Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிருமிகள் யாருக்கும் தீங்கிழைக்காத காலம்

கிருமிகள் யாருக்கும் தீங்கிழைக்காத காலம்

கிருமிகள் யாருக்கும் தீங்கிழைக்காத காலம்

உயிர்கள் வாழ, கிருமிகள் அல்லது நுண்ணுயிர்கள் அவசியமானவை. பூமியின் மண்ணிலும் நம் உடல்களிலும் கணிசமான பகுதியை கிருமிகள் ஆக்கிரமித்திருக்கின்றன. பக்கம் 7-⁠ல் “கிருமிகளின் வகைகள்” என்ற பெட்டியில் சொல்லப்பட்டிருக்கிறபடி, “நம் உடலில் கோடிக்கணக்கான பாக்டீரியா வாழ்கின்றன.” இவற்றில் பெரும்பாலானவை நன்மையளிப்பவை; சொல்லப்போனால் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. அவற்றோடு ஒப்பிடுகையில் ஒருசில கிருமிகளே நோய்களை உண்டாக்குகின்றன என்றாலும், எவ்வித கிருமிகளுமே யாருக்கும் தீங்கிழைக்காத காலம் வரும் என நாம் உறுதியாக நம்பலாம்.

கிருமிகளால் வரும் கெடுதல்கள் அனைத்தும் ஒழிக்கப்படவிருக்கும் விதத்தைப் பற்றி நாம் சிந்திப்பதற்கு முன்பு, நோயுண்டாக்கும் கிருமிகளை சமாளிக்க தற்போது எடுக்கப்படும் முயற்சிகளுக்கு சற்று கவனம் செலுத்தலாம். “நீங்கள் என்ன செய்யலாம்?” என்ற பெட்டியை படிப்பதோடு, எதற்கும் மசியாத கிருமிகளை சமாளிக்க மருத்துவ நிபுணர்கள் எடுத்திருக்கும் முயற்சிகளைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள்.

பூகோள திட்டங்கள்

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) முன்னாள் தலைமை இயக்குநரான டாக்டர் க்ரோ ஹார்லம் ப்ரன்ட்லான், எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளைப் பற்றி விவரித்தார். “நுண்ணுயிர்களின் எதிர்ப்பு சக்தியை சமாளித்தல்” என்ற தலைப்புடைய 2000-⁠ன் தொற்று நோய்கள் பேரிலான அறிக்கையில், கிருமிகளின் “எதிர்ப்பு சக்தியை சமாளிக்க பூகோள திட்டம் ஒன்றை” தீட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். மேலும் “உடல்நல பராமரிப்பாளர்கள் அனைவருக்கும் இடையே தொடர்புகளை” ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லி, “தொற்று நோய்களுக்கு எதிராக ஒரு இமாலய திட்டத்தை செயல்படுத்த நமக்கு வாய்ப்பு இருக்கிறது” என்பதை வலியுறுத்தினார்.

2001-⁠ல் “கிருமிகளின் எதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்துவதற்கான பூகோள திட்டம்” ஒன்றை WHO முன்மொழிந்தது. அந்த ஆவணம், “என்ன செய்வது மற்றும் எப்படி செய்வது” என்பது சம்பந்தமாக உடல்நல பராமரிப்பாளர்களுக்கும் பொது மக்களுக்கும் உதவும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வியாதிப்படுவதை எவ்வாறு தவிர்க்கலாம், மேலும் தொற்று ஏற்படும்போது ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளையும் மற்ற ஆன்ட்டிமைக்ரோபியல் மருந்துகளையும் எப்படி பயன்படுத்தலாம் ஆகியவை சம்பந்தமாக மக்களுக்கு அறிவு புகட்டுவது அந்தத் திட்டத்தின் ஒரு அம்சம்.

கூடுதலாக, தொற்று பரவுவதைத் தடுக்க மேம்பட்ட நடவடிக்கைகள் எடுக்கும்படி டாக்டர்கள், நர்ஸுகள், ஆஸ்பத்திரிகளிலும் நர்ஸிங் ஹோம்களிலும் பணிபுரிபவர்கள் போன்ற உடல்நல பராமரிப்பாளர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஆனால் அநேக மருத்துவ பணியாளர்கள் இன்னும் தங்கள் கைகளை கழுவுவதில்லை அல்லது அடுத்த நோயாளியை பரிசோதிக்கையில் கையுறையை மாற்றுவதில்லை என்பதை ஆய்வுகள் காட்டியிருப்பது வருத்தமான விஷயம்.

ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை அவசியமே இல்லாமல் டாக்டர்கள் பரிந்துரை செய்வதாகவும் சுற்றாய்வுகள் காட்டியிருக்கின்றன. இதற்கு ஒரு காரணம், உடனடி நிவாரணம் கிடைப்பதற்காக ஆன்ட்டிபயாட்டிக் மருந்து தரும்படி நோயாளிகள் தங்கள் டாக்டரை வற்புறுத்துகிறார்கள். ஆகவே நோயாளிகளை திருப்திப்படுத்துவதற்காக டாக்டர்கள் அவர்கள் விருப்பத்திற்கு இணங்கிவிடுகிறார்கள். நோயாளிகளுக்கு எடுத்துச் சொல்ல பெரும்பாலும் டாக்டர்களுக்கு நேரம் இருப்பதில்லை, அதோடு தொற்றுக் கிருமியை அடையாளம் கண்டுகொள்ள வசதியும் இருப்பதில்லை. மேலும் பல்வேறு கிருமிகளை தாக்கும், புதிய, விலையுயர்ந்த ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை அவர்கள் பரிந்துரைக்கலாம். இதுவும், கிருமிகளின் எதிர்ப்பு சக்தி கூடுவதற்கு காரணமாகிறது.

WHO-⁠ன் பூகோள திட்டத்தில் ஆஸ்பத்திரிகள், தேசிய உடல்நல அமைப்புகள், உணவு உற்பத்தியாளர்கள், மருந்துக் கம்பெனிகள், சட்டங்களை இயற்றுபவர்கள் ஆகியோர் மீதும் கவனம் செலுத்தப்பட்டது. மருந்துகளுக்கு மசியாத கிருமிகளின் உலகளாவிய அச்சுறுத்தலை சமாளிக்க அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து உழைக்க வேண்டுமென அந்த அறிக்கை உற்சாகப்படுத்தியது. ஆனால் அப்படிப்பட்ட திட்டம் பலனளிக்குமா?

வெற்றிக்கு முட்டுக்கட்டைகள்

உடல்நலப் பிரச்சினைகளை தீர்ப்பதில் மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருக்கும் ஒன்றைப் பற்றி WHO-⁠ன் பூகோள திட்டம் மறைமுகமாக சுட்டிக்காட்டியது. அதுதான் லாபம் சம்பாதிக்கும் குறிக்கோள். பண ஆசை “எல்லா தீமைக்கும்” காரணமாயிருப்பதாக பைபிள் குறிப்பிடுகிறது. (1 தீமோத்தேயு 6:9, 10) WHO இவ்வாறு உற்சாகப்படுத்துகிறது: “சேல்ஸ் ரெப்ரசென்டேடிவ்ஸ் மருத்துவர்களை சந்திப்பதை கட்டுப்படுத்துவது, மருந்து தயாரிப்பாளர்களால் ஸ்பான்ஸர் செய்யப்படும் உடல்நல பராமரிப்பாளர்களுக்குரிய கல்வித் திட்டங்களை கண்காணிப்பது போன்றவை உட்பட மருந்துக் கம்பெனிகளோடு உள்ள தொடர்புக்கும் கவனம் செலுத்த வேண்டும்.”

மருந்துக் கம்பெனிகள் தங்கள் மருந்துகளை டாக்டர்களிடம் விளம்பரப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்திருக்கின்றன. இப்போதோ அவை டிவி விளம்பரத்தின் மூலம் நேரடியாகவே பொது மக்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்துகின்றன. இதனால் மருந்துகள் அளவுக்கதிகமாக பயன்படுத்தப்படுகின்றன; எதற்கும் மசியாத கிருமிகள் பெருகுவதற்கு இது முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

