காணப்படுகிறது.

வகை-2 சர்க்கரை வியாதி மரபியலால் இன்னுமதிகமாக கட்டுப்படுத்தப்படுகிறது; ஆனால் வெள்ளை இனத்தை சேராத மற்றவர்களில் அதிகமாக காணப்படுகிறது. ஆஸ்திரேலிய பழங்குடியினரும் அமெரிக்க இந்தியரும் இதனால் மிக அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்; அமெரிக்க இந்தியர்தான் வகை-2 சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுவோரின் உலகப் பட்டியலில் முதல் இடம் வகிக்கிறார்கள். மரபியலுக்கும் பருமனுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்க முயலுகிறார்கள்; மரபியல் காரணமாக இந்நோய் பெற வாய்ப்புள்ளவர்களில், அதிகக் கொழுப்பு இன்சுலினை எதிர்க்கத் தூண்டுவதுபோல் தெரிவது எப்படி என்பதையும் ஆராய்ந்து வருகிறார்கள். h வகை-1 நோயைப் போலன்றி, வகை-2 முக்கியமாக 40 வயதைத் தாண்டியவர்களைத்தான் தாக்குகிறது.

[அடிக்குறிப்புகள்]

g சர்க்கரை வியாதியுள்ளவர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தினரை தாக்கியிருப்பது 2-⁠ம் வகையே. முன்பெல்லாம் இது “இன்சுலின் சாராத” அல்லது “வயதுவந்தவர்களைத் தாக்குகிற” சர்க்கரை வியாதி என்று அழைக்கப்பட்டது. ஆனால் அவை பொருத்தமில்லாத விவரிப்புகள். ஏனென்றால் வகை-2 நோயாளிகளில் 40 சதவீதத்தினருக்கு இன்சுலின் தேவைப்படுகிறது. மேலும் சிறு வயதினரில் அதிர்ச்சியளிக்கும் எண்ணிக்கையினருக்கு வகை-2 சர்க்கரை வியாதி இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது; இவர்களில் சிலர் டீனேஜ் பருவத்தைக்கூட எட்டாதவர்கள்.

h ஒருவர் உரிய எடையைவிட 20 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான எடையுடன் இருந்தால் பருமனானவராக கருதப்படுகிறார்.

[படம்]

க்ளூகோஸ் மூலக்கூறு

[படத்திற்கான நன்றி]

நன்றி: Pacific Northwest National Laboratory

[பக்கம் 9-ன் பெட்டி]

கணையத்தின் பங்கு

வாழைப்பழத்தின் அளவுள்ள கணையம் இரைப்பைக்குப் பின்புறம் அமைந்துள்ளது. “ஆரோக்கியமான கணையம், நாள் முழுவதும் க்ளூகோஸின் அளவு அதிகரிப்பதற்கும் குறைவதற்கும் ஏற்ப சரியான அளவு இன்சுலினை சுரக்கிறது; அதன் மூலம் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை நேர்த்தியான விதத்தில் தொடர்ந்து சமநிலைப்படுத்தி சீராக வைக்கிறது” என்று சர்க்கரை வியாதியை சமாளிப்பதற்கான அதிகாரப்பூர்வமற்ற வழிகாட்டி என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுகிறது. கணையத்திற்குள் இருக்கும் பீட்டா செல்கள்தான் இன்சுலின் ஹார்மோனை சுரக்கின்றன.

பீட்டா செல்கள் போதியளவு இன்சுலினை சுரக்காதபோது இரத்தத்தில் க்ளூகோஸ் தேங்கி, ‘அதிகளவு சர்க்கரை’ (hyperglycemia) என்ற நிலை ஏற்படுகிறது. அதற்கு நேரெதிரானதுதான் ‘குறைந்தளவு சர்க்கரை’ நிலை (hypoglycemia). கணையத்தோடு சேர்ந்து கல்லீரலும், இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது; எப்படியெனில், அளவுக்கு அதிகமான க்ளூகோஸை க்ளைகோஜன் என்ற வடிவில் கல்லீரல் சேகரித்து வைத்துக்கொள்கிறது. கணையம் ‘உத்தரவு’ கொடுத்தவுடன், கல்லீரல் அந்த க்ளைகோஜனை மறுபடியும் க்ளூகோஸாக மாற்றிவிடுகிறது; அதை உடல் பயன்படுத்திக் கொள்கிறது.

[பக்கம் 9-ன் பெட்டி/படம்]

சர்க்கரையின் பங்கு

நிறைய இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வரும் என்பது இன்று பொதுவாக நிலவும் தவறான கருத்து. மரபியல் காரணமாக சர்க்கரை வியாதியை பெறும் வாய்ப்புள்ளவர்கள்​—⁠அதிகமாக இனிப்பு சாப்பிடுகிறார்களோ இல்லையோ​—⁠குண்டாகும்போது அந்த வாய்ப்பு இன்னுமதிகரிக்கிறது என மருத்துவ ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இருந்தாலும், அளவுக்கதிகமாக இனிப்பு பதார்த்தங்களை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. ஏனென்றால் அதில் ஊட்டச்சத்து இல்லை, அதனால் உடல்தான் ஊதிப்போகும்.