உணவுக்காக பயன்படுத்தப்படும் மிருகங்களுக்கு ஆன்ட்டிமைக்ரோபியல் மருந்துகளை கொடுப்பது சம்பந்தமாக, WHO-⁠ன் பூகோள திட்டம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “சில நாடுகளில் உள்ள கால்நடை மருத்துவர்கள் தங்கள் வருவாயைவிட 40 சதவீதத்திற்கும் அதிகத்தை மருந்து விற்பனையின் மூலம் சம்பாதிக்கிறார்கள், ஆகவே ஆன்ட்டிமைக்ரோபியல் மருந்துகளின் உபயோகத்தைக் குறைப்பது அவ்வளவாக வரவேற்கப்படுவதில்லை.” நன்கு நிரூபிக்கப்பட்டிருக்கிறபடி, ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை அளவுக்கதிகமாக பயன்படுத்துவதால் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள கிருமிகள் தோன்றி செழித்தோங்கியிருக்கின்றன.

ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளின் உற்பத்தி உண்மையில் மலைக்க வைக்கிறது. ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே ஒவ்வொரு வருடமும் சுமார் 2 கோடி கிலோ ஆன்ட்டிபயாட்டிக்குகள் தயாரிக்கப்படுகின்றன! உலகின் மொத்த உற்பத்தியில் சுமார் பாதி மட்டுமே மனிதர்களால் பயன்படுத்தப்படுகிறது. மீதி பயிர்களுக்கு தெளிக்கப்படுகிறது அல்லது மிருகங்களுக்கு கொடுக்கப்படுகிறது. பொதுவாக உணவுக்காக வளர்க்கப்படும் மிருகங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்த அவற்றின் தீனியோடு ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் கலக்கப்படுகின்றன.

அரசாங்கங்களின் பங்கு

WHO-⁠ன் பூகோள திட்டத்தின் முடிவுரை இவ்வாறு சொன்னது குறிப்பிடத்தக்கது: “இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு அந்தந்த நாடுகளையே பெருமளவு சார்ந்திருக்கிறது. அரசாங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.”

உண்மையில் அநேக அரசாங்கங்கள் எதற்கும் மசியாத கிருமிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த திட்டங்கள் தீட்டியிருக்கின்றன; தேசிய எல்லைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் ஒன்றுபட்ட முயற்சிகள் எடுப்பதற்கு கவனம் செலுத்தியிருக்கின்றன. ஆன்ட்டிமைக்ரோபியல் மருந்துகளின் உபயோகத்தையும் எதற்கும் மசியாத நுண்ணுயிரிகளையும் பற்றி இன்னும் விவரமாக பதிவு வைப்பது, தொற்றை கட்டுப்படுத்த மேம்பட்ட நடவடிக்கைகள் எடுப்பது, மருத்துவத்திலும் வேளாண்மையிலும் ஆன்ட்டிமைக்ரோபியல் மருந்துகளை சரியாக பயன்படுத்துவது, கிருமிகளின் எதிர்ப்பு சக்தியை புரிந்துகொள்ள ஆராய்ச்சி செய்வது, புதிய மருந்துகள் கண்டுபிடிப்பது போன்றவை அந்தத் திட்டங்களில் உட்பட்டுள்ளன. WHO வெளியிடும் 2000-⁠ன் தொற்று நோய்கள் பேரிலான அறிக்கை நம்பிக்கையை வெளிக்காட்டவில்லை. ஏன்?

“பொது மக்களின் ஆரோக்கியத்தைக் காப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காத அரசாங்கங்களின் பங்கில் திடதீர்மானம் இல்லை” என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. மேலும், “உள்நாட்டுக் கிளர்ச்சி, வறுமை, ஒட்டுமொத்தமாக குடிபெயர்தல், சுற்றுச்சூழல் சீரழிவு ஆகிய சூழ்நிலைகளிலும் வியாதியும் எதற்கும் மசியாத கிருமிகளும் பெருகுகின்றன, அங்கே பெருவாரியான மக்கள் தொற்று நோய்களுக்கு ஆளாகிறார்கள்.” வருத்தகரமாக, மனித அரசாங்கங்களால் ஒருபோதும் இந்தப் பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை.

இருந்தாலும், நோய்களுக்கு காரணமான பிரச்சினைகளை மட்டுமல்ல நோய்களையே ஒரேயடியாக ஒழிக்கப்போகும் ஒரு அரசாங்கத்தைப் பற்றி பைபிள் சொல்கிறது. சில கிருமிகள் எப்போதுமே தீங்கிழைக்கும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் கிருமிகளின் தொல்லையே இல்லாத காலம் வருமென நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உண்டு.

எவ்வித கிருமிகளும் தீங்கிழைக்காத காலம்

மனிதருக்கு அப்பாற்பட்ட ஒரு அரசாங்கத்தைப் பற்றியும் அதன் ஆட்சியாளரைப் பற்றியும் பைபிள் தீர்க்கதரிசியாகிய ஏசாயா வெகு காலத்திற்கு முன்பு குறிப்பிட்டார். கிங் ஜேம்ஸ் வர்ஷன் பைபிள்படி அவரது தீர்க்கதரிசனம் இவ்வாறு வாசிக்கிறது: “நமக்காக ஒரு பிள்ளை பிறந்தார், நமக்காக ஒரு மகன் கொடுக்கப்பட்டார்: அரசாங்கம் அவரது தோளின் மேல் இருக்கும்: அவரது பெயர் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள கடவுள், நித்திய பிதா, சமாதானப் பிரபு எனப்படும்.”​—ஏசாயா 9:6, நேரெழுத்துக்கள் எங்களுடையவை.

ஆட்சியைப் பெறப்போகும் இந்தப் பிள்ளை அல்லது பிரபு யார்? அவர் பிறப்பதற்கு முன்பே எவ்வாறு அடையாளம் காட்டப்பட்டார் என்பதை கவனியுங்கள். காபிரியேல் தூதன் கன்னியாகிய மரியாளிடம் இவ்வாறு சொன்னார்: ‘இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், . . . அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது.’​—லூக்கா 1:31-33.

இயேசு பெரியவராக வளர்ந்த பிற்பாடு, கடவுளுடைய ராஜ்ய அரசாங்கத்தின் வாக்குப்பண்ணப்பட்ட ஆட்சியாளர் தாமே என்பதை நிரூபித்தார். அவர் எங்கும் சென்று “ராஜ்யத்தின் சுவிசேஷத்தை” அறிவித்தது மட்டுமல்லாமல், எல்லாவித வியாதிகளையும் நோய்களையும் தீர்க்க தமக்கு வல்லமை இருப்பதையும் வெளிக்காட்டினார். ‘சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார். ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டார்கள்’ என பைபிள் அறிக்கை செய்கிறது.​—மத்தேயு 9:35; 15:30, 31.

ஆம், எப்பேர்ப்பட்ட வியாதியையும் இயேசு குணப்படுத்தினார். இறந்துவிட்ட அநேகருக்குக்கூட அவர் மறுபடியும் உயிரளித்தார்! (லூக்கா 7:11-17; 8:49-56; யோவான் 11:38-44) குணமாக்கப்பட்டவர்களும் உயிர்த்தெழுப்பப்பட்டவர்களும் இறுதியில் இறந்துபோனார்கள் என்பது உண்மைதான். இருந்தாலும் இயேசு அன்று செய்த அற்புதங்கள், ராஜ்ய ஆட்சியின் கீழ் பூமியில் வாழ்வோருக்கு எதிர்காலத்தில் என்ன செய்வார் என்பதைக் காட்டின. அந்த சமயத்தில் ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்ல மாட்டார்கள்’ என பைபிள் வாக்குறுதி அளிக்கிறது.​—ஏசாயா 33:24; வெளிப்படுத்துதல் 21:3, 4.

இன்று நாம் அனைவருமே வியாதியையும் மரணத்தையும் சந்திக்கிறோம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கிருமிகள் லட்சக்கணக்கானோரை தாக்குகின்றன, அடிக்கடி உயிரைக் குடிக்கின்றன. இருந்தாலும் மனித உடல் அவ்வளவு அற்புதமாக படைக்கப்பட்டுள்ளதால் ஏன் வியாதி வருகிறது என சிலர் யோசிக்கின்றனர். பாக்டீரியாவின் முக்கிய பங்கைப் பற்றி எழுதிய டாக்டர் லூயிஸ் தாமஸ், வியாதி “ஒரு விபத்தைப் போல” ஏற்படுகிறது என குறிப்பிட்டார். “பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளின் தற்காப்பு மண்டலத்தில் ஏதோ ஒரு விசேஷ விதத்தில் குறைபாடு ஏற்பட்டிருக்கலாம்” என்றும் அவர் சொன்னார்.