சர்க்கரை வியாதியுள்ளவர்கள் இனிப்பு சாப்பிட ஆலாய் பறப்பார்கள் என்பது மற்றொரு தவறான கருத்து. இனிப்பு சாப்பிட பெரும்பாலானவர்கள் எந்தளவுக்கு ஆசைப்படுகிறார்களோ அந்தளவுக்குத்தான் இவர்களும் உண்மையில் ஆசைப்படுகிறார்கள். சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தாதபோது பசி உண்டாகலாம், ஆனால் அது இனிப்பு சாப்பிடுவதற்கான பசியாக இருக்கும் என்ற அவசியமில்லை. சர்க்கரை வியாதியுள்ளவர்கள் இனிப்புகள் சாப்பிடலாம், ஆனால் அதற்கேற்றாற்போல் மற்ற உணவுகளை கவனமாக சாப்பிட வேண்டும்.

ஃப்ரக்டோஸ் என்ற சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளான பழங்களையும் காய்கறிகளையும் சாப்பிடுவது இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கலாம் என சமீபத்திய ஆய்வுகள் காட்டியிருக்கின்றன; அதுமட்டுமல்ல, மிருகங்களுக்குக்கூட​—⁠அவை எடை அதிகமாக இருந்தாலும்சரி இல்லாவிட்டாலும்சரி​—⁠சர்க்கரை வியாதி ஏற்பட ஃப்ரக்டோஸ் காரணமாக இருப்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

[பக்கம் 8, 9-ன் படங்கள்]

சர்க்கரை வியாதி—எளிய விவரிப்பு

கணையம்

↓ ↓ ↓

ஆரோக்கியமானவர் வகை-1 சர்க்கரை வியாதி வகை-2 சர்க்கரை வியாதி

சாப்பிட்ட பிறகு, இரத்தத்திலுள்ள கணையத்தில் இன்சுலினை பெரும்பாலும் கணையம்

க்ளூகோஸின் அளவு சுரக்கும் பீட்டா செல்களை போதியளவு இன்சுலினை

அதிகரிப்பதற்கு இசைவாக உடலின் தற்காப்பு அமைப்பு சுரப்பதில்லை

கணையம் சரியான அளவு தாக்குகிறது. இதன் காரணமாக

இன்சுலினை சுரக்கிறது இன்சுலின் சுரப்பதில்லை

↓ ↓ ↓

இன்சுலின் மூலக்கூறுகள் தசை இன்சுலினின் உதவி இல்லாமல் ஏற்பிகள் இன்சுலினுக்கு சரியாக

செல்களிலும் மற்ற செல்களிலும் க்ளூகோஸ் மூலக்கூறுகளால் பிரதிபலிக்காதபோது,

உள்ள ஏற்பிகளோடு (receptors) செல்களுக்குள் நுழைய முடியாது இரத்தத்திலுள்ள க்ளூகோஸை

ஒட்டிக்கொள்கின்றன. இதன் உறிஞ்சுவதற்கு தேவையான காரணமாக செல்களின் வாயில்கள் வாயில்கள் திறப்பதில்லை

(portals) திறந்து க்ளூகோஸ்

மூலக்கூறுகளை செல்களின் உள்ளே

அனுமதிக்கின்றன

↓ ↓ ↓

தசை செல்கள் க்ளூகோஸை இரத்தத்தில் க்ளூகோஸ் தேங்கி, முக்கியமான செயல்பாடுகளைத்

உறிஞ்சி செரித்து விடுகின்றன. தடைசெய்து, இரத்தக் குழாயின் சுவர்களை

இவ்வாறு, இரத்தத்திலுள்ள க்ளூகோஸ் சேதப்படுத்துகிறது

அளவு மறுபடியும் சகஜ நிலைக்குத்

திரும்புகிறது

[படம்]

செல்

ஏற்பி

வாயில்

இன்சுலின்

நியூக்ளியஸ்

க்ளூகோஸ்

[படம்]

இரத்தக்குழாய்

சிவப்பு இரத்த அணுக்கள்

க்ளூகோஸ்

[படத்திற்கான நன்றி]

மனிதன்: The Complete Encyclopedia of Illustration/J. G. Heck

[பக்கம் 7-ன் படம்]

சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு சரியான உணவு தேவை

[பக்கம் 10-ன் படங்கள்]

சர்க்கரை வியாதியுள்ளவர்கள் எல்லாரையும்போல் சகஜமாக வாழலாம்