பலமான நோய் எதிர்ப்பு சக்தியுள்ளவர்களை பாக்டீரியா அரிதாகவே தாக்குவது உண்மைதான். இருந்தாலும் இறுதியில் முதுமையையும் மரணத்தையும் தடுக்கவே முடியாது. ஆரம்பத்தில் பரிபூரணமாக இருந்த முதல் மனிதன் ஆதாமிடமிருந்து சுதந்தரித்த பாவமே வியாதிக்கும் மரணத்திற்கும் காரணமான குறைபாடு என பைபிள் சொல்கிறது. “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று” என பைபிள் விளக்குகிறது.​—ரோமர் 5:⁠12.

இருந்தாலும் பாவத்தின் விளைவுகளிலிருந்து மனிதரை விடுவிக்க மீட்கும்பொருளாக தம் பரிபூரண உயிரைக் கொடுக்கும்படி, கடவுள் தம் குமாரனை இந்தப் பூமிக்கு அனுப்பினார். (மத்தேயு 20:28) “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்” என பைபிள் விளக்குகிறது. (ரோமர் 6:23; 1 யோவான் 5:11) கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின் கீழ், கிறிஸ்துவின் மீட்கும் பலி சுகப்படுத்துதலை அளிக்கும். இப்போது நோயுண்டாக்கும் கிருமிகளும் சரி வேறு எந்த கிருமிகளும் சரி அச்சமயத்தில் யாருக்கும் தீங்கிழைக்காது.

மனிதரின் பிரச்சினைகளைத் தீர்க்கவிருக்கும், பைபிள் வாக்குறுதி அளிக்கிற ராஜ்ய அரசாங்கத்தைப் பற்றி கற்றுக்கொள்வது நியாயமானது அல்லவா? இன்னுமதிகம் கற்றுக்கொள்ள யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவ காத்திருக்கிறார்கள். (g03 10/22)

[பக்கம் 9-ன் பெட்டி]

நீங்கள் என்ன செய்யலாம்?

எதற்கும் மசியாத கிருமிகளால் தாக்கப்படுவதைத் தவிர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? உலக சுகாதார நிறுவனம் சில ஆலோசனைகளை அளித்திருக்கிறது. முதலாவதாக, வியாதியையும் தொற்று பரவுவதையும் குறைக்க நாம் செய்ய வேண்டியவற்றை அது குறிப்பிட்டிருக்கிறது. இரண்டாவதாக, ஆன்ட்டிமைக்ரோபியல் மருந்துகளை இன்னும் கவனமாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விவரித்திருக்கிறது.

வியாதியையும் அது பரவுவதையும் தடுப்பதற்கான சிறந்த வழி ஆரோக்கியமாக இருப்பதுதான். வியாதிப்படாதிருக்க நீங்கள் என்ன செய்யலாம்?

வியாதிப்படாதிருக்க

1. சரியான ஊட்டச்சத்து, தேவையான உடற்பயிற்சி, போதுமான ஓய்வு ஆகிய மூன்றையும் பெற முடிந்தளவு முயற்சி செய்யுங்கள்.

2. உடலை எப்போதும் சுத்தமாக வையுங்கள். நோய் வராமல் காப்பதற்கும் மற்றவர்களுக்கு தொற்றை பரப்பாமலிருப்பதற்கும் மிகச் சிறந்த வழி கைகளை கழுவுவதே என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.

3. நீங்களும் உங்கள் குடும்பமும் சாப்பிடும் உணவு சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். முக்கியமாக உங்கள் கைகளையும் சமையல் செய்யும் இடத்தையும் எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதோடு, கைகளையும் உணவுப் பொருட்களையும் கழுவ நீங்கள் பயன்படுத்தும் தண்ணீர் சுத்தமாக இருக்கிறதா என ஊர்ஜிதப்படுத்துங்கள். உணவில் கிருமிகள் வேகமாக பெருகுவதால், இறைச்சியை மிக நன்றாக சமையுங்கள். உணவை சேமிப்பதற்கும் ஃப்ரிட்ஜில் வைப்பதற்கும் சரியான முறையை கையாளுங்கள்.

4. பறக்கும் பூச்சிகளால் கொடிய நோய்கள் உண்டாகும் தேசங்களில், பூச்சிகள் கொட்டமடிக்கும் இரவு நேரங்களில் அல்லது அதிகாலை நேரங்களில் வெளியே போவதை முடிந்தவரை தவிருங்கள். கொசு வலைகளை எப்போதும் பயன்படுத்துங்கள்.

5. தடுப்பூசிகள், நீங்கள் வசிக்கும் பகுதியில் பொதுவாக காணப்படும் சில கிருமிகளை எதிர்க்கும்படி உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.

ஆன்ட்டிமைக்ரோபியல் மருந்துகளை பயன்படுத்துகையில்

1. எந்தவொரு ஆன்ட்டிபயாட்டிக் அல்லது ஆன்ட்டிமைக்ரோபியல் மருந்தை எடுப்பதற்கு முன்பும் மருத்துவரின் ஆலோசனையைக் கேளுங்கள். மருத்துவரின் பரிந்துரை தேவைப்படாத, சலுகைகளோடு விற்கப்படும் மருந்துகளால் பெரும்பாலும் விற்பனையாளர்களுக்குத்தான் லாபம், வாங்குபவர்களுக்கு அல்ல.

2. ஆன்ட்டிபயாட்டிக் மருந்தை எழுதித் தரும்படி டாக்டரை வற்புறுத்தாதீர்கள். அப்படி செய்தால், எங்கே தன்னிடம் மறுபடியும் வராமல் போய் விடுவீர்களோ என்ற பயத்தால் அவர் ஒரு மருந்தை எழுதிக் கொடுத்து விடலாம். சளிக்கு காரணம் வைரஸ்கள், ஆகவே ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளால் சளியை குணப்படுத்த முடியாது. உங்களை ஒரு வைரஸ் தொற்றியிருக்கும்போது ஆன்ட்டிபயாட்டிக் மருந்தை சாப்பிட்டால் பிரயோஜனமான பாக்டீரியா செயலிழக்கும்; இதனால் எதற்கும் மசியாத பாக்டீரியா பெருக வாய்ப்புள்ளது.

3. புதுப் புது மருந்தைத்தான் சாப்பிட வேண்டுமென நினைக்காதீர்கள்; அது உங்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்று சொல்ல முடியாது, அதோடு மிகவும் விலையுயர்ந்ததாகவும் இருக்கலாம்.

4. எந்தவித மருந்தையும் சாப்பிடுவதற்கு முன்பு அதைப் பற்றிய நம்பத்தகுந்த தகவல்களை பெறுங்கள்: அது எதற்காக தயாரிக்கப்படுகிறது? ஏதேனும் பக்க விளைவுகள் இருக்குமா? வேறு மருந்துகளோடு சேர்த்து சாப்பிடுவதால் எதிர்வினைகள் உண்டாகுமா? மற்ற ஏதேனும் காரணங்களால் அதை சாப்பிடுவது ஆபத்தாகிவிடுமா?

5. ஆன்ட்டிபயாட்டிக் மருந்து உண்மையிலேயே பொருத்தமானதாக இருக்கும் சந்தர்ப்பத்தில், சிபாரிசு செய்யப்படும் எண்ணிக்கை முழுவதையும் சாப்பிட்டு முடிக்கும்படி பொதுவாக ஆலோசனை வழங்கப்படுகிறது; அதற்கு முன்பே குணமாகிவிட்டதாக உங்களுக்கு தோன்றினாலும் தொடர்ந்து சாப்பிட்டு முடிக்க வேண்டும். தொற்று முழுமையாக குணமாக அது உதவும்.

[பக்கம் 10-ன் படம்]

கடவுளுடைய நீதியுள்ள அரசாங்கத்தில், தீங்கிழைக்கும் எவ்வித கிருமிகளும் இல்லாமல் மக்கள் சந்தோஷமாக வாழ்வார்கள்